Monday 15 August 2022

காலதேவனின் தீர்ப்பு.


நதிக்குத் துணை இரு கரைகள் மட்டும்தான். ஒரு நல்ல சிந்தனையாளனுக்குத் துணை, அவனைப் போல் சிந்திக்கும் சக மனிதந்தான். என்ற வரிகளுக்கேற்ப ஒரே அலை வரிசையில் சிந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, பழகி காதல் கொண்டால் எப்படி இருக்கும்? காமம் கடந்த காவியக் காதலாக இருக்கும். காதலர்களின் உடல்கள் அழிந்தாலும், அவர்களின் உள்ளமும், அதில் பொங்கிவந்த காதல் வெள்ளமும், என்றும் வாழும். அழகான அரிதான காதலென்றால் அது இதுதான்.



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல, அன்பு, பண்பு, அழகு, அறிவு , ஒழுக்கம், சமூக அக்கறை, என்று அனைத்தையும் வார்த்தெடுத்த தங்கச் சிலைகளாக மனிதர்கள் பிறப்பது எல்லாக் காலத்திலும் மிக மிக அரிதான ஒன்று. அப்படி அரிதாகப் பிறந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், உயர்ந்த காதலையும், குருஞ்சி மலர் என்னும் நாவலில் தமிழ் தூரிகை கொண்டு ஓவியம் வடித்திருக்கிரார் என் உள்ளத்தைத் தன் எழுத்துக்களால் உரையவைத்து, உருகவைத்த எழுத்தாளர் திரு நா. பார்த்தசாரதி அவர்கள்.



அரவிந்தன்: அரவிந்தன் என்பதர்க்கு அறிவார்ந்த விந்தை மனிதன் என்று பொருள். கம்பீரமான அழகும், கவர்ந்திழுக்கும் புன்னகையும், கருணை உள்ளமும், வற்றாத அருவி போன்ற அறிவும் கொண்டவனாக இருப்பினும், அகந்தையோ, ஆணவமோ சிறிதும் இல்லாமல், அன்பு, அறம், அகிம்சை இவை மூன்றும் தானும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் போதிக்கும் விந்தை மனிதன். சாப்பிடுவதில்கூட, சமூகத்திற்குப் போகத்தான் தனக்கு என்று நினைக்கும் தன்னலமற்ற இளைஞன்.



பூரணி: பூரணி என்பதற்கு பூரணத்துவம் என்று பொருள். தங்கப் பதுமை போன்ற அழகும், தேனருவி போன்ற தமிழும் கொண்ட தன்மானம் நிறைந்த பெண்ணாய்த் திகழ்பவள் பூரணி. பண்புக்கும் பெண்மைக்கும் இலக்கணமாய், உடன் பிறந்த தம்பி தங்கைக்கு இளம் தாயாய், அவர்களுக்கு அமுதளிப்பதில் அன்னபூரணியாய் வாழ்ந்து, சமூக நலனுக்கும், தமிழ் பணிக்கும், தன்னைப் பூரணமாய் அர்ப்பணித்தவள் பூரணி.



பண்பின் சிகரங்களான இவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், கடந்துவந்த இன்ப துன்பங்களும், கடக்க முடியாத மெல்லிய உணர்வுகளின் கோர்வையே இந்த குறிஞ்சி மலர் கதை.



தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த பேராசிரியரும் பூரணியின் தந்தையுமான அழகிய சிற்றம்பலத்தின் இறப்பிற்கு பிறகு கவலைகளை மட்டுமே தன் ஆதரவாக கொண்டு, குடும்ப பொறுப்பை தலையிலும், பசி மயக்கத்தை உடலிலும், பாச மயக்கத்தை உள்ளத்திலும் கொண்டிருந்த நேரத்தில்தான் மீனாட்சி அச்சகத்தில் பணிபுரியும் சமூக நலம்விரும்பியான அரவிந்தனை சந்திக்கிறாள் பூரணி. தந்தையின் புத்தகங்களை வெளியிடும் நிமித்தமாக தன்னை காணவரும் அரவிந்தனை திருடி தன் உள்ளத்துக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள் அவள். தமிழர் பண்பு பட்டினியால் தெருவில் மயங்கிக்கிடந்தபோது  தன் கவியுள்ளம் பொங்க பாடும் அரவிந்தன், அவளை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பக்தியும் காதலும் கலந்த உள்ளத்தை அவளுக்காய் அற்பணிக்கிறான்.



அதன்பிறகு இருவரின் இதயத்திலும் காதலோடு உயர்ந்த கருத்துக்களும் மணத்தது. இரசாயன மாற்றம் நிகழும் பேச்சுக்களை பேசி மகிழும் சராசரி காதலர்களாக இல்லாமல் சமூக சிந்தனைகளைத் தூண்டும் சீறிய கருத்துக்களைப் பேசினர். புற அழகையும் உள்ளத்து உணர்வுகளை எழுதுவதில் கூட எழுத்தாளர் தமிழோடு சுவையாக விளையாடி இருப்பது என்னைக் கவர்ந்தது. எண்ணங்களால் பாலம் அமைத்து இருவரும் கைக்கோர்த்து நடந்தனர். மணமாலையை மனதுக்குச் சூட்டி உவகைக் கொண்டனர்.

காதலன் காதலியை கௌரவித்து உயரத்தூக்கிப் பார்த்து ரசிப்பதே உண்மைக் காதல். கருத்துப் புதையலை தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் காதலியை உலகறிய செய்ய பாடுபடும் அரவிந்தன், உலகை நேசிக்கும் அரவிந்தனின் உடல் நலனையும் உள்ளத்து நலனையும் பேணிக்காக்க தவிக்கும் தாயாய் பூரணி. இதைவிட இலக்கிய காதலுக்கு அடையாளம் வேறென்ன வேண்டும்?



அழகிய கொடிகளாக இருப்பினும் அது நன்றாக படர கொழுகொம்பு துணையாக வேண்டும். அதுபோல அரவிந்தனும் பூரணியும் வாழ்வில் உயர்ந்தோங்க துணை புரிந்த கொழுகொம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. "களவுக்குப் போகும் பணத்தை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா, பூட்டுக்கு மேலே பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா” என்று நினைக்கும் வள்ளண்மை கொண்ட மங்கலேஸ்வரி அம்மா பூரணிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் இன்னொரு தாயானார். முதலாளியாக சம்பளத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடாமல் அரவிந்தனுக்கு தேவையானதைச் செய்து தோள்கொடுக்கும் தோழனாய், தாங்கிப்பிடித்து நல்வழிப்படுத்தும் தகப்பனானார் மீனாட்சி சுந்தரம்.



நெருங்கிய தோழிகளாக இருப்பினும் இம்மியளவும் என் கவலைகளை யாரிடமும் வெளியிடமாட்டேன் என்று தன்மானம் காக்கும் பூரணியின் தேவைகளை தானாக புரிந்துகொண்டு நாங்கள் எங்கள் தோழிக்கு செய்வோம் இது எங்கள் கடமை. இதை மறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை என்று உரிமைகீதம் பாடும் கமலாவும் காமாட்சியும் பூரணி சாய்ந்துகொள்ளும் தோள்களானார்கள். அமைதிக்கு இலக்கணம் அரவிந்தன் என்றால், புரட்சிகரமான கருத்துக்களுக்கு இலக்கணம் முருகானந்தம். முரட்டுத் தோற்றமாக இருந்தாலும் மென்மையான மனம் கொண்ட முருகானந்தம், எதிர்மறை கருத்துக்களை நாங்கள் கொண்டிருந்தாலும் எங்கள் நட்பை எவரும் பிரிக்க இயலாது என்று சொல்லி நட்பிற்கு இலக்கணமானான்.



அன்னையாய் வாழும் அக்காவிற்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் அவள் கஷ்டங்களை புரிந்து பாசத்தை மட்டுமே பரிசளிக்கும் தம்பி தங்கை பூரணியின் குழந்தைகளானார்கள். பூரணியின் சொற்பொழிவையும் அவள் அன்பான அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் மங்கலேஸ்வரியின் மகள்களான வசந்தாவும் செல்லமும் பூரணியின் உடன்பிறவா சகோதரிகளானார்கள். நல்லவர் நல்லவரோடு சேரும்போது நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு நல்லதொரு சான்று மேலே குறிப்பிட்டுள்ள கதா பாத்திரங்கள்.



அழகான பறவைகள் மீட்டும் அனுராகங்களுக்கிடையில் அபஸ்வரம் தோன்றுவதைப் போல இக்கதையிலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். கடைசிவரை கோபம் கொள்ளக்கூடாது, குறுநகைக்கொண்டே வாகைசூட வேண்டும். அகிம்சையே அரவிந்தனின் கொள்கையென வாழ்ந்த அரவிந்தனின் உள்ளத்தையே உலுக்கிப்போடுகிறது இவர்களின் செயல். சில மனிதர்கள் தன் வேலையை தானும் ஒழுங்காக செய்யமாட்டார்கள், அதே வேலையை அடுத்தவர்கள் முறையாக செய்ய நினைத்தாலும் விடமாட்டார்கள். இந்தக் கதையில் வரும் புதுமண்டபத்து அச்சகக்காரரை போல. பர்மாவிலிருந்து சூதும் சூட்சுமத்தையும் சம்பாதித்துக் கொண்டுவருகிறார் பர்மாக்காரர். இவர்களின் வரவால் அழகாய் அமைதியாய் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அரவிந்தன் பூரணி வாழ்க்கையே ஆட்டம் காண்கிறது. நேர்மைக்காக இவர்களிடமிருந்து அரவிந்தன் பெறும் கொடுமையான பரிசுகள் ஏராளம்.



உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கும் அரவிந்தன் பூரணியை மணம் முடித்துக்கொள்வதுதான் மகத்தான லட்சியம் என்று வற்புறுத்துகிறார்கள் அவர்களின் நலம்விரும்பிகள். எண்ணத்தால் வாழும் வாழ்க்கை மட்டும் சில காலத்திற்கு போதும் என்கிறான் அரவிந்தன். என்னவன் எண்ணம் எதுவோ அதுவே என் எண்ணம் என்கிறாள் பூரணி. மனிதவெள்ளத்தின் நடுவே ஒளிதீபம் ஏந்திச் செல்லும் கனவு காணும் பூரணி ஒருபுறமும், மனிதகுலத்தில் பிறந்த சராசரி பெண்ணாக தன் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் பூரணி ஒரு புறமுமாக அரவிந்தனின் இதயத்தில் ஆட்சி செய்து அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவிட்டார்கள். இதில் யாருடைய கனவு நிரைவேறிற்று? இரண்டு பூரணிகளுள் அரவிந்தன் அடைந்த பூரணி யார்? உயரே செல்லும் போட்டியில் வெற்றிப்பெற்றது யார்? இதையெல்லாம் நான் சொன்னால் சுவை குன்றிவிடும். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது சுதந்திரமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படி கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் என்பதே சுதந்திரம். இதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் தரணியே பண்பட்டு விளங்கும்.



ஆண்டவன் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் காலம் என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. பூமி சுழலும்போது மாறுவது காலங்கள் மட்டுமல்ல அனைவரது கோலங்களும்தான். சில காலம் இன்பத்தில் மிதந்தவர் பல காலம் துன்பத்திற்கு ஆளாகலாம். பல காலம் துன்பத்தில் உழன்றவர் சில காலமாவது இன்பமாய் வாழலாம். இது காலதேவனின் கணிக்க முடியா தீர்ப்பு. நடமாடும் மனிதர்களான நாம் அனைவருமே ஓடும் காலச்சிறையில் ஆயுள் கைதிகள். சுதந்திரமாய் சுற்றிவரும் பூமியில் நாம் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதிகள். இந்த அழுத்தமான உண்மையை உணர்வோர் மட்டுமே இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சமநிலை இதயத்தோடு இறுதிவரை இவ்வுலகில் உய்ய முடியும்.



தமிழென்னும் உளிகொண்டு காலத்தின் மதிப்பையும், காதலின் மகத்துவத்தையும், பண்பாட்டின் புனிதத்தையும், மனிதநேயத்தின் மாண்பையும் எல்லோரது இதயத்திலும் அழியா சிற்பமாய் செதுக்கிய எழுத்தாளர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


                             

Saturday 13 August 2022

உலகத்தொடு ஒட்ட ஒழுகல்

வணக்கம் நண்பர்களே. இந்த விமர்சனக் கட்டுரை எனது நெருங்கிய நண்பரான திரு. தர்மபாலன் எழுதியது. கண்ணன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் அவர், பேச்சு, பாட்டு, பகுத்தறிவு சிந்தனை, மொழித்திறன் பொது அறிவுக் கூர்மை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குபவர். அவர் எழுத்துலகிலும் தடம் பதிக்க முடிவு செய்து எழுதியிருக்கும் முதல் பதிவு இது. படித்துவிட்டு தங்களின் மேலான கருட்துக்களைச் சொல்லுங்கள்.


உலகத்தொடு ஒட்ட ஒழுகல்.

அனைத்தையும் துறந்துவிட்ட பட்டினத்தடிகள், ஒருமுறை வயலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தண்ணீர் எடுக்கப் போன இரண்டு பெண்களில் ஒருத்தி அவரைப் பார்த்து, இவர் எவ்வளவு பெரிய துறவி தெரியுமா என்று கேட்டாள். அதற்கு இரண்டாமாவள் இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய துறவி இல்லை, அப்படி உண்மையான துறவியாக இருந்திருந்தால் வயலில் படுத்து வரப்பில் தலை வைத்து உறங்கமாட்டார் என்று சொன்னாள். அந்தப் பெண்கள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டு போனதைக் கவனித்த பட்டினத்தடிகள் உடனடியாக வரப்பிலிருந்து தலையை எடுத்து வயலில் வைத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பிவரும்பொழுது இதைக் கவனித்த இரண்டாம் அவள், நீ சொன்னதைக் கேட்டு தனது தவறைத் திருத்திக் கொண்ட இவர் உண்மையான துறவிதானே என்று கேட்டாள். அதற்கு முதல் பெண் இப்போதும் நான் இவரை ஒரு துறவி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன், ஏனென்றால், இவர் மற்றவர்கள் பேசிக் கொண்டு போவதையெல்லாம் ஒட்டு கேட்கிறார் என்று சொன்னாள். அப்படியானால், துறவு என்பதன் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பது பற்றி ஆராயும் விமர்சனக் கட்டுரைதான் இது.



பொதுவாக, துறவு என்பது உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதைக் குறிக்கும். திருக்குறள்கூட அவ்வாறுதான் சொல்கிறது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்பதுதான் அந்த குறள். ஆனால் இந்தக் கருத்தை வேறுவிதமாக அணுகுகிறார் தமிழ் சிறுகதை உலகின் மகத்தான ஆளுமையான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய துறவு என்ற சிறுகதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.



சிதம்பரத்திலுள்ள ஒரு தெருவில் இரண்டு பக்கத்துவீட்டுப் பெண்கள். அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அவ்வீட்டு வாசலில் அமர்ந்தபடிப் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. பங்கஜம் மற்றும் மரகதம் என்ற அவ்விரு பெண்கள் நிகழ்த்திய உரையாடலின் சாரம் என்பது பங்கஜத்தின் கணவர் சதாசிவம் பிள்ளை மற்றும் அவளது மூத்த மகன் சோமுவைப் பற்றியது. குறிப்பாக சோமுவைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறாள் பங்கஜம். அதற்குக் காரணம் அவனது மிதமிஞ்சிய பக்தி. எட்டாம் வகுப்புத் தேர்வில் அவனுக்கு ஏர்ப்பட்ட தோல்விக்குப் பிறகு, அவனது தந்தையின் கண்டிப்பான உத்தரவு அவன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது. விளையாட்டு உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கும் அவனுக்குக் கிடையாது. அவனது மற்ற இரண்டு தம்பிகளும் தங்கை ராஜியுடன் விளையாடிக் கொண்டிருக்க சோமுவிற்கு மட்டும் எப்போதும் படிப்புதான். மகனின் நிலை கண்டு இரக்கமுற்ற தாய் பங்கஜம், ஒரு நாள் சோமுவை அழைத்து கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபட்டு வருமாறும் அப்பாவிடம் தான் சொல்லிக் கொள்வதாகவும் கூறுகிறாள். சதாசிவம் பிள்ளைக்கும் இந்த யோசனை பிடித்துப் போகவே, தினமும் தானே அவனைக் கோயிலுக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அந்தத் தருணத்தில் அங்கு நடைபெற்ற சாமி அருளாணந்தரின் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவால் பெரிதும் கவரப்படுகிரான் சோமு. அங்கு அந்த சொற்பொழிவு ஒரு மாதம் நடைபெற்றது. விளைவு, 15 வயது மட்டுமே நிரம்பிய சோமுவிற்கு ஏற்பட்ட அதீத பக்தி. இதனை எழுத்தாளரின் வார்த்தைகளில் பார்க்கலாம்.



15 வயது என்பது ஒரு மனிதனுக்குப் பித்துப் பிடிக்கிற வயது. அது, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ, சமயப் பித்தாகவோ, ஏன் பெண் பித்தாகவோகூட இருக்கலாம். நம் சோமுவிற்குப் பிடித்திருப்பது வேதாந்தப் பித்து. சாமி அருளாணந்தரின் சொற்பொழிவைக் கேட்கத் தொடங்கிய பிறகு அவனது பக்தி என்பது சாதாரணமாக தோன்றி, ஜீவகாருண்யத்தில்  வளர்ந்து, இறுதியில் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதில் போய் முடிகிறது. சோமுவைப் பொருத்தவரை, இவ்வுலகிலுள்ள எல்லாம் பொய். வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். படித்த படிப்பு, பார்த்த வேலை, சேர்த்த செல்வம் உட்பட இவ்வுலகிலுள்ள எதுவுமே நிரந்தரமில்லை. மனிதனால் வெல்ல முடியாதது மரணம் மட்டுமே. அப்படியானால், பிறந்த இம்மண்ணில், பல்வேறு பாவங்களைப் புரிந்து மீளா நரகத்தில் வீழாதிருக்க, இமயமலையில், பனிப்படலத்திற்கு நடுவில் தவமிருக்கும் லோக குருவின் பாதங்களைச் சரணடைவதுதான் ஒரேவழி என்று முடிவு செய்து, தனது உடைமைகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இமயமலைக்குப் பயணமாகிறான் சோமு.



அதிகாலை எழுந்து, சிதம்பரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று, தான் இத்தனை காலம் சேமித்துவைத்த ஒரு ரூபாயை, அங்கிருந்த ஒரு டஜன் பண்டாரங்களுக்குத் தானம் செய்த பிறகு, குளத்தங்கரைக்குச் சென்று தலையை மொட்டையடித்த பின்பு தனது நெடும்பயணத்தைத் தொடங்குகிறான் சோமு. கதை முழுவதையும் விளக்குவது என்பது இக்கட்டுரையின் நோக்கமில்லையென்றாலும், சோமு தன்னுடைய பயணத்தின்போது சந்தித்த சில காட்சிகளைப் பற்றிக் கூறுவது இந்தத் திரனாய்விற்கு அவசியமாகிரது. குறிப்பாக, சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அவன் எதிர்கொண்ட பரங்கிப்பேட்டை சந்தை. திருவிழாபோல் காட்சியளித்த மக்கள் கூட்டம், வேடிக்கை பேசி வம்புவளர்க்கும் மனிதர்கள், கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அவ்வாறு விற்கப் பட்ட சோமுவிற்க்குப் பிடித்த தின்பண்டங்களான நாவல் பழம், வேர்க்கடலை, பட்டாணி போண்றவையென, வாழ்வின் ஒட்டுமொத்த உயிர்ப்பையும் அங்கு சந்திக்கிறான்.



அவனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஜனசந்தடி மிகுந்த அந்த சந்தையில் ஒரு மரத்தடியில் நாவல் பழம் விற்கிறாள் ஒரு பெண். அந்தப் பெண்ணிடம் வம்பு பேசி நாவல் பழம் வாங்கித் திண்ணுமொரு வயதான கிழவர், சோமுவிடமும் சில பழங்களை எடுத்துக் கொடுக்க, அவன் அதை முற்றிலும் நிராகரிக்கிறான். ஆனால் விடவில்லை கிழவர், அவனை ஆதரவுடன் அழைத்துப் பழங்களைக் கொடுக்க வேறுவழியின்றி அவற்றை வாங்கி உண்கிறான். அதற்குமேலும் அங்கு நிற்க முடியாமல் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறான்.



நேரம் செல்லச் செல்ல சோமுவிற்குப் பசியெடுக்கிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்ட சோமுவால் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாமென்றால் கையில் காசு இல்லை. அவ்வளவுதான், வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையையும் தாண்டிவிடலாமென்ற அந்தச் சிறுவனின் எண்ணம் சடுதியில் நொறுங்கித் தவிடுபொடியாகிரது. இனிமேல் ஒரு அடிகூடத் தன்னால் எடுத்து வைக்க முடியாது என்று உணர்ந்த சோமு, ஒரு ஆலமரத்தடியில் அமர்கிறான். அப்போது நன்கு இருட்டிவிட்டது. தன்னைச் சுற்றித் தானே போட்டுக்கொண்ட வாழ்வியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் தானே அவிழ்த்த பின்பு நிஜ உலகத்திற்கு வருகிறான். இருட்டு மேலும் கவிழ்ந்துகொள்ள, அவனை பயம் தொற்றிக்கொள்கிறது. அப்போது அவன் கண்ட ஒரு காட்சி, அவனை அங்கிருந்து மிரண்டோடச் செய்கிறது.



பாம்பு ஒன்று, அங்கிருந்த கடலைக் கொல்லையிலிருந்து மேலேரி, சாலையைக் கடந்து, போகிற போக்கில் ஒரு தவலளையைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு வேறு திசையில் செல்கிறது. அதே பாம்பு தன்னைத் துரத்துவதாக எண்ணிக்கொண்ட அந்தச் சிறுவன், எழுந்த வேகத்தில் மொட்டைத் தலை மரத்தில் இடிக்க, விரைந்தோடத் தொடங்குகிறான். எவ்வளவு தூரம், அல்லது எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ தெரியாது. இறுதியில் சுயநினைவிழந்து, மயங்கிச் செம்மண் புழுதியில் விழுகிறான்.



நீண்ட நேரத்திற்குப் பிறகு, மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுக் கண் விழிக்கிறான். நடுப் பாதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் அந்தச் சிறுவனை வண்டிக்காரர்கள் தங்களது வண்டியில் ஏற்றிக்கொள்கிரார்கள். வண்டியிலிருந்த கிழவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். நீ சந்தையில் பார்த்த பையனல்லவா என்று சொன்னா கிழவரைப் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டிருந்த இன்னோரு இளைஞன், இவனை உனக்கு முன்னமே தெரியுமா என்று கேட்கிறான். அதற்கு அந்தக் கிழவர், தெரியாமலென்ன, இவனும் உன்னைப்போல ஒரு பேரந்தான் எனப் பதில் சொல்கிறார். அவனைப் பற்றிய எல்லா விபரங்களையும் பரிவுடன் விசாரிக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் உதரிவிட நினைக்கும் சோமுவும், எல்லோரையும் தனது சொந்தமாகக் கருதும் கிழவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது நம் சோமுவிற்கு, எந்நேரமும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அம்மா, கண்டிப்பிலும் கொஞ்சம் கனிவு காட்டும் தந்தை, தன்னுடன் பாசத்துடன் விளையாடும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை ராஜி, இழந்த தலைமுடி, உண்ணும் சுவையான உணவு, தூங்கும் பஞ்சு மெத்தை மற்றும் தலையணை, தன்னிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பிடித்த தின்பண்டங்கள், எல்லா நிணைவுகளும் ஒருசேர ஏற்படவே, தேம்பியழுதபடிக் கிழவரைப் பார்த்துத் தன்னை வீட்டில் கொண்டுவிடுமாறு வேண்டுகிறான். இந்த அளவில் நாம் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, அதன் மையக்கருத்தை சற்று ஆராயலாம்.



நம்மில் பலர், துறவு என்பது, அனைத்தையும் துறந்துவிடுவது, என்று கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சார்ந்திருக்கும் அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள், சமூகம், இயற்கை, போன்ற எல்லாவற்றையும் நேசிப்பதுதான் உண்மையான துறவு. ஒருமுறை, பெரியார் சொன்னார், எனக்கு நாட்டுப் பற்றும் கிடையாது, மொழிப் பற்றும் கிடையாது, எனக்கு இருப்பதெல்லாம் மானுடப்பற்று ஒன்று மட்டுமே. அந்தவகையில் பார்த்தால், பல வருடங்கள் தான் சார்ந்திருந்த இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடிய பெரியாரும் ஒரு துறவிதான். இதனைத்தான், யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.



வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், என்று பாரதியாரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்று வள்ளலாரும், சொல்வதன் உண்மைப் பொருள் இதுதான். உலகம் கடந்த மனித நேயம், அதனையும் கடந்த உயிர் நேயம், இவ்விரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்குமானால், அவரும்கூட உண்மையான துறவிதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இக்கதையின் நிறைவுப் பகுதியில், தன்னை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்ட அந்த வண்டிக்கார இளைஞனை நன்றியுணர்வோடு பார்க்கும் சிறுவன் சோமு, நாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும் என்று, பதிலுக்கு நட்பும் பரிவும் காட்டும் அந்த வண்டிக்கார இளைஞன், வீட்டிற்குச் சென்ற பிறகு, சோமுவிடம் முன்பைவிட அதித பாசம் காட்டும் அவனது பெற்றோர் மற்றும் தம்பி தங்கை போன்றவை, வாழ்வின் மகோந்நதத்தை சோமுவிற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.



எனவே ஒவ்வொரு மனிதனும், தான் சார்ந்திருக்கும் இயற்கையையும், தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களையும் நேசிப்பதுதான் உன்மையான துறவு என்பது இக்கதை நமக்குக் கூறும் செய்தியாகும்.

Monday 8 August 2022

பிறந்தநாள் கொண்டாட்டம்

                            


நாள், 25/07/2022. இரவு பதிணொன்றரை மனியலவில், ஸ்மைலிங் ஸ்டார்ஸ் என்ற கூகுல் மீட்டில் ஒவ்வருவராக இனைந்துகொண்டிருந்தனர். ”வாடா முணி, எங்க எல்லாரும்? உடனே போய் கூட்டிட்டுவா. டைம் ஆயிட்ட்இருக்கு” என்றாள் சங்கீதா. முணியின் அழைப்பின் பேரில், ஒருவர் பின் ஒருவராக இனையத் தொடங்கினர். ராஜா இன்பதாசன், பாபுல்நாத், தர்மபாலன், கங்காராஜ், லக்‌ஷ்மி ப்ரியா, அநுசுயா, என நன்பர்கள் ஒருபக்கம் கூகுல் மீட்டில் குழுமிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம், வீட்டில் கேக் வெட்டுவதர்க்கான ஏர்ப்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரந்தநாள் நாயகிய்ஆன அவள், கேக் வெட்டவும், நன்பர்களின் வாழ்த்து மழையில் நனையவும், ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.



அந்த அரை மணி நேரத்தை, அனைவரும் அரட்டையடித்தபடிக் கழித்துக் கொண்டிருக்க, கடிகார முள் சரியாக நல்லிரவு பண்ணிரெண்டு மணி காட்டியபோது, அந்தக் கோலாகலமான பிரந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிற்று.  தோழர்களின் கர ஒலியும், வாழ்த்தொலியும், ஒருசேர ஒலிக்க, வெட்டிய கேக் எடுத்து, அனைவருக்கும் ஊட்டி, தானும் உண்டாள் அந்த 33 வயதுக் குழந்தை.



 தான் வாங்கிய புத்தாடையையும், ப்லூடூத் ஹெட்செட்டையும் அவளுக்கு பரிசளித்தான் தர்மபாலன். நேற்றே தான் வாங்கி வந்திருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டு தைத்து வாங்கி வந்த மற்றொரு உடையை பரிசளித்தாள் அவளது தோழி ப்ரியா. மூவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முகத்தை கேக்கால் அலஞ்கரித்து மகிழ்ந்தனர். வாழ்த்துகளுடன் கூடிய பேச்சொலியோடும், சிரிப்பொலியோடும், அந்த நாளை நிரைவு செய்தாள், இன்னமும் குழந்தை மனம் மாராத அந்தப் பெண்.



 மரு நாள் அதிகாலையில் ஏராளமான வாழ்த்துச் செய்திகளைச் சுமந்துவந்த அலைபேசியழைப்புகள் அவளது தூக்கத்தைத் தொல்லை செய்ய, எழ முடியாமல் தூக்கத்திலிருந்து எழுந்து, அண்றைய நாள் கொண்டாட்டன்களுக்குத் தயாரானாள் அவள்.

புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புதுப்பொலிவோடு அவளுக்குப் பிடித்த கடவுள் கண்ணனை காண சென்று வந்தாள். வீட்டிலேயே தயாரித்த இட்லி, பொங்கல், வடை கேசரி போன்ற பலமான காலை உணவை உண்டுவிட்டு, வருபவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்வித்து தானும் மகிழ்ந்திருந்தாள்.



 மதியம் பன்னிரண்டு மணியளவில் அவளது தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சங்கீதா போன் செய்தாள். “சொல்லு அக்கா, பாப்பா சாயந்திரம் உனக்காக லௌலி ரோசஸ் க்லப்ல ஒரு ப்ரோகிராம் இருக்கு. உன்னை நீ ஃப்ரீ பண்ணிக்கோ டா. எதுக்கு அக்கா இதெல்லாம் வேண்டாமே.” என்றாள் வெட்க பூ பூத்தபடி. “என் அன்பு தங்கச்சிக்கு நாங்க கொடுக்குற பரிசு இது. வேண்டாம் சொல்லக்கூடாது. கொன்னுடுவேன் ஒழுங்கா நேரத்துக்கு வந்து சேரு.” என்று செல்லமாய் மிரட்டிவிட்டு காலை கட் செய்தாள் சங்கீதா.

அதன்பிறகு தனது தோழர்களான தர்மபாலன் மற்றும் ப்ரியாவுடன் ஹோட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி, சிக்கன்65, வஞ்சரமீன் வருவல், ஐச்கிரீமை சாப்பிட்டுவிட்டு, தர்மபாலன் பரிசாய் தந்த ப்லூடூத் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி உறங்கிப்போனாள்.



மாலையில் எழுன்ந்து ரிஃப்ரெஷ் செய்துவிட்டு, காஃபி பிச்கேட் பருகிய பின் சங்கீதா ஏற்பாடு செய்திருந்த ப்ரோகிராமிற்கு தயாரானாள். க்லப்ஹௌசிற்குள் சென்றபோது கங்காராஜ் இன்று பிறந்தநாள் காணும் செல்வி rj அபிநயாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பாட்டுப்போட்டி முதல் 3 பரிசு என்று அறிவித்துக்கொண்டிருந்தார். ஆம் அன்று என்னுடைய பிறந்தநாள்தான். 

முதல் முறையாக, நிறைய வாழ்த்துகளுடனும், நிறைய ஆச்சரியங்களுடனும், கோலாகலமாக அந்த நாள் கொண்டாடப் பட்டுக்கொண்டிருந்தது. பங்கேற்பாலர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். நடுவர் திருமதி சுசிலா வந்தவுடன் விழா தொடங்கியது. நடுவரின் வாழ்த்துப் பாடலும், வழக்கமான வரவேர்ப்புரையும் வாழ்த்துரையும், மேலும் சில பாடல்களும், விழாவை அலங்கரிக்க, 4 சுற்றுகளுடன் நடுவர் போட்டியை இனிதே நடத்திக் கொடுத்தார்.



 இடையில், என் பிரந்த நாள் சிரப்பாக, நான் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கியிருந்தேன். எனக்குப் பிடித்த தலைவர்களான, சிவாஜி, s.p.b., சிவகுமார், விஜெய் போண்றவர்களிடம், ஆசிர்வாதம் வாங்குவதைப் போண்றதான ஒலிக்கோப்பு அது. என்னையும் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தும் வண்ணம், சங்கீதா க்லப்பில் அந்த ஒலிக்கோப்பை ஒலிபரப்பினார். இருதியாக, எனது நண்றிகளையும், சந்தோஷ்அங்களையும் வார்த்தைகளால் வடித்து, ஒரு சிரு உரையை வழங்கிணேன். முணீஷ்வரனின் நண்றி உரையோடு, நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.



விடிந்தது முதல், அந்நாள் முடியும்வரை, மகிழ்ச்சியில் என்னை திளைக்கவைத்து, துக்கம் கொஞ்சமும் அணுகாமல் பார்த்துக்கொண்ட என் சுற்றமும் நட்பும் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். யான் பெற்ற இன்பத் துளிகளை எழுத்துகளால் கோர்த்து, நீண்ட நெடிய நாட்களுக்குப் பிரகு, உங்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறேன். என் வலைப் பதிவு உட்பட, யார் வலைப் பதிவையும், பார்க்க முடிவதில்லை. வலைப் பதிவுக்குள் சென்று நெடுநாட்களாகிவிட்டது. சில சொந்த வேலைகள் காரனமாக, எழுதுவதும் படிப்பதும் அப்படியே நின்றுவிட்டது. மீண்டும் மனதையும், மூளையையும் தூசு தட்டி புத்துணர்வோடு புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மெருகேருகிரதா என்று பார்ப்போம். நன்றி.