Sunday 9 August 2020

கடவுளின் பிரதிநிதி தொடர்ச்சி.

7.

    அதன்பின் வந்த நாட்களெல்லாம் நிலவினிக்கும் குழந்தைகளுக்கும் வசந்தகாலம்தான். அவளும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டாள். குழந்தைகள் அவள் கைத்தொடும் தூரத்தில் ஓடி விளையாடுவார்கள். யாரேனும் இரு குழந்தைகள் நிலவினியின் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி மற்ற குழந்தைகளிடமிருந்து தப்பித்து விளையாடுவார்கள். தமிழழகி வந்தால் அவளை ஒரு வழி செய்துவிடுவார்கள்.
        
“ஹேய் நிலா நீ குழந்தையா அவங்க குழந்தையாடி. ஏண்டி இப்படி அமர்க்களம் பண்ற?                                                                ” என்று தமிழ் கேட்டால், “ம்? அவங்க எனக்கு குழந்தைங்க. நான் அவங்களுக்கு குழந்தை. அப்படிதாண்டி என் பிள்ளைங்க எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கான்க.” என்று சிரிப்பாள். இவர்களைக் கட்டி மேய்ப்பதே ஷெண்பகத்திற்கு சுகமான சுமையாக இருக்கும்.

 ஷெண்பகத்திற்கு கணவன் பிள்ளைகள் என்று குடும்பம் இருப்பதால் காலையில் சீக்கிரம் இல்லத்திற்கு வந்து இரவு தாமதமாக வீட்டுக்குப் போய்விடுவார். அப்படியே போனாலும் அவருக்கு குழந்தைகள் நினைப்பாகவே இருக்கும். இப்போது நிலவினி வந்துவிட்டதால் நிதானமாக வந்து சீக்கிரம் சென்றுவிடுகிறார். ஏற்கனவே அங்கு வேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் தாமரை மல்லிகாவோடு நிலவினிக்காக மேலும் இரு பெண்களைப் பணியில் அமர்த்தியிருந்தார் ஷெண்பகம். அவர்கள் நிலவினிக்கு இரவும் பகலும் துணையாக இருப்பர். வெளியில் செகியூரிட்டி இருப்பார்.

விளையாட்டுத்தனமாக இருந்தாலும் நிலவினி தன் தாய்மைக்குரிய கடமைகளிலிருந்து தவறமாட்டாள். சின்னக் குழந்தைகளைக் குளிக்கவைத்து உடை மாற்றி அலங்கரித்துவிடுவாள். அவள் வசதிக்கு ஏற்றபடி மல்லிகா உடைகளை செட் செடாக அடுக்கி வைத்திருப்பாள். அவள் ஊட்டிவிட, குழந்தைகள் சமத்தாக வந்து வாங்கிக்கொள்வார்கள். அன்பாக இருந்தபடியே அழுத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய அறிவுரைகளைப் பதிய வைத்துவிடுவாள். வேலைக்கே போகப் பிடிக்கவில்லை என்று பாசத்தில் சொன்னவள், வேலைக்குப்போய் வரும் சம்பளம் முழுவதையும் குழந்தைகளுக்கே செலவழிப்பாள். ஃபோனில் பாடிய தாலாட்டை நேரில் பாடி தூங்க வைப்பாள். நாளுக்கு ஒரு குழந்தை என முறை வைத்து குழந்தைகளை அவள் மடியில் படுக்கவைத்து தூங்கப் பண்ணுவாள். பக்கத்தில் படுக்கவைத்து அணைத்தபடி அவளும் உறங்கிப்போவாள். படிக்கவைக்க நிலவினி என்றால் எழுதவைக்க ஷெண்பகமும் தமிழும்.

தாய்மை உணர்வு நிலவினிக்கு இருந்தபோதும் தாழ்வு மனப்பான்மையால் அவள் தொலைக்கவிருந்த சந்தோஷத்தை குழந்தைகள் அவர்களின் பாசத்தால் மீட்டுக்கொடுத்துவிட்டனர். அன்று முகிலனின் நினைவுநாள். அனைவரும் அதை விசேஷ சிறத்தையோடு அனுசரித்தனர். நிலவினி இந்த வாழ்க்கையை தனக்குக் கொடுத்த முகிலனுக்கு கைக்கூப்பி நன்றி சொன்னாள். தான் பாதியில் விட்டுச் சென்ற ரோஜாத்தோட்டத்தை செழுமையாக வளர்த்துவரும் நிலவினியையும், அவளை ஏற்றுக்கொண்டு முழுமனதோடு நேசிக்கும் குழந்தைகளையும், நிலவினியை தன் மகளாகவே பார்த்துக்கொள்ளும் ஷெண்பகத்தையும், தோழிக்கு தக்க                                         நேரத்தில் நல்வாழ்வைத் தேடிவைத்த தமிழையும், மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரையும் முகிலன் ஆசீர்வதித்தார்.

Sunday 2 August 2020

’கடவுளின் பிரதிநிதி தொடர்ச்சி’

                                                                                                                                                                                                                                                                                          5.

    ஒரு வாரம் கழித்துத் தமிழ் அந்த இல்லத்திற்குச் சென்றாள். அன்று விக்கி விக்கி அழுத குழந்தைகள் இன்று  விழிநிறைய குதூகலத்தோடு அவளை வரவேற்றார்கள். அவர்களின் சந்தோஷத்தில் அவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

“உங்க அம்மா உங்களுக்கு நிறைய திங்ஸ் வாங்கிக்கொடுத்துருக்கா” என்று சொல்லி அவர்களிடம் பைகளைக் கொடுத்தாள். “அக்கா, அம்மாவுக்கு எப்போ வேலை முடியும். ஏன் எங்களைப் பார்க்க வரமாட்டுறாங்க அக்கா.” என்றது ஒரு சின்னச் சிட்டு. “சீக்கிரமே முடிஞ்சிடும். கண்டிப்பா உங்களைப் பார்க்க வருவா. அதுவரை நீங்க சமத்தா இருக்கனும். சரி இப்போ வாங்க அம்மா கொடுத்ததைப் பார்க்கலாம்” என்று அவர்களின் மனதை திசைத் திருப்பிவிட்டாள்.

அந்த யுக்தி உடனே வேலை செய்தது. அவரவருக்கு வேண்டிய பொருட்களைத் தனித்தனிப் பைகளில் போட்டு அதில் அவர்களின் பெயர் எழுதிக் கொடுத்திருந்தாள். நிலவினி கொடுத்தப் பைகளைப் பிரித்துப் பார்க்க, அதில் அவர்களுக்கு உடைகள், இனிப்புகள், படிப்பதற்கு தேவையான பொருள்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. தமிழழகி ஒரு குழந்தையின் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படித்தாள்.

என் செல்லக்கிளிக்கு அம்மா எழுதுவது.

இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளும் உணர்வுகளும் உனக்கு புரியுமா புரியாதா என்பதைப் பற்றியெல்லாம் அம்மாவுக்குக் கவலை இல்லை. ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தை உருவாகிய நாள்முதல் அந்தக் குழந்தையிடம் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டத் தொடங்கிவிடுவாள். அது அந்தக் குழந்தைக்குக் கேட்குமா கேட்காதா, புரியுமா புரியாதா என்பதைப் பற்றியெல்லாம் அவளுக்கு தேவையில்லை. அப்படித்தான் நானும் என் உள்ளத்து உணர்வுகளை, உன்மேல் நான் வைத்திருக்கும் பாசத்தை உன்னிடம் கொட்டத் துடிக்கிறேன்.

என்னை நீ அம்மா என்று அழைத்ததும் ஆயிரம் கூடை மலர்களை என் தலையில் கொட்டியதைப் போலிருந்தது. என் உடலும் உள்ளமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டது. அடி வயிற்றில் தொடங்கிய குவா என்ற சத்தம் மேலெழும்பி என் காதுகளை நிறைத்தது.

மசக்கை கொண்டதில்லை, பிரசவ வலியும் கண்டதில்லை, மறு ஜனனம் எடுத்துவிட்டேன் உன் அம்மா என்ற ஒற்றைச் சொல்லில். வெறுமையும் தனிமையும் சூழ்ந்திருந்த என் வாழ்வை வண்ணமயமாக்க வந்த உறவே, உன்னை அணைத்து எனக்குள் தொலைத்துவிட வேண்டும். உன்னை யாரும் என்னிடமிருந்து கொஞ்சநேரம் கூட கொஞ்சுவதற்காகக்கூட பிரிக்கக்கூடாது.

காலியாக இருந்த என் அறை இப்போது மழலை தீபங்களால் நிரம்பிவிட்டது தெரியுமா? எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கவில்லை. குழந்தையை வீட்டில் விட்டு வேலைக்கு வந்த தாய் எப்படி தவிப்பாளோ, அதுபோலவே நீசாப்பிட்டாயா தூங்கினாயா என்று தவிப்பாக இருக்கிறது. உன்கிட்ட பேசும்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

 எனக்கு என் நொடிகளையெல்லாம் உன்கூட செலவழிக்கணும். உன்னைத் தொட்டு அந்த மிருதுவின் மிச்சத்தை என் உள்ளங்கையில செதுக்கிக்கணும். உன் வாசனையை என் சுவாசத்துல கலந்திடணும்.

எனக்கு ரொம்ப பிடிச்சஒரு பொருளை நீ உடைக்கணும். அத நான் மத்தவங்ககிட்ட பெருமையா சொல்லிக்கணும். ஆசையாய் அணிந்துவரும் என் உடையை அடுத்த நிமிடம் நீ அழுக்காக்கணும். உன் வளர்ச்சிய பக்கத்துலருந்து பாத்து ரசிக்கணும். இப்படி எவ்வளவோ ஆசைகள் அம்மாவுக்கு இருக்குடா பட்டு. ஆனால்.

சரி இதைவிடு நல்லா படி, எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இரு, நல்லா சாப்பிட்டுத் தூங்கு, உன் இஷ்டத்தையெல்லாம் நிறைவேற்ற அம்மா இருக்கேன்னு நினைச்சிக்கோ. குழந்தைப் பருவம் ஒரு பொக்கிஷம். அதை நீ சந்தோஷமா அனுபவிக்கணும்.

உன்னை மட்டுமே நினைச்சித் துடிக்கும், அம்மா.

தமிழழகி அந்தக் கடிதத்தை மீண்டும் குழந்தையிடமே கொடுத்தாள். அனைவருமே அதை பத்திரமாக எடுத்துச் சென்று முகிலன் புகைப்படத்திடமும், ஷெண்பகத்திடமும் காட்டி மகிழ்ந்தனர். கடிதத்தைப் படித்தத் தமிழழகிக்கும் ஷெண்பகத்துக்கும் நெஞ்சம் கனத்தது.

முகிலனின் வழிகாட்டுதலிலும், நிலவினியின் தாய் பாசத்திலும், ஷெண்பகத்தின் அரவணைப்பிலும், தமிழழகியின் செல்லத்திலும் குழந்தைகளின் நாட்கள் மாதங்களாகி எப்படியோ மூன்று வருடங்களை கடந்துவிட்டது. இந்த மூன்று வருடங்களில் குழந்தைகள் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல தேர்ச்சியடைந்திருந்தனர். அம்மாவின் அன்பிலும் அத்தையின் கண்டிப்பிலும் ஆரோக்கியமான உணவு மற்றும் தூக்கத்தைப் பெற்று கொழுகொழுவென்று அழகாக வளர்ந்திருந்தனர்.

ஒருநாள் நிலவினி ஃபோன் செய்யாவிட்டாலும், அவர்கள் முகிலனிடம் சென்று புகார் வாசிப்பார்கள். முகிலனும் அசரீரியாய் மாறி நிலவினியிடம் தூது செல்வார். அவள் உடனே ஃபோன் செய்வாள்.

அவர்கள் வெளியில் எவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தாலும் நிலவினியை பார்க்க வேண்டுமென்ற ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். அது சிலநேரங்களில் அழுகை, பிடிவாதம் கோவம் இப்படியான உணர்வுகளாக வெடிக்கும். அப்போதெல்லாம் ஷெண்பகம் அவர்களைச் சமாளிக்க பெரும்பாடுபடுவார். நிலவினியின்மேல் கோவம்கூட வரும். அந்தநேரத்தில் குழந்தைகளைக் கண்டிக்காமல் ஆறுதல்படுத்தவே செய்வார். அம்மா பாசம் ஒரு வகையான பாசம். அத்தைப் பாசம் ஒரு வகையான பாசம். குழந்தைகள் அம்மா பாசத்தை நிலவினியிடம் உணர்ந்ததைப்போல் அத்தைப் பாசத்தை ஷெண்பகத்திடம் உணர்ந்தனர்.

6.

    குழந்தைகள் அழுவதைப் பொறுக்கமுடியாத ஷெண்பகம் ஒருநாள் காலையில் தமிழழகியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு நிலவினியின் வீட்டிற்கே சென்றார். வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த நிலவினி வாசலை அடைந்தபோது அழைப்புமணி ஒலித்தது. அவள் தந்தை சென்று கதவைத் திறந்தார். தமிழழகியைத் தவிர வீட்டிற்குள் சென்றவர்கள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டனர்.

”இவதான் உங்க செல்ல அம்மா வினி” என்று தமிழ் அவர்களுக்கு நிலவினியை அறிமுகப்படுத்த, ஒருவர் வாயிலிருந்தும் வார்த்தையே வரவில்லை. “வாங்கம்மா. வா தமிழ். வாங்கடா செல்லம்.” என்பதைத் தவிர நிலவினியால் ஒன்றும் பேச இயலவில்லை. அவளுக்கு உடல் நடுங்கியது. முகம் வெளுத்து கைகள் சில்லிட்டது. நடக்கக்கூடாத நிகழ்வு நிகழுமோ என்ற அச்சம் அவள் உடலெங்கும் பரவியது. எங்காவது போய் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. குழந்தைகளின் மௌனம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று தின்றது.

அவர்கள் நிலவினியைப் பார்வையால் வருடிக்கொண்டிருக்க, நிலவினிதான் அவர்களை பார்க்கவில்லை. பார்க்கவும் முடியவில்லை. பலருக்கு கண்கள் இருக்கும் பார்வை இருக்காது. ஆனால் நிலவினிக்கு கண்களே இல்லை. கருவிழிகள் இருக்க வேண்டிய இடத்தில் சிறு குழிகள் இருந்தன. அப்போதுதான் நிலவினி எழுதிய கடிதங்கள் கைகளால் எழுதப்படாமல் அச்சடிக்கப்பட்டிருந்தது ஷெண்பகத்தின் நினைவிற்கு வந்தது. அதுவும் நகலெடுக்காமல் ஒரிஜினலாகவே 15 கடிதங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி ஷெண்பகம் அன்று நிலவினியைக் கேட்டதற்கு அந்த உணர்வுகளை திரும்பத் திரும்ப எழுதிப்பார்க்க விரும்பினேன் என்றாள். இவளுக்குள் இத்தனைத் தாய்மை உணர்வா என்று வியப்பாக இருந்தது. ஷெண்பகத்திற்கு பரிதாபம் வரவில்லை. இத்தனைநாள் குழந்தைகளைப் பார்க்க வராததை எண்ணி பைத்தியக்காரத்தனம் என்று தோன்றியது. அதற்கேற்றார்போல் குழந்தைகள் அழ ஆரம்பித்தனர்.

தான் உயிராய் நினைத்திருக்கும் குழந்தைகள் தன்னைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அழவும் அவளுக்கு துக்கமும் இயலாமையும் போட்டிப்போட்டுக்கொண்டு வர, “ஏன் அழறீங்க? இந்த பார்வையில்லாதவங்கதான் நமக்கு இத்தனை வருஷமா அம்மாவா இருந்தாங்களான்னு நினைச்சி அழறீங்களா? இனிமே இவங்க வேண்டாம்னு நினைச்சி அழறீங்களா?” என்று அழுகையுடன் கேட்க குழந்தைகளின் அழுகை அப்படியே நின்றுவிட்டது.

“இல்லை! இத்தனை வருஷமா ஒரு முட்டாள் அம்மாவுக்கு பிள்ளைகளா இருந்திருக்கோமேன்னு நினைச்சி அழறாங்க. அப்படித்தானே?” என்று ஷெண்பகம் கேட்க, குழந்தைகள் அனைவருக்கும் என்ன புரிந்ததோ ஒரே நேரத்தில் ஆம் என்பதுபோல் தலையசைத்தனர்.

“பாசத்துக்கும் பார்வைக்கும் என்னம்மா சம்பந்தம்? இவங்க முதல்முதலா உன் முகத்தைப் பார்த்தா பாசம் வெச்சாங்க? நீ அழுத அழுகை, கனிவான பேச்சி, உயிருருக கொடுக்கும் அன்பு முத்தம், உன் பாட்டு, கண்டிப்பு கவனிப்பு இதுக்குதானே இவங்களை உங்கிட்ட ஒப்படைச்சாங்க? இதுல எங்க பார்வை வந்தது? பார்வை இல்லைன்னு இவங்க வேண்டாம்னு நினைச்சிடுவாங்கனு நீ எப்படி நினைக்கலாம்?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் ஷெண்பகம். “இல்லைம்மா, அது வந்து.” “என்ன வந்து போய்? நீ அவங்களைப் பார்க்கலைன்னா என்ன? அவங்க உன்னை காலமெல்லாம் பார்த்துகிட்டே இருக்கப்போறாங்க. உன்னைப் பார்க்கனும்னு இவங்க இரவும் பகலும் தவிச்ச தவிப்பும், துடிச்ச துடிப்பும் உனக்கு தெரியுமா? இந்த ஒன்னுமில்லாத விஷயத்துக்குதான் நீ இவங்களை பார்க்க வராம கஷ்டப்படுத்துனேன்னு நினைச்சாலே கோவமா வருது. என்னம்மா நீ? இவங்களோட செல்ல வினியம்மாடா நீ. என்று கோவத்தில் தொடங்கி மென்மையான குரலில் கேட்டு முடித்தார் ஷெண்பகம்.

ஷெண்பகத்தின் ஆதங்கமான பேச்சும் கோவமும் நிலவினியைக் குளிர்வித்தது. இத்தனை காலம் அவளை ஆட்கொண்ட தாழ்வுமனப்பான்மை மறைந்து தாய்மை உணர்வு விழித்துக்கொள்ள, தேக்கிவைத்த பாசமெல்லாம் கண்ணீராய் வழிந்தது.

“அழாதம்மா வா நம்ம வீத்துக்கு போலாம். நா உன்ன நல்லா பாத்துக்குதேன். நீ என்ன பாத்துக்கோ” என்று வினியைக் கட்டிக்கொண்டு கண்களைத் துடைத்துவிட்டது ஒரு குட்டி தேவதை. மற்றக் குழந்தைகளும் ஓடி வந்து வினியை அணைத்துக்கொண்டனர். இத்தனைநாள் ஃபோனில் கொடுத்த அழுத்தமான முத்தத்தை, தன் இரத்தம், உடர்பொருள் ஆவியெல்லாம் உதட்டில் தேக்கி உயிருருகக் கொடுக்கும் அன்பு முத்தத்தை இன்று நேரில் குழந்தைகளுக்கு கொடுத்தாள். வழக்கம்போல் குழந்தைகள் அவள் பாசத்தில் மனம் மயங்கி நின்றனர்.

வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு நிலவினி அன்று முழுவதும் குழந்தைகளுடன் செலவழித்தாள். அவளும் குழந்தைகளும் வீட்டை ஒரு வழி செய்துவிட்டனர். மாலையில் ஷெண்பகம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு புறப்படத் தயாராக, குழந்தைகள் வர மறுத்து நிலவினியை தங்களுடன் அழைத்தனர்.

“ நிலா, இதுக்குமேலையும் குழந்தைங்களைப் பிரிஞ்சு நீயும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தணுமாடி? கொஞ்சநாள் நீ குழந்தைங்கக்கூட இருந்துட்டு வாடி. அப்புறம் என்ன செய்யலாம்னு பார்க்கலாம்.” என்றாள் தமிழழகி.  குழந்தைகளும் அவள் கையைப்பிடித்து இழுத்து வரச்சொல்லி அழ, அதுவரை இந்தப் பாசப் போராட்டத்தின் பார்வையாளராய் இருந்த ஷெண்பகம் நிலவினியின் பெற்றோரிடம் பேசினார்.

“உங்க மக புகுந்த வீட்டுக்குப் போறான்னு நினைச்சிக்கோங்க. என்கூட அனுப்பி வைங்க. என் மகளா நான் பாத்துக்குறேன். அவ இல்லாம குழந்தைங்க இந்த 3 வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இருதரப்புமே ஒருத்தர்மேல் ஒருத்தர் உயிரையே வெச்சிருக்காங்க. கொஞ்சநாளாவது அவ குழந்தைங்கக்கூட இருக்கட்டும். அதுக்கப்புறம் அவளுக்கு வேற வாழ்க்க அமைச்சிக்கத் தோனுச்சின்னாலும் அமைச்சிக்கட்டும்.” என்றார். “எங்க பொண்ணு வேற வாழ்க்க அமைச்சிக்குவான்னு எங்களுக்கு தோனலம்மா. அவளுக்கு இந்தக் குழந்தைங்கதான் வாழ்க்க, உலகம் உயிர் எல்லாம். நாங்களே உங்ககிட்ட இதைப் பற்றிப் பேசலாம்னுதான் இருந்தோம். அவளும் குழந்தைங்களப் பிரிஞ்சி நிம்மதியா இல்ல. கூட்டிட்டுப் போய்டுங்க. அவ அங்க சந்தோஷமா இருப்பா” என்று நிலவினியின் தந்தை அவர் மனைவியை பார்க்க, அவரும் அதற்குச் சம்மதித்தார்.

நிலவினி தங்களுடன் வரப்போகிறாள் என்பதை புரிந்துகொண்ட குழந்தைகள் ஆவலாய் அவள் பொருட்களைப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினர். அதுவரை நடப்பதையெல்லாம் அமைதியாய் பார்த்திருந்த நிலவினி கதறியழுதாள். அனைவரும் அவளருகில் ஓடி வருவதற்குள் தமிழழகி அவளை நெருங்கிவிட்டிருந்தாள். “ஹேய் நிலா என்னடி ஆச்சி ஏன் அழற? சொல்லுடி. அழாதடி. “தமிழ், எனக்கு பார்வை இல்லன்னு நான் இதுவரைக் கவலைப்பட்டதே இல்லடி. ஆனா இதோ இந்த பிஞ்சு உள்ளங்கள் என்மேல் வெச்சிருக்க பாசத்தையும், எனக்காக துடிக்கிறத் துடிப்பையும் பார்க்கும்போது, இவங்க கண்ணுலத் தெரியிற தாய் பாசத்தைப் பார்க்கணும்னு தோனுதுடி.” தமிழழகி அவளைத் தட்டிக்கொடுத்தாள். சிறிது நேரத்தில் அனைவரும் புறப்பட்டனர்.

மாப்பிள்ளையுடன் மணப்பெண்ணாய் புகுந்த வீட்டிற்குப் புறப்பட வேண்டியவள், 15 குழந்தைகள் புடைசூழ ஒரு கன்னித்தாயாய் வீட்டைவிட்டுப் புறப்பட, அவள் பெற்றோர் அவளை மணமுவந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.