Saturday 19 November 2022

கிட்சன் கிருக்கல்கள்

வணக்கம் நண்பர்களே. அனுபவம் பகிரலாமா? இந்த வருஷம் கொளுத்துற வெயில்லருந்து தப்பிக்க தேவகோட்டையிலிருக்கும் என் நண்பர்களான தர்மபாலன் மற்றும் லக்‌ஷ்மி ப்ரியா வீட்டுக்கு போயிருந்தேன். கணவன் மனைவி ரெண்டுபேருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். அதிலும் லக்‌ஷ்மி ப்ரியா என் கல்லூரி தோழி. இதுக்கு முன்னாடியும் பலமுறை போயிருக்கேன். எப்போபோனாலும் கொட்டமடிக்காம வரமாட்டேன். நான் செய்யும் குறும்பில் ரெண்டுபேரும் விழி பிதுங்கி நிற்கும் தருணத்தை வெகுவாக ரசிப்பேன். இந்த முறையும் சென்ற சில நாட்களுக்கு வேளைக்கு உணவு உண்டு உரங்கி வீணே பொழுதை கழித்தேன். அப்படியே இருந்துவிட்டால் அபிக்கு என்ன மதிப்பு? ஆரம்பித்தேன் அபியின் அடுக்களை அமர்க்களங்களை.



முன்னாடியே சாதம் வைக்க தெரிஞ்சதால ஆறுமணிக்கு எழுந்து அருசி களைந்து, தண்ணீர் நிறப்பி, அடுப்பை பற்றவைத்து, சாதம் வைப்பேன். உப்பு சேர்த்து மூடி வெச்சுடுவேன். அப்புறம் ஸ்கூல் போகும் தர்மபாலனுக்கு சுடுதண்ணி வைப்பேன். லெமன் சாதம் செய்யும்போது லெமன் பிழிந்து வைப்பேன். இதுவரைதான் பெரும்பாலும் என் அன்றாட வேலை. சாதம் வடிக்கத் தெரியாது. பயம் முயன்று பார்க்கவும். என் கைகள் ஓரளவுக்குமேல் சூடு பொறுக்காது. நெருப்பு கத்தி என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால பெரிய பெரிய வேலையெல்லாம் ப்ரியா தலையில கட்டிடுவேன். அவளும் என்னைப் புரிஞ்சிகிட்டு செய்வா.



காபி டீ போட்ட தருணங்களெல்லாம் மிகவும் சுவையானது. இதுக்கு முன்னாடி போனபோது கடுங்காப்பி கலக்குறேன்னு காபி பொடியை அதிகமா கொட்டிட்டேன். சர்க்கறை சொல்லவே வேண்டாம். காபி கலந்த நான் அதை குடிக்க முடியாமல் நைசா சின்கில் ஊத்திட்டேன். ஆனா பாவம் அவங்க வீணாக்கக்கூடாதுன்னு ஒரு சொட்டு மிச்சம் வெக்காம குடிச்சிட்டாங்க. அதிலும் தர்மபாலன் இனிமே வீட்ல எனக்கும் சேர்த்து காபி போடாதிங்கப்பான்னு கோபமா டம்பலரை வெக்கும்போது என்னால சிரிப்பை அடக்க முடியல.



இப்போ போனபோது பால் காபி போட்டேன். அருமையா வந்துச்சு. சிலநேரம்தான் கேவலமா இருந்துச்சு. இரண்டு முறைதான் டீ போட்டேன். இரண்டாம் முறை அவ்வளவா நல்லா இல்லைன்னு கமெண்ட் வந்துச்சு. முதல்முறை டீ போட்டு அதை வடிகட்டாம தர்மபாலனுக்கு கொடுத்துட்டேன். வடிகட்ட பயம். கீழ சிந்திட்டா? அதிலும் என் பட்டுக்கையில பட்டுட்டா மீ பாவமில்லையா? அதனால அப்படியே கொடுத்துட்டேன். ப்ரியா தூங்கிட்டு இருந்ததால அவ எஸ்கேப். குடிச்சவரோ சூப்பரா இருக்கு. நல்லா கொதிச்சிருக்கு ஆனா டீத்தூல்தான் அப்படியே இருக்குன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் தோணும்போதெல்லாம் காபி போடுவேன்.



ஒருநாள் எனக்கும் ப்ரியாவுக்கும் வாய்க்கா தகறாரு வந்துடுச்சு. ரெண்டுபேருமே சாப்பிடல. ரெண்டுபேருக்கும் பயங்கற பசி வேற. என்னால பொறுக்கமுடியாம காபி போட்டு பிஸ்கேட் எடுத்துவந்து படுத்திருந்த அவகிட்ட வெச்சேன். திமிர்பிடிச்சவ. கோபத்துலயும் கொட்டிகிட்டா. அன்னைக்குன்னு பார்த்து காபி சூப்பரா வந்துச்சுப்பா. நானும் அப்படித்தான் என்ன சண்டை, கோபமா இருந்தாலும் சாப்பிடாம இருக்கமாட்டேன். சாப்பிட்டுட்டு சண்டை போடுவோம் என்ன கெட்டுப்போச்சு. யூடியூப் உபயத்துல லெமன் சாதம் மசாலா அறைத்து செய்தோம். புதினா சாதம், தேங்கா பால் சாதம் செய்தோம். ஆறுமணிக்கு ஆரம்பிப்போம். எட்டேகால் எட்டரைக்குள்ள முடிக்கணும். ரொம்பவே சேலஞ்சிங்கா இருக்கும்.



மசாலா கடல செய்தோம். எட்டுமணி நேரமா கடலப்பருப்பு ஊரவெச்சு, காயவெச்சு, உப்பு, மிளகாய் தூல், பூண்டு, கறுவேப்பிலை எல்லாம் சேர்த்து மசாலா ரெடி பண்ணி, கடலப்பருப்பை வறுத்து இதுல போட்டு மிக்ஸ் பண்ணோம். டேஸ்ட் ஓகே ஆனா கடிக்கவே முடியல. கஜினி முகமது படையெடுத்த மாதிரி விடாம எள்ளடை செய்ய ட்ரை பண்ணோம். அது எள்ளுப்பூரியாகி எங்களைப் பார்த்து கேலி செஞ்சது.

அந்த நேரத்தில் வந்த தர்மபாலன் நண்பர்கள். மச்சான் இது என்னடா கொஞ்சம் சாப்பிட்டு பாரேன். எள்ளடையா எள்ளுப்பூரியான்னு பட்டிமன்றம் நடத்தி, பால் விளையாடி, பல்லு போச்சேன்னு பயந்துகிட்டே சாப்பிட்டாலும் பயபுள்ளைங்க காலி செஞ்சிடுச்சிங்க.



அப்புறம் என்ன ஒரே குஷிதான். என்ன செஞ்சாலும் காலியாகுதேன்னு அடுத்த ஆட்டத்துக்கு தயாரானோம். நெய்யில்லாத மைசூர்பாக். நெய் போட்டு செய்யலாம்னு ப்ரியா சொன்னதுக்கு, வேண்டாம் நெய் திகட்டும். எண்ணெய்ல செய்யலாம் சொல்லிட்டேன். கடலெண்ணெயும் நல்லெண்ணெயும் சேர்க்கக்கூடாதுன்னு சொல்லாம விட்டுட்டேன். பாவிமக கடலெண்ணெய கலந்துட்டா. கலந்த பிறகு இது ரீஃபைண்ட் ஆயிலான்னு வடிவேல் பாணில கேட்டு என்ன யூஸ். விளைவு மைசூர்பாக் டேஸ்ட்ல இருந்தாலும் கடலெண்ணை வாசம் சும்மா கும்முன்னு தூக்குச்சு. பீஸ் போட்டு சாப்பிட வேண்டியதை உதிர்த்து சாப்பிட்டோம். அதை அதிகமா காலி பண்ணது சோதனை எலியான திரு தர்மபாலனே.



மைசூர்பாக் செய்யும்போது தெரியாத வேலையெல்லாம் செய்ய சொல்றாளேன்னு ப்ரியா புலம்பிகிட்டே செஞ்சா. ஜாலியா இருந்தது. செய்முறையை சொல்ல சொல்ல அவ செய்வா. மாவு பிசையிறது, அடுப்பு வேலையெல்லாம் அம்மையார் தலையில கட்டிட்டு, அடியேன் இப்படி செய், அப்படி செய்னு சொல்லி, பேசிகிட்டே செய்வோம். செய்யிற பண்டத்தைவிட செய்யிற அனுபவம் சுவையா இருக்கும். எள்ளடை செய்யும்போது, நாங்க தட்டி தட்டி தர, தர்மபாலனோட தம்பி எண்ணெய்ல போட்டு எடுத்தாரு. எத்தனை நாள்தான் தனியா செய்யிறது? அதான் அவரையும் இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தோம்.



லஸ்ஸி, பூந்தி ரைத்தா செய்தோம். இதெல்லாம் கொஞ்சம் பரவால்லாம வந்தது. ஒருநாள் ப்ரியா சிஸ்டம்ல வேலையா இருந்தா. எனக்கு போரடிச்சது. வத்தல் வறுக்க கூப்பிட்டேன். வரமாட்டேன் சொன்னா. போடி நானே செஞ்சிக்குறேன்னு வீம்பா போயி அடுப்பை பற்றவைத்து, எண்ணெய் சட்டில எண்ணை காயவைத்து வத்தல் கூட போட்டுட்டேன். ஆனா அது படபடன்னு பொறியறதைப் பார்த்துப் பயம் வந்துடிச்சு. அப்புறம் என்ன? அவ வந்துதானே ஆகணும். புலம்பிகிட்டே வந்து செஞ்சா. அட நானும் ஹெல்ப் பண்ணேனே கவர்ல இருந்து வத்தல் எடுத்து எண்ணெய்ல போட்டேன். எப்புடி.



அடுப்பில்லாம ஸ்வீட் செய்யலாம்னு யூடியூப்ல பார்த்தேன். உடனே பொட்டுக்கடலை, சர்க்கறை சேர்த்து அறைத்து, ஏலக்கா போட மறந்து, நெய்யிலேயே மாவு பிசைந்து பால்கோவா போல தட்டி காயவெச்சோம். கொஞ்சநேரம் கழிச்சு சாப்பிட்டா பால்கோவா போலவே சுவையா இருந்தது. இதையும் அதிகமா சாப்பிட்டது சோதனை எலிதான். எனக்கும் ப்ரியாக்கும் ஸ்வீட் பிடிக்காது.



ஐஸ்கிரீம் செய்யலாம்னு அடுத்த லூட்டிக்கு தயாரானோம். அதை எடு, இதை எடுன்னு டார்ச்சர் பண்ணதுல ப்ரியா கடுப்பாகி. போடி இதுக்கப்புறம் எதையாவது செய்ய சொன்னா செய்யமாட்டேன்னு போய்ட்டா. எனக்கும் கோவத்துல அவளைக் கூப்பிட விருப்பமில்லாம நானே அடுப்புல வெச்சு கிண்டிட்டு இருந்தேன். நான் எதையாவது எடுக்க சொல்லாதன்னுதான சொன்னேன். அடுப்புல வெக்க கூப்பிடாதன்னு சொன்னேனா. எல்லாம் தப்பா புரிஞ்சிகிட்டு எப்படியோ போன்னு சொல்லிட்டு போயிட்டா. நானே செஞ்சு, ஆறவெச்சு, மிக்சியில அடிச்சு. இதுவரைக்கும் எல்லாமே நல்லாதாம்ப்பா போச்சு. டிஃபன் பாக்ஸ்ல ஊத்தும்போது நிறைய கீழ சிந்திடுச்சு. அழுகைன்னா அழுகை அப்படி ஒரு அழுகை வந்துச்சு. மிச்சம் இருந்ததை ஃப்ரிட்ஜ்ல வெச்சேன். நைட் சாப்பிடும்போது சூப்பரா இருந்துச்சு. எல்லாரும் விரும்பியே சாப்பிட்டாங்க.



ஒருநாள் மிளகா கிள்ளி சாம்பார் வெச்சோம். இன்னொரு நாள் மண் சட்டி பாண வாங்கி வெச்சிருந்தேன். அதுல சமைக்கலாம்னு மாடிக்கு எடுத்துட்டு போய் அடுப்பு பற்ற வெச்சா எரியவே இல்ல. அருசி பருப்பு வீணாக கூடாதுன்னு கீழ வந்து கேஸ்ல வெச்சேன். பாணை அளவு தெரியாம அருசி பருப்பு அதிகமா போட்டதால தண்ணி பத்தாம சாதம் வேகல. வேற பாத்திரத்துல மாத்தி தண்னி அதிகமா வெச்சு வேக வெச்சா ப்ரியா. நானே இரண்டுமுறை உப்பு போட்டிருந்தேன். சதிகாரி அதை கவணிக்காம திரும்பவும் உப்பு போட்டுட்டா. ஆசையா வாயில வெச்சா, சே என்ன கொடுமை. உப்புல சாதம் கொஞ்சம் கம்மி. அப்புறம் என்ன குப்பை தொட்டிதான் நாங்க செஞ்சதை சாப்பிட்டுச்சு.



கேழ்வரகு கஞ்சி செய்யலாம்னு நினைச்சோம். கேட்ட பொருளையெல்லாம் எடுத்துக்கொடுத்துட்டு ப்ரியா துணி துவைக்க போயிட்டா. நானே ஆரம்பிச்சு நானே செஞ்சேன். கஞ்சிக்கும் களிக்கும் இடைப்பட்ட நிலைல வந்துச்சு. சுவையாதான் இருந்துச்சு. டம்பலர்ல ஊத்தி குடிக்க வேண்டியதை தட்டுல போட்டு சாப்பிட்டோம். கடைசியா நான் சென்னைக்கு வர அன்னைக்கு செஞ்சது தேங்காபால் சாதம். தேங்கா பால் எடுக்க தேங்கா அறைக்கும்போது பாதிக்குமேல கீழ சிந்திடுச்சு. தேங்கா பால்ல தண்ணி கலந்து செஞ்சாலும் டேஸ்டாவே இருந்துச்சு. தேங்கா பால் சிந்தினது கவலையா இருந்துச்சு.



காய்கறில சிலது கட் பண்ணுவேன். சிலது கட் பண்ணமாட்டேன். தோல் சீவ வராது. பூண்டு உரிக்கிறது இஞ்சி பூண்டு பேஸ்ட் அறைக்கிறதுலாம் செய்வேன். மாங்கா மாம்பழம் கட் பண்ண கத்துகிட்டேன். ப்ரியாதான் சொல்லி தந்தா. வெண்டக்கா ஃப்ரை பண்ணோம். நல்லாதான் இருந்துச்சு. நாலுபேருக்கு லெமன் ஜூஸ் போடணும். நாற்பது பேருக்கு போட்டு, பத்துநாளா வெச்சு வெச்சு குடிச்சோம். டேங்கு வாங்கி கலந்து குடிச்சோம். சாப்பாடு, நொறுக்கு தீனி எல்லாம் பத்தாம. அடிக்கடி சத்துமாவு கிண்னம் கிண்ணமா சாப்பிடுவோம். 



இப்படியே கோடைக்காலம் குளிர்ச்சியா கழிஞ்சது. யார் எங்க இருந்தாலும் மறக்கமுடியாத நினைவுகள் இது. இப்படி செஞ்சோம் அப்படி செஞ்சோம்னு சொல்லிட்டு, எப்படி செஞ்சோம்னு ரெசிபி சொல்லலையேன்னு பார்க்கறீங்களா. போங்கப்பா ரெசிபியெல்லாம் யூடியூப்ல பாத்துக்கோங்க. நாங்க மட்டும் யூடியூப் பாத்து கஷ்டபட்டு செஞ்சோம். நீங்க என்கிட்டருந்து சுட்டுக்குவீங்களா. முடியாது. எங்க நட்பின் இலக்கணத்தை கிட்சன்ல கிருக்கியிருக்கோம். எப்படி?


Friday 14 October 2022

மனிதத்தின் மரணம்.

            கண்ணா, சுபத்ரா ரெண்டுபேரும் சாப்பிட வாங்க என்று தன் பிள்ளைகளை அழைத்துவிட்டு, தன் கணவன் வாசுதேவனையும் சாப்பிட அழைத்து வந்தாள் தேவகி. அனைவரும் சாப்பிட்டபின் பாத்திரங்களை கழுவி ஒதுங்கவைத்து தன் அறைக்குச் சென்றாள். கட்டிலில் கணவன் பலத்த யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்க, வாசுதேவன் தன் மனைவியிடம் பிள்ளைகளின் வருங்காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர்களின் பள்ளி படிப்பு, கல்லூரி சேர்ப்பது, தங்களின் நிதி நிலமை என்று அனைத்தும் பேசிவிட்டு உரங்கினர்.



மறுநாள் காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருக்க மனைவி தந்த காலை உணவை உண்டுவிட்டு சுவரொட்டி ஒட்டும் தன் வேலைக்கு கிளம்பி சென்றார் வாசுதேவன். "ஏங்க இந்த டிரெயினேஜ் நாலுநாளா அடைச்சிட்டு இருக்கே கார்பரேஷன் ஆஃபிசுக்கு போன் பண்ணி சுத்தம் செய்ய வரசொல்லலாமில்லையா. குழந்தைங்க இருக்க இடம். இன்ஃபெக்‌ஷனானா என்ன செய்யிறது? நாந்தான் வேலை பளுவில் மறந்துடறேன். நீங்க கொஞ்சம் பாருங்களேன்” என்று தன் பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். ”சரிங்க பார்க்கிறேன். நானும் மறந்துதான் போயிடறேன். இப்பவே போன் செஞ்சிடறேன்” என்றுவிட்டு போன் செய்ய சென்றார் மற்றொருவர்.

போன் செய்த சற்றுநேரத்தில் டிரெயினேஜ் சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மை பணியாலர்கள்  வந்தனர். ஒருவர் உள்ளே இறங்கி சுத்தம் செய்துகொண்டிருக்க, மற்றொருவர் மேலிருந்து உதவியபடி மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறை இருந்தபோதும் ஆங்காங்கே இப்படி நடப்பதுண்டு. எந்த சட்டங்களையும் ஒழுங்காக பின் பற்றாதவர்களாலும், அவர்களை கடுமையாக கண்டித்து சட்டங்களை பின் பற்ற வலியுறுத்தாத அரசு அதிகாரிகளாலும்தான் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.



ஒரு சராசரி மனிதனின் சிந்தனை எப்பொழுதும் குடும்பம், வேலை, பணம், உணவு உரக்கம் இவற்றை மட்டுமே சுற்றிவரும். பசிக்கோ ருசிக்கோ உணவு உண்டால் போதும் அது செறித்து அடுத்த வேலை உணவு கிடைத்தால் போதும் என்பது மட்டுமே பெரும்பாலானோர் கொள்கை. இதுதான் கசப்பான எதார்த்தமான உண்மை. இப்படி டிரெயினேஜ் அடைப்பு வந்தால் மட்டுமே அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறது, அதற்காக தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதே ஞாபகம் வரும். 

தன் துருநாற்றத்தை தானே தாங்க இயலாது அடுத்தவரை சுத்தம் செய்ய அழைப்பர்.  25 சதவிகிதம் வீட்டில் சமைத்து, 75 சதவிகிதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்டதெல்லாம் கழிவுகளாய் வெளியேறிக்கொண்டிருந்தது. இது போதாதென்று குட்டி குட்டி காகிதங்கள், முடி, சிகரட் துண்டங்கள், பாலித்தின் பொருட்கள், சின்ன சின்ன நெகிழி பொருட்கள், பெண்களின் நேப்கின்கள் என்று அனைத்து அறுவருப்பு பொருள்களையும் அழகாக தன்னை அழுக்குப்படுத்திக்கொண்டு சுத்தம் செய்துகொண்டிருந்தார்.



சட்டென்று விஷ வாயு தாக்க மூச்சுத் திணறியது. “ஐயோ! காப்பாற்றுங்கள்!” என்று அலறித் துடித்தார். விஷவாயு தாக்கியதில் தடுமாறி தன்னிலை இழந்தார். சாக்கடை கழிவுகள் வாய், மூக்கு, கண், காது என்று அனைத்து உறுப்புகளிலும் புகுந்து உயிரை சூரையாட தொடங்க, வாந்தியும் இருமலும் ஏற்பட்டு கண்கள் செருகி மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். முறையான பாதுகாப்பு இல்லாததால் உடனே விஷவாயு மூளையையும் தாக்கிவிட, மரணத்தை மடமடவென்று நெருங்கிக்கொண்டிருந்தார். உடனே மேலே நின்றிருந்தவர் குதித்து காப்பாற்ற முயல,அவரும் அந்த மரண வேதனையில் சிக்கிக்கொண்டார். . உயிர் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். யார் இறந்தாலும் இறப்புதான் உரியவர்க்கு அது இழப்புதான். அப்படி இருக்கையில் இவர்களை மட்டும் முறையாக பாதுகாக்காமல் இருப்பது என்ன ஞாயம்?



வெளிநாடுகளில் தனிமனித சுதந்திரத்தைப் பற்றியோ அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியோ யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை. யார் சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் தலையிடுவதில்லை. ஆனால் சமூக ஒழுக்கத்திற்கு சின்ன கேடு வந்தாலும் சும்மா விடுவதில்லை. எல்லா துறைகளில் பணிபுரிபவருக்கும் முறையான பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆனால் நம் இந்திய நாட்டில் தனிமனிதரைப் பற்றி புறணி பேசவே சரியாக இருக்கிறது. அண்டைநாட்டின் கலாச்சாரம் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களைப் போல் சமூகக் கட்டுப்பாடு வேண்டாமோ.



தன் வேலைகளை முடித்துக்கொண்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வாசுதேவன். அப்போது பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று ஓடிச்சென்று பார்த்தார். பார்த்தவர் எதையும் யோசிக்காமல் குடும்பம் உயிர் அனைத்தையும் துச்சமாய் எண்ணிவிட்டு உடனே குதித்துவிட்டார் அவர்களைக் காப்பாற்ற. 

இயற்கையான ஒரு விஷயத்தைக் கேலிக்கூத்தாக்கி கைக்கொட்டி சிரித்திருக்கிறோம். ஆனால் அது கேலி செய்யும் விஷயமல்ல கேடு செய்யும் விஷம் என்பதை மறந்து போனோம். வாயு பிரச்சனைகளைப் பற்றியும் அதன் தீர்வு பற்றியும் ஒவ்வொரு மனிதனும் மருத்துவரை அனுகியும் சமூக ஊடகங்களிலிருந்தும் தெரிந்துகொள்கின்றனர். தன்னைக் காத்துக்கொண்டால் மட்டும் போதுமா? தன் நாட்டைக் காக்க வேண்டாமா? உலகிலேயே மிகக் கொடிய விஷமென்றால் அது மனிதந்தான். உடலளவிலும் சரி. உள்ளத்தாலும் சரி. மனித விஷத்திடமிருந்து மனிதர்களைக் காப்பாற்ற மனிதர்களான அரசாங்க அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள்? எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் முறையும், அது தொடர்பான சட்டங்களும் வந்தபின்னும்  இன்றளவும் நிகழும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு என்ன முடிவு? கேள்விக்குறிதான்.



அங்கு இருந்தவர்கள் போலிசுக்கு தகவல் கொடுக்க, மீட்புப் பணி உடனடியாக நடைபெற்றது. மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு,அவர்களின் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

அடுக்கலையில் வேலையாக இருந்த தேவகி அண்ணி என்ற அன்பான அழைப்பில் வெளியே வந்து பார்த்தாள். தன் கணவருடன் வேலை செய்யும் ஒருவர் நின்றிருந்தார். ”வாங்க தம்பி. காஃபி எடுத்துட்டு வரேன் உள்ள வாங்க. அவர் எங்கே? இன்னும் அவருக்கு வேலை முடியலையா?” என்று கேட்டபடி காஃபி எடுக்க உள்ளே செல்லபோனாள். அதை தடுத்த அவர், “வேண்டாம் அண்ணி. வெளிய போகனும் நீங்களும் வாங்க. கொஞ்சம் அவசரம்.” என்று பதட்டமாய் அழைத்தார். அவர் முகத்திலிருந்த பதட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு உள்ளே கிலி பரவியது. நடுக்கத்துடன், “எ.எங்கே போகனும் தம்பி? யாருக்கு என்ன?” என்று திக்கித் திணறியபடி கேட்டாள்.

“அது. வந்து. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரை போகணும் அண்ணி வாங்க ப்ளீஸ். எல்லாம் சொல்றேன். இப்போ வாங்க” என்று தழுதழுத்த குரலில் அழைக்க, அதற்குமேல் எதுவும் கேட்காமல் கிளம்பிவிட்டாள். மனமெல்லாம் பாரமாய் மருத்துவமனை வந்து சேர்ந்தனர். உள்ளே செல்ல செல்ல தேவகிக்கு பயம் அதிகரித்தது. அங்கே தன் கணவரை சுயநினைவற்ற நிலையில் கண்டதும் பயமும் பதட்டமும் உச்சத்தை அடைந்து கதறலாய் வெளி வந்தது. “ஐயோ! என்னங்க. என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிங்க. எந்திரிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று பதறித் துடித்தாள். வாசுதேவனின் உடன்பிறவா சகோதரரான அவர் நடந்ததைச் சொல்ல, அழுது கரைந்தாள் மனிதநேயத்தின் மறுவுருவான வாசுதேவனின் காதல் மனைவி.  



சிகிச்சைப் பலனின்றி அந்த இரண்டு தூய்மை பணியாளர்களும் முதல் நாளே இறந்துவிட, மறுநாள் வாசுதேவனின் உயிரும் விண்ணில் பறந்தது. அந்த 24 மணிநேரமும் தேவகி தன் சுயத்திலேயே இல்லை. பித்துப்பிடித்தவள் போல் வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அதிசயம் நிகழ்ந்து மீண்டும் தன் காதல் கணவன் தன்னிடமே வந்துவிடமாட்டாரா என்று ஏங்கினாள். விதி போடும் கணக்கிலிருந்து தப்பிவிட முடியுமா? அவளின் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்க்கவில்லை. உழைப்பு, நட்பு, மனிதநேயம் மூன்றையும் ஒன்றாக விழிங்கிக்கொண்டது மரணம்.

மூவரின் உடலும் போஸ்ட்மாட்டம் செய்து அவரவர் குடும்பத்திடம்  ஒப்படைத்தனர். மருத்துவமனையே அதிரும்படி வெடித்து அழுதார்கள் அவர்களின் குடும்பத்தினர். அப்பாவியான தேவகியையும், அவளின் இளங்கன்றுகளையும் பார்க்கும்போது அனைவருக்குமே கண்கள் கலங்கியது. தனியொரு பெண்ணாய் தன் பிள்ளைகளுடன் அமரர் ஊர்தியில் கணவனின் உடலோடு அவரது சொந்த ஊரான மதுரைக்கு பயணப்பட்டாள். தங்களுடன் வருகிறேன் என்ற தன் கணவரின் மானசீக சகோதரரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டாள். இடைவிடாது அழுத  பிள்ளைகளை இறுக்கி அனைத்துக்கொண்டு புழுவாய் துடித்தாள். 



மதுரையில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் தன் பக்கத்து வீட்டு தோழியான தேவகியை காதல் மணம் புரிந்துகொண்டார். இரண்டு வீட்டாருமே அவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். தன் நண்பரின் உதவியுடன் அவர்கள் குடியிருக்க வாடகை வீட்டை பார்த்துவிட்டார். அந்த நண்பரின் உதவியுடனே தனக்காக வேலையும் தேடிக்கொண்டார். தன் மனைவியை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினார். அவள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே தன் கஷ்டங்கள், வாங்கும் கடன்கள், வரும் செலவுகள் பற்றியெல்லாம் பெரிதாக பகிர்ந்துகொள்ளமாட்டார். அவரை பொருத்தவரை அவளும் பிள்ளைகளும் சந்தோஷமாக இருந்தால் போதும்.

கணவனின் காதல் சிறையில் ஆசையாய் அடைப்பட்டுக்கொண்டவள் உலகம் தெரியாத பெண்ணாகவே வாழ்ந்தாள். இனி அவளின் எதிர்காலம் என்ன? 



வாசுதேவனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு திரும்பிவிட்டாள். வீட்டின் உரிமையாளர் குடும்பத்திற்கும் இந்த விஷயம் தெரியவர குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த வீட்டின் மூத்த மகனான மகேஷ் அவனால் முடிந்தவரை அவர்களுக்கு மன ஆறுதல் அளித்து, பெரும்பாலான நேரத்தை அவர்களுடனே செலவிட்டான். எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் சொல்லிக்கொடுத்தான். 

அவர்களின் ஆறாத்துயர் பற்றி முகநூலில் கட்டுரை வெளியிட்டு ஒரு பெரும் தொகையை வசூலித்துக்கொடுத்து உதவினான். கணவனின் கடன் பெரிய அளவில் இருப்பது தெரியவர மேலும் கலங்கினாள் அவள். தையல் கலை தெரிந்திருந்ததால் தையல் எந்திரங்கள் வாங்கி வேலை செய்யலாம் என்று மகேஷ் ஆலோசனை கூற அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. வேலைநேரத்தில் இறந்ததால் ஒப்பந்தக்காரர்களே தூய்மைப் பணியாளர்களின் மனைவிகளுக்கு அவர்களின் சார்பில் வேலை கொடுத்துவிட,   வாசுதேவன் பணியாளர் இல்லாததால் வெறும் பத்து லட்சத்தோடு நிறுத்திக்கொண்டது அரசு.



“சாப்பிடு சுபாக்குட்டி. ஏன் இப்படி படுத்துற? இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று தன் மூத்தமகளை கடிந்துகொண்டிருந்தாள். “ என்னால சாப்பிட முடியல அம்மா! எனக்கு அப்பா வேணும். படிக்கமுடியல, தூங்கமுடியல, விளையாட முடியல. எல்லா இடத்துலையும் அப்பாதான் தெரியிரார். நான் இனி அப்பாகிட்ட அது வேணும் இது வேணும்னு கேட்கமாட்டேன். நல்லா படிச்சு நல்ல பொண்ணா இருப்பேன். எனக்கு அப்பா மட்டும் கூட இருந்தால் போதும்மா.” என்று தன் அன்னையின் மடி சாய்ந்து அழுதாள் வாசுதேவனின் செல்லக்குட்டி சுபத்ரா.

தேவகியின் செல்ல மகனாக கண்ணனும் வாசுதேவனின் பாசக்கிளியாக சுபத்ராவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். சந்தோஷத்தால் கட்டிய அழகான குருவிக்கூட்டைப் பிரித்ததில் விதிக்கு என்ன லாபமோ. சுபத்ராவின் அழுகையை கேட்டபடி வந்த மகேஷ், “அப்பா உன் கூடவேதான் இருக்கார். உன்னை தெய்வமாய் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார். உன் சந்தோஷத்தில் அவர் கண்கள் சிரிக்கும். உன் துக்கத்தில் அவரின் இதயம் இரத்தம் வடிக்கும். நீ நல்லா சாப்பிட்டு நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு ஆத்ம நிம்மதி கிடைக்கும். சாப்பிடு.” என்று தேற்றினான். அவன் பேசுவது கொஞ்சம் புரிந்தாலும் அழுது துடித்தாள் பெண். 

மகளின் அழுகையை காணக்காண தேவகிக்கும் அழுகை பொங்கியது. “உங்க அப்பா போனபோதே நானும் போயிருப்பேன். உங்களுக்காக மட்டும்தான் உயிர் வாழ நினைக்கிறேன். நீங்களும் இப்படி பண்ணா நான் என்ன செய்வேன். உங்க அப்பா வேணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா. நானும்தான் அவர் அன்புக்கு ஏங்குறேன். என்ன செய்யறது நம்மை இப்படி விட்டுட்டு போயிட்டாரே பாவி மனுஷன்” என்று மகளை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள். “என்ன இது? அவ சின்ன குழந்தை. அவளுக்கு நீங்க ஆறுதல் சொல்லணும். நீங்களே சின்ன பிள்ளை போல அழுதா அவளுக்கு யார் ஆறுதல் சொல்றது. உங்க பிள்ளைகளுக்காக நீங்களும், உங்களுக்காக அவங்களும் வாழ்ந்தே ஆகணும். முதல்ல கண்ணை துடைச்சிட்டு அவளை சமாதானபடுத்தி சாப்பிட வையுங்க.” என்று சற்று அழுத்தமாகவே கூறினான் மகேஷ். பிள்ளைகளை அதட்டி உருட்டி சாப்பிட வைத்துவிட்டு பெயருக்கு தானும் உண்டுவிட்டு எழுந்தாள். அவர்களுக்கு மேலும் சமாதானம் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, இவர்களும் உரக்கத்தைத் தழுவினர்.



பிள்ளைகளுக்காக ஓரளவு தேறிக்கொண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள தொடங்கியிருந்தாள் தேவகி. வாசுதேவன் வாங்கியிருந்த கடனை ஓரளவு அடைத்துவிட்டாள். தையல் எந்திரங்கள் வாங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை வங்கியில் பிள்ளைகளின் பெயரில் வைப்பு நிதியாக போட்டுவிட்டாள். நாட்கள் அதன் போக்கில் செல்ல, விதி விடுவேனா என்று துறத்தியது. “டேய் ஸ்கூல்லருந்து வந்ததிலிருந்து போன் பாக்குற. ஒழுங்கா வெச்சிட்டு போய் படி” என்று சேட்டைக்கார கண்ணனை மிரட்டினாள் தேவகி. “அம்மா, இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ்.” என்று சொல்லி சொல்லியே நேரத்தை கடத்தினான் அந்தக் குறும்புக்காரன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொங்கி எழுந்துவிட்டாள். வலுக்கட்டாயமாக போனைப் பிடுங்கிக்கொண்டு நன்றாக வெளுத்து வாங்கிவிட்டாள். கோபம் அடங்கியதும் பிள்ளையை அடித்து திட்டிவிட்டதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவனை கொஞ்சி கெஞ்சி சாப்பிட தின்பண்டம் கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றாள். சற்று நேரத்தில் கண்ணன் சைக்கிளை எடுத்து போவது தெரிந்தது. பிள்ளை விளையாடிட்டு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.



வெகுநேரம் சென்றும் பிள்ளை வராததை எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது. வாசலிலேயே விழிவைத்து காத்திருந்தாள். அப்போது தன் நண்பர்கள் சூழ இரத்த களரியோடு வந்தான் கண்ணன். “டேய். கண்ணா என்னடா இதெல்லாம் என்ன ஆச்சுடா. ஐயோ கடவுளே” என்று கத்தினாள். “அவனை நாய் கடிச்சிடிச்சு ஆண்ட்டி” என்றான் வந்த நண்பர்களுள் ஒருவன். நாயின் கோரதாண்டவத்தை தன் செல்ல பிள்ளையின் காலில் பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். “பாவி. சொன்னா கேட்டாதானே. இப்படி வந்து என் நெஞ்சில் நெருப்பள்ளி கொட்டிட்டியே.” என்று புலம்பியபடி உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றாள். சிகிச்சை அளிக்கப்பட்டது. மகனின் வலியை காணக்காண துடித்தது அந்த பேதை உள்ளம். ஆயிரக்கணக்கில் செலவழிந்தபோதும் மகன் சரியானால் போதும் என்றிருந்தது. ஒருமணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.



“அம்மா. ரொம்ப வலிக்குது அம்மா ஏதாவது பண்ணுங்க. என்னால தாங்க முடியல. ரொம்ப ரொம்ப எரியிது. வலிக்குது அம்மா.” என்று துடித்தது ஏழாம் வகுப்புப் படிக்கும் அந்தச் சின்ன குறுத்து. மகனின் தலையை கோதிக்கொடுத்து, ”சரியா போய்டும். அப்பா நம்ம கூட சாமியா இருக்கார். அவர் உன் வலி போக்குவார். நம்மை கலங்க விடமாட்டார்” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக்கொண்டாள். பதினோறாம் வகுப்பு படிக்கும் சுபத்ரா தம்பியின் இன்னொரு அன்னையாகி அவனின் கைப்பிடித்து ஆறுதல் கூறினாள். “கவலப்படாதடா தம்பி நீ சீக்கிரம் சரியாய்டுவ. அம்மா போல நானும் உன்னை என் உயிராய் பார்த்துப்பேன். நம்ம சீக்கிரம் விளையாடலாம். இந்தா சாப்பிடு” என்று தன் கையிலிருந்த இட்டிலியை தம்பிக்கு ஊட்டினாள். மகளின் அக்கரையிலும் அன்பிலும் அன்னையின் கண்கள் பனித்தது. இந்த பாசமும் புரிதலும் இவர்களிடம் கடைசிவரை இருக்க வேண்டும் என்று தன் வாசுவிடம் வேண்டிக்கொண்டாள்.

மேலும் நான்கு இட்டிலிகளைக் கொண்டு வந்து தாயின் அருகே அமர்ந்து அவளுக்கும் ஊட்டினாள் சுபாக்குட்டி. ”சாப்பிடுங்க அம்மா. எங்களுக்காக. ப்ளீஸ். அப்பாதான் இல்லை. எங்களுக்கு நீங்களாவது கடைசிவரை வேணும் அம்மா.” என்று மகள் கண்கள் கலங்க, துக்கம் தொண்டையை அடைத்து உணவு உள்ளே செல்ல மறுத்தாலும், பிள்ளைகளுக்காக உண்டாள். பின் சுபத்ராவையும் சாப்பிடவைத்து இருவரையும் தன் மடிசாய்த்து தூங்க வைத்தாள். உரக்கம் வருமா அவளுக்கு? கணவனின் புகைப்படத்தைப் பார்த்து உள்ளம் ஊமையாய் அழுதது. இன்னும் இதுபோல எத்தனையோ பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் அவள் தனியே எதிர்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடன் இருக்கும்போது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தும், தனிமையில் கணவனின் நினைவுகளுடன் போராடியும் நாட்களை கழிக்க வேண்டும். கைம்பெண்ணின் சடங்குகள் ஒழிந்திருக்கலாம். ஆனால் காதல் பெண்களின் உள்ளத்தை மாற்ற இயலுமா?

அவளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியில் சரி செய்ய முடியும். அதற்கு மற்றவரும் முன் வரலாம். ஆனால் கட்டியவனின் அன்பு? மறு காதலும் மறுமணமும் மருந்தாய் இருக்கலாம். அது அவரவர் உள்ளத்தையும், உள்ள சூழலையும் பொருத்ததாயிற்றே. லட்சத்தில் ஒரு வாய்ப்பாக அவள் மறுமணம் புரிந்தாலும், அதுவரை அவளின் நிலை? தன் காதல் கண்ணாளனின் புகைப்படத்தைப் பார்த்தபடி கண்களில் வழியும் நீரோடு உரங்கிப்போனாள். ஜன்னலிலிருந்து வீசிய சில்லென்ற காற்று அவள் கண்ணீரை அழுத்தமாய் துடைத்துவிட்டுச் சென்றது.

முற்றும்.


 

Monday 15 August 2022

காலதேவனின் தீர்ப்பு.


நதிக்குத் துணை இரு கரைகள் மட்டும்தான். ஒரு நல்ல சிந்தனையாளனுக்குத் துணை, அவனைப் போல் சிந்திக்கும் சக மனிதந்தான். என்ற வரிகளுக்கேற்ப ஒரே அலை வரிசையில் சிந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, பழகி காதல் கொண்டால் எப்படி இருக்கும்? காமம் கடந்த காவியக் காதலாக இருக்கும். காதலர்களின் உடல்கள் அழிந்தாலும், அவர்களின் உள்ளமும், அதில் பொங்கிவந்த காதல் வெள்ளமும், என்றும் வாழும். அழகான அரிதான காதலென்றால் அது இதுதான்.



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல, அன்பு, பண்பு, அழகு, அறிவு , ஒழுக்கம், சமூக அக்கறை, என்று அனைத்தையும் வார்த்தெடுத்த தங்கச் சிலைகளாக மனிதர்கள் பிறப்பது எல்லாக் காலத்திலும் மிக மிக அரிதான ஒன்று. அப்படி அரிதாகப் பிறந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், உயர்ந்த காதலையும், குருஞ்சி மலர் என்னும் நாவலில் தமிழ் தூரிகை கொண்டு ஓவியம் வடித்திருக்கிரார் என் உள்ளத்தைத் தன் எழுத்துக்களால் உரையவைத்து, உருகவைத்த எழுத்தாளர் திரு நா. பார்த்தசாரதி அவர்கள்.



அரவிந்தன்: அரவிந்தன் என்பதர்க்கு அறிவார்ந்த விந்தை மனிதன் என்று பொருள். கம்பீரமான அழகும், கவர்ந்திழுக்கும் புன்னகையும், கருணை உள்ளமும், வற்றாத அருவி போன்ற அறிவும் கொண்டவனாக இருப்பினும், அகந்தையோ, ஆணவமோ சிறிதும் இல்லாமல், அன்பு, அறம், அகிம்சை இவை மூன்றும் தானும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் போதிக்கும் விந்தை மனிதன். சாப்பிடுவதில்கூட, சமூகத்திற்குப் போகத்தான் தனக்கு என்று நினைக்கும் தன்னலமற்ற இளைஞன்.



பூரணி: பூரணி என்பதற்கு பூரணத்துவம் என்று பொருள். தங்கப் பதுமை போன்ற அழகும், தேனருவி போன்ற தமிழும் கொண்ட தன்மானம் நிறைந்த பெண்ணாய்த் திகழ்பவள் பூரணி. பண்புக்கும் பெண்மைக்கும் இலக்கணமாய், உடன் பிறந்த தம்பி தங்கைக்கு இளம் தாயாய், அவர்களுக்கு அமுதளிப்பதில் அன்னபூரணியாய் வாழ்ந்து, சமூக நலனுக்கும், தமிழ் பணிக்கும், தன்னைப் பூரணமாய் அர்ப்பணித்தவள் பூரணி.



பண்பின் சிகரங்களான இவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், கடந்துவந்த இன்ப துன்பங்களும், கடக்க முடியாத மெல்லிய உணர்வுகளின் கோர்வையே இந்த குறிஞ்சி மலர் கதை.



தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த பேராசிரியரும் பூரணியின் தந்தையுமான அழகிய சிற்றம்பலத்தின் இறப்பிற்கு பிறகு கவலைகளை மட்டுமே தன் ஆதரவாக கொண்டு, குடும்ப பொறுப்பை தலையிலும், பசி மயக்கத்தை உடலிலும், பாச மயக்கத்தை உள்ளத்திலும் கொண்டிருந்த நேரத்தில்தான் மீனாட்சி அச்சகத்தில் பணிபுரியும் சமூக நலம்விரும்பியான அரவிந்தனை சந்திக்கிறாள் பூரணி. தந்தையின் புத்தகங்களை வெளியிடும் நிமித்தமாக தன்னை காணவரும் அரவிந்தனை திருடி தன் உள்ளத்துக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள் அவள். தமிழர் பண்பு பட்டினியால் தெருவில் மயங்கிக்கிடந்தபோது  தன் கவியுள்ளம் பொங்க பாடும் அரவிந்தன், அவளை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பக்தியும் காதலும் கலந்த உள்ளத்தை அவளுக்காய் அற்பணிக்கிறான்.



அதன்பிறகு இருவரின் இதயத்திலும் காதலோடு உயர்ந்த கருத்துக்களும் மணத்தது. இரசாயன மாற்றம் நிகழும் பேச்சுக்களை பேசி மகிழும் சராசரி காதலர்களாக இல்லாமல் சமூக சிந்தனைகளைத் தூண்டும் சீறிய கருத்துக்களைப் பேசினர். புற அழகையும் உள்ளத்து உணர்வுகளை எழுதுவதில் கூட எழுத்தாளர் தமிழோடு சுவையாக விளையாடி இருப்பது என்னைக் கவர்ந்தது. எண்ணங்களால் பாலம் அமைத்து இருவரும் கைக்கோர்த்து நடந்தனர். மணமாலையை மனதுக்குச் சூட்டி உவகைக் கொண்டனர்.

காதலன் காதலியை கௌரவித்து உயரத்தூக்கிப் பார்த்து ரசிப்பதே உண்மைக் காதல். கருத்துப் புதையலை தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் காதலியை உலகறிய செய்ய பாடுபடும் அரவிந்தன், உலகை நேசிக்கும் அரவிந்தனின் உடல் நலனையும் உள்ளத்து நலனையும் பேணிக்காக்க தவிக்கும் தாயாய் பூரணி. இதைவிட இலக்கிய காதலுக்கு அடையாளம் வேறென்ன வேண்டும்?



அழகிய கொடிகளாக இருப்பினும் அது நன்றாக படர கொழுகொம்பு துணையாக வேண்டும். அதுபோல அரவிந்தனும் பூரணியும் வாழ்வில் உயர்ந்தோங்க துணை புரிந்த கொழுகொம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. "களவுக்குப் போகும் பணத்தை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா, பூட்டுக்கு மேலே பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா” என்று நினைக்கும் வள்ளண்மை கொண்ட மங்கலேஸ்வரி அம்மா பூரணிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் இன்னொரு தாயானார். முதலாளியாக சம்பளத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடாமல் அரவிந்தனுக்கு தேவையானதைச் செய்து தோள்கொடுக்கும் தோழனாய், தாங்கிப்பிடித்து நல்வழிப்படுத்தும் தகப்பனானார் மீனாட்சி சுந்தரம்.



நெருங்கிய தோழிகளாக இருப்பினும் இம்மியளவும் என் கவலைகளை யாரிடமும் வெளியிடமாட்டேன் என்று தன்மானம் காக்கும் பூரணியின் தேவைகளை தானாக புரிந்துகொண்டு நாங்கள் எங்கள் தோழிக்கு செய்வோம் இது எங்கள் கடமை. இதை மறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை என்று உரிமைகீதம் பாடும் கமலாவும் காமாட்சியும் பூரணி சாய்ந்துகொள்ளும் தோள்களானார்கள். அமைதிக்கு இலக்கணம் அரவிந்தன் என்றால், புரட்சிகரமான கருத்துக்களுக்கு இலக்கணம் முருகானந்தம். முரட்டுத் தோற்றமாக இருந்தாலும் மென்மையான மனம் கொண்ட முருகானந்தம், எதிர்மறை கருத்துக்களை நாங்கள் கொண்டிருந்தாலும் எங்கள் நட்பை எவரும் பிரிக்க இயலாது என்று சொல்லி நட்பிற்கு இலக்கணமானான்.



அன்னையாய் வாழும் அக்காவிற்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் அவள் கஷ்டங்களை புரிந்து பாசத்தை மட்டுமே பரிசளிக்கும் தம்பி தங்கை பூரணியின் குழந்தைகளானார்கள். பூரணியின் சொற்பொழிவையும் அவள் அன்பான அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் மங்கலேஸ்வரியின் மகள்களான வசந்தாவும் செல்லமும் பூரணியின் உடன்பிறவா சகோதரிகளானார்கள். நல்லவர் நல்லவரோடு சேரும்போது நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு நல்லதொரு சான்று மேலே குறிப்பிட்டுள்ள கதா பாத்திரங்கள்.



அழகான பறவைகள் மீட்டும் அனுராகங்களுக்கிடையில் அபஸ்வரம் தோன்றுவதைப் போல இக்கதையிலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். கடைசிவரை கோபம் கொள்ளக்கூடாது, குறுநகைக்கொண்டே வாகைசூட வேண்டும். அகிம்சையே அரவிந்தனின் கொள்கையென வாழ்ந்த அரவிந்தனின் உள்ளத்தையே உலுக்கிப்போடுகிறது இவர்களின் செயல். சில மனிதர்கள் தன் வேலையை தானும் ஒழுங்காக செய்யமாட்டார்கள், அதே வேலையை அடுத்தவர்கள் முறையாக செய்ய நினைத்தாலும் விடமாட்டார்கள். இந்தக் கதையில் வரும் புதுமண்டபத்து அச்சகக்காரரை போல. பர்மாவிலிருந்து சூதும் சூட்சுமத்தையும் சம்பாதித்துக் கொண்டுவருகிறார் பர்மாக்காரர். இவர்களின் வரவால் அழகாய் அமைதியாய் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அரவிந்தன் பூரணி வாழ்க்கையே ஆட்டம் காண்கிறது. நேர்மைக்காக இவர்களிடமிருந்து அரவிந்தன் பெறும் கொடுமையான பரிசுகள் ஏராளம்.



உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கும் அரவிந்தன் பூரணியை மணம் முடித்துக்கொள்வதுதான் மகத்தான லட்சியம் என்று வற்புறுத்துகிறார்கள் அவர்களின் நலம்விரும்பிகள். எண்ணத்தால் வாழும் வாழ்க்கை மட்டும் சில காலத்திற்கு போதும் என்கிறான் அரவிந்தன். என்னவன் எண்ணம் எதுவோ அதுவே என் எண்ணம் என்கிறாள் பூரணி. மனிதவெள்ளத்தின் நடுவே ஒளிதீபம் ஏந்திச் செல்லும் கனவு காணும் பூரணி ஒருபுறமும், மனிதகுலத்தில் பிறந்த சராசரி பெண்ணாக தன் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் பூரணி ஒரு புறமுமாக அரவிந்தனின் இதயத்தில் ஆட்சி செய்து அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவிட்டார்கள். இதில் யாருடைய கனவு நிரைவேறிற்று? இரண்டு பூரணிகளுள் அரவிந்தன் அடைந்த பூரணி யார்? உயரே செல்லும் போட்டியில் வெற்றிப்பெற்றது யார்? இதையெல்லாம் நான் சொன்னால் சுவை குன்றிவிடும். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது சுதந்திரமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படி கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் என்பதே சுதந்திரம். இதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் தரணியே பண்பட்டு விளங்கும்.



ஆண்டவன் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் காலம் என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. பூமி சுழலும்போது மாறுவது காலங்கள் மட்டுமல்ல அனைவரது கோலங்களும்தான். சில காலம் இன்பத்தில் மிதந்தவர் பல காலம் துன்பத்திற்கு ஆளாகலாம். பல காலம் துன்பத்தில் உழன்றவர் சில காலமாவது இன்பமாய் வாழலாம். இது காலதேவனின் கணிக்க முடியா தீர்ப்பு. நடமாடும் மனிதர்களான நாம் அனைவருமே ஓடும் காலச்சிறையில் ஆயுள் கைதிகள். சுதந்திரமாய் சுற்றிவரும் பூமியில் நாம் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதிகள். இந்த அழுத்தமான உண்மையை உணர்வோர் மட்டுமே இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சமநிலை இதயத்தோடு இறுதிவரை இவ்வுலகில் உய்ய முடியும்.



தமிழென்னும் உளிகொண்டு காலத்தின் மதிப்பையும், காதலின் மகத்துவத்தையும், பண்பாட்டின் புனிதத்தையும், மனிதநேயத்தின் மாண்பையும் எல்லோரது இதயத்திலும் அழியா சிற்பமாய் செதுக்கிய எழுத்தாளர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


                             

Saturday 13 August 2022

உலகத்தொடு ஒட்ட ஒழுகல்

வணக்கம் நண்பர்களே. இந்த விமர்சனக் கட்டுரை எனது நெருங்கிய நண்பரான திரு. தர்மபாலன் எழுதியது. கண்ணன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் அவர், பேச்சு, பாட்டு, பகுத்தறிவு சிந்தனை, மொழித்திறன் பொது அறிவுக் கூர்மை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குபவர். அவர் எழுத்துலகிலும் தடம் பதிக்க முடிவு செய்து எழுதியிருக்கும் முதல் பதிவு இது. படித்துவிட்டு தங்களின் மேலான கருட்துக்களைச் சொல்லுங்கள்.


உலகத்தொடு ஒட்ட ஒழுகல்.

அனைத்தையும் துறந்துவிட்ட பட்டினத்தடிகள், ஒருமுறை வயலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தண்ணீர் எடுக்கப் போன இரண்டு பெண்களில் ஒருத்தி அவரைப் பார்த்து, இவர் எவ்வளவு பெரிய துறவி தெரியுமா என்று கேட்டாள். அதற்கு இரண்டாமாவள் இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய துறவி இல்லை, அப்படி உண்மையான துறவியாக இருந்திருந்தால் வயலில் படுத்து வரப்பில் தலை வைத்து உறங்கமாட்டார் என்று சொன்னாள். அந்தப் பெண்கள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டு போனதைக் கவனித்த பட்டினத்தடிகள் உடனடியாக வரப்பிலிருந்து தலையை எடுத்து வயலில் வைத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பிவரும்பொழுது இதைக் கவனித்த இரண்டாம் அவள், நீ சொன்னதைக் கேட்டு தனது தவறைத் திருத்திக் கொண்ட இவர் உண்மையான துறவிதானே என்று கேட்டாள். அதற்கு முதல் பெண் இப்போதும் நான் இவரை ஒரு துறவி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன், ஏனென்றால், இவர் மற்றவர்கள் பேசிக் கொண்டு போவதையெல்லாம் ஒட்டு கேட்கிறார் என்று சொன்னாள். அப்படியானால், துறவு என்பதன் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பது பற்றி ஆராயும் விமர்சனக் கட்டுரைதான் இது.



பொதுவாக, துறவு என்பது உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதைக் குறிக்கும். திருக்குறள்கூட அவ்வாறுதான் சொல்கிறது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்பதுதான் அந்த குறள். ஆனால் இந்தக் கருத்தை வேறுவிதமாக அணுகுகிறார் தமிழ் சிறுகதை உலகின் மகத்தான ஆளுமையான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய துறவு என்ற சிறுகதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.



சிதம்பரத்திலுள்ள ஒரு தெருவில் இரண்டு பக்கத்துவீட்டுப் பெண்கள். அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அவ்வீட்டு வாசலில் அமர்ந்தபடிப் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. பங்கஜம் மற்றும் மரகதம் என்ற அவ்விரு பெண்கள் நிகழ்த்திய உரையாடலின் சாரம் என்பது பங்கஜத்தின் கணவர் சதாசிவம் பிள்ளை மற்றும் அவளது மூத்த மகன் சோமுவைப் பற்றியது. குறிப்பாக சோமுவைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறாள் பங்கஜம். அதற்குக் காரணம் அவனது மிதமிஞ்சிய பக்தி. எட்டாம் வகுப்புத் தேர்வில் அவனுக்கு ஏர்ப்பட்ட தோல்விக்குப் பிறகு, அவனது தந்தையின் கண்டிப்பான உத்தரவு அவன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது. விளையாட்டு உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கும் அவனுக்குக் கிடையாது. அவனது மற்ற இரண்டு தம்பிகளும் தங்கை ராஜியுடன் விளையாடிக் கொண்டிருக்க சோமுவிற்கு மட்டும் எப்போதும் படிப்புதான். மகனின் நிலை கண்டு இரக்கமுற்ற தாய் பங்கஜம், ஒரு நாள் சோமுவை அழைத்து கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபட்டு வருமாறும் அப்பாவிடம் தான் சொல்லிக் கொள்வதாகவும் கூறுகிறாள். சதாசிவம் பிள்ளைக்கும் இந்த யோசனை பிடித்துப் போகவே, தினமும் தானே அவனைக் கோயிலுக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அந்தத் தருணத்தில் அங்கு நடைபெற்ற சாமி அருளாணந்தரின் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவால் பெரிதும் கவரப்படுகிரான் சோமு. அங்கு அந்த சொற்பொழிவு ஒரு மாதம் நடைபெற்றது. விளைவு, 15 வயது மட்டுமே நிரம்பிய சோமுவிற்கு ஏற்பட்ட அதீத பக்தி. இதனை எழுத்தாளரின் வார்த்தைகளில் பார்க்கலாம்.



15 வயது என்பது ஒரு மனிதனுக்குப் பித்துப் பிடிக்கிற வயது. அது, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ, சமயப் பித்தாகவோ, ஏன் பெண் பித்தாகவோகூட இருக்கலாம். நம் சோமுவிற்குப் பிடித்திருப்பது வேதாந்தப் பித்து. சாமி அருளாணந்தரின் சொற்பொழிவைக் கேட்கத் தொடங்கிய பிறகு அவனது பக்தி என்பது சாதாரணமாக தோன்றி, ஜீவகாருண்யத்தில்  வளர்ந்து, இறுதியில் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதில் போய் முடிகிறது. சோமுவைப் பொருத்தவரை, இவ்வுலகிலுள்ள எல்லாம் பொய். வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். படித்த படிப்பு, பார்த்த வேலை, சேர்த்த செல்வம் உட்பட இவ்வுலகிலுள்ள எதுவுமே நிரந்தரமில்லை. மனிதனால் வெல்ல முடியாதது மரணம் மட்டுமே. அப்படியானால், பிறந்த இம்மண்ணில், பல்வேறு பாவங்களைப் புரிந்து மீளா நரகத்தில் வீழாதிருக்க, இமயமலையில், பனிப்படலத்திற்கு நடுவில் தவமிருக்கும் லோக குருவின் பாதங்களைச் சரணடைவதுதான் ஒரேவழி என்று முடிவு செய்து, தனது உடைமைகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இமயமலைக்குப் பயணமாகிறான் சோமு.



அதிகாலை எழுந்து, சிதம்பரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று, தான் இத்தனை காலம் சேமித்துவைத்த ஒரு ரூபாயை, அங்கிருந்த ஒரு டஜன் பண்டாரங்களுக்குத் தானம் செய்த பிறகு, குளத்தங்கரைக்குச் சென்று தலையை மொட்டையடித்த பின்பு தனது நெடும்பயணத்தைத் தொடங்குகிறான் சோமு. கதை முழுவதையும் விளக்குவது என்பது இக்கட்டுரையின் நோக்கமில்லையென்றாலும், சோமு தன்னுடைய பயணத்தின்போது சந்தித்த சில காட்சிகளைப் பற்றிக் கூறுவது இந்தத் திரனாய்விற்கு அவசியமாகிரது. குறிப்பாக, சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அவன் எதிர்கொண்ட பரங்கிப்பேட்டை சந்தை. திருவிழாபோல் காட்சியளித்த மக்கள் கூட்டம், வேடிக்கை பேசி வம்புவளர்க்கும் மனிதர்கள், கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அவ்வாறு விற்கப் பட்ட சோமுவிற்க்குப் பிடித்த தின்பண்டங்களான நாவல் பழம், வேர்க்கடலை, பட்டாணி போண்றவையென, வாழ்வின் ஒட்டுமொத்த உயிர்ப்பையும் அங்கு சந்திக்கிறான்.



அவனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஜனசந்தடி மிகுந்த அந்த சந்தையில் ஒரு மரத்தடியில் நாவல் பழம் விற்கிறாள் ஒரு பெண். அந்தப் பெண்ணிடம் வம்பு பேசி நாவல் பழம் வாங்கித் திண்ணுமொரு வயதான கிழவர், சோமுவிடமும் சில பழங்களை எடுத்துக் கொடுக்க, அவன் அதை முற்றிலும் நிராகரிக்கிறான். ஆனால் விடவில்லை கிழவர், அவனை ஆதரவுடன் அழைத்துப் பழங்களைக் கொடுக்க வேறுவழியின்றி அவற்றை வாங்கி உண்கிறான். அதற்குமேலும் அங்கு நிற்க முடியாமல் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறான்.



நேரம் செல்லச் செல்ல சோமுவிற்குப் பசியெடுக்கிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்ட சோமுவால் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாமென்றால் கையில் காசு இல்லை. அவ்வளவுதான், வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையையும் தாண்டிவிடலாமென்ற அந்தச் சிறுவனின் எண்ணம் சடுதியில் நொறுங்கித் தவிடுபொடியாகிரது. இனிமேல் ஒரு அடிகூடத் தன்னால் எடுத்து வைக்க முடியாது என்று உணர்ந்த சோமு, ஒரு ஆலமரத்தடியில் அமர்கிறான். அப்போது நன்கு இருட்டிவிட்டது. தன்னைச் சுற்றித் தானே போட்டுக்கொண்ட வாழ்வியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் தானே அவிழ்த்த பின்பு நிஜ உலகத்திற்கு வருகிறான். இருட்டு மேலும் கவிழ்ந்துகொள்ள, அவனை பயம் தொற்றிக்கொள்கிறது. அப்போது அவன் கண்ட ஒரு காட்சி, அவனை அங்கிருந்து மிரண்டோடச் செய்கிறது.



பாம்பு ஒன்று, அங்கிருந்த கடலைக் கொல்லையிலிருந்து மேலேரி, சாலையைக் கடந்து, போகிற போக்கில் ஒரு தவலளையைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு வேறு திசையில் செல்கிறது. அதே பாம்பு தன்னைத் துரத்துவதாக எண்ணிக்கொண்ட அந்தச் சிறுவன், எழுந்த வேகத்தில் மொட்டைத் தலை மரத்தில் இடிக்க, விரைந்தோடத் தொடங்குகிறான். எவ்வளவு தூரம், அல்லது எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ தெரியாது. இறுதியில் சுயநினைவிழந்து, மயங்கிச் செம்மண் புழுதியில் விழுகிறான்.



நீண்ட நேரத்திற்குப் பிறகு, மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுக் கண் விழிக்கிறான். நடுப் பாதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் அந்தச் சிறுவனை வண்டிக்காரர்கள் தங்களது வண்டியில் ஏற்றிக்கொள்கிரார்கள். வண்டியிலிருந்த கிழவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். நீ சந்தையில் பார்த்த பையனல்லவா என்று சொன்னா கிழவரைப் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டிருந்த இன்னோரு இளைஞன், இவனை உனக்கு முன்னமே தெரியுமா என்று கேட்கிறான். அதற்கு அந்தக் கிழவர், தெரியாமலென்ன, இவனும் உன்னைப்போல ஒரு பேரந்தான் எனப் பதில் சொல்கிறார். அவனைப் பற்றிய எல்லா விபரங்களையும் பரிவுடன் விசாரிக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் உதரிவிட நினைக்கும் சோமுவும், எல்லோரையும் தனது சொந்தமாகக் கருதும் கிழவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது நம் சோமுவிற்கு, எந்நேரமும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அம்மா, கண்டிப்பிலும் கொஞ்சம் கனிவு காட்டும் தந்தை, தன்னுடன் பாசத்துடன் விளையாடும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை ராஜி, இழந்த தலைமுடி, உண்ணும் சுவையான உணவு, தூங்கும் பஞ்சு மெத்தை மற்றும் தலையணை, தன்னிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பிடித்த தின்பண்டங்கள், எல்லா நிணைவுகளும் ஒருசேர ஏற்படவே, தேம்பியழுதபடிக் கிழவரைப் பார்த்துத் தன்னை வீட்டில் கொண்டுவிடுமாறு வேண்டுகிறான். இந்த அளவில் நாம் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, அதன் மையக்கருத்தை சற்று ஆராயலாம்.



நம்மில் பலர், துறவு என்பது, அனைத்தையும் துறந்துவிடுவது, என்று கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சார்ந்திருக்கும் அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள், சமூகம், இயற்கை, போன்ற எல்லாவற்றையும் நேசிப்பதுதான் உண்மையான துறவு. ஒருமுறை, பெரியார் சொன்னார், எனக்கு நாட்டுப் பற்றும் கிடையாது, மொழிப் பற்றும் கிடையாது, எனக்கு இருப்பதெல்லாம் மானுடப்பற்று ஒன்று மட்டுமே. அந்தவகையில் பார்த்தால், பல வருடங்கள் தான் சார்ந்திருந்த இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடிய பெரியாரும் ஒரு துறவிதான். இதனைத்தான், யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.



வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், என்று பாரதியாரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்று வள்ளலாரும், சொல்வதன் உண்மைப் பொருள் இதுதான். உலகம் கடந்த மனித நேயம், அதனையும் கடந்த உயிர் நேயம், இவ்விரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்குமானால், அவரும்கூட உண்மையான துறவிதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இக்கதையின் நிறைவுப் பகுதியில், தன்னை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்ட அந்த வண்டிக்கார இளைஞனை நன்றியுணர்வோடு பார்க்கும் சிறுவன் சோமு, நாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும் என்று, பதிலுக்கு நட்பும் பரிவும் காட்டும் அந்த வண்டிக்கார இளைஞன், வீட்டிற்குச் சென்ற பிறகு, சோமுவிடம் முன்பைவிட அதித பாசம் காட்டும் அவனது பெற்றோர் மற்றும் தம்பி தங்கை போன்றவை, வாழ்வின் மகோந்நதத்தை சோமுவிற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.



எனவே ஒவ்வொரு மனிதனும், தான் சார்ந்திருக்கும் இயற்கையையும், தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களையும் நேசிப்பதுதான் உன்மையான துறவு என்பது இக்கதை நமக்குக் கூறும் செய்தியாகும்.

Monday 8 August 2022

பிறந்தநாள் கொண்டாட்டம்

                            


நாள், 25/07/2022. இரவு பதிணொன்றரை மனியலவில், ஸ்மைலிங் ஸ்டார்ஸ் என்ற கூகுல் மீட்டில் ஒவ்வருவராக இனைந்துகொண்டிருந்தனர். ”வாடா முணி, எங்க எல்லாரும்? உடனே போய் கூட்டிட்டுவா. டைம் ஆயிட்ட்இருக்கு” என்றாள் சங்கீதா. முணியின் அழைப்பின் பேரில், ஒருவர் பின் ஒருவராக இனையத் தொடங்கினர். ராஜா இன்பதாசன், பாபுல்நாத், தர்மபாலன், கங்காராஜ், லக்‌ஷ்மி ப்ரியா, அநுசுயா, என நன்பர்கள் ஒருபக்கம் கூகுல் மீட்டில் குழுமிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம், வீட்டில் கேக் வெட்டுவதர்க்கான ஏர்ப்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரந்தநாள் நாயகிய்ஆன அவள், கேக் வெட்டவும், நன்பர்களின் வாழ்த்து மழையில் நனையவும், ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.



அந்த அரை மணி நேரத்தை, அனைவரும் அரட்டையடித்தபடிக் கழித்துக் கொண்டிருக்க, கடிகார முள் சரியாக நல்லிரவு பண்ணிரெண்டு மணி காட்டியபோது, அந்தக் கோலாகலமான பிரந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிற்று.  தோழர்களின் கர ஒலியும், வாழ்த்தொலியும், ஒருசேர ஒலிக்க, வெட்டிய கேக் எடுத்து, அனைவருக்கும் ஊட்டி, தானும் உண்டாள் அந்த 33 வயதுக் குழந்தை.



 தான் வாங்கிய புத்தாடையையும், ப்லூடூத் ஹெட்செட்டையும் அவளுக்கு பரிசளித்தான் தர்மபாலன். நேற்றே தான் வாங்கி வந்திருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டு தைத்து வாங்கி வந்த மற்றொரு உடையை பரிசளித்தாள் அவளது தோழி ப்ரியா. மூவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முகத்தை கேக்கால் அலஞ்கரித்து மகிழ்ந்தனர். வாழ்த்துகளுடன் கூடிய பேச்சொலியோடும், சிரிப்பொலியோடும், அந்த நாளை நிரைவு செய்தாள், இன்னமும் குழந்தை மனம் மாராத அந்தப் பெண்.



 மரு நாள் அதிகாலையில் ஏராளமான வாழ்த்துச் செய்திகளைச் சுமந்துவந்த அலைபேசியழைப்புகள் அவளது தூக்கத்தைத் தொல்லை செய்ய, எழ முடியாமல் தூக்கத்திலிருந்து எழுந்து, அண்றைய நாள் கொண்டாட்டன்களுக்குத் தயாரானாள் அவள்.

புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புதுப்பொலிவோடு அவளுக்குப் பிடித்த கடவுள் கண்ணனை காண சென்று வந்தாள். வீட்டிலேயே தயாரித்த இட்லி, பொங்கல், வடை கேசரி போன்ற பலமான காலை உணவை உண்டுவிட்டு, வருபவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்வித்து தானும் மகிழ்ந்திருந்தாள்.



 மதியம் பன்னிரண்டு மணியளவில் அவளது தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சங்கீதா போன் செய்தாள். “சொல்லு அக்கா, பாப்பா சாயந்திரம் உனக்காக லௌலி ரோசஸ் க்லப்ல ஒரு ப்ரோகிராம் இருக்கு. உன்னை நீ ஃப்ரீ பண்ணிக்கோ டா. எதுக்கு அக்கா இதெல்லாம் வேண்டாமே.” என்றாள் வெட்க பூ பூத்தபடி. “என் அன்பு தங்கச்சிக்கு நாங்க கொடுக்குற பரிசு இது. வேண்டாம் சொல்லக்கூடாது. கொன்னுடுவேன் ஒழுங்கா நேரத்துக்கு வந்து சேரு.” என்று செல்லமாய் மிரட்டிவிட்டு காலை கட் செய்தாள் சங்கீதா.

அதன்பிறகு தனது தோழர்களான தர்மபாலன் மற்றும் ப்ரியாவுடன் ஹோட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி, சிக்கன்65, வஞ்சரமீன் வருவல், ஐச்கிரீமை சாப்பிட்டுவிட்டு, தர்மபாலன் பரிசாய் தந்த ப்லூடூத் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி உறங்கிப்போனாள்.



மாலையில் எழுன்ந்து ரிஃப்ரெஷ் செய்துவிட்டு, காஃபி பிச்கேட் பருகிய பின் சங்கீதா ஏற்பாடு செய்திருந்த ப்ரோகிராமிற்கு தயாரானாள். க்லப்ஹௌசிற்குள் சென்றபோது கங்காராஜ் இன்று பிறந்தநாள் காணும் செல்வி rj அபிநயாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பாட்டுப்போட்டி முதல் 3 பரிசு என்று அறிவித்துக்கொண்டிருந்தார். ஆம் அன்று என்னுடைய பிறந்தநாள்தான். 

முதல் முறையாக, நிறைய வாழ்த்துகளுடனும், நிறைய ஆச்சரியங்களுடனும், கோலாகலமாக அந்த நாள் கொண்டாடப் பட்டுக்கொண்டிருந்தது. பங்கேற்பாலர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். நடுவர் திருமதி சுசிலா வந்தவுடன் விழா தொடங்கியது. நடுவரின் வாழ்த்துப் பாடலும், வழக்கமான வரவேர்ப்புரையும் வாழ்த்துரையும், மேலும் சில பாடல்களும், விழாவை அலங்கரிக்க, 4 சுற்றுகளுடன் நடுவர் போட்டியை இனிதே நடத்திக் கொடுத்தார்.



 இடையில், என் பிரந்த நாள் சிரப்பாக, நான் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கியிருந்தேன். எனக்குப் பிடித்த தலைவர்களான, சிவாஜி, s.p.b., சிவகுமார், விஜெய் போண்றவர்களிடம், ஆசிர்வாதம் வாங்குவதைப் போண்றதான ஒலிக்கோப்பு அது. என்னையும் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தும் வண்ணம், சங்கீதா க்லப்பில் அந்த ஒலிக்கோப்பை ஒலிபரப்பினார். இருதியாக, எனது நண்றிகளையும், சந்தோஷ்அங்களையும் வார்த்தைகளால் வடித்து, ஒரு சிரு உரையை வழங்கிணேன். முணீஷ்வரனின் நண்றி உரையோடு, நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.



விடிந்தது முதல், அந்நாள் முடியும்வரை, மகிழ்ச்சியில் என்னை திளைக்கவைத்து, துக்கம் கொஞ்சமும் அணுகாமல் பார்த்துக்கொண்ட என் சுற்றமும் நட்பும் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். யான் பெற்ற இன்பத் துளிகளை எழுத்துகளால் கோர்த்து, நீண்ட நெடிய நாட்களுக்குப் பிரகு, உங்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறேன். என் வலைப் பதிவு உட்பட, யார் வலைப் பதிவையும், பார்க்க முடிவதில்லை. வலைப் பதிவுக்குள் சென்று நெடுநாட்களாகிவிட்டது. சில சொந்த வேலைகள் காரனமாக, எழுதுவதும் படிப்பதும் அப்படியே நின்றுவிட்டது. மீண்டும் மனதையும், மூளையையும் தூசு தட்டி புத்துணர்வோடு புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மெருகேருகிரதா என்று பார்ப்போம். நன்றி.