Saturday 27 June 2020

கற்பக விரிட்சம்

அனிதா பள்ளியைவிட்டு நின்று 2 மாதங்கள் கடந்திருந்தது. அவள் வீட்டிற்கு அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தாய்மொழி தமிழாகவே இருந்தாலும், அதில் சரியாக படிக்கவோ எழுதவோ வராது.

இரண்டு வருடங்களாக அந்தப் பள்ளியில் பணிபுரியும் வதனிதான் அவள் வகுப்பில் தமிழாசிரியை. வதனி அவள் பெற்றோருக்குச் செல்லப்பெண், அதுவும் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தனர். அதனால் அவளுக்கு அதிகக் கோவம் வரும்.
தான் எதிர்பார்ப்பதை மற்றவர் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அவள் கோவம் பலமடங்காக அதிகரிக்கும்.

 கோவக்காரியாக இருந்தாலும், திறமையும், மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் இருந்ததால் அவள் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தபோது உடனே தேர்வு செய்யப்பட்டாள்.  இரண்டு மாதங்கள் முன்புவரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்கொண்டிருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்,  எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் அனிதா தமிழைச் சரியாக எழுதாததால் கோவத்தில் அவளை இரும்பு ஸ்கேலில் அடித்துவிட்டாள். வெண்மை நிறம்கொண்ட அனிதாவிற்கு உடனே தோல் கொஞ்சமாக பிதுங்கிவிட்டது. அப்போதும் வதனி வருத்தமெல்லாம் அடையவில்லை. அன்றைய நாளைக் கடந்துவிட்டாள்.
மறுநாள் அனிதாவிற்குப் பதிலாக அவள் பெற்றோர் பள்ளிக்கு வந்து வதனிமேல் புகாரளித்தனர். அனிதாவின் தோழிகளும் அதை உண்மை என்று சாட்சிக்கூறினர்.

எப்படிக் கையாள்வதென சிறிது யோசித்தத் தலைமை அன்னை, வதனியை அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச்சொன்னார். வதனி கேட்க மறுக்க, அந்தத் தவறுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவித்தத் தலைமை அன்னை, அவர்களின் மகளை ஒழுங்காகப் படிக்கச்சொல்லுமாறு கண்டித்து அனுப்பினார்.

அதன்பின்னும் அனிதா பள்ளிக்கு வரவேயில்லை. நாளாக நாளாக வதனிக்கு வருத்தம் கூடியது. தன்னால் ஒரு மாணவியின் படிப்பு நின்றுவிடுமோ என்று பயந்தாள். அனிதாவின் தோழியிடம் அவளுக்கு போன் செய்து வரச்சொல்லுமாறு சொல்லிவிட்டிருந்தாள்.
அனிதா தன் காலை உணவை முடித்துக் கைக்கழுவிக்கொண்டிருந்தபோது தொலைப்பேசி ஒலித்தது. வேகவேகமாக சென்று போனை எடுத்தாள்.
“ஹலோ, நான் அனிதா பேசுறேன். யார் பேசுறது?” “ஹேய் அனி, நான் நிஷா பேசுறேண்டி. எப்படியிருக்க?” “நல்லா இருக்கேன் நிஷா. நீ எப்படியிருக்க?” “நல்லா இருக்கேண்டி. ஸ்கூலுக்கு வா அனி. படிப்பு போகுதுடி. வதனி டீச்சர்தான் உனக்கு போன் பண்ணி வரச்சொன்னாங்க வாடி.” “இல்ல நிஷா நான் வரமாட்டேன். இனி அந்த டீச்சர் முகத்துல விழிக்கமாட்டேன். எனக்கு படிப்பு வேண்டாம்.” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.
அவளின் தோழிகள் வீட்டிற்கேவந்து  அழைத்துப்பார்த்தும் அனிதா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

அனிதாவிற்கு சிறு வயதிலிருந்தே ஏதோ உடல்நலக் குறைபாடுகள் இருந்தது. அதை அவள் பெற்றோர் சரியாக கவணிக்காமல் விட்டுவிட்டனர்.
அதனால் அவளுக்கு பிக்ஸ் வந்து,இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினாள். இரண்டு பூக்களைப் பெற்ற அனிதாவின் பெற்றோர், ஒரு பூ மலர்ந்து மணம் பரப்பும் முன்னமே மறைந்துவிட்டதை எண்ணி வேதனையடைந்தனர்.

பள்ளிக்கு இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரியவந்தது. செய்தியைக் கேட்ட வதனி உடைந்துபோனாள். செய்யக்கூடாதக் குற்றத்தைச் செய்துவிட்டோம் என்று அழுது கரைந்தாள். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு வதனி பள்ளிக்கு வந்தபோது, தலைமை அன்னை அவளை அழைத்தார்.
அலுவலக அறைக்கு வந்த வதனியிடம் சிறிதுநேர நலம்விசாரிப்புக்குப் பின் வதனியின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்றைக் கேட்டார். எதற்குக் கேட்கிறார் என்று யோசித்தபடியே தன் பர்சிலிருந்தப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.

 அந்தப் புகைப்படம் வதனி பிறந்த அன்று எடுக்கப்பட்டப் புகைப்படம். அதில் அவள் கொழுக்மொழுக்கென்று அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அதை வதனியிடமே தந்து அவளையும் பார்க்கச்சொன்னார்.
இரண்டு நிமிடம் அவளைப் பார்க்கவைத்தபின், வதனியின் கைகுட்டையால் அவள் கண்களைக் கட்டினார். அலமாரியிலிருந்த காட்டன் பஞ்சை எடுத்து அவள் காதுகளில் வைத்து அடைத்தார். மேசைமேலிருந்தப் பொருட்களை ஒதுக்கிவிட்டு, அவள் கைகளையெடுத்து மேசைமேல் வைத்தார்.
தன் வாட்டர் பாட்டிலிலிருந்தத் தண்ணீரை வதனியின் ஒரு கையில் ஊற்றிக்கொண்டே, மறுகையில் அவரின் விரல்களால் வாட்டர் என்று ஆங்கிலத்தில் எழுதினார். பின் தன் உதடுகளை அசைத்து ஏதோ பேசினார். அந்த அசைவுகளை வதனியின் விரல்களால் தொட்டு உணரவும் வைத்தார்.

பத்து நிமிடம் அவளை அதேநிலையில் உட்காரவைத்தபின் பழையபடி அவள் கண்களை அவிழ்த்து, காதுகளிலிருந்தப் பஞ்சை எடுத்துவிட்டுக் கேட்டார்.
“இங்கே என்ன நடந்தது வதனி? நீ எப்படி உணர்ந்தாய்?” ஒன்றுமே புரியவில்லை மேடம். “கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதைப் போலிருந்தது. உங்களின் எழுத்தசைவையோ, உதடசைவையோ உணர்ந்துப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றாள்.
பத்து நிமிடமே உன்னால் இப்படியிருக்க முடியவில்லை. எதையும் உணரமுடியவில்லை. பலவருடங்களாக அமெரிக்காவில் பிறந்தச் சாதனைப்பெண்மணி ஒருவர் இதைத்தான் செய்துகொண்டிருந்தார். அவள் திகைத்துவிழிக்க, தலைமையன்னை அந்தச் சாதனைப்பெண்மணியைப்பற்றிச் சொல்லத்தொடங்கினார்.

1880ஆம் ஆண்டு. ஜூன் 27ஆம் தேதி. அதாவது இதேநாளில், அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் உள்ள தஸ்காம்பியா என்ற சிற்றூரில் ஹெலன் கெல்லர் என்ற பெண் குழந்தைப் பிறந்தது.
பிறக்கும்போது அந்தக் குழந்தை நீ காட்டிய உன் புகைப்படத்தில் இருப்பதைப்போலவே அழகும் ஆரோக்கியமும் கொண்ட குழந்தையாகத்தான் பிறந்தது. பதினெட்டு மாதங்கள் கடந்தநிலையில், அந்த அழகுச்சிலைக்கு பெயர் தெரியாதக் காய்ச்சல் வந்தது. அந்தக் காய்ச்சலால் அவள் தன் வாழ்நாள் முழுவதும்  அனுபவிக்கும்படியானக் கொடூரங்கள் நிகழ்ந்தது. அந்தக் குழந்தை தன் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்துவிட்டது. கேட்கும் திறனை இழந்துவிட்டதால் பேசும் திறனும் பரிபோய்விட்டது.
ஏழுவயதுவரை இருண்ட உலகில் பயணித்த அந்தக் குழந்தையை அவள் பெற்றோர் வாஷிங்டனில் வசித்த தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெலிடம் அழைத்துச் சென்றனர். அவர் காதுகேளாதோருக்கான கல்வியில் சிறந்து விளங்குபவர்.
அவர்தான் ஹெலன் கெல்லருக்கு ஆன்சலீவன் என்ற ஆசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஆசிரியர்தான் ஹெலன் கெல்லர் என்ற தீபத்தை ஏற்றிவைத்தத் தீக்குச்சி.

அந்தத் தீக்குச்சித் தான் அணையும்வரை ஹெலன் கெல்லருடனே பயணித்துத் தன் இருதிநொடியை முடித்துக்கொண்டது. அந்த ஆசிரியர் ஹெலனின் ஒரு கையில் பொருளை தொட்டுக்காட்டியபடியே மறுகையில் அந்தப் பொருளுக்கான வார்த்தையை எழுதுவார்.
எட்டுவயதில் இந்த முறையில் கற்க ஆரம்பித்த ஹெலன் கெல்லர் சிறிதுநேரத்திலேயே 30 சொற்களைக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதக்கற்றுக்கொண்ட அவர், பார்வையற்றோர் உபையோகிக்கும் பிரைலிமுரையை கற்றார். பத்துவயது முடியும் முன்பு, லத்தீன், ஃப்ரென்ச், ஜெர்மன் மற்றும் கிரேக்க மொழியில் பிரையிலில் எழுதக்கற்றுக்கொண்டார்.

சாரஃபிலா என்ற ஆசிரியர் ஹெலனுக்குப் பேச்சுப்பயிர்ச்சியை அளித்தார். அந்த ஆசிரியரின் உதடு மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு அவர் பேசுவதைப் புரிந்து பேசப்பயின்றார்.
ஆன்சலீவனின் துணையோடு ஹெலன் ரெக்லிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1904ஆம் ஆண்டு இலங்கலைப் பட்டம் பெற்றார். தன் கல்லூரி வயதிலேயே the story of my life. என்ற சுய சரிதையை எழுதினார். அவருடைய வாழ்நாளில் அவர் 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

பிரையில் தட்டச்சு மற்றும் சாதா தட்டச்சைக் கற்றுக்கொண்டார். குதிரைச்சவாரியும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டவும் கற்றார்.
1919ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஹெலன் கெல்லர் திரைப்படத்தில் அவரே நடித்திருக்கிறார். அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட பார்வையற்றோர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

உடல் ஊனமுற்றோருக்காக பேசிய அவரைப் பலநாடுகள் பேச அழைத்தன. 1930ஆம்  ஆண்டு தொடங்கி, 39 நாடுகளுக்குச் சென்று பேசினார். பேசிய இடங்களிலெல்லாம் பார்வையற்றோர் பல்கலைக்கழகத்திற்காக நிதி வசூலித்தார்.

1932ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டிலுள்ள கிலாஸ்கோ பல்கலைக்கழகம் ஹெலன் கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது  உடலுறுப்புகள் இழந்தவர்களைச் சந்தித்து ஊக்கமூட்டினார். தம் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
1964ஆம் ஆண்டு தனிநபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திரப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றி விளக்கு 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி தன் ஜோதியை நிறுத்தியது.

தலைமையன்னை இதைச் சொல்லிமுடித்ததும் வதனியின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.. அவளை சிறிதுநேரம் அழவிட்டத் தலைமையன்னை மீண்டும் பேசினார்.
“ஹெலன் கெல்லரைப்பற்றி நீ இன்னும் நிறையப்படித்துத் தெரிந்துகொள்ளலாம். நான் இதை இப்போது உனக்குச் சொல்வது ஆன்சலீவனைப்பற்றி நீ புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
பொறுமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் தன் மாணவிக்குக் கற்பித்தது மட்டுமின்றிக் கடைசிவரை ஹெலனோடு பயணித்து அவரை வெற்றிச்சிகரத்தைத் தொடவைத்திருக்கிறார்.
ஆயிரம் மாணவர்களுக்கு ஏனோதானோவென்று கற்பிப்பதைவிட ஒரே ஒரு மாணவியை உயரத்தூக்கிப்பார்ப்பதுதான் ஓர் ஆசிரியருக்கு வெற்றி. நிதானம் பெண்ணின் பிறந்தவீட்டுச் சொத்து. அதைக் கைவிடாதே. அனிதாவின் இறப்பிற்கு நீ காரணமல்ல. அவளின் உடல் கோளாறுகள்தான் காரணம்.
அதேநேரம் உன் கட்டுப்பாட்டை இழந்து அவளை அடித்ததும் தவறு. ஆசிரியர் நம் நன்மைக்காகத்தான் அடிக்கிறார்கள் என்பதை உணராதவள் முட்டாள்தனமாக படிப்பை நிறுத்தியதும் தவறுதான்.

ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது, மாணவர்களும் ஆசிரியரை பணிந்துபோக வேண்டியதில்லை என்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. ஆசிரியரும் இன்னொரு அண்ணை என்பதை ஆசிரியர்களோ, மாணவர்களோ அல்லது பெற்றோரோ புரிந்துகொள்வதில்லை.
நகமும் சதையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர் மாணவர் உறவு, எலியும் பூனையுமாக மாறிக்கொண்டு வருகிறது.
உன் கோவத்தைக் குறை. இன்றுதான் புதிதாய் பிறந்திருக்கிறாய் என்று நினை. நன்கு யோசித்துவிட்டுத் தெளிவான மனநிலையோடு நாளை பள்ளிக்கு வா.” என்று அவளை அனுப்பி வைத்தார்.

பள்ளியிலிருந்துப் புறப்பட்டவள் நேரே அனிதா வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அவள் புகைப்படம் ஒன்றையும் வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ஹெலன் கெல்லர் எழுதிய என் கதை என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும், அவள் நடந்துகொண்ட முறையையும் ஒப்பிட்டுப் பார்த்து வெட்கிப்போனாள்.
அனிதாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான கற்பகம் என்ற பெண்ணை அனைத்து ஆசிரியர்களும் தேற்றமுடியாதவள் என்று விட்டுவிட்டனர். அந்தப் பெண்ணை எப்படியாவது தேற்சியடையச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் வதனி.

குடும்பச்சூழல் காரணமாக மனநிலைப் பாதிக்கப்பட்டவளைப்போல் இருந்தவளுக்கு முடிந்தளவு அன்பைத் தந்தாள். இரவு பகல் பாராமல் அவளைப் படிக்கத் தூண்டினாள்.
என்னதான் படிக்கவைத்தும் கற்பகத்திற்குப் படிப்பு ஏறவில்லை. வதனிக்குக் கோவம் வரும்போதெல்லாம் ஆன்சலீவனையும்  ஹெலன் கெல்லரையும் நினைத்துக்கொள்வாள். அனிதாவின் புகைப்படத்தையும் பார்த்துக்கொள்வாள்.
 கற்பகத்திற்கு பாட்டு மற்றும் நடனத்தின்மீது ஆர்வமிருப்பதைத் தெரிந்துகொண்ட வதனி படிப்போடு கூடவே பரதமும் பாட்டும் கற்றுக்கொடுத்தாள். வதனிக்கு அவை இரண்டும் தெரிந்ததால் பாட்டிற்கும் பரதத்திற்குமுரிய சிறப்பு வகுப்புகளை அவளே எடுத்தாள்.  ப்லஸ்டூவில் ஓரளவு நல்ல மதிப்பெண்ண்ஓடு தேற்சியடைந்தாள் கற்பகம்.
பட்டப்படிப்பைத் தொடர விரும்பாத கற்பகத்தை வதனி அவள் வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்கவைத்து பரதத்திலும் பாட்டிலும் முழுமூச்சோடு கவனத்தைச் செலுத்தவைத்தாள்.
மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் கொண்ட வசீகரனை மணந்துகொண்டதால் வதனிக்கு இதைச் செய்வது எளிதாகவே இருந்தது. வசீகரன் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தான்.

குடும்பச்சுமை வதனியின் தலையில் ஏறாதபடியும், யாரும் அவளைக் கேள்விக் கேட்காதபடியும் பார்த்துக்கொண்டான்.
காலையில் தன் ஆசிரியர் பணியையும், மாலையில் கற்பகத்திற்கான நடன வகுப்பையும் எடுத்து வந்தாள். நடனத்திலும் பாட்டிலும் சிறந்து விளங்கினாள் கற்பகம். அவள் நடன அரங்கேற்றத்தை வதனி தன் செலவிலேயே பிரம்மாண்டமாக நடத்தினாள்.
கச்சேரிகளுக்குச் சென்று வந்தாள் கற்பகம். அவள் ஒவ்வொருமுறை மற்றவரிடமிருந்துப் பாராட்டைப் பெரும்போதும் வதனிக்குப் பெருமையாக இருக்கும். ஆறு வருடங்கள் வதனியுடனிருந்த கற்பகம் தன் சொந்த ஊரில் ஒரு நாட்டியப் பள்ளியைத் துவங்கப்போவதாகச் சொல்லி ஊருக்குக் கிளம்பினாள். களையென்று அனைவராலும் அகற்றப்பட்ட கற்பகத்தின் கலை ஆர்வத்தைக் கண்டறிந்து, அவளை சிறந்தக் கலைஞராக ஆக்கிவிட்டாள் வதனி.

அன்று ஆன்சலீவனால் ஹெலனின்மீது தூவப்பட்ட வெற்றி விதை விரிட்சமாக வளர்ந்தது. இன்று வதனியால் கற்பகத்தின்மேல் தூவப்பட்ட வெற்றி விதையும் விரிட்சமாகிவிட்டது.
வதனியும் வசீகரனும் கணிசமானத் தொகையைக் கற்பகத்தின் பள்ளிக்கு நண்கொடையாகக் கொடுத்தனர்..
 “மேடம், நான் இதை வாங்கிக்கனும்னா ஒரு நிபந்தனை.” “என்னம்மா?” “உங்க அலமாரியிலிருந்த என் கதைப் புத்தகத்தை நானும் படிச்சியிருக்கேன். அதில் வரும் ஆன்சலீவனாக நீங்க இருக்க நினைக்கும்போது. நான் ஏன் ஹெலன் கெல்லராக இருக்க நினைக்கக்கூடாது? உங்களின் கடமைகள் அனைத்தும்  முடிந்ததும் நீங்கள் என்னிடம் வந்துவிட வேண்டும். உங்களின் கடைசிக் காலங்களை நான் என்னுடன் பகிர விரும்புகிறேன். இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் இதைக் கொடுங்கள்.” என்று சொல்ல, வதனிக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
அன்றைக்கு சூழல் எப்படியிருக்குமோ? எல்லோராலும் ஆன்சலீவன் ஹெலன் கெல்லராக முடியுமா? சில விஷயங்களை நாம் நினைத்தாலும் அது நடப்பது காலத்தின் கையிலல்லவா இருக்கிறது? என்றெல்லாம் வதனி யோசித்தாலும் கற்பகத்தின் திருக்திக்காக வாக்குறுதியளித்தாள். அதன்பின்னே கற்பகம் அந்த நண்கொடையைப் பெற்றுக்கொண்டாள்.

ஆசிரியர் பணியிலும் குடும்ப வாழ்விலும் ஜெயித்துவிட்டத் தன் மனைவியைப் பெருமைப் பொங்கப் பார்த்தான் வசீகரன்.
வதனியின் ஐந்து வயது மகள் மதுவந்தியும், மூன்று வயது மகன் சுதாகரனும் கற்பகத்திற்கு கண்ணீரோடு விடைகொடுத்தனர். கற்பகமும் அந்த பூக்குவியல்களை அணைத்து விடுவித்தாள்.
பட்டுப்போகவிருந்த தன் வாழ்வை பூஞ்சோலையாக்கிவிட்ட இந்த இதயங்களின் பாசத்தைப் பெற என்ன தவம் செய்தோம் என்று நெகிழ்ந்தபடியே கற்பகம் பேருந்தில் ஏறினாள்.
கற்பகம் ஏறிய பேருந்துப் புறப்பட்டபோது வதனிக்கு நெஞ்சு கணத்தது. மதுவந்தியைப் புகுந்தவீட்டிற்கு அனுப்பும்போது எப்படி உணர்வாளோ அப்படிப்பட்ட துயரத்தை அவள் இதயம் அனுபவித்தது.

மாணவர்கள் தம் பள்ளிக்காலங்களை முடிக்கும்போதும், ஒவ்வொரு வகுப்பாகக் கடக்கும்போதும் பிரிவுத் துயர் அவர்களை மட்டுமா ஆட்கொள்கிறது? அதே அளவிலான பிரிவுத்துயரை ஆசிரியர் அனுபவித்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
எப்படிப்பட்ட மாணவக்குழுக்களாக இருந்தாலும் கடந்து செல்ல வேண்டியநிலை அவர்களுக்கு. சிற்பிக்குச் சிற்பங்களைச் செதுக்கும் உரிமை மட்டும்தான் இருக்கிறது. அதைத் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையே.

மிகுந்த மனபாரத்துடன் கற்பகத்தை வழியனுப்பிவிட்டு வந்த வதனிக்கு தன் பழைய நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது. தன் பையிலிருந்த அனிதாவின் புகைப்படத்தை எடுத்துப்பார்த்தாள்.
அதில் அனிதாவின் இதழ்கள் வதனியைப் பார்த்து பெருமிதப்புன்னகைச் சிந்தியது. அதேநேரம் அவள் கண்கள் தான் செய்த மடத்தனத்தால் வதனிக்கு ஏற்பட்ட கரும்புள்ளிக்காக மந்னிப்பை யாசித்தது.

31 comments:

  1. நல்லதொரு கதை. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  2. நல்லதொரு பழைய வரலாற்றையும், புதிய நிகழ்வுகளையும் கோர்த்து சொல்லிய விதம் அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு என் பிழைகளை திருத்திக்கொள்கிறேன். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் பொது. அதோடு அது எனக்கு நன்மையளிக்கும் விஷயம்தானே. நன்றி சார்.

      Delete
    2. புரிதலுக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  4. அபி
    அருமை. மேலும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்
    வித்யா

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அபி. ஆசிரியர்கள் பொறுமையின் சிகரம்.

    ReplyDelete
  6. ஆனால் எனக்கெல்லாம் அவ்வளவு பொறுமையில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நல்ல ஜோக் நவீன் உங்களுக்கு பொறுமை இல்லையா. இதை என்னால் ஏற்கமுடியாது.

      Delete
  7. ஆனால் எனக்கெல்லாம் அவ்வளவு பொறுமையில்லை.

    ReplyDelete
  8. ஓர் குற்ற உணர்வு நன்றி உணர்வாக மாறும் என்ற நம்பிக்கையிலிருந்து விலகிய சமுதாயத்திற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. உன் எழுத்து வண்மை பெருகிக்கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு நாவல் எழுது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந் சார். நாவல் எழுதிட்டு இருக்கேன். விரைவில் வெளியிடுறேன்.

      Delete
  10. மிக அருமையான கதை. அழகாக எழுதவும் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்

    துளசிதரன்

    அபி! கதை ரொம்ப நல்லாருக்கு. நீங்கள் சொல்லி வரும் போதே அதுவும் தலைமை ஆசிரியர் வதனிக்கு உணர்த்தச் செய்வதைச் சொல்லி வரும் போது ஹெலன்கெல்லர் பத்தியும் சொல்லப் போறீங்கன்னு புரிய முடிந்தது அதையும் இணைத்து எழுதிய கதை நல்லாருக்கு. நல்ல நேர்மறைக்கதை

    வாழ்த்துகள், பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா மேடம்.நன்றி துளசிதரன் சார்.

      Delete
  11. ஆஹா...அற்புதம் .ஒரே கல்லில் இரண்டு கனிகள்...அதுவும் மிக மிகச் சுவையாய்...தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete
  12. பள்ளிக்கூடத்தில் மாணவர்களை அடிப்பதே தவறு அதில் இரும்பு ஸ்கேல் .. கொடூர கொலை கருவியாயிற்றே.

    மூன்று விஷயங்கள்: முதலாவது டீச்சரின் பெயர் வதனி நீண்ட பல வருடங்களுக்கு முன் எங்கள் பள்ளி கூடத்து ஆசிரியரின் மகள் பெயர். என்னைவிட சுமார் 10 அல்லது 15 வயது மூத்தவர். அவரின் பெயருக்கு பின் நான் கேள்விப்படும் அதே பெயரில் இன்னொருவர் இந்த டீச்சர்.

    அடுத்து ஹெலன் கெல்லேரை குறித்து சொல்வதற்கு ஹெட்மிஸ்ட்ர்ஸ் மதர் செய்த demonstration unwanted.

    அடுத்து Anne Sullivan Macy தன்னலமற்ற ஒரு மகத்தான வழிகாட்டி.

    கதை அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். வதனி பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

      Delete
  13. கதை போல எழுதினாலும் 50% உண்மை கலந்ததோ? உணர்வுகளைக் கொட்டி அழகாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். அர்ப்ணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்கள்தான் நாட்டுக்குத் தேவை. வதனியின் உயர்வில் அந்தத் தலைமை ஆசிரியைக்கும் பெரும் பங்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. சரியாக கணித்ததற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  14. Excellent article abi...your way of writing is precious..keep rocking dear.. all the best abi

    ReplyDelete
    Replies
    1. thank you so much madam. i really feel happy about your comment.

      Delete
  15. மனதை தொட்ட கதை. அருமையாக இருந்தது. நிகழ்கால நிகழ்வுகளை உங்கள் கற்பனையுடன் இணைத்து அழகான நடையில் எழுதி உள்ளீர்கள். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி மேடம். உங்கள் கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      Delete
  16. மனதைத் தொட்ட கதை சிறப்பான எழுத்துநடை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஃபெர்நாண்டோ.

      Delete