Tuesday 30 June 2020

யாருக்கு வெற்றி?


பிரியத்தோடு செஞ்சிதர பிரிஞ்சி பிடிக்கும்.
என் நாசியை துளைக்கும் மணத்தில் வறுக்கும் எறால் பிடிக்கும்.
முட்கள் வஞ்சிக்காத வஞ்சிரமீன் பிடிக்கும்.
காரசார கருணைக்கிழங்கு பிடிக்கும்.
உயிர்பிரியும் நொடியிலும் உருளைக்கிழங்கு வறுவல் பிடிக்கும்.
பிசியா இருந்தாலும் பிசிபிலாபாத் பிடிக்கும்.
தோணும்போதெல்லாம் தோசை சாப்பிட பிடிக்கும்.
மகிழ்ச்சியான தருணங்களில் மட்டன் பிரியானி பிடிக்கும்.
தளதளனு பெசஞ்சு தர தயிர்சாதம் பிடிக்கும்.
புள்ளையார் தம்பிகோவில் புலியோதரை பிடிக்கும்.
குட்டித்தொண்டைக்குள்ள கொடகொடையிர காரகுழம்பு பிடிக்கும்.
பாரமான மனதை லேசாக்குற சாம்பார் பிடிக்கும்.
காசில்லாத வீட்டின் ரசிகையான ரசம் பிடிக்கும்.
அம்மா பண்ணிதர குருமா அலுக்காம பிடிக்கும்.
மொத்ததுல உணவுக்காக வாழாம வாழ்க்கைக்காக உணவு உண்ணும் கொள்கை பிடிக்கும்.

இப்படிச் சொல்லும்போதே யூகித்திருப்பீர்கள் உணவு சம்பந்தப்பட்ட புத்தகம் என்று. ஒரு சிலருக்கு புத்தகத்தின் பெயர்கூட தெரிந்திருக்கலாம். ஆம் எழுத்தாளர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உணவு யுத்தம்.
இது கட்டுரைத்தொகுப்பு. நாற்பது அத்தியாயங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேலான தகவல்களைக் கொண்டது இந்நூல். உணவுகள் பற்றிய புத்தகங்களுக்கு என்னென்னவோ பெயர்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கு ஏன் உணவு யுத்தம் என்று பெயர் வைத்திருக்கிறார்?
இது உணவுகளுக்கிடையே நடக்கும் யுத்தம். ஆரோக்கியமான உணவுகளை அழித்துவிட்டு, ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் உணவுகள் ஆட்சியில் அமரும் யுத்தம். 
உணவுக்கும் உடலுறுப்புகளுக்குமிடையே நடக்கும் யுத்தம். உடலுறுப்புகள் தன் இயக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ளப் போராடுகிறது. சில உணவுகள் அதன் இயக்கத்தை நிறுத்தியேத் தீருவேன் என்று போராடுகிறது.
இன்றைய காலகட்டத்தில் இதில் எது ஜெயிக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து அறியப்படாத பலத்  தகவல்களைத் தந்திருக்கிறார். இவர் செல்லும் சிறு பயணத்தில்கூட ஏதேனும் ஒரு தகவல் நிச்சயமிருக்கும். ஏன் இவர் பயணம் செல்வதே தகவல் திரட்டத்தான்.
உணவு வகைகள், உணவு அரசியல், உணவு வரலாறு,உலக உணவுகள், இலக்கியத்தில் உணவு. இப்படி உணவு உலகை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட்டார்.
எல்லா உணவுகளிலும் புகுந்து ஒரு விளாசு விளாசியிருக்கிறார். இட்லியில் ஆரம்பித்து இறுதியில் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் சொன்ன கதையோடு முடியும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது எனக்கு பயமாக இருந்தது. இதுவரை உண்டதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்கத் தூண்டியது. எதைத் தவிர்ப்பது? எதை உண்பது? என்ற ஆழ்ந்த குழப்பத்திலிருந்தேன்.
அந்தக் குழப்பத்தைப் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அவர் அதைத் தீர்த்துவைத்தார். ‘எல்லாமே உண்ணலாம். ஆனால் அளவோடு உண்ண வேண்டும்’ என்றார். 
‘எல்லாமே’ என்று அவர் குறிப்பிட்டது தமிழ் உணவுகளை. தோசைக்குள் மசாலாவை வைத்து மசால் தோசை என்று தருவதைப் போல, தன் அனுபவங்களுக்குள் தகவல்களைப் புகுத்தி சுவாரசியமாக தருவதில் வல்லவர் அவர்.
உணவகங்களுக்குச் சென்று ‘மெனுகார்ட் ப்ளீஸ்’ என்று ஸ்டைலாகக் கேட்டுவிட்டு கார்ட் வந்ததும் அது ஏதோ பாடப்புத்தகம்போல பலமுறை படிக்கிறோம். அதில் எதையாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்குள் பாவம் சர்வரின் நிலை. ஆனால் அந்த மெனுகார்ட் எப்படி வந்தது தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள்.
''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும்போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.
மெனு என்ற சொல் பிரெஞ்சுகாரர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes. இதன் பொருள், 'சிறிய பட்டியல்’ என்பதாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.
உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர்களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகைகளில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர்  la carte.
ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உணவகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமையல்காரரை செஃப் என அழைக்கிறோம், இல்லையா? Chefde cuisine  என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமையலறையின் தலைவர் என்பதாகும்.
இதுதான் இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் தகவல். எப்படி? முதல் தகவலே இப்படியென்றால் முழுதும் படித்தால்?

நம்மிடம் யாராவது என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் என்னசொல்வோம்? சாம்பார் சாதம், ஃப்ரைடுரைஸ். ஏன் தயிர் சோறு, புளிசோறு சொன்னா என்ன? சோறு என்று சொன்னா ஒழுங்கா பேசத்தெரியாதவங்க. லோக்கல் ஸ்லாங்னு நினைப்பாங்களா? சோறு என்பது தமிழ்ச்சொல். அந்தச் சொல்லிற்கு நிகரான வேறு சொற்கள் எவ்வளவு  இருக்கிறது தெரியுமா? அடிசில், கூழ், அழினி, அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன.
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக் கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்றுகூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.
இதுவும் இந்தப் புத்தகத்திலுள்ள முத்துமணிகள். அதைப் படித்துக் கோர்த்து, உங்கள் அறிவுக்கும் மனதுக்கும் மாலையாக்கிக்கொள்ளுங்கள்.
இட்லி செய்வது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். ஒரு சிலர் அவரவர் பக்கத்து இட்லிகளைச் செய்வார்கள். ஆனால் இட்லியின் வரலாறு? 30 வகையான இட்லியிருக்கிறது என்னும் குறிப்பு? இவையனைத்துமே இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முனியாண்டி விலாஸ், பாரதவிலாஸ் தெரியும். மரணவிலாஸ்? சாலையோர மோட்டல்களாம். தரமில்லாத உணவை, தூய்மையற்ற இடத்தில் சாப்பிட்டால் அது மரணவிலாஸ்தானே.
இந்தியாவில் 2002 முதல் 2005ஆம் ஆண்டிற்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்ற புள்ளிவிவரம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. 
அப்போதே அப்படியென்றால் இப்போது? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. பன்னாட்டு உணவகங்கள் பன்னாட்டு உணவு வகைகளின் பட்டியல்களைவிட அதிகம், விவசாயிகளின் தற்கொலையும் அதன் காரணங்கள் அடங்கியப் பட்டியல்கள்.
‘என்ன ருசி இல்லை இந்த தமிழ் உணவில்,
ஏன் மனதைச் செலுத்த வேண்டும் அயல் உணவில்,
ஒழுங்காய் உண்டுப் பாரு நம் உணவை,
நீளும் உன் ஆயுள் நூறுவரை.

நூடுல்ஸில் காய்கறிகள் இருக்கு. அது குழந்தைகளுக்குச் சத்து. சாதா மேகிதான் சாப்பிடக்கூடாது என்று நூடுல்சைக் குழந்தைகளுக்குக்கூட கொடுக்கிறோம். சமைக்க நேரமில்லாதவர்கள், சமைக்கத் தெரியாதவர்கள், உடனடியாக உணவு உண்ண வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் தேர்ந்தெடுக்கும் முதல் உணவு நூடுல்ஸ். இது சீன உணவு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதன் பின்னணி என்ன? இதை உண்பதால் வரும் கேடுகள் என்னென்ன? முதலில் அதைப் படித்துவிட்டு நூடுல்ஸை உண்ணலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.
தூக்கம் போகனுமா? டீ,  புத்துணர்வு வர வேண்டுமா?  டீ,  தலைவலிக்கிறதா? டீ,  டென்ஷனை விரட்டனுமா டீ. இப்படி நம்மை உயிர்ப்பிக்கப் பருகும் பாணம் டீ. இதிலும் நிறைய வகைகள் இருக்கின்றன.
பிளாக் டீ, க்ரீன் டீ, லெமன் டீ இப்படி எத்தனையோ டீ. இதில் எது நல்ல டீ? எல்லோருமே நல்ல டீயைக் குடிக்கிறோமா? நல்ல டீயை எப்படி தயாரிப்பது? அட! 
இதையெல்லாம் நானே சொல்லிவிட்டால் அப்புறம் எழுத்தாளர் என்னைத் திட்டிவிடுவார். உங்களுக்கும் சுவாரசியம் இருக்காது. படித்துப்பார்த்துக் குடித்துக்கொள்ளுங்கள்.
அளவோடு குடித்து உடல்நலத்தைப் பேணுங்கள்.  நரைமுடிக்குச் சாயம் தீட்ட வேண்டிய வேலையிருக்காது. பித்தம் தலைக்கேறிச் சத்தமாக வாந்தி எடுக்க வேண்டி வராது.
உணவு விதிகள் பற்றியும், அந்த விதிகள் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் பற்றியும், கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கத்திப்படம் பார்த்ததிலிருந்து நான் குளிர்பானங்கள் குடிப்பதை விட்டுவிட்டேன். அதில் குளிர்பானங்கள் தயாரிக்க எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, அதனால் விவசாயிகளின் பாதிப்பு. இதைக் கேட்டபின் குடிக்க விரும்பவில்லை. ஒருகாலத்தில் நானொரு கோக் பைத்தியம். மற்ற பானங்களும் குடிப்பேன். சிறு வயதில் கோலிசோடா விரும்பிக் குடிப்பேன்.
நீண்ட வருஷங்களுக்கு பின் சமீபத்தில் ஒரு உணவகத்தில் கோலிசோடா குடித்தேன். யார் பேச்சைக் கேட்டுக் குளிர்பானம் குடிப்பதை விட்டேனோ, அவரே கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கவுமில்லை.
இந்த புத்தகத்திலிருக்கும் பகீர் பானங்கள் அத்தியாயத்தைப் படிக்கும்போது பகீரென்று இருந்தாலும், அதை நான் நிறுத்திவிட்டதை எண்ணி சந்தோஷமாக இருக்கிறது.
குளிர்பானங்களின் வரலாறு, சோடா வரலாறு,  சோடாமூடி கண்டுபிடிப்பு, குளிர்பானங்களிலிருக்கும் வேதியல் பொருட்கள், அதனால் விளையும் தீமைகள், பழங்கால பானங்கள், குளிர்பானங்கள் பற்றிய புத்தகம். இவையனைத்தையும் காலவரிசைப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
மறக்கடிக்கப்படும்  பானங்களான சர்பத், மோர், லஸ்சி, ஜிகிர்தண்டா, ஜல்ஜீரா, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றை ஞாபகப்படுத்தியிருக்கிறது இந்நூல். ஐஸ்கிரீம் பற்றிய வரலாறும் ஐஸ் ஹௌஸ் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பறித்துச் சாப்பிடும் பழங்களில் கலப்படம் பண்ணமுடியுமா? பண்ணமுடியும். அதில்தான் அதிகமாக கலப்படம் பண்ணமுடியும் என்கிறது இந்தப் புத்தகம்.
வாழைப்பழம், ஓட்ஸ், பிஸ்கட், பாயசம், பால்பௌடர், பீட்சா, பர்கர், ப்ராய்லர்கோழி, பரோட்டா, சமோசா, உருளைக்கிழங்கு, சிப்ஸ், வேர்க்கடலை, காஃபி, காய்கறிகள்.
இவைகளை இதுவரைச் சாப்பிடமட்டும்தான் செய்திருக்கிறோம். இனியாவது இவைகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை தெரிந்துகொள்ளலாமே.

எனக்கு முன்பெல்லாம் ஒரு ஏக்கம் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் என் பிறந்தநாளை கேக்வெட்டி விமரிசையாகக் கொண்டாடியதில்லை. இரண்டுமுறை என் தோழிகள் கேக் வாங்கி வந்து வெட்டச்சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவே. அம்மா செய்த கேசரி கேக், சாக்லேட். இவ்வளவுதான் என் பிறந்தநாள் கொண்டாட்டம்.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகவே பிறந்திருக்கிறேன் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துப் பிறந்தநாள் காணும் பேர்வழிகள்தான் எத்தனை. பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்தவருக்குச் சந்தோஷம் என்பதைவிட பல நிறுவனங்களுக்கு வியாபாரம்.
கேக் வடிவமைப்பதே ஒரு கலையாகிவிட்டது இப்போது. மெழுகுவர்த்தி அதற்குமேல். பெயர் தாங்கியப் பிறந்தநாள் பாடல்களைக்கூட எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் துவக்கம் ஒன்று இருக்கும் அல்லவா? இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் துவக்கத்தைத் தெரிந்துகொள்ள. கேக் வரலாறு, ரொட்டி வரலாறு, பேக்கரி வரலாறுகளைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் இந்தப் புத்தகத்தைத் திறந்து 15 மற்றும் 16ஆவது அத்தியாயங்களைப் படியுங்கள்.
உணவுகளுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்பது நம் கையில்தான் இருக்கிறது. பன்னாட்டு உணவு மோகத்தை விடுத்து இந்திய உணவுகளைத் தேர்வு செய்து உண்போம். முதலில் நாம் சாப்பிட வேண்டியதை நாமே முடிவு செய்வோம். வெற்றி ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்திய உணவிற்கும்தான்.
கடலலையில் நிற்கும்போது அதன் அழகிலும் குளிர்ச்சியிலும் மயங்கி ஆழத்திற்குச் சென்றுப் பார்க்க ஆசைக் கொள்வதைப்போல. ஆரோக்கியமான உணவுகளின் சுவையில் மயங்கி ஆர்வம்கொண்டு அதன் ஆழம் சென்று பார்த்திருப்பதன் வெளிப்பாடே இந்த உணவு யுத்தம். இந்த மதிப்புரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இந்தப் புத்தகத்திலுள்ள சிறுதுளிகள். இதன் பெருந்துளிகளை இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


நூல் குறிப்பு :
உணவு யுத்தம்,
எஸ் ராமகிருஷ்ணன்,
தேசாந்திரி பதிப்பகம்,
விலை ரூ.275


கடைசியாக இந்தப் புத்தகத்தில் நான் பெரிதும் ரசித்த கேள்வி பதில்கள்.:
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!

Monday 29 June 2020

மாத்தியோசி.

இந்த உலகத்துல எல்லாருக்கும் எதெல்லாமோ பிரச்சனையா இருந்திருக்கு. ஆனா பூஜியம் பிரச்சனையா இருந்திருக்கா? பணக்காரங்களுக்கு மிகச் சிலநேரத்துல அவசரமா செக் சைன் பண்ணும்போதுதான் பிரச்சனை வரும். ஆனா என் வாழ்க்கைல பூஜியம் ஒரு குட்டி விளையாட்டு விளையாடியிருக்கு.
 எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஃபேமிலி இருந்தாங்க. அந்த ஆண்ட்டிதான் எனக்கு ப்ளஸ்1 புக்ஸ் ரெகார்ட் பண்ணித்தருவாங்க. அவங்களுக்கு இரண்டு பசங்க. நவீனம்மான்னு சொல்லுவோம். நவீன் அவங்க இரண்டாவது பையன்.
நாங்க வீடு காலி செஞ்சு போனதுக்கு அப்புறம் அவங்களும் வேற இடத்துக்கு போய்ட்டாங்க.
எங்க அம்மா அவங்கள வழியில பார்த்ததா சொன்னாங்க. இன்னொரு முறை பார்த்தா போன் நம்பர் வாங்குங்கன்னு சொன்னேன். அவங்களும் சொன்னதை செஞ்சாங்க. நான் அம்மா சொன்ன அந்த நம்பருக்கு போன் பண்ணேன்.
ஒரு ஆளோ பையனோ எடுத்து அவங்க வெளிய போயிருக்காங்கன்னு சொன்னான். நீங்க யார்னு கேட்டதுக்கு அவங்க தம்பின்னு சொன்னான் பேரு லெனின்.
இன்னொரு நாள் போன் பண்ணேன் அதே பதில். மூன்றாம் முறை பண்ணேனான்னு தெரியல. நானே வெளிய போகும்போது அந்த ஆண்ட்டிய பார்த்தேன். கூட அம்மாவும் இருந்தாங்க. என்ன ஆண்ட்டி எப்போ போன் பண்ணாலும் நீங்க வெளிய போயிருக்கீங்கன்னு உங்க தம்பி சொல்றாருன்னு கேட்டேன்.
என் தம்பி ஊர்ல இருக்கானே என்கூட இல்லையேன்னு சொன்னாங்க. என்னது? உங்க தம்பின்னு சொன்னாரே. உங்களுக்கு லெனின்னு ஒரு தம்பி இருக்காரான்னு கேட்க. இல்லை. எனக்கு ஒரே தம்பிதான் அவர் பேர் வேற எதையோ சொன்னாங்க. உங்க போன் நம்பர் சொல்லுங்க ஆன்ட்டின்னு கேட்டேன். அந்த போன் நம்பர்லதான் எங்க அம்மா மாத்தியோசி விளையாடியிருக்காங்க.
அவங்க போன் நம்பர் சொன்னாங்க. அந்த நம்பர்ல 00னு இருந்தது. ஆனா எங்க அம்மா எனக்கு சொன்னது 2 0. அந்த ஆண்ட்டிகிட்ட நடந்ததை சொல்லிட்டு வந்துட்டேன். அப்பவும் எங்க அம்மா அவங்க கெத்தை விடல. எதுக்கு அப்படி மாத்தி சொன்னீங்கன்னு கேட்டதுக்கு நான் எங்க மாத்தி சொன்னேன்? 2 0 இருக்குன்னு சொன்னேன் சொன்னாங்க.
அதாவது நம்ம பாஷைல டபுள் 0 சொல்லுவோம். அவங்க இரண்டு சாக்லேட் இருக்கு சொல்ற மாதிரி 2 0 சொல்லிருக்காங்க. அந்த லெனினுக்கு போன் பண்ணி எதுக்கு பொய் சொன்னன்னு கேட்டதுக்கு, உன் குரல் நல்லா இருக்கு. உன்னோட நட்பை வளர்த்துக்க தோனுச்சி சொன்னான். எனக்கு எரிச்சலா இருந்தது. அதுக்கு இப்படியா பொய் சொல்லுவேன்னு திட்டினேன். ஃப்ரெண்ஷிப்வேணும்னு  கெஞ்சினான்.
அப்படி நடிச்சிருக்கான். எனக்கு யாரையும் அவ்வளவு சீக்கிரம் முகத்துல அடிச்ச மாதிரி தவிர்க்க வராது. அதேநேரம் ரொம்பவும் எச்சரிக்கை உணர்வோட இருப்பேன்.
ஒரு வாரம் இருக்கும்னு நினைக்கிறேன். மேபி அதற்கும் குறைவான நாட்கள் டெய்லி கால் பண்ணான். ஒரு தோழனுக்கு எந்த அளவு முக்கியத்துவமோ அதைவிட பலமடங்கு குறைவான பேச்சுகள். என்ன பன்ற, சாப்பிட்டியா, இந்த ஸ்லாம் புக்ல வருமே. என்னென்ன பிடிக்கும் பிடிக்காது. இப்படி.
ஒருநாள் எங்கையாவது வெளிய போகும்போது இன்ஃபார்ம் பண்ணு நான் உன்ன மீட் பண்ணனும் சொன்னான். நானும் எங்க அம்மாவும் பியூட்டி பார்லர் போகும்போது சொன்னேன்.
ட்ரெஸ் கலர் சொல்லியிருந்தேன். நான் போன வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன். அவன் வந்தானா பார்த்தானான்னுலாம் தெரியல. ஆனா ரொம்பநாளா கால் வரல. எனக்கு ஒரு யூகம் இருந்தது. அதை உறுதி செய்ய போன் பண்ணேன். என் யூகம் சரியா இருந்தது.
நா போன் பண்ணி என் பெயர் சொன்னேன். சாரி ராங் நம்பர்னு சொன்னான். திரும்ப பண்ணேன் எடுக்கல. அப்போதான் தெரிஞ்சது அவன் என்னைப் பார்த்திருக்கான். நான் பார்வையற்ற பொண்ணுன்னு தெரிஞ்சிகிட்டிருக்கான்.  அந்தநொடியே நட்பையும் கட் பண்ணியிருக்கான்னு.

Saturday 27 June 2020

கற்பக விரிட்சம்

அனிதா பள்ளியைவிட்டு நின்று 2 மாதங்கள் கடந்திருந்தது. அவள் வீட்டிற்கு அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தாய்மொழி தமிழாகவே இருந்தாலும், அதில் சரியாக படிக்கவோ எழுதவோ வராது.

இரண்டு வருடங்களாக அந்தப் பள்ளியில் பணிபுரியும் வதனிதான் அவள் வகுப்பில் தமிழாசிரியை. வதனி அவள் பெற்றோருக்குச் செல்லப்பெண், அதுவும் ஒரே பெண் என்பதால் அவள் பெற்றோர் அவளுக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தனர். அதனால் அவளுக்கு அதிகக் கோவம் வரும்.
தான் எதிர்பார்ப்பதை மற்றவர் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அவள் கோவம் பலமடங்காக அதிகரிக்கும்.

 கோவக்காரியாக இருந்தாலும், திறமையும், மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் இருந்ததால் அவள் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தபோது உடனே தேர்வு செய்யப்பட்டாள்.  இரண்டு மாதங்கள் முன்புவரை எல்லாம் ஒழுங்காகத்தான் போய்கொண்டிருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்,  எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும் அனிதா தமிழைச் சரியாக எழுதாததால் கோவத்தில் அவளை இரும்பு ஸ்கேலில் அடித்துவிட்டாள். வெண்மை நிறம்கொண்ட அனிதாவிற்கு உடனே தோல் கொஞ்சமாக பிதுங்கிவிட்டது. அப்போதும் வதனி வருத்தமெல்லாம் அடையவில்லை. அன்றைய நாளைக் கடந்துவிட்டாள்.
மறுநாள் அனிதாவிற்குப் பதிலாக அவள் பெற்றோர் பள்ளிக்கு வந்து வதனிமேல் புகாரளித்தனர். அனிதாவின் தோழிகளும் அதை உண்மை என்று சாட்சிக்கூறினர்.

எப்படிக் கையாள்வதென சிறிது யோசித்தத் தலைமை அன்னை, வதனியை அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச்சொன்னார். வதனி கேட்க மறுக்க, அந்தத் தவறுக்கு அவர்களிடம் வருத்தம் தெரிவித்தத் தலைமை அன்னை, அவர்களின் மகளை ஒழுங்காகப் படிக்கச்சொல்லுமாறு கண்டித்து அனுப்பினார்.

அதன்பின்னும் அனிதா பள்ளிக்கு வரவேயில்லை. நாளாக நாளாக வதனிக்கு வருத்தம் கூடியது. தன்னால் ஒரு மாணவியின் படிப்பு நின்றுவிடுமோ என்று பயந்தாள். அனிதாவின் தோழியிடம் அவளுக்கு போன் செய்து வரச்சொல்லுமாறு சொல்லிவிட்டிருந்தாள்.
அனிதா தன் காலை உணவை முடித்துக் கைக்கழுவிக்கொண்டிருந்தபோது தொலைப்பேசி ஒலித்தது. வேகவேகமாக சென்று போனை எடுத்தாள்.
“ஹலோ, நான் அனிதா பேசுறேன். யார் பேசுறது?” “ஹேய் அனி, நான் நிஷா பேசுறேண்டி. எப்படியிருக்க?” “நல்லா இருக்கேன் நிஷா. நீ எப்படியிருக்க?” “நல்லா இருக்கேண்டி. ஸ்கூலுக்கு வா அனி. படிப்பு போகுதுடி. வதனி டீச்சர்தான் உனக்கு போன் பண்ணி வரச்சொன்னாங்க வாடி.” “இல்ல நிஷா நான் வரமாட்டேன். இனி அந்த டீச்சர் முகத்துல விழிக்கமாட்டேன். எனக்கு படிப்பு வேண்டாம்.” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.
அவளின் தோழிகள் வீட்டிற்கேவந்து  அழைத்துப்பார்த்தும் அனிதா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

அனிதாவிற்கு சிறு வயதிலிருந்தே ஏதோ உடல்நலக் குறைபாடுகள் இருந்தது. அதை அவள் பெற்றோர் சரியாக கவணிக்காமல் விட்டுவிட்டனர்.
அதனால் அவளுக்கு பிக்ஸ் வந்து,இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினாள். இரண்டு பூக்களைப் பெற்ற அனிதாவின் பெற்றோர், ஒரு பூ மலர்ந்து மணம் பரப்பும் முன்னமே மறைந்துவிட்டதை எண்ணி வேதனையடைந்தனர்.

பள்ளிக்கு இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரியவந்தது. செய்தியைக் கேட்ட வதனி உடைந்துபோனாள். செய்யக்கூடாதக் குற்றத்தைச் செய்துவிட்டோம் என்று அழுது கரைந்தாள். நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு வதனி பள்ளிக்கு வந்தபோது, தலைமை அன்னை அவளை அழைத்தார்.
அலுவலக அறைக்கு வந்த வதனியிடம் சிறிதுநேர நலம்விசாரிப்புக்குப் பின் வதனியின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்றைக் கேட்டார். எதற்குக் கேட்கிறார் என்று யோசித்தபடியே தன் பர்சிலிருந்தப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.

 அந்தப் புகைப்படம் வதனி பிறந்த அன்று எடுக்கப்பட்டப் புகைப்படம். அதில் அவள் கொழுக்மொழுக்கென்று அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். அதை வதனியிடமே தந்து அவளையும் பார்க்கச்சொன்னார்.
இரண்டு நிமிடம் அவளைப் பார்க்கவைத்தபின், வதனியின் கைகுட்டையால் அவள் கண்களைக் கட்டினார். அலமாரியிலிருந்த காட்டன் பஞ்சை எடுத்து அவள் காதுகளில் வைத்து அடைத்தார். மேசைமேலிருந்தப் பொருட்களை ஒதுக்கிவிட்டு, அவள் கைகளையெடுத்து மேசைமேல் வைத்தார்.
தன் வாட்டர் பாட்டிலிலிருந்தத் தண்ணீரை வதனியின் ஒரு கையில் ஊற்றிக்கொண்டே, மறுகையில் அவரின் விரல்களால் வாட்டர் என்று ஆங்கிலத்தில் எழுதினார். பின் தன் உதடுகளை அசைத்து ஏதோ பேசினார். அந்த அசைவுகளை வதனியின் விரல்களால் தொட்டு உணரவும் வைத்தார்.

பத்து நிமிடம் அவளை அதேநிலையில் உட்காரவைத்தபின் பழையபடி அவள் கண்களை அவிழ்த்து, காதுகளிலிருந்தப் பஞ்சை எடுத்துவிட்டுக் கேட்டார்.
“இங்கே என்ன நடந்தது வதனி? நீ எப்படி உணர்ந்தாய்?” ஒன்றுமே புரியவில்லை மேடம். “கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதைப் போலிருந்தது. உங்களின் எழுத்தசைவையோ, உதடசைவையோ உணர்ந்துப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றாள்.
பத்து நிமிடமே உன்னால் இப்படியிருக்க முடியவில்லை. எதையும் உணரமுடியவில்லை. பலவருடங்களாக அமெரிக்காவில் பிறந்தச் சாதனைப்பெண்மணி ஒருவர் இதைத்தான் செய்துகொண்டிருந்தார். அவள் திகைத்துவிழிக்க, தலைமையன்னை அந்தச் சாதனைப்பெண்மணியைப்பற்றிச் சொல்லத்தொடங்கினார்.

1880ஆம் ஆண்டு. ஜூன் 27ஆம் தேதி. அதாவது இதேநாளில், அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் உள்ள தஸ்காம்பியா என்ற சிற்றூரில் ஹெலன் கெல்லர் என்ற பெண் குழந்தைப் பிறந்தது.
பிறக்கும்போது அந்தக் குழந்தை நீ காட்டிய உன் புகைப்படத்தில் இருப்பதைப்போலவே அழகும் ஆரோக்கியமும் கொண்ட குழந்தையாகத்தான் பிறந்தது. பதினெட்டு மாதங்கள் கடந்தநிலையில், அந்த அழகுச்சிலைக்கு பெயர் தெரியாதக் காய்ச்சல் வந்தது. அந்தக் காய்ச்சலால் அவள் தன் வாழ்நாள் முழுவதும்  அனுபவிக்கும்படியானக் கொடூரங்கள் நிகழ்ந்தது. அந்தக் குழந்தை தன் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்துவிட்டது. கேட்கும் திறனை இழந்துவிட்டதால் பேசும் திறனும் பரிபோய்விட்டது.
ஏழுவயதுவரை இருண்ட உலகில் பயணித்த அந்தக் குழந்தையை அவள் பெற்றோர் வாஷிங்டனில் வசித்த தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெலிடம் அழைத்துச் சென்றனர். அவர் காதுகேளாதோருக்கான கல்வியில் சிறந்து விளங்குபவர்.
அவர்தான் ஹெலன் கெல்லருக்கு ஆன்சலீவன் என்ற ஆசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஆசிரியர்தான் ஹெலன் கெல்லர் என்ற தீபத்தை ஏற்றிவைத்தத் தீக்குச்சி.

அந்தத் தீக்குச்சித் தான் அணையும்வரை ஹெலன் கெல்லருடனே பயணித்துத் தன் இருதிநொடியை முடித்துக்கொண்டது. அந்த ஆசிரியர் ஹெலனின் ஒரு கையில் பொருளை தொட்டுக்காட்டியபடியே மறுகையில் அந்தப் பொருளுக்கான வார்த்தையை எழுதுவார்.
எட்டுவயதில் இந்த முறையில் கற்க ஆரம்பித்த ஹெலன் கெல்லர் சிறிதுநேரத்திலேயே 30 சொற்களைக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக எழுதக்கற்றுக்கொண்ட அவர், பார்வையற்றோர் உபையோகிக்கும் பிரைலிமுரையை கற்றார். பத்துவயது முடியும் முன்பு, லத்தீன், ஃப்ரென்ச், ஜெர்மன் மற்றும் கிரேக்க மொழியில் பிரையிலில் எழுதக்கற்றுக்கொண்டார்.

சாரஃபிலா என்ற ஆசிரியர் ஹெலனுக்குப் பேச்சுப்பயிர்ச்சியை அளித்தார். அந்த ஆசிரியரின் உதடு மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு அவர் பேசுவதைப் புரிந்து பேசப்பயின்றார்.
ஆன்சலீவனின் துணையோடு ஹெலன் ரெக்லிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1904ஆம் ஆண்டு இலங்கலைப் பட்டம் பெற்றார். தன் கல்லூரி வயதிலேயே the story of my life. என்ற சுய சரிதையை எழுதினார். அவருடைய வாழ்நாளில் அவர் 12 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

பிரையில் தட்டச்சு மற்றும் சாதா தட்டச்சைக் கற்றுக்கொண்டார். குதிரைச்சவாரியும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டவும் கற்றார்.
1919ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஹெலன் கெல்லர் திரைப்படத்தில் அவரே நடித்திருக்கிறார். அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட பார்வையற்றோர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

உடல் ஊனமுற்றோருக்காக பேசிய அவரைப் பலநாடுகள் பேச அழைத்தன. 1930ஆம்  ஆண்டு தொடங்கி, 39 நாடுகளுக்குச் சென்று பேசினார். பேசிய இடங்களிலெல்லாம் பார்வையற்றோர் பல்கலைக்கழகத்திற்காக நிதி வசூலித்தார்.

1932ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டிலுள்ள கிலாஸ்கோ பல்கலைக்கழகம் ஹெலன் கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இரண்டாம் உலகப்போரின்போது  உடலுறுப்புகள் இழந்தவர்களைச் சந்தித்து ஊக்கமூட்டினார். தம் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
1964ஆம் ஆண்டு தனிநபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திரப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றி விளக்கு 1968ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி தன் ஜோதியை நிறுத்தியது.

தலைமையன்னை இதைச் சொல்லிமுடித்ததும் வதனியின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.. அவளை சிறிதுநேரம் அழவிட்டத் தலைமையன்னை மீண்டும் பேசினார்.
“ஹெலன் கெல்லரைப்பற்றி நீ இன்னும் நிறையப்படித்துத் தெரிந்துகொள்ளலாம். நான் இதை இப்போது உனக்குச் சொல்வது ஆன்சலீவனைப்பற்றி நீ புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.
பொறுமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் தன் மாணவிக்குக் கற்பித்தது மட்டுமின்றிக் கடைசிவரை ஹெலனோடு பயணித்து அவரை வெற்றிச்சிகரத்தைத் தொடவைத்திருக்கிறார்.
ஆயிரம் மாணவர்களுக்கு ஏனோதானோவென்று கற்பிப்பதைவிட ஒரே ஒரு மாணவியை உயரத்தூக்கிப்பார்ப்பதுதான் ஓர் ஆசிரியருக்கு வெற்றி. நிதானம் பெண்ணின் பிறந்தவீட்டுச் சொத்து. அதைக் கைவிடாதே. அனிதாவின் இறப்பிற்கு நீ காரணமல்ல. அவளின் உடல் கோளாறுகள்தான் காரணம்.
அதேநேரம் உன் கட்டுப்பாட்டை இழந்து அவளை அடித்ததும் தவறு. ஆசிரியர் நம் நன்மைக்காகத்தான் அடிக்கிறார்கள் என்பதை உணராதவள் முட்டாள்தனமாக படிப்பை நிறுத்தியதும் தவறுதான்.

ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது, மாணவர்களும் ஆசிரியரை பணிந்துபோக வேண்டியதில்லை என்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. ஆசிரியரும் இன்னொரு அண்ணை என்பதை ஆசிரியர்களோ, மாணவர்களோ அல்லது பெற்றோரோ புரிந்துகொள்வதில்லை.
நகமும் சதையுமாக இருக்க வேண்டிய ஆசிரியர் மாணவர் உறவு, எலியும் பூனையுமாக மாறிக்கொண்டு வருகிறது.
உன் கோவத்தைக் குறை. இன்றுதான் புதிதாய் பிறந்திருக்கிறாய் என்று நினை. நன்கு யோசித்துவிட்டுத் தெளிவான மனநிலையோடு நாளை பள்ளிக்கு வா.” என்று அவளை அனுப்பி வைத்தார்.

பள்ளியிலிருந்துப் புறப்பட்டவள் நேரே அனிதா வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அவள் புகைப்படம் ஒன்றையும் வாங்கிக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். ஹெலன் கெல்லர் எழுதிய என் கதை என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும், அவள் நடந்துகொண்ட முறையையும் ஒப்பிட்டுப் பார்த்து வெட்கிப்போனாள்.
அனிதாவின் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியான கற்பகம் என்ற பெண்ணை அனைத்து ஆசிரியர்களும் தேற்றமுடியாதவள் என்று விட்டுவிட்டனர். அந்தப் பெண்ணை எப்படியாவது தேற்சியடையச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் வதனி.

குடும்பச்சூழல் காரணமாக மனநிலைப் பாதிக்கப்பட்டவளைப்போல் இருந்தவளுக்கு முடிந்தளவு அன்பைத் தந்தாள். இரவு பகல் பாராமல் அவளைப் படிக்கத் தூண்டினாள்.
என்னதான் படிக்கவைத்தும் கற்பகத்திற்குப் படிப்பு ஏறவில்லை. வதனிக்குக் கோவம் வரும்போதெல்லாம் ஆன்சலீவனையும்  ஹெலன் கெல்லரையும் நினைத்துக்கொள்வாள். அனிதாவின் புகைப்படத்தையும் பார்த்துக்கொள்வாள்.
 கற்பகத்திற்கு பாட்டு மற்றும் நடனத்தின்மீது ஆர்வமிருப்பதைத் தெரிந்துகொண்ட வதனி படிப்போடு கூடவே பரதமும் பாட்டும் கற்றுக்கொடுத்தாள். வதனிக்கு அவை இரண்டும் தெரிந்ததால் பாட்டிற்கும் பரதத்திற்குமுரிய சிறப்பு வகுப்புகளை அவளே எடுத்தாள்.  ப்லஸ்டூவில் ஓரளவு நல்ல மதிப்பெண்ண்ஓடு தேற்சியடைந்தாள் கற்பகம்.
பட்டப்படிப்பைத் தொடர விரும்பாத கற்பகத்தை வதனி அவள் வீட்டிற்கே அழைத்துச் சென்று தங்கவைத்து பரதத்திலும் பாட்டிலும் முழுமூச்சோடு கவனத்தைச் செலுத்தவைத்தாள்.
மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் கொண்ட வசீகரனை மணந்துகொண்டதால் வதனிக்கு இதைச் செய்வது எளிதாகவே இருந்தது. வசீகரன் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தான்.

குடும்பச்சுமை வதனியின் தலையில் ஏறாதபடியும், யாரும் அவளைக் கேள்விக் கேட்காதபடியும் பார்த்துக்கொண்டான்.
காலையில் தன் ஆசிரியர் பணியையும், மாலையில் கற்பகத்திற்கான நடன வகுப்பையும் எடுத்து வந்தாள். நடனத்திலும் பாட்டிலும் சிறந்து விளங்கினாள் கற்பகம். அவள் நடன அரங்கேற்றத்தை வதனி தன் செலவிலேயே பிரம்மாண்டமாக நடத்தினாள்.
கச்சேரிகளுக்குச் சென்று வந்தாள் கற்பகம். அவள் ஒவ்வொருமுறை மற்றவரிடமிருந்துப் பாராட்டைப் பெரும்போதும் வதனிக்குப் பெருமையாக இருக்கும். ஆறு வருடங்கள் வதனியுடனிருந்த கற்பகம் தன் சொந்த ஊரில் ஒரு நாட்டியப் பள்ளியைத் துவங்கப்போவதாகச் சொல்லி ஊருக்குக் கிளம்பினாள். களையென்று அனைவராலும் அகற்றப்பட்ட கற்பகத்தின் கலை ஆர்வத்தைக் கண்டறிந்து, அவளை சிறந்தக் கலைஞராக ஆக்கிவிட்டாள் வதனி.

அன்று ஆன்சலீவனால் ஹெலனின்மீது தூவப்பட்ட வெற்றி விதை விரிட்சமாக வளர்ந்தது. இன்று வதனியால் கற்பகத்தின்மேல் தூவப்பட்ட வெற்றி விதையும் விரிட்சமாகிவிட்டது.
வதனியும் வசீகரனும் கணிசமானத் தொகையைக் கற்பகத்தின் பள்ளிக்கு நண்கொடையாகக் கொடுத்தனர்..
 “மேடம், நான் இதை வாங்கிக்கனும்னா ஒரு நிபந்தனை.” “என்னம்மா?” “உங்க அலமாரியிலிருந்த என் கதைப் புத்தகத்தை நானும் படிச்சியிருக்கேன். அதில் வரும் ஆன்சலீவனாக நீங்க இருக்க நினைக்கும்போது. நான் ஏன் ஹெலன் கெல்லராக இருக்க நினைக்கக்கூடாது? உங்களின் கடமைகள் அனைத்தும்  முடிந்ததும் நீங்கள் என்னிடம் வந்துவிட வேண்டும். உங்களின் கடைசிக் காலங்களை நான் என்னுடன் பகிர விரும்புகிறேன். இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் இதைக் கொடுங்கள்.” என்று சொல்ல, வதனிக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
அன்றைக்கு சூழல் எப்படியிருக்குமோ? எல்லோராலும் ஆன்சலீவன் ஹெலன் கெல்லராக முடியுமா? சில விஷயங்களை நாம் நினைத்தாலும் அது நடப்பது காலத்தின் கையிலல்லவா இருக்கிறது? என்றெல்லாம் வதனி யோசித்தாலும் கற்பகத்தின் திருக்திக்காக வாக்குறுதியளித்தாள். அதன்பின்னே கற்பகம் அந்த நண்கொடையைப் பெற்றுக்கொண்டாள்.

ஆசிரியர் பணியிலும் குடும்ப வாழ்விலும் ஜெயித்துவிட்டத் தன் மனைவியைப் பெருமைப் பொங்கப் பார்த்தான் வசீகரன்.
வதனியின் ஐந்து வயது மகள் மதுவந்தியும், மூன்று வயது மகன் சுதாகரனும் கற்பகத்திற்கு கண்ணீரோடு விடைகொடுத்தனர். கற்பகமும் அந்த பூக்குவியல்களை அணைத்து விடுவித்தாள்.
பட்டுப்போகவிருந்த தன் வாழ்வை பூஞ்சோலையாக்கிவிட்ட இந்த இதயங்களின் பாசத்தைப் பெற என்ன தவம் செய்தோம் என்று நெகிழ்ந்தபடியே கற்பகம் பேருந்தில் ஏறினாள்.
கற்பகம் ஏறிய பேருந்துப் புறப்பட்டபோது வதனிக்கு நெஞ்சு கணத்தது. மதுவந்தியைப் புகுந்தவீட்டிற்கு அனுப்பும்போது எப்படி உணர்வாளோ அப்படிப்பட்ட துயரத்தை அவள் இதயம் அனுபவித்தது.

மாணவர்கள் தம் பள்ளிக்காலங்களை முடிக்கும்போதும், ஒவ்வொரு வகுப்பாகக் கடக்கும்போதும் பிரிவுத் துயர் அவர்களை மட்டுமா ஆட்கொள்கிறது? அதே அளவிலான பிரிவுத்துயரை ஆசிரியர் அனுபவித்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
எப்படிப்பட்ட மாணவக்குழுக்களாக இருந்தாலும் கடந்து செல்ல வேண்டியநிலை அவர்களுக்கு. சிற்பிக்குச் சிற்பங்களைச் செதுக்கும் உரிமை மட்டும்தான் இருக்கிறது. அதைத் தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையே.

மிகுந்த மனபாரத்துடன் கற்பகத்தை வழியனுப்பிவிட்டு வந்த வதனிக்கு தன் பழைய நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது. தன் பையிலிருந்த அனிதாவின் புகைப்படத்தை எடுத்துப்பார்த்தாள்.
அதில் அனிதாவின் இதழ்கள் வதனியைப் பார்த்து பெருமிதப்புன்னகைச் சிந்தியது. அதேநேரம் அவள் கண்கள் தான் செய்த மடத்தனத்தால் வதனிக்கு ஏற்பட்ட கரும்புள்ளிக்காக மந்னிப்பை யாசித்தது.

Thursday 25 June 2020

பார்வை



பனி இல்லாமல் உறைய வைக்கும்;
பாஷை இல்லாமல் உருக வைக்கும்;
புதுப்புது கவிதை படைக்கச்செய்யும்;
பூலோகம் தன்னை ரசிக்கச்செய்யும்!
வார்த்தைக்கு  வெட்கம் தடைவிதித்தாலும்,
கைஜாடைக்கு கண்ணியம் தடைவிதித்தாலும்,
கண்ணசைவுகள் எண்ணத்தை பிரதிபலிக்கும்!
பாசத்தைக் கண்டால் பக்கத்தில் அழைக்கும்.
வேஷத்தைக் கண்டால் விலக்கி நிறுத்தும்.
ஒவ்வொரு பார்வையிலும் ஓர் அர்த்தம், 
உணர்ந்து கொள்ள ஓர் அகராதி  வேண்டும்.
நூதன உறுப்பே,
நீ நவரசத்தின் சாளரம்.
நேர்த்தியான ஓவியம்.
காதலைச் சுறக்கும் நயனங்களே,
நீ கவிஞனின் கவிதை.
கனவுலகின் தேவதை.
இமைக்குடிசைக்குள் வசிக்கும் விலோசனமே, யார் கற்பித்தப் பாடம் இதழோடு உங்களையும் சேர்ந்து சிரிக்கச்சொல்லி?
வெளிச்சத்தை வீசும் விழியே
அதை விடாது அடைகாக்கும் இமையே
வா வேறோர் பிறவியில் என்னிடம் வா
அழகாய் அலங்கரிப்பேன்!  அருமையாய்  பாதுகாப்பேன்!
அதுவரை இதயத்தில் அந்தரங்கமாய் உன்னை உபசரிக்கிறேன்!

Tuesday 23 June 2020

அதுவும் ஓர் மனிதச் சமூகம்


நான் கொஞ்சநாள் முன்பு ஒரு குறும்படம் பார்த்தேன். அந்தப் படத்தின் பெயர் கற்பினியான திருநங்கை. திருத்தாயவளே.
அந்தப்படத்தில், திருநங்கை ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பாள். அப்போது தன் குழந்தையைக் காணோமெனத் தேடியலைந்துக் கண்டுகொள்ளும் தாய் அந்தத் திருநங்கையைக் கேவலமான வார்த்தைகளால் திட்டுகிறாள்.

பத்துமாதம் சுமந்திருந்தால்தானே உனக்குத் தாய்மையின் வலி புரியும் என்ற வார்த்தையைக் கேட்டு அவள் உடைந்து அழுகிறாள். உடனே ஓர் மருத்துவரை அனுகி தன்னால் தாயாக முடியுமா என்று ஆலோசிக்கிறாள்.

அந்த மருத்துவரோ வாடகைத்தாய் முறையைப் பரிந்துரைக்கிறாள். இங்கே பாவப்பட்டவர்கள் திருநங்கை மட்டுமல்ல. சூழ்நிலைக் காரணமாகத் தன் கருவறையை வாடகைக்கு விடும் அனைத்துப் பெண்களுமே பாவப்பட்டவர்கள்தான்.

தன்னால் தாயாக முடியாதநிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெறத் துடிக்கிறாள் ஒரு பெண். இது வாடகைத்தாய்மூலம் பிறந்தக்குழந்தை என்று மற்றவருக்குத் தெரிவிக்கப்போவதுமில்லை, வாடகைத்தாய் யாரென்று மற்றவருக்குக் காட்டப்போவதுமில்லை. தாய்மையின் முழு வீரியம் தெரியாமல் தனக்குப் பணம் கிடைத்தால் போதும், தன் பிரச்சனைகள் தீர்ந்தால் போதுமென்று அந்தப் பாவத்திற்கு உடன்படுகிறாள் ஒரு பெண்.

மசக்கையும், பிரசவ வலியையும் அனுபவித்துப்பெறும் குழந்தையை மயக்கம் தெளியும் முன் மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் கொடுமையை மருத்துவமும் அனுமதிக்கிறது, மனிதர்களும் அனுமதிக்கிறார்கள். ஒருவருக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயம் மற்றவருக்கு பெரும் துக்கத்தைக்கொடுக்கும் என்பதை உணருவதுமில்லை.

தாயாகத் துடிப்பவளுக்கும், தாயாக முடிந்தவளுக்கும் தாய் பாசம் என்ற உணர்வு ஒன்றுதான் என்பதையும் புரிந்துகொள்வதில்லை.

சரி இந்தத் திருநங்கை விஷயத்திற்கு வருவோம். மருத்துவரின் டெர்ம்ஸ்  அண்ட் கண்டிஷன்ஸ்கு ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக சம்மதிக்கிறாள். அதன்படி குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிடுகிறாள். ஆனால் தாய்மை அந்தக் குழந்தையைப் பார்க்கத்துடிக்கிறது.
மருத்துவரை  தொல்லை செய்து அதைத் தூரத்திலிருந்துப் பார்க்க அனுமதிப் பெற்று அந்தக் குழந்தையைத் தேடிச்சென்று பார்க்கிறாள். அந்தக் குழந்தை அவளை அம்மா என்று அழைக்கிறது.   இதோடு இந்தக் குறும்படம் முடிகிறது. அதன்
 லிங்க்.

ஆனால் திருநங்கை தனுஜாசிங்கம் அளிக்கும் பேட்டியில் உலகில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இனி நடக்கவும் வாய்ப்பில்லை என்று இந்தக் குறும்படத்தை வன்மையாகக் கண்டிக்கிறாள். பிறப்பில் ஆணாக இருக்கும் திருநங்கைகளுக்கு கர்பப்பை இருக்காது
என்கிறாள்.


மற்றொரு வீடியோவில் திருநங்கை பிறப்பால் அப்படியாவதில்லை. குறிப்பிட்ட வயதில் அப்படியாகிறார்கள். அவர்களின் மனநிலையின் அழுத்தம் பற்றியும், அவர்களை எப்படி அனுக வேண்டுமென்றும், சாதித்தத் திருநங்கைகளில் சிலரையும்

 உதாரணம் காட்டப்படுகிறது.

இப்படி அவர்களைப் பற்றிய ஆய்வு வீடியோக்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது நாம் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். இவ்வளவு விஷயம் இங்கே சொல்லப்பட்டதன் காரணம்? வாடாமல்லி.எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி புத்தகம்.

பொதுவாக நாவல்கள் முதலில் சந்தோஷமாய் ஆரம்பித்துப் போகப்போகதான் வலிகளை உணர்த்தும். ஆனால் 43 அத்தியாயங்களைக் கொண்ட  இந்த நாவலில்  முதல் அத்தியாயத்திலிருந்து  இருதி அத்தியாயம்வரை வலி, வலி, வலி மட்டுமே.

எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் சுயம்பு அவனுக்குள் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் கஷ்டங்களைச் சகிக்க முடியாமல் ஊருக்குச் செல்கிறான். அவன் ஊர் சென்று சேரும்வரை அனுபவிக்கும் இன்னல்கள்தான் முதலிரண்டு அத்தியாயங்கள். பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் அவன், இயல்பாய் பேருந்தில்வரும் ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்து அவள் அழகை ரசிக்கிறான். பெண்போல் அவள்மேல் சாய்கிறான்.

அவனை ஆணாகவும் கெட்டவனாகவும் பாவிக்கும் மற்றவர்கள் அடித்துத் துன்புறுத்தி கீழே இறக்கிவிடுகிறார்கள். சாக நினைத்தும் முடியாமல் கஷ்டப்பட்டு ஊருக்குச் செல்கிறான்.
அங்கும் அவனுக்குத் துன்பமே. கல்லூரிக்கு போகமாட்டேன் என்றதும், அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்பதை உணராத பெற்றோர் அடித்து, கெஞ்சி அறிவுரைச் சொல்லிக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். பலன் என்னவோ பூஜியம்தான்.

அவனின் உடற்கோளாறுகளை உணராதவர்கள் மனநிலைப் பாதிக்கப்பட்டவன், பெண்களைக் கற்பழிக்க முயல்பவன் என்று விரட்டிவிடுகிறார்கள். இங்கே சில விஷயங்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த நாவல் வெறும் திருநங்கையின் கஷ்டங்களை மட்டும் உணர்த்தும் நாவலல்ல. எந்தநிலையிலும் சுயம்புவைக் கைவிடாத மூர்த்தி முத்துவின் நட்பு, என்னதான் சண்டை வந்தாலும் ஆபத்துக்கட்டத்தில் ஈகோப்பார்க்காமல் இணைந்து செயல்படும் மாணவர்களின் ஒற்றுமை,  தம்பியைப் படிக்கவைக்க பதிவாளர் காலில் விழும் அண்ணனின் பாசம், தன் பிள்ளைப் படிக்காமல் போனாலும் அவன் நண்பர்களைத் தன் பிள்ளைகளாக ஏற்கும் தந்தையின் பெருந்தன்மை, தாய்க்கும் மேலாக வளர்க்கும் அக்காவின் அன்பு என்று அனைத்து உணர்வுகளையும் அளவு குறையாமல் சரிசமமாய் உணர்த்துகிறது.

பெண்ணாக மாறும்  சுயம்பு தன் கல்லூரியில் படிக்கும் டேவிட்டைக் காதலிக்கிறாள். ஆணான சுயம்புவை அவன் ஊரில் வசிக்கும் மலர்கொடி காதலிக்கிறாள். இருவரின் காதலும் நிரைவேறப்போவதில்லை. ஆனால் இரண்டிலும் உன்னதமும் துயரமும் இருக்கிறது.

வீட்டிற்கு அழைத்து வந்த அவனை அடுத்த வருடமாவது கல்லூரிக்கு அனுப்பிவிடலாம் என்று பெற்றோர் கனவுகாண அந்தக் கனவிலும் மண்ணையள்ளிப்போடவைக்கிறது அவன் ஹார்மோன் மாற்றங்கள்.

சேலைக்கட்டிக்கொண்டுதான் தன் காதலன் டேவிட்டிற்கு கடிதம் எழுதவேண்டுமென்று சேலைக்கட்டி அடி வாங்குகிறான். செத்துப்போன சீத்தாலக்‌ஷ்மி பேய்தான் பிடித்திருக்கிறது என்று அதற்கான சடங்குகளைச் செய்ய, அந்த மூடத்தனமும் அவனுக்கு எதிராகவே அமைகிறது. சேலைக்கட்டியதால் ஊர் கலவரத்தை ஏற்படுத்தியவன், அந்தக் கலவரம் முடியும் முன்னமே மீண்டும் அந்தத் தவறைச் செய்கிறான்.

  அடியும் சூடும் வாங்கியவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  மீண்டும் அதேத் தவறைச் செய்து அவன் அக்கா கல்யானத்தையும் நிறுத்திவிடுகிறான். அத்துடன் அவன் குடும்பத்தாரின் உறவையும், உயிராய் நினைத்த அக்காவின் அன்பையும் மனம்துடிக்க இழக்கிறான்.
அவன் சேர்க்கப்பட்ட மருத்துவமனையிலிருக்கும் திருநங்கை பச்சையம்மாளிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவனை மகளாக ஏற்றுக்கொள்கிறாள். வேறுவழியின்றி அவளுடன் சென்றவன் விபச்சார கேசில் மாட்டிக்கொள்கிறான். இங்கு பச்சையம்மாளின் உண்மையான அன்பும் பரிதவிப்பும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது.

அவனை வீட்டிற்குக் கொண்டுச் செல்லும் வழியில், தப்பித்து ரயிலேறி டெல்லிக்குச் செல்கிறான். இதற்கிடையில் சுயம்புவின் குடும்பம் நிலைக்குலைந்துபோய்விட்டது. தம்பியின் நினைப்பில் அக்கா படுத்தபடுக்கையாகிவிட்டாள். டேவிட்டும் முத்துவும் வந்து பார்த்துவிட்டு, டேவிட், அலி பற்றியும் பாலினமாற்றம் பற்றியும் விளக்குகிறான்.

டெல்லி செல்லும் முன் பச்சையம்மாவுடன் இருந்த நேரத்தில் கடைசி நம்பிக்கையாய் குடும்பத்திற்கு மணியார்டர் அனுப்ப, அது யாருக்கும் தெரியாமல் அவன் அண்ணி கோமளத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.
திருநங்கைகளின் பூஜை, வரலாறு என்று அவர்கள் சொல்லும் கடவுள் நம்பிக்கையுடைய கதை, மற்றும்  அவர்களின் சடங்குகளைப்பற்றியும்  விளக்கியிருக்கிறது இந்நாவல். பாதி ஆணாகவும், பாதிப் பெண்ணாகவும் இருப்பவர்களை முழுப்பெண்ணாக மாற்றச் சுயநினைவுடன் இருக்கும்போதே ஆநுறுப்பை வெட்டி அசால்ட்டாய் போடும் கொடும் சடங்கும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அன்னை இந்திராகாந்திதான்முதல்முதலாக  அலிகளையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அப்படிப்பட்ட அன்னையின் சாவிற்கு மகள்களான திருநங்கைகள் படும் துயரங்களையும், அந்தச் சமயத்தில் டெல்லியில் நடக்கும் கோரங்களையும் உருக்கமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சு. சமுத்திரம்.
டெல்லி சென்ற சுயம்பு மீண்டும் பச்சையம்மாவைச் சந்திக்கிறானா? இதில் வரும் கங்காதேவி,  மேகலை, நீலிமா, நசிமா இவர்கள் யார்? கடைசியில் சுயம்புவும் அவன் குடும்பமும் என்ன ஆனது? என்பதையெல்லாம் இந்நாவலைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமக்கு என்னச் சொல்லித்தருகிறார்களோ, பெரும்பாலும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம். திருநங்கையர் அறுவறுப்பானவர்கள் என்று மற்றவர் சொல்ல, நாமும் அதையே கேட்டுவந்தோம். இந்த நாவலைப் படித்தபிந்தான் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் உடலூனமுற்றவர்களைவிட கொடுமை என்று புரிகிறது.

அவர்களும் மனிதப்பிறவிகள், அதுவும் ஓர் மனிதச்சமூகம் என்பதும் தெரிகிறது. நீங்களும் படித்து அவர்களைப் புரிந்து நேசிக்கவில்லை என்றாலும், அறுவறுப்பாய் நினைக்கக்கூடாது என்று எண்ணுங்கள்.

இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு 1994. Source Shodhganga தளத்தில் உள்ள ஆய்வுக் கட்டுரை.
இதன் முதல் பதிப்பை வானதி பதிப்பகம் ஜூன் மாதம் 1994ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போது இதன் விலை ரூபாய் 80. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.
இந்நூலிற்கு அமரர் ஆதித்தனார் ஐம்பதாயிரம் ரூபாய் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதில் பரிசுத்தொகை பத்தாயிரத்தை எழுத்தாளர் அலிகளின் நலனிற்காக கொடுத்துவிட்டார்.
விக்கிப்பீடியா தளத்தில் உள்ள பக்கத்தில் இவரது முழுமையான நூல்கள் பட்டியல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வாடாமல்லி இடம்பெறவில்லை.
வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாடாமல்லி
சு. சமுத்திரம்
சாரதா பதிப்பகம்
பக்கங்கள் : 359
பதிப்பு : 1
வெளியிடப்பட்ட ஆண்டு : 2015
விலை : ரூ.120

இந்நூலை அமேசானில் படிக்க:

Sunday 21 June 2020

மேதையின் சைக்கிள் பயணம்.



தந்தையர் தினத்தை முன்னிட்டு ராஜுவின் மகள் நாகேஷ்வரி அவருக்கு ஒரு சைக்கிளைப் பரிசளித்து வாழ்த்தினாள்.
சாவியைக் கையில் வாங்கியபோது அந்தச் சாவி கணமாக இருப்பதுபோல் அவருக்குத்  தோன்றியது. அது சாவியின் கணமா அல்லது சாவியைப்பிடித்திருக்கும் இதயத்தில் சுகமாய் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளின் கணமா என்பதை அந்த இரு இதயங்கள் மட்டுமே அறியும்.
“அப்பா, என் பரிசு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” “என்னம்மா! இந்தக் கேள்வியை நீ கேட்கலாமா? பதில் தெரிந்தக் கேள்வியைக் கேட்டு நேரத்தை வீணடிக்காதே. தயாராகி வா. இருவரும் இதில் ஏறி ஒரு பயணம் சென்று வரலாம்.” இப்படிச் சொல்லும் அந்த மனிதரின் வயது 60ஐ கடந்திருக்கும்.
இருவரும் தயாராகி வெளியே வந்துச் சைக்கிளில் ஏறி அமர்ந்தனர். பெடலில் காலை வைத்து அவர் மிதிக்கத் தொடங்க அடுத்த அடி எடுத்து வைக்காதபடி நினைவுகள் அவரைத் தடுத்து நிறுத்தியது.
பல வருடங்களுக்கு முன்:
தன் மகளை பேருந்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்த ராஜு சைக்கிள் கடையில் நல்ல சைக்கிளாக வாங்க வேண்டுமென்று சைக்கிள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இன்றுதான் அவர் மகள் பள்ளிக்கு செல்லும் முதல்நாள். முதல்நாளே அவர் மகள் பேருந்தில் ஏற கஷ்டப்படுவதையும், அவளுடன் ஏறும் பயணிகள் அவளை ஏறமுடியாதபடி தடுமாறவைப்பதையும் பார்த்தவர் இனி ஒருநாள்கூட தன் மகள் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்தார்.
 அவளை யாரும்  தொந்தரவு செய்யமுடியாதபடி பார்த்துக்கொள்ளவும்,  தன் மகளை தானே சுமக்கவும்   இந்த இரண்டுச் சக்கரக் காரை வாங்குகிறார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்து, குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி, ஒரு கடையில் உடைகளுக்குப் பொத்தான் தைக்கும் பையனாக  வேலையில் சேர்ந்து, தொழிலைக் கற்றுக்கொண்டு தையல்காரராக உயர்ந்திருக்கும் அவருக்கு இது நிச்சயம் கார்தான்.
ஏழுரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் இப்போதுதான் பலநூறுகளையும், சில ஆயிரங்களையும் பார்க்கிறார்.
சைக்கிளை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். “ஏற்கனவே இடுப்புவலின்னு சொல்றீங்க. மருந்துச் சாப்பிடுறீங்க. இதில் நாளெல்லாம்உட்கார்ந்தபடி மெஷினை   மிதிக்கனும். கத்தரிப்பிடிச்சி துணி வெட்டனும். வயசு நாற்பதாகப்போகுது. இவ்வளவு கஷ்டத்துல உங்கப்பொண்ணை சைக்கிள்ள கூட்டிட்டுப்போகனுமா? உடம்பு என்னாகுறது.  பஸ்ல போக அவ  பழகிடுவா. வேண்டாமே” என்றார் அவர் மனைவி.
அவர் மனைவியின் பேச்சைக் கேட்பதாக இல்லை. மறுநாள் பயணத்திற்கு தன்னையும் தன் சைக்கிளையும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய மகளுக்கு ஒரே சந்தோஷம். அவர் எதிர்பார்ப்பதும் அதைத்தானே.
மறுநாள் அவரின் சைக்கிள் பயணம் இனிதே தொடங்கியது. மெஷின் பெடலை மிதித்தக் கால்கள் சைக்கிள் பெடலை மிதிக்கத் தயாராயின. கத்தரிப்பிடித்து காப்புக்காய்ச்சியிருந்தக் கைகள் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டிருந்தன.
பின்னால் அமர்ந்திருந்தவள் விழாமலிருக்க  அவள் அப்பாவைப் பிடித்துக்கொண்டாள். பயணம் தொடங்கிய இடம் நந்தனம் ஹௌசிங் போர்டிலிருக்கும் ஐந்தாவது மெயின் ரோடு. சென்று சேர வேண்டிய இடம் ஜெமினி பிரிட்ஜிற்கு பக்கத்திலிருக்கும் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி.
சைக்கிள் ஓட ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் கடந்ததும் தன் மகளிடம் இது சர்ச் என்று வந்திருக்கும் இடத்தை விளக்கினார். சிறிது தூரம் சென்றதும் இது சிவாஜி வீடு என்றார். இப்படியே அவர்கள் கிளம்பிய இடத்திலிருந்து பள்ளி சென்று சேரும்வரை வழியில் கடந்து செல்லும் இடங்களையெல்லாம் அவளுக்கு விளக்கிக்கொண்டே சென்றார்.
அவளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். இப்படித்தான் அவர்களின் ஒருநாள்  பயணம் இருக்கும். மாலையில் பள்ளி வாசலுக்கே பேருந்து வருவதால் அவள் அன்னை அழைத்து வந்துவிடுவார்.
பயணத்தின்போது அவருக்கு அவர் பெண்ணிடம் பேசிக்கொண்டே வரவேண்டும். ஒருநாள் அவள் முகத்தைத் தூக்கிக்கொண்டால் அந்தப் பயணமும் அன்றைய நாளும் அவருக்கு கசந்துவிடும். அதற்காக அவர் மகளின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை நிரைவேற்றிவிடுவார்.
அவர்களின் ஆத்மார்த்தமான பாசத்திற்கு சாட்சி பழைய பாடல்கள். கண்ணதாசன் வரிகளும் சௌந்தராஜன் சுஷீலா குரல்களும்தான் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவள் கண்விழிப்பதும், இரவு கண்மூடி உறங்குவதும் அந்தப் பாடல்களைக் கேட்டபடிதான்.
பயணத்தின்போதும் ராஜு மகிழ்ச்சியாக அந்தப் பாடல்களை தன் மகளின் காதில் கேட்கும்படி முனுமுனுத்தபடி செல்வார்.
 வீட்டுச்சூழல், வேலைப்பளு, கடன் சுமை, பிள்ளைகளின் எதிர்காலம், உடல்நலக்குறைவு இவையனைத்தையும் மறந்து முகத்தில் புன்னகையோடும் மனதுக்கு நிம்மதியோடும் அவர் பயணிக்கும் அழகான தருணமது.
பள்ளிக்குள் சென்று இறங்கும்போது, அவர் மகள் அவர் கையைத் தொட நேரிடும். அப்போது அவள் தன் கைகளில் வியர்வையின் பிசுபிசுப்பையும் ஈரத்தையும் உணர்வாள். ஓர் உழைப்பாளியும் பாசவெறி கொண்ட மனிதனுமான தன் தந்தையின் உன்னதத் துளிகள் அவை என்பதை அந்தப் பேதை நெஞ்சமும் புரிந்துக்கொள்ளும்.
எப்போதாவது அவர் மாலையில் அவளை அழைக்க வரும்போது வழியில் இருக்கும் தேனீர்கடையில் அவளுக்கு காஃபி பட்டர்பிச்கட்வாங்கிக்கொடுத்துவிட்டு அவரும் தேனீர் அருந்திவிட்டு அழைத்து வருவார்.
அவர் மகள் மதிய உணவை மறந்துவிட்டு வரும்போதும், கோபத்தில் சாப்பிடாமல் பிடிக்காதச் சாப்பாட்டை வீட்டில் விட்டுவிட்டு வரும்போதும், மதிய வேளையில் வெயிலைப் பொருட்படுத்தாமல், சைக்கிளில் பள்ளிக்கு வந்து அவளுக்குப் பிடித்த உணவை வாங்கிக்கொடுத்துவிட்டுச் செல்வார்.
காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் சைக்கிளில் பள்ளிக்கும் வீட்டிற்கும் மாறி மாறிச் சென்ற நாட்களும் உண்டு.
சிலநேரம் அவர் மகள் தூங்கிக்கொண்டே வருவாள். அப்படி அவள் தூங்கி வழியும் வேளையில், அவள் விழாதபடி தன்னையும் தன் சைக்கிளையும் பேலன்ஸ் செய்வார். அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சைக்கிளை ஓட்டுவார்.
அவள் தூங்காமலிருக்க அவளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே வருவார். குறிப்பாக பள்ளியில் நேற்று நடந்ததைப்பற்றியும், இன்று நடக்கப்போவதைப்பற்றியும் கேட்பார். “இதோ வந்துடிச்சும்மா. இன்னும் கொஞ்ச தூரம்தான். தூங்காதே.” என்று அன்பாகச் சொல்வார்.
பந்தபாசத்தைத் துறந்து கன்னியாகவே வாழ்ந்து உலகிற்கு சேவை புரிவோம் என்று உறுதிகொண்ட நெஞ்சங்களிலும் பாசத்தின் ஈரத்தைச் சுறக்கச் செய்தப் பயணமது.
அவள் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைத் தைத்தும், அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு உடைகள் தைத்தும் தன் தொழிலில் முன்னேறினார்.
பெண்களை மரியாதையுடன் பார்க்கும் அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவரின் பாசத்திற்காகவே அவரை மதித்தனர்.
அவர் மகளை டெய்லர் மகள் என்று கொண்டாடினர். தன் மகளைப்போல் மற்றவரையும்    பாசத்தோடு வருடும் அவர் குரலும் செய்கையும் அங்கு படிக்கும் மாணவமாணவிகளை பெரிதும் கவர்ந்தது. அங்க்கிள் அங்க்கிள் என்று அன்போடு அழைத்தனர்.
ஒருநாள் அவர் மகள் தான் கவிதைப் போட்டியில் கலந்திருப்பதாகவும், ஒரு கவிதைச் சொல்லித்தர வேண்டுமென்றும் அவரைக் கேட்டாள். 5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர்,  அவள் பள்ளியில் இருப்போரால் அவருக்குக் கிடைத்த நன்மைகளை வைத்து, ‘வானம்தான் எங்கள் பள்ளி அதிலிருக்கும் நட்சத்திரம்தான் எங்கள் ஆசிரியர்கள்’ என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொடுத்தார்.
அவள் அந்தக் கவிதையைச் சொல்லி இரண்டாம் பரிசைப் பெற்றாள். அடுத்தமுறை கவிதைக் கேட்டபோது அவளையே எழுதிக்கொள்ளச்சொல்லி அவள் கவித்திறனைத் தூண்டிவிட்டார்.
மேடையில் பேச வேண்டியவற்றை அவள் ஆசிரியர்கள் அவளுக்கு எழுதிக்கொடுப்பார்கள். அவள் அப்பா அதைப் படித்து அவளுக்குச் சொல்லிக்கொடுப்பார். தங்குத் தடையின்றி அவள் பேசிக்காட்டும்வரை அவளை திரும்பத் திரும்பச் சொல்ல வைப்பார்.
தமிழ்தான் அவருக்குப் படிக்கமுடியும். ஆங்கிலப் பேச்சையும் அவளைப் பேசச் சொல்வார். அதையும் அவள் தடையில்லாமல் சொல்ல வேண்டும். இலக்கணப்பிழை வராமலும், ஒரு வரியைக்கூட  விடாமல் பேசவும் அவள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேடையில் பேசும் நாளன்று, அவள் பேசிமுடித்து மற்றவரிடம் கைத்தட்டல்களும், வாழ்த்துக்களும் வாங்கும்வரை நின்று பார்த்துவிட்டு தன் சைக்கிளில் வீடு திரும்புவார்.
பரிட்சை நேரங்களில் சைக்கிளில் பயநிக்கும்போது, “இன்னைக்கு என்னம்மா பரிட்சை?” ”தமிழ்.” “படிச்சியா?” “படிச்சேன்.” “நல்லா எழுதுவியா?” “ம்.” “நீ எழுதிடுவம்மா என் பெண்ணாச்சே.” இப்படித்தான் இவர்களின் உரையாடல்கள் இருக்கும்.
ஏதோ ஒருநாள் அவள் அப்பா அதைக் கேட்காவிட்டால் அவளுக்கு அந்தப் பரிட்சை நன்றாக இருக்காது. அதை அவள் அப்பாவிடமும் சொல்வாள். அவரும் அதைப் புரிந்துகொண்டு  மறக்காமல் கேட்டுவிடுவார். மறக்கும் சமயங்களில் மனதுக்குள் கேட்டுக்கொண்டதாக மகளிடம் சொல்வார்.
இவர்களின் சைக்கிள் பயணம் 13 வெயில் காலங்களையும், 13 மழைக்காலங்களையும் 13 குளிர் காலங்களையும் சந்தித்திருக்கிறது. படிப்பில் பெண்ணவள் மனம் சலித்து விடுமுறை எடுத்தாலும் தந்தையவர் உடல் சலிக்காமல் விடுமுறைகளை தவிர்த்துவிட்டு அழைத்துச் செல்வார். ஒருநாள்கூட அவள் தாமதமாக செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கடைசிவரை அதைக் கடைபிடிக்கவும் செய்தார்.
ப்லஸ்டூ படிக்கும்போது அவள் படிப்பிற்காக ஹாஸ்டலில் சேர்ந்தாள். வாழ்க்கைநிலையில் ஏற்பட்ட மாறுதல்களாலும் வயது மூப்பினாலும் அதற்குமேல் அவர்களால் அந்த சைக்கிள் பயணத்தைத் தொடர இயலவில்லை.
பல வருடங்கள் கழிந்தும், அந்தப் பல வருடங்களில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் வந்தபோதும், அந்த நினைவுகள் மட்டும் அவர்கள் இதயத்தில் பசுமையாய் இருக்கிறது.
அவர் சைக்கிளைவிட்டு இறங்கினார். அவளும் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள். அவர் மகள் அவருக்குப் பரிசளித்தப் பொக்கிஷத்தைப் பத்திரமான இடத்தில் நிறுத்திப் பூட்டிவிட்டு அவரும் உள்ளே சென்றார்.
வாழ்க்கையில் இழந்துவிட்டப் பருவங்களையும், கடந்துவிட்டத் தருணங்களையும்  மீண்டும் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அந்த நினைவுகளின் கணமும், ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பும்,  சோகம் கலந்த சுகமும் குறைந்து காணாமல் போய்விடும்.
அதனால்தான் நம்மிடமிருந்து எது பரிக்கப்படுகிறதோ, அது அதுவாகவே திரும்பக் கிடைப்பதில்லை.
இவர்களுக்கும் தங்களின் நினைவுகளின் கணத்தைக் குறைக்கவோ இறக்கி வைக்கவோ விருப்பமில்லை.
வாழ்நாள் முழுதும் அந்த நினைவுகளின் பாரத்தைச் சுகமாய் சுமக்க நினைக்கிறார்கள்.
சுமக்கட்டுமே!
பின் குறிப்பு:
இந்தக் கதையை என் தந்தைக்கும், அவரைப்போலவே பிள்ளைகள் மேல் பாசத்தைப் பொழியும் அனைத்துத் தந்தையர்க்கும் சமர்ப்பிக்கிறேன்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

Saturday 20 June 2020

பிறந்தநாள் கேக்.

  வணக்கம் நண்பர்களே.
 இன்னைக்கு நான் ஒருத்தரோட வீட்டுக்கு பிறந்தநாள் கேக் சாப்பிடப்போனேன். அங்க எனக்கு வினோதமான கேக் கிடைச்சது. அதை நான் உங்களுக்குத்  தரப்போறேன். வீட்டுக்குள்ள நுழைந்ததும் அவரோட அம்மா என்னை வரவேற்றாங்க.
”வாம்மா அபி. எப்படிமா இருக்க?” ”நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன்மா.”
“சரி ஆன்ட்டி. இன்னைக்கு உங்கப் பையனோட பிறந்தநாள். கேக் கொடுங்க. கேக் சாப்பிடத்தான் வந்தேன்.” “கேக்தானே கொடுத்துட்டாப் போச்சு. நீ விதவிதமான கேக் சாப்பிட்டிருப்ப. கேசரி கேக் கூட இருக்கு. இட்லியக்கூட இந்தியன் கேக் சொல்லுவாங்க. ஆனா இந்த வீட்டுல வினோதமான கேக் இருக்கு. அதை வினோதமான முறையில் கட்பண்ணித்தருவான் என் பையன்.” ”அப்படியா?” “ஆமாம் வா தரசொல்றேன்.”
அவங்க ஒரு அறை முன்னாடி நின்னு கதவைத் தட்டினாங்க. “தம்பி ரவி,  கதவைத்திற.” “என்னம்மா?” என்று குரல் கொடுத்தபடி ஒருவர் கதவைத் திறந்தார். “தம்பி, இவ எனக்குத் தெரிஞ்சப்பெண்.  உனக்குப் பிறந்தநாள்னு இவகிட்டச் சொன்னேன். கேக் சாப்பிட வந்திருக்கா. கேக் கொடு.”
என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். “பார்த்தியாம்மா? கேக்.” என்று அவர் அம்மா  காட்டியத் திசையில் தலையணை சைசில் நிறைய கனமான  புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இது என்ன ஆன்ட்டி?” புத்தகம் கேக் ஷேப்ல இருந்தாலும். இதை எப்படி கட் பண்ணித்தருவார்?” ”இதோ இப்படித்தான் என்று இன்னொரு இடத்தைக் காட்டினார்.” அங்கே புத்தகங்கள் கட்பண்ணப்பட்டு, கட்பண்ணப்பட்ட பக்கங்களை புத்தகம் வாரியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
“இதை எப்படி ஆண்ட்டி மத்தவங்களுக்குச் சாப்பிடக்கொடுப்பீங்க?” என்று நான் கேட்டதும் ஒரு கணிணி உயிர்ப்பிக்கப்பட்டது.
அதில் கட்பண்ணப்பட்ட பக்கங்கள் புகைப்படமாக எடுக்கப்பட்டு, எழுத்துணரியாக்கம் o.c.r செய்யப்பட்டு, ப்ரூஃப் ரீட் செய்து மின்னூலாக மாற்றியமைக்கப்பட்டது. “இந்த மின்னூல் உனக்கு கேக்தானேம்மா?” “நிச்சயம் ஆன்ட்டி. அச்சுப்புத்தகங்களைப் படிக்க முடியாத அனைத்துப் பார்வையற்றவர்களுக்கும் இது கேக்தான்.”
“இந்தக் கேக்தான்மா என் பையன் நாலு வருஷமா பார்வையற்றவர்களுக்குக் கொடுத்துட்டுருக்கான்.” “சந்தோஷமா இருக்கு ஆண்ட்டி. எனக்கு அதைப்பற்றி விரிவா சொல்லமுடியுமா?” “சொல்லுப்பா ரவி.”
அவர் சொல்லத் தொடங்கினார்.  2016ஆம் ஆண்டு நானும் என் நண்பனும்  வள்ளுவர் கோட்டத்துல இருக்க ரீடிங் செண்டர்குப் போனோம். அது பார்வையற்றவர்களுக்கான ரீடிங் செண்டர். அங்கே நிறைய தன்னார்வலர்கள் வந்து புத்தகம் வாசிப்பார்கள்.  என் நண்பந்தான் என்னைக் கூட்டிட்டுப்போனான். அவர்களுக்குப் புத்தகங்கள் வாசித்துக்காட்ட ஆரம்பித்தேன்.
அப்போது ஒருவர் ஒரு புத்தகத்தைத் தந்து அதை ஒலிப்பதிவு செய்துத் தரச்சொன்னார். குவாலிட்டி  நன்றாக இருக்க வேண்டும். வார்த்தைகள் புரிய வேண்டும் என்றார். நானும் பதிவு செய்து தந்தேன். அவர் அதைப் படித்துவிட்டு நன்றாக இருந்தது என்றார்.
அதன்பின் நிறைய ஒலிப்புத்தகங்கள் பதிவு செய்தேன். பிறகு சிலர் மின் புத்தகங்களும் படிப்பது தெரிய வந்தது. எது அதிகமாக பயன்படுகிறது என்று சில பார்வையற்றோரைக் கேட்டேன். இரண்டுமே பயன்படும். மின்புத்தகங்கள் கொஞ்சம் அதிகமாகவே பயன்படும் என்றனர்.
ஒரு வலைத்தளம் உருவாக்கி, அதில் எல்லோரிடம் இருக்கும் நூல்களின் பட்டியல்களைப் போடவேண்டும்.  புத்தகம் வேண்டும் என்று  கேட்கும்போது அந்தப் புத்தகம் இருக்கும் தனிநபரிடமிருந்தோ அல்லது சங்கத்திடமிருந்தோ வாங்கிக்கொடுப்பது என முடிவு செய்தேன்.
பட்டியல்கள் சரியாக கிடைக்கவில்லை. அதனால் வாசிப்போம் வாருங்கள் என்ற வலைதளத்தை உருவாக்கிப் பார்வையற்றவர்களை மட்டும் அதில் உறுப்பினராக்கினேன்.
இது பார்வையற்றவர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டியது. மற்றவர்களால் எப்படியும் புத்தகம் படித்துவிட முடியும் என்று, உறுப்பினராகும் விண்ணப்பப்படிவத்துடன்  பார்வையற்றவர்களா என்று உறுதி செய்துகொள்ள  அவர்களின் புகைப்படம் தாங்கிய அடையாள அட்டைக் கேட்டேன்.
நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சிறிது சிறிதாக வரத்தொடங்கினர். 300 ஒலிப்புத்தகங்களும், 300 மின்நூல்களும் வலைதளத்தில் ஏற்றப்பட்டது.
“அவ்வளவு புத்தகங்களும் எப்படி பதிவு செய்தீங்க? எல்லா மின்நூல்களும் இப்படித்தான் உருவாக்கப்பட்டதா?” “இல்லை. மின்நூல்களை முன்பு நிறைய இணையத்தொடர்களிலிருந்தும், இலவசமாக படிக்கக்கூடிய வலைத்தளத்திலிருந்தும் தொகுத்தேன். அப்புறம் பார்வையற்றவர்களிடமிருந்தும் சில புத்தகங்கள் கிடைத்தன.
வாசிப்பாளர்களும், பார்வையற்றவர்களும், என் நண்பர்களும்  நன்கொடை கொடுத்தாங்க. அதில் நிறைய அச்சுப்புத்தகங்கள் வாங்கப்பட்டு o.c.r செய்யப்பட்டன. முன்னூறு புத்தகங்கள்தான் வலைத்தளத்தில் இருக்கும். ஆனால் 5000 புத்தகங்கள் மின்நூலாக இருக்கின்றன. அதன் பட்டியல் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்த்து எந்தப் புத்தகம் வேண்டுமோ அதன் பெயரை vaasippom@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அந்தப் புத்தகம் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.”
““எங்க வீட்டுல தாலாட்டு எது தெரியுமாம்மா? என் பையன் பதிவு செய்த  ஒலிப்புத்தகங்கள்தான். எங்களுக்கு மட்டுமல்ல புத்தகம்  கேட்கிற  எல்லாருமே  அப்படித்தான் சொல்றாங்க.”
“அதில் ஏதாவது ஒரு பதிவை  நான் கேட்கமுடியுமா ஆண்ட்டி?” “இதோ கேளு.”
ஹெட்போனில் எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியான இனிமையான குரலில் எனது இந்தியா புத்தகம் கேட்டது.
“ஆமாம் ஆண்ட்டி. சுகமாய் மனதை வருடிப் படிக்கத் தூண்டுகிறது. வெளியே கேட்கும் எந்தச் சத்தமும் இந்தக் கவணத்தைச் சிதறவைக்காது.” ”அதனால்தான்மா நான் இதைத் தாலாட்டுன்னு சொன்னேன். நிறைய பேர் தூக்கம் வராம புத்தகம் படிப்பாங்க. படிச்சிக்கிட்டே தூங்கிடுவாங்க. ஆனா படிச்ச விஷயம் மனசுல ஆழமா பதியும். அப்படித்தான் இருக்கும் இந்த ஒலிப்புத்தகங்களும்.  நானும் ரொம்பநாள் கழித்து இதையெல்லாம் கேட்க ஆரம்பிச்சிருக்கேன்.”
“300 புத்தகங்களும் நீங்களே  பதிவு செய்ததா?”  “நான் பதிவு செய்த புத்தகங்கள் மட்டுமல்லாமல் மற்ற வாசிப்பாளர்கள்  வாசித்தது, கிழக்கு ஒலிநூல்கள்,  யூடியூபில் போடப்பட்ட சிலநூல்கள் இருக்கின்றன. ஒலிநூல் வாசிப்புக் குறைந்துவிட்டதாலும், மின்நூலாக மாற்றவே நேரம் சரியாக இருப்பதாலும் ஒலிநூல்கள் 300 புத்தகங்களோடு நிறுத்தப்பட்டன.”
“அப்படியானால் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்த நெட் இணைப்பு வேண்டுமல்லவா?” “ஆமாம்.” “என்னிடம் நெட் இல்லை. ஆனால் படிக்க ஆசையாக இருக்கிறது.” “நான் என் நண்பர்களிடம் ஸ்பான்சர் வாங்கி உங்களுக்கு ஜியோ வைஃபை டிவைஸ் வாங்கித்தரட்டுமா? படிக்கிறீங்களா?”
“வேண்டாம் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” “அப்படியெல்லாம் இல்லை. ஏற்பாடு செய்கிறேன்.”
அதன்படி ஒரு ஜியோ டிவைஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ”மிக்க நன்றி. வேறு எப்படி எங்கே புத்தகங்கள் படிக்கலாம்?” “கிண்டிலில் படிக்கலாம்.”
“அப்படியென்றால்?” “அமேசானில் கிண்டில் என்று ஒரு App இருக்கிறது அதை கணிணியிலோ போனிலோ இன்ஸ்டால் செய்து படிக்கலாம்.” “எப்படி இன்ஸ்டால் செய்து எப்படி படிப்பது என்று சொல்லித்தரமுடியுமா?”
அமேசானில் அக்கௌண்ட் உருவாக்கி, கிண்டில் இன்ஸ்டால் செய்வது, புத்தகம் தரவிரக்குவது, புத்தகம் விலைகொடுத்து வாங்குவது, அன்லிமிடட் போடுவது என்று அனைத்தும் சொல்லித்தரப்பட்டது. “கூகுள் டிரைவில் எப்படி ஃபோல்டர் அல்லது ஃபைல் ஏற்றுவது?” அதுவும் கேட்டதுமே சொல்லித்தரப்பட்டது.
“PDF படிக்க வேறு ஏதாவது வழியிருக்கா?” “பாலபோல்கா என்ற சாஃப்ட்வேர் இருக்கிறது.” ”அதை எப்படி பயன்படுத்துவது?”
 அதைப் பயன்படுத்தவும் சொல்லித்தரப்பட்டது. “என்ன வேலை செய்கிறீர்கள்?” ”IT கம்பெனியில் வேலை செய்கிறேன்.”
”மகத்தான பிள்ளையைப் பெற்றிருக்கிறீங்க ஆன்ட்டி. நன்றி. நான் வருகிறேன்.” “நன்றிம்மா. பத்திரமா போய்ட்டு வா.”.
“படிக்கும் விஷயத்தில் தயங்காமல் எது வேண்டுமானாலும் கேளுங்க. செய்து தருகிறேன்.” “நிச்சயம் கேட்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வருகிறேன்.” “நன்றி. போய்ட்டு வாங்க.”
பிறந்தநாள் கேக் எப்படி இருக்கிறது?

பின் குறிப்பு:
வாசிப்போம் வலைத்தளத்தை அமைத்த திரு. ச. இரவிக்குமார் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவர்  வீட்டிற்கு சென்றதைத் தவிர மற்ற அனைத்தும் உண்மையாகவே எனக்கு வாசிப்போமிலிருந்து கிடைத்தவை.

Friday 19 June 2020

கொஞ்சம் கவலை, கொஞ்சம் சிரிப்பு.



வணக்கம் நண்பர்களே.

குழந்தையோட பிடிவாதம் சிலநேரம் நல்லது. சிலநேரம் கெட்டது. இது எல்லாருக்கும் தெரியுமே. ஆனா இந்தக் குழந்தையோட பிடிவாதத்த எதுல சேர்க்கிறது தெரியல. முடிஞ்சா
நீங்க கண்டுபிடிங்க.

ஒரு பாப்பா யூ.கே.ஜி. படிச்சது.  அவளோட ஸ்கூல்ல ஸ்போட்ஸ்டே வந்தது. அன்னைக்குன்னு பார்த்து அவ அம்மா அவளுக்கு நல்ல சில்க் கௌன் போட்டு அழகா மேக்கப் பண்ணி வெச்சிருந்தாங்க.
இன்னும் கொஞ்சம் மேக்கப் பண்ணிவிடவும் சாமி கும்பிடவும் அவளோட பெரியம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாங்க. அந்தப் பெரியம்மாவோட மாமியாருக்கு திதி.
சாமி கும்பிட்டு எல்லாரும் சாப்பிட்டாங்க. அந்த குட்டிப்பாப்பாக்கும் சாப்பாடு கொடுத்துட்டு, அவளை விளையாட விட்டுட்டு சமையல் அறையில அவ அம்மாவும் பெரியம்மாவும்
பேசிகிட்டு இருந்தாங்க. பெரியம்மாவோட மூனாவது பையன் ஹால்ல டீவி பார்த்துட்டு இருந்தார். பூஜையறையில ரெண்டு பெரிய குத்துவிளக்கு எரிஞ்சிட்டிருந்தது.

இந்தக் குட்டிப்பாப்பா மெதுமெதுவா பூஜையறைக்குள்ளப் போய் சாமி கும்பிடுறேன்னு தன் கௌனை குத்துவிளக்குல காட்டிடிச்சு. சில்க் கௌன் இல்லையா? பத்திக்கிச்சு. ஆனா
அப்படி பத்திக்கிட்டது தெரியாமலே அந்தப் பாப்பா ஹாலுக்கு வந்து சுவரோரமா திரும்பி விளையாடிட்டு இருந்தது.
அதுக்கு போரடிச்சதோ இல்ல ஏதோ தோணியதோ ஹால்ல இருந்த அவ அண்ணாவை கூப்பிட்டது. கூப்பிட்டக் குரலுக்கு திரும்பியதும்தான் தெரிஞ்சது அந்தப் பாப்பாக்கு தீப்பிடிச்சது.

ஐயோ! அம்மா! வாங்க பாப்பாவுக்கு தீ பிடிச்சிடிச்சுன்னு கத்திக்கிட்டே தன்ன் கையிலத் தொட்டு அணைக்கப் பார்க்க அவர் கையிலையும் கொஞ்சம் நெருப்பு.
 அவ அம்மாவும் பெரியம்மாவும் அலரிக்கிட்டு வந்து எப்படியோ கஷ்டப்பட்டுத் தீயை அணைச்சிட்டாங்க. ஆனாலும் கை கால்ல தீக்காயம் லேசா ஏற்பட்டுடிச்சு. அவ அம்மா அவளை
மடியில உட்காரவெச்சுகிட்டு அழறாங்க.
அந்தப் பாப்பாவுக்கு மனசுல என்னத் தோணிச்சுத் தெரியுமா? சே சாயங்காலம் ஸ்போட்ஸ்டேக்கு போகனுமே. இப்படி ஆய்டிச்சேன்னு யோசிச்சது. அவளோட அப்பாவும் வந்தார்.
நேரம் கடந்து சாயங்காலமாச்சு. நான் ஸ்போட்ஸ்டேக்குப் போயே ஆகனும்னு பிடிவாதம் பிடிச்சது. சமாளிக்கவே முடியல. அவளோட அப்பா அவ எது கேட்டாலும் செய்வார். அப்படித்தான்
அவளை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப்போனார்.

பிரின்சிபல்கிட்ட விஷயம் சொன்னாங்க. அவங்களும் கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்தாங்க. நான் ஸ்போட்ஸ்டேல ஓடியே தீருவேன்னு சொல்லிடிச்சு. வேற வழியில்லாம ஒரு டீல் பேசப்பட்டது.
நீ ஓட வேண்டாம். வேற ஒரு பொண்ணை ஓடவெச்சு அவ வின் பன்ற பரிசை உனக்கு தரசொல்றேன் சொன்னாங்க.
எப்படியோ பரிசு கிடைச்சா போதும்,  நான் ஸ்போட்ஸ்டேல கலந்துகிட்டா போதும்னு புரியாத வயசுல அந்த டீலுக்கு ஒத்துக்கிச்சு. அதன்படி அவ வகுப்புல படிக்கிற  ஒரு அப்பாவிப்
பொண்ணை ஓடவெச்சாங்க. மேடையில எல்லோர் முன்னாடியும்வாங்கினப் பரிசை அந்தப் பெண் இவளுக்கு  விட்டுக்கொடுத்துடிச்சு. இந்தக் குட்டிப்பாப்பாவும் சந்தோஷமா வாங்கிகிச்சு.

விட்டுக்கொடுத்து வாங்குற வெற்றி தவறுன்னு அப்போ பாவம் அதுக்குப் புரியல. நாம வாங்குற பரிசை விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு அந்த அப்பாவிப் பொண்ணுக்கும் புரியல.

இந்தப் பாப்பா நான்தான்னு உங்களுக்கு இன்னுமா புரியல?

Sunday 14 June 2020

இக்கால பெரியார் (பேராசிரியர் சுபவீரபாண்டியன்)

சாதியே சத்தமின்றி சென்றுவிடு, சொற்களால் உன்னை விரட்டியடிக்க ஓர் சமத்துவ மனிதர் இருக்கிறார்.
 மூட நம்பிக்கையே வாய்மூடிக்கொண்டு ஓடிவிடு, முழக்கமிட்டு முழக்கமிட்டே உன்னை ஒழித்துவிட ஓர் புரட்சியாளர் இருக்கிறார்.
 சாதகமே கவனமாய் இருந்துகொள், சனங்களை உன்னிடமிருந்து காப்பாற்ற ஓர் பகுத்தறிவாளர் இருக்கிறார்.
 இந்துமதமே இனியாவது விழித்துக்கொள், உன்னுள் வேரூன்றியிருக்கும் களையாவும் அகற்ற இத்தலைமுறையின் பெரியார் இருக்கிறார்.
 அந்நாளின் வீரபாண்டியன் ஆங்கில ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார். இந்நாளின் வீரபாண்டியன் சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுகிறார்.
 புலாலோ மரக்கறியோ பேதம் பாராமல் உண்ணச்சொல்லி ஏழை எளியோர்க்கும் ஈயத்தூண்டும் மாமனிதரவர்.
 உரைத்தலைப்பின் சாவி கொண்டே உள்ளத்தின் பூட்டை திறக்கும் வித்தை கற்றவர்.
 சாதியம் ஒழிய வேண்டுமெனில் காதலையும் ஓர் ஆயுதமாய் கொள் எனும் தந்தையவர்.
 கல்விக்கண் திறந்த காமராஜர், கண்டங்கள் தாண்டிப் பிறந்த நெல்சன்மண்டேலா காஞ்சிதனில் அவதரித்த அண்ணா பற்றி நம்மை தம் கல்லூரிக்கு வரவழைக்காமலே கற்பித்த பேராசிரியர் அவர்.
 போரும் குருதியும் காணும் மக்களுக்கு போரும் அமைதியும் புகட்டியவர்.
 மறைந்த பெரியாரின் கொள்கைதனை மறக்கமுடியாவண்ணம் மீண்டும் மெருகூட்டி தருபவர்.
 ஒரு நிமிட செய்தியால் பலவருடமாய் நாம் மறந்த கருத்தைத் தினம்தோறும் தேன்கலந்த மருந்தாய் பருகச்செய்பவர்.
 எழுத்தென்னும் ஒளிக்கொண்டு குடிமக்களின் கூம்பிய சிந்தனை மலரை மலரச்செய்யும் எழுத்தாளரவர்.
 சிரிக்கவைக்கும்படி பேசினாலும் சிரித்துக்கொண்டே பேசினாலும் சிந்திக்க தூண்டும் கருத்தினை சிறப்புடன் பேசும் பேச்சாளரவர்.
 உலக விடுதலை போராளிகளின் உன்னத நினைவினை உள்ளம் உருகும்படி உரையாற்றிய தமிழரவர்.
 பண்பாட்டை மறந்து முறன்பாட்டை நாடுவோர்க்கு சுதந்திரத்தின் உண்மையை சுட்டிக்காட்டியவர்.
 அறிவியல் ஆன்மீகத்தால் அவனியின் நிலையை ஆதாரப்பூர்வமாய் சொன்னவரே, நுகர்வனவற்றை நுகர்வோம். துறப்பனவற்றை துறப்போம்.
 வானியல் சோதிட உண்மைதனை உடைத்து உறக்க பேசியவரே, மனிதநேய புனிதத்தையும் மனித சடங்கின் தீட்டையும் யாம் மறவோம்.
சுயமரியாதை விரும்பியே, தொடுவானம் தூரமில்லை என்றறிந்தோம்.
 ஒற்றைச்சிறகில் பறக்க நினைக்கும் சமூகத்தை புரிந்தோம்.
 படிப்பே நாடி துடிப்பு என்றுணர்ந்தோம்.
மனிதருள் கருப்பு வெள்ளை நிறம் பிரியோம்.
 பொதுநலனே தன்நலனாய் கொள்ளும் தலைவரே,
 நின் பொதுச்சேவையின் தேவை நீளட்டும்.
நின் கைகள் பல நூறு புத்தகங்கள் எழுதட்டும்.
 நின் திருவாய்மொழியால் பல ஆயிரம் பேச்சுக்கள் ஒலிக்கட்டும்.
இக்கால பெரியாரே, நீவீர் வாழிய வாழியவே.

பின் குறிப்பு:
இந்த வாழ்த்துக்கவிதை சுபவீரபாண்டியன் ஐயா அவர்களின் இதுதான் ராமராஜியம் என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றபோது எழுதி மேடையில் படித்துக்காட்டியது.


Saturday 13 June 2020

குடும்பத்தின் தூண்.

வட இந்தியாவில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை மிகவும் பிரபலம். அந்த பண்டிகையன்று ஆண்கள் கைகளில் பெண்கள் ராக்கி என்ற பாசக்கையிறைக்கட்டி அண்ணனாக ஏற்றுக்கொள்வர். அதன் அர்த்தம்  எந்த சூழ்நிலையிலும் அந்த ஆண்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது.
அப்படி எந்த ராக்கிக்கயிறும் கட்டாமல், பெண்களுக்கு பாதுகாப்பையும் ஆண்களுக்கு நல்ல வழிக்காட்டுதலையும் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
எழுத்துலகில் தனித்தன்மை பெற்றவர். கவிதை, கதை, கட்டுரை, நாவல், நாடகம், சொற்பொழிவு என்று எல்லா வகையிலும் தன் எழுத்துத்திறனை காண்பித்தது மட்டுமன்றி தான் நினைக்கும் கருத்துக்களை எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படுத்தியவர். அதற்கு சிறந்த உதாரணம், அவர் தன் தலைவனாக ஏற்றுக்கொண்ட பெரியாரையே மறுத்து தன் கருத்தில் உறுதியாக இருந்தது.
அண்ணாவின் நூல்களில் பெண்களுக்கென்று ஒரு தனி இடமிருக்கும். அக்காலத்தில் பெண்களுக்காக தன் எழுத்தின்மூலம் குரல் கொடுத்தவர்.
ஒரு பெண் விலைமாதுவாகிவிட்டால் அவளை ‘விலைமாது’ என்று இந்த உலகம் தூற்றுகிறது. கல் எறிந்தும், தவறான வசவுகளைப் பேசியும் அவர்களை துன்புறுத்துகிறது. எத்தனையோ பெண்கள் இந்த இழிநிலையையும் சித்திரவதையையும் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
பரிசுத்தத்தைப்பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசும் இந்தச் சமுதாயம்  பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்ட பெண்களின் பின்னணியில் இருக்கும் ஆண்களைப்பற்றி பேசுவதே இல்லை.
எத்தனையோ பெண்கள் தன் கணவனாலேயே இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய கணவனும், கணவானுமான ஒருவனின் முகத்திரையை கிழித்து உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கும் நூல்தான் ரங்கோன் ராதா.
1947இல் திராவிட நாடு என்ற இதழில் வெளிவந்தது. பின்பு 1953 ல் சென்னையிலுள்ள பாரி நிலையம் நூலாக வெளியிட்டது. 2002 ல் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது.
1956ஆம் ஆண்டில் காசிலிங்கம் இயக்கத்தில், மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில், கலைஞரின் கதைவசனத்தில்,  சிவாஜிகணேசன் மற்றும் பானுமதி நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
இந்த நாவலின் கதாபாத்திரங்களான நாகசுந்தரமும் பரந்தாமனும் நண்பர்கள். நாகசுந்தரத்தின் பக்கத்து வீட்டில் ரங்கோனிலிருந்து ஒரு குடும்பம் குடிவருகிறார்கள். முதலில் அவர்களைப்பற்றி தெரியாத நாகசுந்தரம் ரங்கோனிலிருந்து வந்திருக்கும் பேரழகி ராதாவைப்பற்றி பரந்தாமனிடம் சொல்கிறான்.
பரந்தாமனுக்கும் ராதாவின்மேல் ஈர்ப்பு வருகிறது. ராதாவை பார்க்கத்துடிக்கிறான். அதைப்பற்றி நாகசுந்தரத்திடம் பேச,  அப்போது நாகசுந்தரம் ராதா தன் தங்கை என்றும், ராதாவின் தாய்தான் அவனுக்கும் தாய் என்றும், அவர்களை தாய் தங்கை என்று வெளியே சொல்லமுடியாதபடி அவன் தாய் தவறான பாதையில் போய்விட்ட பரிதாபக்கதையையும் சொல்கிறான்.
"உன் தாய் 20 வருடங்களுக்கு முன்னே இறந்துவிட்டதாக சொன்னாயே?" என்று பரந்தாமன் கேட்க, "ஆம். அவள் இறந்ததும் உண்மை, இப்போது இருப்பதும் உண்மை" என்று அந்த கொடுமையான கதையைச் சொல்கிறான்.
அது ரொம்பவும் கொடுமையான பகுதிதான். கல்லையும் கரைக்கும் பகுதி. ஆண்களைக்கூட அழவைக்கும் பகுதி. கணவனின் அரக்கத்தனத்தால் முழுவதுமாய் உடைந்துவிட்ட பேதை,  தானும் ஒரு கொடுமையை செய்துவிட்டு, தன் ஆசைக்குழந்தைக்காக தன்னைத்தானே சாகடித்துக்கொண்ட கொடுமையான சாவு அது!  அண்ணாவின் அற்புதமான எழுத்துக்கள் அவை. அதை நான் எழுதுவதைவிட நீங்களே படித்துப்பாருங்கள்.
கோட்டையூர் தர்மலிங்கமுதலியார் வீரராகவமுதலியாரின் பெரிய பெண்ணான ரங்கத்தை மணந்துகொள்கிறார்.
அவளை மணக்கும் சமயத்தில் வீரராகவமுதலியாருக்கு சொத்து எதுவும் இல்லாததால் ரங்கத்தை அன்பாகவே பார்த்துக்கொள்கிறார். சமூகத்தில் தர்மலிங்கம் அன்பான வள்ளல். மரியாதைக்குரியவர்.
சில வருடங்கள் இருவரும் இன்பமாக வாழ்கிறார்கள். அதன்பின் கேஸ்  போட்டிருந்த வீரராகவமுதலியாரின் சொத்துக்கள் அவர்பக்கம் தீர்ப்பாகிவிட தர்மலிங்கம் அவரின் இரண்டாவது பெண்ணையும் மணந்து மீதிப்பாதி சொத்தையும் அடைய திட்டமிடுகிறார்.
அதைத் தெரிந்துகொண்டு கண்டித்த ரங்கத்திற்கு பேய்பிடித்துவிட்டதாக ஊருக்குள் பரப்பிவிடுகிறார். அனைவரும் அதை நம்பி அவளை செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதது.
இதில் இன்னும் வருந்தவைக்கும் விஷயம் என்னவென்றால் ரங்கம் தன் மகள்போல் வளர்த்த அவள் தங்கை தங்கமும் அந்த திருமணத்தில் ஆசைக்கொண்டு ரங்கத்திற்கு எதிராக சதி செய்கிறாள்.
அந்த கொடுமைகளை படிக்கும்போது போலிப்பூசாரிகள் மற்றும்  மந்திரவாதிகளின் சேட்டைகள்  மட்டுமல்லாமல், பொதுவாக மக்கள்  பேய்பிடித்திருக்கிறது என்று கிளப்பிவிடும் வதந்திக்கு பின் இப்படி ஒரு கதை  இருந்தாலும் இருக்கும் என்பது தெரிகிறது.
தர்மலிங்கம் ரங்கத்தின் தங்கையான தங்கத்தை மணக்கிறார்.
சில மாதங்கள் கழித்து ரங்கத்திற்கு நாகசுந்தரம் பிறக்கிறான். அவன் பிறப்பின் பின்னும் சில கண்ணீர் கதைகள் இருக்கிறது.
நாகசுந்தரம் பிறந்து ஒரு வருடம் கழித்து ரங்கம் தன் கணவனைவிட்டு பிரிகிறாள். இல்லை கொடுமையான முறையில் பிரிக்கப்பட்டாள்.
பிரிந்தவள் எப்படி தவறான பாதைக்கு சென்றாள்? எப்படி ரங்கோன் சென்றாள்? ராதாவின் தந்தை யார்? ரங்கோன் சென்றபின் ரங்கம் சந்தோஷமாகதான் இருந்தாளா?
தன் தந்தையான தர்மலிங்கத்தை நாகசுந்தரம் என்ன செய்தான்? இந்த துயரக்கதையை கேட்டபின் பரந்தாமன் ராதாவை ஏற்றுக்கொள்வானா? இதை தெரிந்துக்கொள்ள இந்நாவலைப் படியுங்கள்.
ஒரு குடும்பத்தின் தூண் பெண்கள்தான். அந்த தூண் சாய்ந்துவிட்டால் குடும்பம் சிதறி சீரழிந்து போய்விடும்.
தர்மலிங்கம் போன்ற சில ஆண்கள் அந்த தூணை அவர்களே சாய்த்துவிட்டு பெண்கள்மேல் பழியைச் சுமத்திவிடுகிறார்கள்.
பெயரில் தர்மத்தை வைத்துக்கொண்டு அதர்மங்களை மட்டும் செய்துவரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையல்ல.  அவர்கள் வாழ்ந்த,  வாழ்கின்ற, இனியும் வாழப்போகிற நிஜங்கள்.

Friday 12 June 2020

குயவனிடம்வாங்கிய குண்டு பல்ப்.



வணக்கம் நண்பர்களே.
இன்னைக்கு சிரிக்கலாமா? உங்களை தயார் செய்துக்கோங்க சிரிக்க.
நான் முன்னாடியே சொன்னேனே சொப்புசாமா விளையாடினேன்னு. ஆமா எனக்கு மண் பாண்டங்கள் ரொம்ப பிடிக்கும் விளையாட.
சீக்கிரமா உடைச்சிட்டு புதுசு புதுசா வாங்கிக்கலாம். பசிச்சா கொஞ்சூண்டு சாப்பிட்டு அம்மாகிட்ட அடி வாங்கலாம். இப்படி சின்ன வயசுல நினைச்சது. அப்புறம் நல்ல பிள்ளையா சாப்பிடுவதை விட்டுட்டேன். நிறைய பெயிண்ட் கலக்குறாங்களா அதான் சுவை பிடிக்கல போல.
விளையாடுவதை விடல. விடவும் மாட்டேன்.   2009லருந்து 2012வரை     நான் ஆஹா வானொலியில வானொலி தொகுப்பாளரா வேலை செஞ்சிட்டு இருந்தேன்.
ஒருநாள்   நானும் என் மாமா பெண்ணும் கடைக்கு போனோம். எங்க வீட்டுலருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு சட்டிப்பாணை கடை இருக்கு. எங்களுக்கு தெரிஞ்சக்கடை. எப்படி தெரியும்னு கடைசியா சொல்றேன்.
வேற எதையோ வாங்கதான் போனோம். அந்தக்கட வழியாப்போனதால ஆசையா இருந்தது. கையில 50 ரூபாய்க்கும் மேல இருந்தது.
“உமா வாடி. சட்டிப்பாண வாங்கலாம்.” “அக்கா, நீ என்ன சின்னக்குழந்தையா? அதெல்லாம் வேணாம் வா போகலாம்”
“இல்ல எனக்கு வாங்கனும் வாடி.” பிடிவாதமா அவளை கூட்டிட்டுப்போனேன்.  இருவரும் கடைக்குள் போனோம். அந்த கடைக்காரர் எங்களை அன்பா வரவேற்று நலம் விசாரிச்சாங்க.
நான் ஒரு இரண்டு மூன்று சட்டிப்பாணைதான்  எடுத்தேன். அவங்க இன்னும் கொஞ்சம் எடுத்துக்க சொன்னாங்க. உண்டியல் கூட கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு எங்க அதிகமா காசு கேக்கப்போறாங்களோன்னு.
எல்லாம் முடிச்சுட்டு எவ்வளவுன்னு கேட்கும்போது அவர் சொன்னாரே ஒரு பதில். பரவாயில்லமா நீ சும்மா எடுத்துக்கோன்னு.
ஹா ஹா வானத்துல பறந்தேன். உமாக்கும் |ஆச்சரியமா இருந்தது. சந்தோஷமா வீட்டுக்கு வந்தேன். இதோட விட்டிருந்தா எனக்கு என்ன மதிப்பு இருக்கு?
உமா வீடும் எங்க வீடும் ஒரு தெரு தள்ளிதான். அதுனால நான் எங்க போகனும்னாலும் அவளைத்தான் கூப்பிடுவேன். அப்படித்தான் இன்னொருநாள்   அவ வந்தா.
எனக்கு புது சட்டிப்பாண வாங்க ஆசையா இருந்தது. கையில காசு இல்ல. அதான் எங்களுக்கு தெரிஞ்சக்கடைல இலவசமா தரப்போறாங்களேன்னு தைரியமா கிளம்பிட்டேன்.
சும்மா கையில வெச்சிக்க எங்க அம்மாக்கிட்ட ஒரு 10 ரூபா வாங்கிட்டு போனேன். உமாக்கு இது முன்னாடியே தெரிஞ்சதால அவளும் என்னைப்போல அமைதியாதான் வந்தா.
மறுபடியும் ஒரு அன்பான வரவேற்பு. போனமுறைதான் கம்மியா எடுத்துட்டேன். இந்த முறை நிறைய எடுக்கனும்னு எடுத்துக்குட்டேன்.
அதே போல பில்லிங் நேரம். அவர் இப்பவும் சொன்னாரே ஒரு பதில்.  80 ரூபாய்மா.
எங்களுக்கு பயங்கற அதிர்ச்சி. எப்படி சமாளிக்கிறது? தயங்கி தயங்கி என்கிட்ட 10 ரூபாய்தான் இருக்கு சொன்னேன்.
இல்லம்மா இப்போ விலை அதிகமாகிடிச்சு சொன்னாரு.
ஆசையா வாங்கின எல்லாத்தையும் வெச்சிட்டு ஒரு பாண ஒரு சட்டி மட்டும் எடுத்துக்குட்டேன்.
வழியெல்லாம் எனக்கு ஒரே யோசனை. அன்னைக்கு சும்மா கொடுத்தாங்களேன்னு. உமாகிட்ட சொன்னபோது, “ஒருநாள் கொடுப்பாங்க எல்லாநாளும் அப்படியா?” உங்களை நம்பி வந்தேனேன்னு ஒரே கேலி.
வீட்டுக்கு வந்து எல்லார்கிட்டையும் நடந்ததை சொன்னோம். அப்போ எங்க அப்பா நிதானமா கொடுத்தாரே எனக்கு ஒரு அதிர்ச்சி.
நான் அவனுக்கு துணி தைத்துக்கொடுத்த காசுல மீதி தரனும் அதான் அன்னைக்கு கொடுத்துருக்கான். திரும்பப்போனா எப்படி தருவான்னு கேட்டார்.
இப்போ புரிஞ்சிருக்குமே எப்படி எங்களுக்கு தெரிஞ்சக்கடைன்னு?
எங்க அப்பா தையல்காரர். அந்தக்கடைக்காரர் அவரோட நண்பன். வெளிய சட்டிப்பாணை கடை இருக்கும். உள்ள தையல் கடை இருக்கும். எங்க அப்பா அங்க கொஞ்சநாள் வேலை செஞ்சாரு.
அவர் வேலைல கெட்டிக்காரர். எல்லோருக்கும் குரு போல. அதுனால அந்தக்கடைல எங்க அப்பாவுக்கு ஒரு தனி மதிப்பு.
எனக்காகவே ஆர்டர் கொடுத்து நிறைய சொப்பு செய்ய சொன்னாரு எங்க அப்பா.
அவங்களும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்து தந்தாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த நட்பு.
அந்த நட்பு தந்த தைரியம்தான் என்னை குயவன் கிட்ட குண்டு பல்ப் வாங்க வெச்சிடிச்சு.
செம்ம பல்ப் போங்க. இந்த விஷயத்த தொகுப்பாளர் ரோகினிகிட்ட சொல்ல. அவங்க அப்படிப்போடு ஷோல இதை ஒரு தலைப்பாக்கி இப்படி நீங்களும் யார்கிட்டையாவது பல்ப் வாங்கியிருந்தா கால் பன்னுங்கன்னு சொல்லி ஒருமணி நேர ஷோவ ஓட்டிட்டாங்க.
ஆரம்பத்துல என் பெயர் சொல்லல. பொதுவாதான் சொன்னாங்க. ஹப்பா. என் மானம் தப்பிச்சுடிச்சுன்னு சந்தோஷப்பட்டேன். ஆனா அவங்களும் வெச்சாங்களே ஒரு டுவிஸ்ட். ஷோவை  முடிக்கும்போது  இப்படி அசிங்கப்பட்டது வேற யாருமில்ல உங்க தொகுப்பாளர் அபினயாதான்னு சொல்லி அட்டகாசமா என் மானத்தை வாங்கி ஷோவை முடிச்சிட்டாங்க.
எப்படி?

Thursday 11 June 2020

மூன்று மேடைகளின் முன்னூறு குமுறல்கள்.

பல வருடங்களுக்குப் பின் இலக்கியா,  விலாசினி,  கலையரசி ஆகிய மூவரும் முகநூல்வழியே சந்தித்து பேசிப்பழகி, தங்களின் கடந்த காலத்தை பற்றியும் இப்போதைய நிலைப்பற்றியும் பேச முடிவு செய்து அண்ணா பூங்காவில் கூட்டம் கூட ஒருநாளை தேர்வு செய்தனர்.
அந்த நாளன்று மாலை 5 மணியளவில் இலக்கியா அண்ணா பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள். குளத்தின் பக்கத்தில் அமர்ந்து அந்த இயற்கை சூழலை ரசிக்கத் தொடங்கினாள். அண்ணா பூங்காவில் குளத்தில் நீர் சற்றே வற்றியிருந்தது.
ஏதோ நானாவது மீதம் இருக்கிறேன் என்று எடுத்துக்காட்ட இருக்கும் மரம் செடி கொடிகளிலிருந்து வந்த காற்றும் பறவைகளின் கீதங்களும் இலக்கியாவின் இதயத்தை களைப்பாற செய்து கொண்டிருந்தது. இந்த விலாசினிக்கும் கலையரசிக்கும் நேரம் என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்று மனதில் திட்டிக்கொண்டிருந்தாள்.
 சிறிது நேரத்தில் விலாசினியும் கலையரசியும் ஒன்றாக கைக்கோர்த்தபடி வந்து சேர்ந்தனர்.
 ”இனி எந்த காலத்திலும் உங்களை பிரிக்கவே முடியாது போலிருக்கிறதே?” என்றாள் இலக்கியா.
 ”கேலி செய்யாதே இலக்கியா, இது மனிதர்கள் எங்களுக்கு தந்த வரமான  சாபம்.”  என்றாள் விலாசினி.
”சரி.   சரி.  அமருங்கள்.  ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.”  என்று இலக்கியா அவர்களுக்காக தான் கொண்டு வந்ததை எடுத்துவைத்தாள். ”தயாராக வந்திருக்கிறாயே?” என்றாள் கலையரசி.
”உன்னைப்போல காரியத்திற்காக தானம் செய்பவர்களை அங்கீகரிப்பவளா  நான்? விருந்தோம்பல் பற்றியும் பகிர்ந்து உண்ணுதல் பற்றியும் என் முன்னோர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.”
”அவளே மனம் நொந்து போய் இருக்கிறாள் ஏனடி அவளை வம்பிழுக்கிறாய்?” என்றாள் விலாசினி. ”நாம் இங்கு கூடியிருப்பதே நம்முடைய வம்புகளை பேசத்தானே?” என்றாள் இலக்கியா.
 ”அதுசரி உன் வாழ்க்கை எப்படி போகிறது? ஆளே மாறிவிட்டாயே?”  ”என்ன செய்வது விலாசினி? முன்பெல்லாம் நிறைய இலக்கியவாதிகள் என்னை காண வருவார்கள். நேரம் பார்க்காமல் நாள் கணக்கில் கூட அவர்கள் சொற்களால் என்னை அலங்கரிப்பார்கள். அந்த கூட்டங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் வருவார்கள்.
  இப்பொழுது பெரியவர்களை மட்டும்தான் பெரும்பாலும் காண முடிகிறது. அந்தக்காலத்து இலக்கியத்தை ரசித்து ருசித்து படித்தவர்கள்தான் இந்தக்கால இளைஞர்களுக்கு இலக்கியத்தை ஊட்டிவிடுகிறார்கள்.”
  ”உன்னை நான் நிறைய சமூகவலைத்தளத்தில் பார்க்கிறேனே? மறுவாசிப்பு,  ஆய்வுப்பணிகள், இலக்கிய விவாதங்கள்,கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், போட்டிகள், புத்தக வெளியீடு, ஒலி மற்றும் ஒளி குறுந்தகடுகள் வெளியீடு, இலக்கிய சொற்பொழிவுகள்,   இலக்கிய பேரணி இப்படியெல்லாம் நடப்பதாக தெரிகிறதே?” என்றாள் கலையரசி.
”உண்மைதான் நான் இப்பொழுதும் அங்கீகரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எளிய நடையில் இலக்கியத்தை இளைஞர்களுக்கு அளிக்கும் முயற்சியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இளைஞர்களும் அவர்களுக்கு ஏற்ற நடையில் இலக்கியத்தை எழுதி புதுமுகங்களாக என்னைக் காண வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு பணிகளும் நடக்கிறது. இருந்தாலும் உன் ஆட்களாலும் விலாசினியின் ஆட்களாலும் எனக்கு நிறைய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. உன் ஆட்கள் இலக்கிய நிகழ்வுகளை கூட விலைக்கு வாங்கி வியாபாரமாக்கிவிடுகிறார்கள். விலாசினி ஆட்களால் தரமான இலக்கியங்கள் தரமுடிவதில்லை. நாவல்களையும் நாடகங்களையும் திரைப்படமாக்குவது குறைந்துவிட்டது. அதனால் நல்ல படைப்புகள் எல்லோருக்கும் போய் சேருவதில்லை.”
 ”மாணவர்களை பாட புத்தகம் படிக்கவைக்கவே ஆசிரியர்கள் பெரும்பாடுபடுகிறார்கள் பின் எப்படி அவர்களால் இலக்கியத்தை பயிலச்செய்ய முடியும்?” விலாசினி கலையரசியை கேலியாய் பார்த்தபடி கூறினாள். ”நூலகங்களில் கூட புத்தகங்களை பெரும்பாலும் கொடுப்பதில்லை போலும்.  எங்கே புத்தகம் படித்து கிழிந்துவிடப்போகிறது என்று உள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள்.” என்றாள் கலையரசி.
 ”ஆமாம் ஒருசில புத்தகங்களைத்தான் கொடுத்தனுப்புகிறார்கள். அதுவும் படிப்பவர்கள் படித்துமுடித்த அல்லது படிக்கமுடியாத புத்தகங்கள். புத்தகங்கள் கிழிந்து பின் புதுசாக வரவரத்தானே புத்தக கடைக்காரர்களும் பிழைப்பார்கள். எத்தனை புத்தகக்கடைகள் வைக்கப்பட்டு நடத்தமுடியாமல் எடுக்கப்படுகிறது தெரியுமா?” இலக்கியா வருத்தத்துடன் சொல்ல விலாசினியும் கலையரசியும் அதை ஆமோதித்தனர்.
”அது சரி விலாசினி, உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?” ”தெரிந்துகொண்டே கேட்கிறாயே இது நியாயமா இலக்கியா?” ”தெரியும் தெரியும் இருந்தாலும் உன் வாயால் சொன்னால் இன்னும் இனிமையாக இருக்கும்.” என்று விஷமமாய் புன்னகைத்தாள்.
   ”அன்றைய சினிமா கலைஞர்கள் அவர்கள் நடித்ததையோ அல்லது அவர்களுக்கு முன்னாள் கலைஞர்கள்,  சமகால கலைஞர்கள் நடித்து பேசிய நீண்ட செந்தமிழ் வசனங்களை பேசும்போது எனக்கும் அவர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் இப்போது வரும் வசனங்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரிவதில்லை.
 யாரோ ஒரு சிலர்தான் நல்ல வசனங்களை எழுதுகிறார்கள். இப்போது வாழும் கலைஞர்கள் அவர்களின் கடந்த காலத்தையும் அவர்களோடு வாழ்ந்தவர்களை பற்றியும் பேசும்போது பழைய ஞாபகங்களை மலரச்செய்கிறார்கள். கண்ணீர் வருகிறது.
 கலையில்  திறன்மிகுந்தவர்கள் மட்டுமல்ல நல்ல குணவான்களும் வாழ்ந்தார்கள். நல்லவேளை அந்தக்கால குணவான்களுள் ஒரு சிலரையாவது இன்னும் சுமக்கும் பாக்கியம் இருக்கிறது.  அப்போதைய திரைப்படங்களில் காதல் கொஞ்சம் கம்மி, கருத்து கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்போதைய படங்களில் காதல் கொஞ்சம் தூக்கல், கருத்து கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.“
விலாசினி பேசுவதை கேட்டுக்கொண்டே இலக்கியா ஒரு புரியாத புதிய பாடலை முணுமுணுத்தாள். ”பாடாதே இலக்கியா, தயவு செய்து புதுப்பாடலை பாடாதே. புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. காதில் இரும்புக் கம்பியை காய்ச்சு சுடுவதை போல உள்ளது.
 அந்தக்கால பழைய பாடல்களை கேட்டுப்பார் எத்தனை இனிமையாக உள்ளது. காதில் தேன் வந்து பாய்கிறது. காதல், தத்துவம், காதலன் காதலியின் அழகு, தாய்மை, தாலாட்டு,  தங்கை பாசம், பண்டிகைப் பாடல்கள், குத்துப்பாடல்கள் எதுவாக இருப்பினும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.
  ராகம், தாளம், குரல், வரிகள் இதில் எதையாவது குறை சொல்லமுடியுமா? முக்கியமாக இந்த பாடல்களின் அர்த்தம் குழந்தைகளுக்குப் புரியாது. பள்ளி மாணவர்களால் பாடவும் முடியாது. ஆனால் இப்போதைய பாடல்களை ஒரு  வயது குழந்தை பாடுகிறது. பெண்ணை பற்றிய வருணணைகள் இலக்கியத்தில் உள்ளது போலவே அந்தக்கால பாடல்களில் இருக்கும். மறைமுகமாக இயற்கையோடு ஒப்பிட்டுத்தான் வர்ணிப்பார்கள்.“
 ”குத்துவிளக்கு, குத்துவிளக்கு சத்தியமா நா குடும்ப குத்துவிளக்கு. அச்சம் விலக்கு, வெக்கம் விலக்கு ஆசை தீர அப்பளமா என்ன நொறுக்கு.” கலையரசி பாடினாள்.
 “இந்த பாடல் ஒளிர்ந்த திரையில்தான், எந்த கலைஞனும் அவளை சிலைவடிப்பான்,  எந்த புலவனும் அவளை பாட்டில் வைப்பான், அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும். அவள் நினைவாலே என் காலம் செல்லும். இந்த அழகிய பாடலும் ஒளிர்ந்தது.
 என்னை எரிச்சலூட்டும் பாடல் எது தெரியுமா? ராணி நா மகா ராணி நீதான் என் அடிம வாயா என்ன பல்லக்குல தூக்கிப்போ, ராணி நா மகா ராணி என் தேவை புதும வாயா உன் தேகத்த நீ காட்டிப்போ, காதல் இருக்கும் வரையில கண்ணோடு காமம் இருக்கும் உலகில, தேகம் இருக்கும் வரையில தீராத தாகம் இருக்கும் மனதுல.“
“சீ என்னடி விலாசினி இது பாட்டு இவ்வளவு அசிங்கமா?” என்றாள் இலக்கியா முகம்சுளித்தபடி.
  “இந்த படம் வந்த புதிதில் நான் எவ்வளவு துன்பப்பட்டிருப்பேன் திரும்ப திரும்ப கேட்டு கேட்டு. இதே போன்ற காதலி  காதலனை காதலிக்க அழைக்கும் பாடல்தான் இதை கேள்.
 அழகே வா, அருகே வா, அலையே வா, தலைவா வா, அழகே வா  வா வா, அருகே வா. ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய், , என்ன தேடுகின்றாய், எங்கே ஓடுகின்றாய்,  உந்தன் தேவைகளை மூடுகின்றாய்.
  இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும், அந்த ஓடத்தில் உலகம் கூடிவரும், நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தா நாம் பிறப்பதில்லை.“
விலாசினி கண்ணதாசன் வரிகளை ராகத்துடன் பாட மூவரின் கண்களிலும் காதல் மயக்கம் தெரிந்தது. மூவரும் தங்களை மறந்து மோனநிலையில் அமர்ந்திருந்தனர்.
   தன்னை மீட்டுக்கொண்ட விலாசினி பேசுவதை தொடர்ந்தாள். “பெண்ணை பெண்ணாக மதிக்க வேண்டிய மனிதர்கள் வாடி வாடி நாட்டுக்கட்ட, திம்சுக்கட்ட இப்படி உயிருடன் இருக்கும்போதே கட்டையாக்கிவிட்டார்கள். அன்பே வா, நிலவு ஒரு பெண்ணாகி, பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, முழுமதி அவளது முகமாகும் இப்படி கேட்க எவ்வளவு சுகமாகவும் சுவையாகவும் இருக்கிறது.”
“நீ சொல்வது உண்மைதான் விலாசினி. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலில் பொன்காட்டும் நிறம்காட்டி பூக்காட்டும் விழிகாட்டி, பண்காட்டும் மொழிகாட்டி பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி, முகில்காட்டும் குழல்காட்டி, நன்பாட்டு பொருள்நயம்போல் நகைக்கின்றாய் நகைக்கின்றாய், பண்பாட்டு பெருமையெலாம் பயன்காட்டி நகைக்கின்றாய் என்றார். அதுமட்டுமல்ல மணிபல்லவம் என்ற நாவலில் ஒரு பெண் பந்து விளையாடும் அழகை அவர் வர்ணித்திருக்கிறார்.” என்றாள் இலக்கியா.
  “அது என்ன?” என்றாள் கலையரசி ஆர்வத்துடன்.”சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர,  இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக் கொந்தலகப் பந்துமிசை முல்லைமலர், தந்தமன மண்டியெழ முந்திவருப் பந்துபயில் நங்கை இவள் கொண்ட எழில் நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ.”
 “அட! அருமையாக இருக்கிறதே” என்றாள் விலாசினி.” “ஆமாம் விலாசினி படத்தின் பெயர்களை பாரு? அது அதைவிட மோசம்.” என்றாள் கலையரசி.
 “ஆமாம் அப்போதெல்லாம் படத்தின் பெயரை கருத்து சார்ந்த பெயர், கதாநாயகன் கதாநாயகியின் பெயர், ஊர் பெயர், கவிதைநடையில் பெயர் என்று வைப்பார்கள். இப்பொழுது வைக்கும் பெயர்களுக்கும் படத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.“ ”போதும் விலாசினி, சீக்கிரம் போகலாம் வீட்டிற்கு இல்லையென்றால் நாடகம் முடிந்துவிடும்.” என்றாள் கலையரசி.
 “வாயை மூடு. முன்பெல்லாம் நாடக கொட்டகைகளில் பார்க்கப்பட்ட நாடகங்களெல்லாம் வரலாற்று நாடகங்கள். இன்றும் இதயத்தில் நிற்கிறது. உன் ஆட்கள் தொலைக்காட்சியில் எப்போது நாடகங்கள் போட ஆரம்பித்தார்களோ நாடகத்தின் மதிப்பே போய்விட்டது. வீட்டில் பெண்கள் நாடகம் பார்த்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள் ஏதோ அவர்கள் வீட்டிலேயே இழப்பு வந்துவிட்டதைப்போல.
 ஆண்களும் கண்ணீர் வடிக்கிறார்கள் நாடகத்தை பார்த்து அல்ல. நாடகம் பார்ப்பதால் நம்மை பார்க்காமல் இருக்கிறார்களே என்று. குழந்தைகள் பசியால் அழுதாலும் விளம்பரம் வந்தால்தான் சமாதானம் செய்கிறார்கள். எந்தப்பெண் எப்போது எப்படி வில்லியாய் மாறுவாளோ தெரியாது. அது என்ன எல்லா நாடகங்களிலும் பெண்களே வில்லி. பெண்களே தெய்வம்?
 சில வீடுகளில் ஆண், பெண்,  குழந்தைகள் என்று குடும்பத்தோடு நாடகம் பார்க்கிறார்கள். பெண்களை கவர உன் ஆட்களுக்கு வேறு நல்ல வழியே கிடைக்கவில்லையா? என் அழகே கெட்டுவிட்டது.”
விலாசினி சற்றே கோபமாய் குரலை உயர்த்திப்பேச கலையரசியின் முகம் சுருங்கிவிட்டது.
 "அவள் சொல்வது உண்மைதான் கலையரசி,   இது போதாதென்று யதார்த்த நிகழ்ச்சிகள்  என்று புதிய புதிய நிகழ்ச்சிகளை கண்டுபிடித்து பொழுதுபோக்கின் போர்வையில் வியாபாரம் செய்கிறார்கள். பெரியவர் முதல் குழந்தைகள் வரை அந்த நிகழ்ச்சிகள் முடக்கிவிடுகிறது.
 ஒரு தொலைக்காட்சியில் நல்ல  விவாதம் போகிறது, இன்னொரு தொலைக்காட்சியில் யதார்த்த நிகழ்ச்சிகள்  ஒளிபரப்பபடுகிறது என்றால் விவாதத்தை பார்ப்பவர் சிலராகவும், யதார்த்த நிகழ்ச்சிகளைப்  பார்ப்பவர்கள் பலராகவும் இருக்கிறார்கள்.“ என்றாள் இலக்கியா.
“எத்தனையோ பேருக்கு விலாசம் அளித்திருக்கிறேன். சில நேரங்களில் என்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் நிறைய பேர் விலாசம் இழந்தும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெரியவர்கள் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் வார்த்தைகளால் விலாசிக்கொண்டிருக்கிறார்கள். வரவர இன்றைய சினிமாவில் பெண்கள் ஆதிவாசியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆபாச உடைகள், ஆபாச வார்த்தைகள் ஆபாச காட்சிகள், தரம்கெட்ட வருணணைகள் கொண்டு சினிமாவை முழுவதும் வியாபாரமாக்கிவிட்டார்கள்.
 நிறைய படங்கள் வழக்கை சந்தித்தபின்தான் வெளிவருகிறது. முன்பெல்லாம் 100 நாட்கள்மேல் சினிமா அரங்கில் நிறைய கூட்டம் வந்து அந்த படங்களுக்கு விழா கொண்டாட என்னைக் காண வருவார்கள். அவர்களின் பாதங்களை  மலர்களால் அர்ச்சிப்பேன். ஆனால் இப்பொழுது 50 நாட்கள் கூட சினிமா அரங்கில் கூட்டமில்லை.  எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கலையரசியின் ஆட்கள்தான்.“
“அதிகம் பேசாதே விலாசினி. உன் ஆட்கள் அவர்கள் கலைத்துறையில் இல்லாமல் அரசியலுக்கு வருகிறார்கள். விமர்சிக்கிறார்கள். நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்போல் கட்சிகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”
“அரசியலுக்கு வருவது தப்பில்லை கலையரசி.  ஆனால் நல்லதை செய்ய வேண்டும். அந்தக்கால அரசியல் தலைவர்களும் சினிமாவில் இருந்தவர்கள்தான் ஆனால் நல்லவர்களாக இருந்தார்கள். சொந்த வாழ்க்கையில் ஆயிரம் இடையூறுகள் இருந்தாலும் பொதுவாழ்க்கையில் பதவிக்காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் நல்லதைச் செய்தவர்களும் இருந்தார்கள்.” என்றாள் இலக்கியா.
 ”பின்னே?  நானும் பல நல்ல தலைவர்களால் மிதிப்பட்டவள்தான். அவர்கள் பேசும்போதும் அவர்களின் குணத்தைப் பற்றி மற்றவர் பேசும்போதும் உயிர்பெற்று அவர்களின் பாதங்களில் விழுந்து  வணங்கி மாலை அணிவிக்க துடிப்பேன். ஆனால் இப்பொழுது பேசுபவர்களை, என்னை இரண்டாய் பிளந்து அவர்களை என்னுள் விழுங்கிவிட துடிக்கிறேன்.”
“கலையரசி, அப்போது நீ ஒத்துக்கொள்கிறாய் அல்லவா, அரசியல் சாக்கடையென்று?”  விலாசினி கேலி பேசினாள்.
 “அரசியலை சாக்கடை என்கிறார்கள் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைப்பாடிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் மிதிபடும் பாவத்திற்கு என்னை கற்கள் வீசியும், சோடாபாட்டில் எரிந்தும், தக்காளி, முட்டை எரிந்தும் துன்புறுத்துகிறார்கள். அவர்களை எப்படி சொன்னால்தான் என்ன.” "எங்கும் எதிலும் அரசியல். சர்வம் அரசியல் மயமாகிவிட்டது. அதுவும் தீய வழியில்." என்றாள் விலாசினி.
 "எத்தனை பேருக்கு நான் பதவிஅளிப்புவிழா செய்துவைத்திருப்பேன், எத்தனை பேரின் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடியிருப்பேன், எத்தனை பேர் கூட்டங்கள் நடத்தி பிரச்சாரம் செய்திருப்பார்கள், அவர்களெல்லாம் இப்படியா இருந்தார்கள்?" என்று குமுறினாள் கலையரசி.
 "பணம் பதவி என்ற மூன்றெழுத்தில், நன்மை நன்றி என்ற மூன்றெழுத்துக்களை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆட்சியை பிடிக்கவும், பிடித்த பதவியை யாரும் பறிக்காமல் இருக்கவும், செய்யாத நன்மைகளையெல்லாம் செய்துவிட்டதாக விளம்பரப்படுத்தி மனிதர்களிடையே கடவுளாகிவிடுகிறார்கள். எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல் நன்மைகளைச் செய்ய மறுக்கிறார்கள்." என்றாள் இலக்கியா.
 "நரேன்குமார்,  பெருங்குவியடிகள் இவர்களை போன்றவர்கள் ஆட்சியில் நன்றி நன்மை எல்லாம் நளிந்துத்தான் போகும்." என்றாள் கலையரசி.
  சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. கலையரசியும் விலாசினியும் ஒருவரை ஒருவர் பார்த்து அழுதுகொண்டிருந்தனர். "அழாதீர்கள்! நம் குமுறல்களையும் புலம்பல்களையும் கேட்பாரில்லை. இதோ நம்மைப்போலவே ஊமையாகிவிட்ட இந்த இயற்கை மட்டுமே உணரும்." என்றாள் இலக்கியா. அதை ஆமோதிக்கும்பொருட்டு காற்றில் மரங்கள் அசைந்து பறவைகள் கீச்சிட்டன.
 ஒலிபெருக்கிகள், ஒலிவாங்கி,  மனித குரல்கள் ஒன்று சேர்ந்து நம்மை துடிக்கவைக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் பிடிக்காமல் நாம் எப்படி அதிர்கிறோம். ஆனால் அறிவியல் மூளைகள் அதை ஒலி அலைகள்,  ஒலி அதிர்வுகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு என்றுதான் தெரியப்போகிறதோ அது ஒலி அதிர்வுகள் மட்டுமன்றி நம் உணர்வுகளின் அலைகள் என்று.“ சொல்லியபடியே கலையரசி புறப்பட தயாரானாள்.
 “வாருங்கள்.  இருட்டிவிட்டது போகலாம்.  மனிதர்களுக்குத்தான் நம் ஒற்றுமை புரியவில்லை. நாமாவது ஒன்றாக கைகோர்த்து செல்வோம்.” என்ற இலக்கியாவின் சொல்படி கைக்கோர்த்துக்கொண்டே மூவரும் பூங்காவைவிட்டு வெளியேற தொடங்கினர்.
 அவர்கள் செல்லும் திசையை வெறித்து பார்த்தபடி கண்கலங்கியது மரங்கள். தன்னை தாங்கும் மண்ணிற்காக கடவுளிடம் பரிந்து பேசின. வானம் மழையாய் மாறி தன் காதலியான மண்ணைக் கட்டித்தழுவி முத்தமிட்டு  ஆறுதலளித்தது.
முற்றும்.

Wednesday 10 June 2020

வற்றா வறுமை.

நதி வற்றிப்போய் உயிரினங்கள் கதியற்று போயின!
நிலத்தடி நீர் வற்றிப்போய் தாவரங்கள் தலைசாய்ந்துவிட்டன!
குளம் குட்டையே வற்றிவிட்டது,   வற்றாத ஜீவநதி வறுமை மட்டுமே!
எத்தனை உணவு வகை இருந்தும் என்ன?   ஏழையின் தட்டு இன்னும் காலியாகத்தான்   இருக்கிறது!
பேரிரைச்சலுக்கு மத்தியில்  பிச்சைக்காரனின் குரல் தனித்து ஒலிக்கிறது !
பால் பொருட்கள் வியாபாரம், பச்சிளம் குழந்தைக்கு எங்கே ஆகாரம்?
ஊரும் உணவும் சார்ந்திருந்த காலமென்ன, ஒரு பருக்கைக்கூட கிடைக்காமல்   உயிரைவிடும் காலமென்ன!
ஆசைக்கு உணவுண்ட வேளையென்ன,   , காசுக்கு உணவுண்ணும் வேளையென்ன!
விரோதிக்கு விருந்தோம்பிய நாட்களென்ன,  விருந்தினரையே விழையா நாட்களென்ன!
பாஸச்சிறைக்கு ஏங்குவோரை பசிச்சிறை பிடித்துக்கொள்கிறது!
பறக்க துடிப்போரை பட்டினி இறக்கத்தூண்டுகிறது!
சத்துள்ள உணவுக்கு பங்களாவாசம், சேற்றில் உழலும் மனிதருக்கோ வடிகஞ்சியே வாழ்நாள் சுவாசம்!
 பணம்கொடுத்தால் பண்டமாம்; இங்கே பணமே முடக்கமாம்!
வறுமையின் நிறம் சிவப்பென்றார் அவர்
பாவம் அவரால் நிறத்தைத்தான் தரமுடிந்தது, நிரந்தர முடிவை தரமுடியவில்லை!
இறைவனாலே  முடியாதபோது, இயக்குனரால் எப்படி முடியும்?
உலகே,  விட்டுவிடு வீணான ஏக்கம்.
வரியோரின் வயிறும் வடிக்கின்ற கண்ணீரும் வற்றிவிட்டால் வாழ்வில் பிடிப்பேது.
வேட்கை கொண்டு வெற்றிப்பெறாவிட்டால் இதயத்தில் துடிப்பேது.
வறுமையே வருந்தும் காலம்வரும்;
வணங்காமுடியை வணங்கவைக்க நேரம்வரும்;
காத்திருப்போம் விடியும்வரை அல்ல, விடியல் வரும்வரை.

Tuesday 9 June 2020

தொலைத்துவிட்ட வைரக்கல்


 சிட்டிசன் படத்தில் அஜித் தமிழக வரைப்படத்திலிருந்து அத்திப்பட்டி என்ற ஒரு முழுக்கிராமமே தொலைந்து போய்விட்டதைக் குறிப்பிட்டார். அதுபோல
மக்கள் இதயத்திலிருந்தும் கூகுள் ஆண்டவரிடமிருந்தும் நிறைய தியாகிகள் தொலைந்து போய்விட்டார்கள். அப்படி ஒருவர் இருந்திருக்கிறாரா? என்று வியக்கும் வண்ணம் அவர்கள்
ஊர் பேர் எதுவும் தெரிவதே இல்லை. அப்படி தொலைந்து விட்ட தியாகிகளில் ஒருவர்தான் சத்யசேவா கிராம ஆசிரமத்தை நிறுவிய ராஜாராமன் என்ற காந்திராமன். ராகங்களை இசைக்கருவிகளால் வாசிக்கமுடியும் அல்லது மனிதரின் குரலால் பாடமுடியும். ஆனால் ஆத்மாக்களுக்கும் ராகமுண்டு அது உள்ளத்து உணர்வுகளால் இசைக்கக்கூடியது. பரிசுத்தமான இரு உள்ளங்கள் இணைந்து மீட்டிய ராகத்தைத்தான் நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தான் எழுதிய ஆத்மாவின் ராகங்கள் என்னும் நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். தேசத்தை பக்தி செய்யும்
ஒருவரும், தேசபக்தரை பக்தி செய்யும் ஒருத்தியும் உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்ந்த கதையிது. இந்த கதையை முதல்முறை நான் படிக்கும்போது எனக்குள் எழுந்த உணர்வைச்
சொல்ல வார்த்தை இல்லை. இப்படி எத்தனை தியாக தீபங்கள் நமக்கு தெரியாமல் அணைந்துபோய் இந்தியச்சுதந்திரத்தை பெற்றுத்தந்திருக்கும் என்று தோன்றியது. இந்த நாவலின்
முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இதில் இரண்டு சகாப்தங்கள் வருகிறது. மகாத்மா காந்தியின் போராட்டங்களும், அந்த மகாத்மா காந்தியை பக்தி செய்யும் மகாத்மாவான
காந்திராமனின் போராட்டங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. நா.பா அவர்கள் ராஜு என்ற பெயரில் பத்திரிக்கையாளராக இருப்பதாகவும், காந்திராமனின் இறப்புச்செய்தி
அவருக்கு டெலிப்ப்ரிண்டரில் வருவதாகவும், அதை வெளியிட இரவென்றும் பாராமல் அவர் தன் ஊழியரோடு அலுவலகத்திலிருந்து வெளியிடுவதாகவும் இந்த நாவலின் முதல் அத்தியாயம்
தொடங்குகிறது. 1930ஆம் ஆண்டு. உப்புச்சத்யாகிரகம் நாடெங்கும் பரவி தலைவர்கள் கைதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலமது. அப்போது முதல் 1947ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம்
15ஆம் தேதிவரை அவர்மேற்கொண்ட சுதந்திர போராட்டங்களும், சத்யசேவா ஆசிரமத்தை நிறுவியதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. படிக்கவே பிரம்மிப்பாக இருக்கிறது. மே மாதம்
6ஆம் தேதி வெளியிடப்பட்டு 7ஆம் தேதி மதுரைக்கு வந்த சுதேசிமித்திரன் பத்திரிக்கையில் மகாத்மா காந்தி அவர்கள் கைதான செய்தி வருகிறது. இந்நிலையில் ராஜாராமனும்
அவர் நண்பர்களும் அவர்களின் கொதிப்பை வெளிப்படுத்தவும், நாட்டின்மீதுள்ள பற்றால் தாங்களும் ஏதாவது செய்து சிறை செல்ல வேண்டுமென்று அந்நியத்துணிக்கடை மறியல்
மற்றும் கள்ளுக்கடை மறியல் நடத்த திட்டமிடுகிறார்கள். இங்கிருந்துதான் இவர்களின் முதல் போராட்டம் துவங்குகிறது. அந்நியத்துணிக்கடை மரியல் நடத்தி முதல்முறை வேலூர்
சிறையில் சி. வகுப்பில் சிறைக்கைதியாகிறார். தாயின் உடல்நிலை மோசமாக இருந்தபோதும், தாயின் இறப்பிற்கும் பரோலில் செல்ல மறுக்கிறார். அவரின் சிறை அனுபவங்களையும்,
அவர் சந்தித்த தியாகிகளின் நட்பையும் பற்றி நா. பார்த்தசாரதி ஐயா அவர்கள் தன் எழுத்துக்களால் அழகாக அலங்கரித்திருக்கிறார். வேலூர் சிறையின் சுகமான பயனுள்ள அனுபவங்களைப்போல
இரண்டாம் முறை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது ராஜாராமன் அனுபவிக்கும் துன்பங்களையும் மனமிளகும்படி எழுதியிருக்கிறார். வடக்கு சித்திரை வீதியில் அவர் திலகர் வாசகசாலை இருந்தது. அந்த   மொட்டைமாடிக்கு எதிரிலிருக்கும் வீட்டின்  மாடியறையிலிருந்த மதுரவள்ளியை சந்திக்க நேர்ந்தது..
 முதலில் அவள் வசிக்கும் இடத்தால் அவளையும் தவறாய் புரிந்துகொண்டவர் அவளின் பரிசுத்தமான
அன்பை புரிந்துகொள்கிறார். அவள் அவரை காதலிக்கவில்லை. பக்தி செய்கிறாள் என்பதை உணர்கிறார். ஊரரிய உலகரிய நீங்கள் தேசத்திற்காக தியாகம் செய்யுங்கள், ஊரரியாமல்,
உலகரியாமல், புகழை எதிர்பார்க்காமல் உங்களுக்காக அந்தரங்கமாக தியாகம் செய்யும் என் உரிமையை தடுக்காதீர்கள் என்ற வார்த்தைகளை படிக்கும்போது, எனக்கு நா. பாவின்
பேனாவிலிருந்து வடிவது எழுத்துக்களா அல்லது சித்திரத்துளிகளா என்ற சந்தேகம் கலந்த இனிய ஆச்சரியம் தோன்றுகிறது. தெளியலேது ராமா பக்தி மார்கமு. ராமா உன்னை பக்தி
செய்யும் மார்க்கம் தெரியவில்லையே என்று உருகி உருகிப்பாடி அவரின் உயர்ந்த மனதை ஜெயிக்கிறாளே தவிர, வேண்டாத உணர்வுகளை தூண்டவில்லை. இதுதான் நா. பாவின் சிறப்பு.
காதலை நாகரிகம் என்ற வார்த்தைக்கும் மேலாக தெய்வீகம் பொருந்தியதாக மாற்றும் வல்லமை இருக்கிறது. ஒரு பெண்ணாய் நான் நா.பாவின் இப்படிப்பட்ட உயர்ந்த எழுத்துக்களை
படிக்கும்போது பெருமையடைகிறேன். அவள் என்னென்ன தியாகங்கள் செய்திருக்கிறாள் என்பதை நாவலை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். அந்தரங்கம் என்ற வார்த்தையை கேட்கும்போதே
பலருக்கும் கற்பனைகளும், கருத்துக்களும் வேறெதையோ நோக்கித்தான் பயணிக்கும். ஆனால் நா. பாவின் அந்தரங்கம் என்ற வார்த்தை இதயத்தின் உள்ளே எவருக்கும் தெரியாமல்
புதைந்துகிடக்கும் அதீத அன்பை மட்டுமே குறிப்பதாகும். இது என்னை வியக்கவைக்கும் விஷயம். அழகு, ரசனை ஆகியவற்றை வர்ணிக்கும்போதும் நாகரிகத்தமிழில் மட்டும்தான்
எழுதுவார். படிக்கும்போது பூக்கள் மணப்பதுபோல இதயத்திலும் நறுமணம் கமழும். இந்த நாவலில் என்னைக்கவரும் வகையில் ஒரு அழகான சோகக்குயிலின் குரலை வர்ணித்து ஒரு
பாடல் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அவை. எல்லையிலாததோர் காட்டிடை நல் என்று ஆரம்பிக்கும் பாடல். இவர்களின் தெய்வீக காதல் பெண்ணின் தாய்க்கும்,
காந்திராமனுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வந்து திருமணம் உறுதி செய்யப்பட்டது. காந்திராமன் 10 வருடங்களுக்கு முன் சுதந்திரம் கிடைக்கும்வரை தானும் தன் நண்பர்களும்
திருமணம் செய்வதில்லை என்று சத்தியம் செய்திருப்பதாகவும், சுதந்திரம் கிடைத்தவுடன் திருமணம் செய்வதாகவும் வாக்களித்தார். சுதந்திரம் கிடைத்துவிட்டது, ஆனால்
இவர்களின் திருமணம் நடக்கவில்லை. ஏன்? சுதந்திர போராட்டத்தில் இறந்துவிட்டார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். படித்துப்பார்த்து ஏனென்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆத்மாக்களின் ராகங்களை நா. பா அவர்கள் அந்த ஆத்மாக்களிடமே சமர்பித்துவிடுகிறார். அப்படி செய்தபோது அந்த மோன ராகங்களை அவர் கேட்பதைப்போல் உணர்கிறார். படித்துப்பாருங்கள்.
இப்படியும் சில ராகங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 

Monday 8 June 2020

கோல்மால்

ஹாய் நண்பர்களே.
ஒரே சீரியஸ்  கருத்துக்களாவே போகுது. இன்னைக்கி ஒருநாள் சிரிக்கலாமா?
எனக்கு குறும்பு செய்யுறதும், குறும்பு செய்யுறவங்களையும் ரொம்ப பிடிக்கும். பார்த்தா அப்படி தெரியலயேன்னு நீங்க நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ்  எனக்கு கேட்குது.
அட! இப்பத்தானே ஆரம்பிச்சுருக்கேன். இனி போக போக பாருங்க. சரி நான் விஷயத்துக்கு வரேன்.
என் குரல் இருக்கே அதுதான் எனக்கு முதல் எதிரி. சதிகார குரல். எங்க எப்படி ஒலிக்கனுமோ அப்படி ஒலிக்காது. அதுதான் எனக்கு பலமும்கூட.  என்ன செய்யுறது? கடவுள்
இந்த  சிற்பத்தை  அப்படி செதுக்கிட்டாரு.
நான் டெந்த் படிக்கும்போது.  அப்போ எனக்கு படிப்புதான் எல்லாமே. சும்மா சும்மா படிச்சிட்டே இருப்பேன். அதுக்காக பப்ளிக் எக்சாமுக்கும் விழுந்து விழுந்து படிச்சேன்னு
நினைக்காதீங்க.
ஆரம்பத்துல நல்லா படிச்சிட்டு திமிரா பப்ளிக் எக்சாம் டைம்ல சொப்பு சாமா விலையாடினேன். அட! டென்ஷன் ஆகாதீங்க இதெல்லாம் என் விளையாட்டுகளில் ஒன்று.
அப்போ போகி வந்தது. எனக்கு இந்த வானொலில  ஒரு நேயரா பேசுறது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஏதாவது போட்டி  வெச்சா கலந்துக்க நினைப்பேன்.
அப்படித்தான் சூரியன் வானொலில ஒரு போட்டி வெச்சாங்க. போகிக்கு புதுமையா எந்த மாதிரியான விஷயங்கள எரிக்கலாம்  கேட்டாங்க. சரியா சொல்றவங்களுக்கு பரிசு. அதுவும்
பருத்திவீரன் ப்ரியாமணி வீட்டுக்கு வந்து தருவாங்களாம்.
2 மணியிலருந்து 3 மணிவரைக்கும் மகளிர் மட்டும்னு ஒரு நிகழ்ச்சி வரும். 3 மணிக்கு சிறுவர் நேரம். நான் நேர்மையா 2 மணியிலருந்து கால் பண்ணேன். 2 3 முறை லைன் கிடைச்சது.
ஆனா என் குரலை கேட்டு கட் பண்ணிட்டாங்க. அதாவது என் குரல் குழந்தை போல இருக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. அதன் உண்மைத்தன்மை இது.
சிறுவர் நேரம்ல 1 முதல் 5ஆம் வகுப்புக்குள்ள படிக்கிறவங்க கால் பண்ணனும். நான் சிறுவர் நேரம்ல கால் பண்ணேன். அபினயா பேசுறேன். 5ஆம் வகுப்பு படிக்கிறேன் சொன்னேன்.
நம்பி பேசினாங்க.
அடுத்தவங்கள புண்படுத்துற எந்த விஷயத்தையும் எரிக்கனும் சொன்னேன். ஜெயம் எனக்கே.
ப்ரியாமணி வீட்டுக்கு வந்தாங்க. அன்னைக்கு எனக்கு அறிவியல் சிறப்பு வகுப்பு. எங்க அப்பா ச்கூலுக்கு போய் விஷயத்தை சொல்ல அவங்க சந்தோஷமா விடுமுறை கொடுத்துட்டாங்க.
என் குறும்பை மட்டும் சொல்லல. நானேவீட்ல  யார்கிட்டையும்  சொன்னேனா தெரியாது.
ப்ரியாமணி வீட்டுக்கு வருவதற்கு முதல்நாள் சூரியன் வானொலிலருந்து ஒருவர்  வந்து என்னையும் பார்த்துட்டு விலாசம் சரியா இருக்கான்னு வெரிஃபை பண்ணிட்டுப்போனாரு.
அப்பவும் அவரால என்னை கண்டுபிடிக்க முடியல.
அந்த நடிகை வீட்டுக்கு வந்து பிரியானி அரிசி, இனிப்பு, வீஜீபிக்கு 4 டிக்கட் கொடுத்துட்டு புகைப்படம் எடுத்துட்டு நல்லா பேசிட்டு போனாங்க.
அவங்க அம்மாவும் இன்னும் சில சூர்யன் வானொலி தொகுப்பாளர்களும் வந்தாங்க.
கொஞ்சநாள் கழிச்சு ஜப்பான் மாடல் ஆடோமேடிக் கேசடுப்பும் கிடைச்சது.
அப்புறம் அப்படியே 2 வருஷத்துல நான் ப்லஸ் டூ முடிச்சிட்டு ரிசல்ட் வந்ததுமே ஆஹால வேலைக்கு போய்ட்டேன். எனக்கு ரிசல்ட் வர அன்னைக்குதான் இரண்டாம் கட்ட நேர்கானல்.
அன்னைக்கு வேலையும் கிடைச்சிடிச்சி. ஜூன் முதல் தேதியிலருந்து போகனும்.
அங்க இருக்க எல்லாரும் நல்லா பழகுவாங்க. ஜாலி டைப். கோல்மால் கனேஷ்னு ஒரு அண்ணா இருந்தார். ஒருநாள் நாங்க எல்லாம் சும்மா பேசிட்டு இருக்கும்போது.
  இவங்க வேற வானொலி, சூரியன் வேற வானொலி. இவங்க அவங்ககிட்ட இதை சொல்லவாப்போறாங்க. நான் ஒன்னு சொல்றேன், சூரியன் வானொலி தொகுப்பாளர்கள்கிட்ட  சொல்லக்கூடாதுன்னு
சொல்லிட்டு 2 வருஷம் முன்னாடி நடந்த விஷயத்தை சொன்னேன்.
அப்போதான் எனக்கு பெரிய டிவிஸ்ட் வந்தது. கோல்மால் கனேஷ் எல்லாம் அமைதியா கேட்டுட்டு, ப்ரியாமணி வீட்டுக்கு வந்த முதல்நாள் அட்ரஸ்  சரி பார்க்க ஒருத்தர் வந்துருப்பாரேனு
கேட்டாரு.
சரி எல்லா இடத்துலயும் அப்படித்தான்னு நினைச்சு ஆமாம் வந்தாரு. ஆனா அவர்கூட என்னை கண்டுபிடிக்கலைன்னு கெத்தா சொன்னேன்.
அப்படி வந்ததே நாந்தான்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்திருக்கும்.
 என்னது? நீங்க சூரியன் வானொலில  இருந்தீங்களான்னு திரும்பவும் கேட்டேன். அதற்கு தொகுப்பாளர் ரோஹினி ஆமாம் இருந்தாருன்னு  சொன்னாங்க.
எல்லாரும் சிரிச்சாங்க.
இவ்ளோநாளா உன்னை எங்கையோ பார்த்த மாதிரியே இருந்ததுன்னு நினைச்சேன். நீதானா அந்த பாப்பானு கேலி செஞ்சாரு.
சிரிச்சேன். நான் சொன்னா என்னை பார்த்தும் ஏன்   கண்டுபிடிக்கலன்னு கேட்டேன். நீ அப்போ அப்படித்தான் இருந்த அதான் உண்மைன்னு நம்பிட்டேன் சொன்னாரு.
ஆக 2 வருஷம் முன்னாடி நீ என்னை ஏமாத்தியிருக்கன்னு சிரிச்சாரு. நல்ல கோயின்சிடன்ஸ் ன்னு எல்லாரும் சிரிச்சாங்க. அவர் கோல்மால் ஷோ பண்ணாரு.
இது கோல்மால்கிட்டயே கோல்மால் இல்லையா?
ஹாஹா ஹா இன்னும் நிறைய இருக்கு. அப்போ அப்போ பார்க்கலாம்.

Sunday 7 June 2020

evils of plastics.

oh friend dont inspire by plastics beauty,and  dont expire your life before validity.
it gives more excitement and also  brings back our good environment.
food is for nutrition but plastics make it as poison.
animals are our pets  use of  plastics make them dead.
nature  is our future quantity of  plastics spoils its creature.
pure air give long life sure but plastics polute its pure.
drink cool water, for that we have mud pots as refridgerator.
of course plastic pots are cheaper eventhough it leads to spend money for doctor like water.
 though cloth bags are old,  it saves our health like gold.
plastic bags are only for style. so avoid it with out fail.
ignore plastic plates if you want to posphone your peoples late.
dont hesitate to eat on banana leaf to be safe.
our hands are the  boon, then why do we need plastic spoon?
human have no shelter because insects occupyed their  shelter.
we have several words to describe birds but we cant see birds.
though we cant destroy plastics we can decrease plastics.
plastics save our time  however they   disqualify us from our life game.
burning of bad thoughts gives healthy mind, but  burning of plastics spread dirty wind.
designs of plastics are wonderful. at the same time  made in plunty of chemicals.
oh friend do you need your life peace? then avoid plastics. or you will be  affected  on disease.
now the choice is yours.

Saturday 6 June 2020

நெருஞ்சிமுள்

"அப்பா, இங்க வாங்க ஒரு நிமிடம்."
"என்ன ஷாலினி," என்றான் நந்தகுமார்.
ஷாலினி நந்த குமாருக்கும் நந்தினிக்கும் பிறந்த ஒரே
செல்லப்பெண். அவள் ஒரு
தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு  படிக்கிறாள்.
மிகவும் குறும்புக்காரி. அவளுக்கு அவள் அப்பாதான் செல்லம்.
தோழனைப்போல பழகுவாள். தினமும் அவள் சந்தித்த  அனுபவங்களைப் பற்றியும்
பள்ளியில் நடந்ததைப்பற்றியும் பேசி மகிழ்வாள்.
நந்தகுமாருக்கும் அது சலிக்காது. அவள் அவனின் பொக்கிஷம் அல்லவா?
நந்தகுமார் ஒரு மென்பொருள்நிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்கிறான்.
பெரும்பாலும் ஷாலினிக்கு அவனே படிப்பும் சொல்லி கொடுப்பான். ஷாலினி
சொல்லும் பதில் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தால் அவளுக்கு பரிசும் முத்தமும் கொடுப்பான்.
அவளும் அதற்காகவே பதில்களை ஒழுங்காகச் சொல்வாள்.
"அப்பா, நாளைக்கு எங்கள் பள்ளியில் ஓவிய போட்டி, ஏதாவது வரைந்து தாங்க அப்பா,"
என்று கொஞ்சும் குரலில் கெஞ்சினாள் ஷாலினி.
"இங்கே பாரு ஷாலினி,  போட்டி என்பது உன் திறமையை சோதித்து அதற்கு பரிசளிப்பது.
நான் வரைந்து தந்தால் அது எப்படி உண்மையான போட்டியாகும்? நீயே உனக்கு
பிடித்த ஒன்றை கற்பனை செய்து வரை.  அதில் வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும்  கலங்காதே.
எப்படி அதை மேலும் வளர்ப்பது என்று யோசி அப்போதுதான் உன் திறமை மெறுகேரும்.”
என்றான் நந்தகுமார்.
”அப்பா, எனக்கு என்ன தெரியும்? நான் சின்ன பெண் இல்லையா?” என்றாள் ஷாலினி பரிதாபமாக.
”உனக்கு என்ன தெரியாது? நான் உன்னை எத்தனை இடங்களுக்கு அழைத்து
சென்றிருக்கிறேன்? உன் அம்மா உனக்கு எத்தனை கதைகள் சொல்லியிருப்பாள்? உன்
வாழ்வில் எத்தனை அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்? அவையெல்லாம் நினைத்து
பார்த்து ஒரு சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதற்கு உன் வயதில் என்ன
தீர்வு சொல்ல முடியும் என்பதை வரை. உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.”
என்று நந்தகுமார் தன் மகளை ஊக்குவித்தான்.
ஷாலினி தான் பெற்ற அனுபவங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஓர் அழகிய ஓவியம் வரைந்தாள்.
மேலே ஒரு தேசிய கொடி பறக்கிறது, அதில் சில கரைகள் படிந்திருக்கிறது, ஒரு
பிச்சைக்காரன் திருவோடு தாங்கியிருக்கிறான், சில முறட்டு ஆண்கள் ஒரு உயிரை
குடிக்கிறார்கள்,ஒருவன் கைநீட்ட மற்றொருவன் பணத்தை தினிக்கிறான். .
இதில் ஒவ்வொரு பிரச்சனையாக  மறைய மறைய தேசிய கொடியில் கரை நீங்கி பொலிவு வருகிறது.
ஷாலினி தன் ஓவியத்தை பெற்றோரிடம் காட்டினாள்.
நந்தினி தன் மகளின் திறமை கண்டு அவளை முத்தம் கொஞ்சினாள்.
”ஷாலுமா, உனக்கு இன்னிக்கி என்ன இனிப்பு டா வேண்டும்? சொல்லு அம்மா செய்து
தரேன். அடடே என் கண்ணுக்குத்தான் எத்தனை திறமை? எத்தனை சமூக பொறுப்பு? என்
செல்லமே,” என்று பாராட்டினாள்.
”அடிப்போடி  லூசு. ஷாலினி என் மகள். என் செல்லம். அதனால்தான் அவளுக்கு
இத்தனை திறமை உன் மகளாக இருந்திருந்தால் அவள் மூளையும் வளராமல்தான்
இருந்திருக்கும்.” ”ஷாலினி,  இந்தாமா என் பரிசு“ என்றபடி ஒரு அழகிய பேனாவை நீட்டினான்.
நந்தினி ”என்னது, உங்களை, இருங்க என்ன செய்கிறேன் பாருங்க” என்று தன் கனவனை
அடிக்க செல்லமாய் கை உயர்த்தினாள்.
”அம்மா, அப்பா பாவம் கையால் அடிக்காதே உள்ளே பூரிக்கட்டை இருக்கும்ல அத
எடுத்துட்டு வந்து அடி.” என்று ஷாலினி அழகு காட்டிவிட்டு ஓடிப்போனாள்.
சில வருடங்கள் கழித்து ஷாலினி வளர்ந்து பெரியவளாகிவிட்டாள். அழகும்,
அன்பும், அறிவும், பண்பும் அவளோடு வளர்ந்தது.  பெண்கள் கல்லூரியில் இளங்கலை
தமிழ் படித்துக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் நந்தினி கோவிலுக்கு சென்றிருந்தாள்.
நந்தகுமார் தன் அறையில் மடிக்கணினியில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது ஷாலினி தன் தந்தையின் அருகில்  வந்து அமர்ந்து கொண்டாள். ”அப்பா,
நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?” என்றாள்.
  ”கேளு  ஷாலினி,
” என்றான் நந்தகுமார் மடிக்கணினியின் திரையைப் பார்த்தபடி.
”அப்பா, நெருஞ்சி முள் என்றாள் என்ன?”
”அது உன் அப்பா வாய்தான் ஷாலு சும்மாக்கெடக்காம சுருக்சுருக்னு குத்திட்டே
இருக்கும்.” என்று தன் கணவனை கேலி செய்து கொண்டு உள்ளே வந்தாள் நந்தினி.
  ”அடிப்போடி இவளே: உள்ள போய் வேலய பாரு. பசிக்கிது சீக்கிரம் ஏதாவது
செய்துத்தொலை.”  என்று நந்தினியை செல்லமாய் திட்டினான்.“
”அம்மா, சும்மா தேஞ்சிப்போன கிராமப்போன் மாதிரி தொனதொனனு பேசிட்டு இருக்காம
இன்னிக்கி எங்களுக்கு விடுமுறைநாள். இன்னிக்காவது எங்களுக்கு ருசியா
சமைத்துப்போடு போ போ.” என்றாள் ஷாலினி.
”இருடி இரு அப்பாவுக்கும் பெண்ணுக்கும் சாப்பாட்டுல உப்பும் காரமும் அதிகமா
கலந்து போடுறேன்.” என்றுவிட்டு நந்தினி உள்ளே சென்று சமையலை கவனித்தாள்.
”ஷாலினி, ஏனம்மா நெருஞ்சிமுள் மேல் திடீர் கவனம்?” என்றான் நந்தகுமார்.
”அப்பா, எங்கள் கல்லூரியில் நெருஞ்சிமுள் பற்றி ஒரு கட்டுரை
எழுதசொல்லியிருக்காங்க அதான் கேட்டேன் அப்பா. எனக்கு நெருஞ்சிமுள் பற்றி
ஒன்றும் தெரியாது. அதுவுமில்லாமல் அது ஒரு முள் காலில் குத்தினால் வலிக்கும்.
இரத்தம் வரும் அதை தவிர்த்து வேறு என்ன இருக்கு?” இதை வைத்து எப்படி அப்பா
கட்டுரை எழுதுவது?” என்றாள் ஷாலினி.
”ஷாலினி, நம் வாழ்க்கையின் வலியும் வேதனைகளும் நெருஞ்சிமுட்கள்தான்.
மறக்கமுடியாத சில வேதனைகள் இதயத்தின் உள்ளேயிருந்து
குடைந்துகொண்டிருக்கும். அதுதான் கண்ணீராய்   வெளிவரும்.
காலில் தைத்த முள்ளை எடுக்கமுடியும். ஆனால் இதயத்தில் தைத்துவிட்டால்
எப்படியம்மா எடுக்கமுடியும்?“
”அப்பா, உங்களுக்கு இதுபோன்ற வேதனைகள் இருக்கிறதா?”
”ஷாலினி, நான் இதை சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நீ
சொன்னது உண்மைதான். எனக்கும் நெருஞ்சிமுள் இதயத்தில் இருக்கு.
சொல்கிறேன் ஒரு தோழனைப்போல்.”
”சொல்லுங்க அப்பா.” என்று ஷாலினி ஆர்வமானாள்.
”ஷாலினி, நான் ஒரு பெண்ணை மனதாற காதலித்தேன். உண்மையான உயர்ந்த காதல்.
தெய்வீக காதல் என்று கூட சொல்லலாம். ஆனால் அவள் வீட்டில்
ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு மதம், வேறு சாதி, பண வசதி குறைவு என்று என்னை
நிராகரித்துவிட்டார்கள்.
அவளும் தன் பெற்றோர் பேச்சை மீறமுடியாமல், மீற விரும்பாமல் வேறு வழியில்லை.
என்னை மன்னிச்சிடுங்க என்றுவிட்டு அவள் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை மணந்துகொண்டாள்.
சில வருடம் கழித்து என் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் உன் அம்மாவை மணந்துகொண்டேன். இருந்தாலும் அந்த முதல் காதல் என் இதயத்தில் இன்னும்
நெருஞ்சிமுள்ளாய் குத்திக்கொண்டுதான் இருக்கிறது.”
”அப்பா, பெற்றோருக்கு எதிராக நடக்கக்கூடாது அல்லவா? அவர்கள் பாவம் இல்லையா?
அவர்கள்தானே நம்மை பெற்று, பெயர் வைத்து, உணவு உடையளித்து, படிக்கவைத்து,
வேலைக்கு அனுப்புகிறார்கள்?
அவர்களுக்காக காதலை விட்டுத்தந்தால் என்ன?”
ஷாலினி பேசப்பேச நந்தகுமார் மலைத்துப்போனான். தன்மீதும் தன் மனைவி மீதும்
அவள் வைத்திருக்கும் நம்பிக்கையும்  மதிப்பையும் கண்டு அவன் வியந்தான்.
இருந்தாலும் அவன் கருத்தை அவனால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. சொன்னான்.
”ஷாலினி, காதலும் உண்மையானது, நேர்மையானதுதான். காதல் ஒரு தீர்மானம். அது
ஒரு நம்பிக்கையின் பெயரில் எடுக்கும் ஒரு உடன்படிக்கை.
ஒரு முறை  எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. ஒருவனோ ஒருத்தியோ
உண்மையான காதலுடன் வந்தால், யாருக்காகவும் யாரையும் விட்டுக்கொடுக்க கூடாது.
அதிலும் அவள் ஒரு பெண். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து
அறிமுகமில்லாத வீட்டிற்குப்போகத்தான் போகிறாள். அதற்கு ஏற்கனவே அறிமுகமான
வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளலாமே? அதுமட்டுமல்லாமல் அவளுக்கு பெற்றோர்
மட்டும்தான் முக்கியமென்றால் அவள் காதலித்திருக்கவே கூடாது.”
”அப்பா, எல்லா காதலுமே உண்மையானதா?”
”நியாயமான கேள்வி ஷாலினி. நாணயத்தின் இருபக்கங்கள் போல காதலிலும் நல்லது
கெட்டது இருக்கிறது. அதை நாம் புரிந்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
அதனால்தான் படிக்கும் பள்ளி பருவத்தில் காதலிக்க கூடாது. அந்த பருவத்தில்
சரி எது, தவறு எது. என்று அறியும் மனப்பக்குவம் இருக்காது. அதுமட்டுமின்றி
பள்ளிப்பருவம் படிப்பதற்கான பருவம். அந்தப்பருவத்தில் படிப்பில் கவனம்
சிதறினால் பின் படிப்பில் நாட்டம் போய்விடும்
கல்லூரி பருவத்திலோ அல்லது வேலைக்கு செல்லும் பருவத்திலோ நமக்கு கொஞ்சம்
முதிர்ச்சி வந்துவிடும். நல்லது கெட்டதை நாம் யூகித்து அறிய முடியும்.
ஆனால் அப்பொழுதும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ச்சேட்டிங்கில் ஆரம்பித்து, டேட்டிங் வந்து, டிராப்பிங்கில் முடியும் காதலும் உண்டு.
இப்போது இருக்கும் டெக்னாலஜி அப்படி.
  நிலவில் களங்கம் இருக்கிறது என்று நம் முன்னோர்கள் சொல்வதுபோல காதலுக்கு
அது ஒரு தீராத களங்கம். ஆனால் உண்மையான காதல் இன்னும் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அன்பும் அதிஷ்ட்டமும் இருந்தால் சிக்கும்.”
”அப்பா, ஒருமுறைதான் காதல் வரவேண்டும். அது ஆயுள் உள்ளவரை மறையக்கூடாது
என்பதை பற்றி உங்கள் கருத்து?”
”உண்மையான காதலாக இருந்தால் கடைசிவரை அந்த காதலை நினைத்துக்கொண்டிருக்கும்
தகுதி அந்த காதலுக்கு இருந்தால் ஒருமுறை காதல் போதும் ஷாலினி.”
”அப்பா, அந்த பெண் அவள் பெற்றோருக்காகக் காதலை விட்டுக்கொடுத்துட்டாங்கனு
சொன்னீங்களே, நீங்கள் மட்டும் உங்கள் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில்
அம்மாவை மணந்தது ஏன்? உங்கள் காதல் உண்மையானது இல்லையா? நீங்கள் அவளையே
கடைசிவரை நினைத்திருக்கக்கூடாதா?”
”இதுவும் சரியான கேள்விதான் ஷாலு. ஆனால் நான் அவளுக்காக என் பெற்றோரிடம்
முன்னாடியே பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். அவளுக்காகத்தான் காத்திருந்தேன்.
ஆனால் அவள் அப்படி செய்துவிட்டாள். அதன்பின் என் பெற்றோர் என்னிடம் கேட்ட நியாயமான  கேள்விக்கு நான் என் திருமணம் வழியாக பதில் சொன்னேன்.”
”அது என்ன கேள்வி அப்பா,” என்றாள் ஷாலினி ஆவலுடன்.
”நீதான் அவளை தேர்வு செய்தாய். உன் முடிவுக்கு நாங்கள் குறுக்கே வராமல் உன்
சந்தோஷத்திற்காக ஒத்துழைத்தோம். ஆனால் இது நடக்காமல் போனதற்கு அவளும் அவள்
பெற்றோர்மேல் வைத்த அன்பு மட்டுமே காரணம்.
அப்படியிருக்கும்போது எங்களின் சந்தோஷத்திற்காகவும் உன் காயத்திற்கு
மருந்து போடும் விதத்திலும் நீ ஏன் இந்த கல்யானத்திற்கு
ஒத்துக்கொள்ளக்கூடாது? தன் பிள்ளைக்கு திருமணம் செய்து பார்த்து தன்வம்சத்தை விருத்தி செய்ய வேண்டுமென்பது எல்லா பெற்றோரின் இயல்பான ஆசைதானே?”
என்றார்கள். அவர்களின் சந்தோஷமும் சரியென்றுபட்டதால் திருமணம் செய்துகொண்டேன்.
”நல்ல முடிவுதான் அப்பா.”
நந்தினி இருவருக்கும் சாப்பிட நொறுக்குத்தீனி கொண்டு வந்து தந்தாள்.
”ஷாலு என்னடி வெறித்து பார்க்கிறாய்? என்ன வேண்டும்?” ”ஒன்றுமில்லை அம்மா.”
என்றாள் ஷாலினி. நந்தினி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு போனபின் ஷாலினி கேட்டாள்.
”அப்பா, உங்கள் இதயத்தில் அந்த நெருஞ்சிமுள் இருந்ததால் நீங்கள் அம்மாவுடன்
சந்தோஷமாய் இல்லையா? அதனால்தான் எனக்கு தெரியாமல் வேடிக்கையாக சண்டை போடுகிறீர்களா?”
”சேச்சே நான் அவளிடம் சண்டை போட்டு நீ எப்போது பார்த்தாய் ஷாலினி? நான்
அவளிடம் செல்லமாக மட்டும்தான் கோபித்துகொள்வேன். இது எங்களுக்கு வரும் செல்ல ஊடல்கள் ஷாலு.
அது மட்டுமல்ல எனக்கு இப்படி ஒரு நெருஞ்சிமுள் இருந்ததை நான் அவளை
பார்த்ததுமே சொல்லிவிட்டேன். அதன்பின் தான் நான் அவளை திருமணம் செய்து
கொண்டேன். அவளும் என் காயத்திற்கு அன்பால் மருந்து போட்டாள். உன்னைப்போல
ஒரு தேவதையை எனக்கு பரிசாய் தந்தாள். என்னை உண்மையாய் நேசிக்கிறாள். என்வாழ்வை மீண்டும் மலரச்செய்தாள். அந்த பாவத்திற்கு நான் எனக்குள் இருக்கும்
நெருஞ்சிமுள்ளை அவள் இதயத்தில் ஏற்றலாமா?”
”புரியவில்லை அப்பா?”
”என் பெற்றோரின் கட்டாயத்திற்காகத்தான் உன்னை மணந்தேன், மற்றபடி என்னால்
உனக்கு எந்த சந்தோஷமும் தரமுடியாது என்று ஒரு பெண்ணை துன்புறுத்தக்கூடாது.
அவளின் உன்மையான அன்பிற்கு மரியாதை தரவேண்டும். அதைவிடுத்து என் இதயத்தில்
இருக்கும் முள்ளை பதிலுக்கு அவளுக்குத் தரக்கூடாது. நாம் நினைத்த சந்தோஷம்
நமக்கு கிடைக்காமல் போனால் நம்மை சந்தோஷமாக பார்த்துக்கொள்பவளை நாம்
சந்தோஷமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தபின் கணவன் மனைவி சதா
சண்டை போட்டுக்கொண்டிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கும். பிஞ்சு இதயத்தை
வேதனையின் ஈட்டிகள் பதம்பார்த்துவிடும். எதிர்காலம் இருண்டு போய்
குழந்தைக்கு மனநோய் கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழந்தை
பெறும்வரையில்தான் கணவன் மனைவி பெரிய சண்டைகள் பிரிவுகளை அனுமதிக்க
வேண்டும். குழந்தை பிறந்தபின் கணவன் மனைவி பிரிவை கனவில் கூட நினைக்கக்கூடாது.”
”அப்பா, கடைசிவரை பெற்றோர் சம்மதிக்காவிட்டால் என்ன செய்வது காதலை?”
”காதலிக்கவும் காதலைசொல்லவும் காதலிக்க வைக்கவும் பல ஆண்டுகள்
காத்திருக்கிறோம். அதுபோல  பல ஆண்டுகள் நம்மை வளர்த்த பெற்றோரின்
சம்மதத்திற்காகவும் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும். முடிந்தவரை போராட
வேண்டும் முடியவில்லையென்றால் திருமணம் செய்து கொண்டு தினமும் அவர்களை
சமாதானம் செய்யவேண்டும்.
அவர்களின் சந்தோஷமே நம் சந்தோஷம், அவர்கள் இல்லாமல் நம் வாழ்க்கை
தொடங்காது, வம்சம் விருத்தி பெறவும் நாம் சந்தோஷமாய் வாழவும் அவர்களின்
ஆசீர்வாதம் என்றும் வேண்டும் என்பதை புரியவைக்க வேண்டும்.
பாசமும் காதலைப்போல உண்மையானதுதான். பேசும் விதத்தில் பேசினால் கல்லும்
கரையும். கனிபோன்ற அவர்களின் இதயம் கரையாதா?”
”அப்பா, நீங்கள் என் அப்பாவாய் கிடைத்தது எனக்கு மிகவும் பெருமையாய்
இருக்கிறது.” நந்தகுமார் தன் மகளின் தலையை ஆதரவாய் கோதினான்.
”போதும் உங்கள் காதல் புராணம், சாப்பாடு தயார்.  இருவரும் வந்து
சாப்பிடுங்கள்.” என்றாள் நந்தினி.
”பார்த்தாயா ஷாலு? உன் அம்மா நாம் பேசியதை உற்றுக்கேட்டுவிட்டாள்.”
”ஆமாம் நீங்க பேசியது பெரிய சிதம்பர ரகசியம் பாருங்க, நான்ட்
சமையலரையிலிருந்தே உற்றுக்கேட்டேன். அடச்செ இந்த அரைக்கதவை
நெருங்கியபோதுதான் கேட்டது. சரி சரி சீக்கிரம் வாங்க” எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்றாள்.
”அப்பா, அம்மாவை நீங்க காதலிக்கிறீங்களா? அல்லது கடமை, கணவனாக இருப்பதால்
மனைவி மீது இருக்கும் பொறுப்பா?“ ”இதை நீ என் நந்துகுட்டிகிட்டயே கேளு
ஷாலினி.“ ”சொல்லுங்க அம்மா ப்லீஸ்.” என்றாள்.
”அவர் என்னை காதலிக்கிறார். என்னை மட்டுமே என்றென்றும் காதலிப்பார்.” என்று
நாணத்துடன் காதலாய் தன் கணவனை பார்த்தபடி சொன்னாள்.
”அவ்வளவு நம்பிக்கையா அம்மா, எப்படி? அவர்தான் வேறொரு பெண்ணை காதலிச்சாரே?
எப்படி உங்கள் மீது காதல்வரும்? உங்களுக்கு பொறாமையாய் வருத்தமாய் இல்லையா?”
”அச்சோ ஷாலுமா குடும்பத்தில் இப்படி கும்மியடிக்கிறியே. அப்புறம் யார் அவளை
மலையிறக்குவது?” என்றான் நந்தகுமார்.
”எதற்கு பொறாமை ஷாலு. அவர் எல்லாவற்றையும் கல்யாணத்துக்கு முன்னாடியே
என்கிட்டே சொல்லிட்டார். அவளும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாள். இது அவரோட
கடந்தகாலம். அதுக்கு நான் மரியாதை தரணுமே தவிர வருத்தமோ பொறாமையோ படக்கூடாது.
எனக்கு என் காதல் மீது நம்பிக்கை இருந்தது. அவர் மனசை ஜெய்க்கமுடியும்னு
உறுதி இருந்தது. அவரும் யாரையும் துன்புறுத்தமாட்டார். அப்படியிருக்க என்னை
புரிஞ்சிக்குவார்னு தெளிவு இருந்தது. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்பறம்
சொல்லியிருந்தாலும் நான் அவரையும் அவரின் கடந்தகாலத்தையும் மதித்திருப்பேன்.
நம் காதல் காதலிப்போரை மதிக்க வேண்டும். அவர்களின் நுண்ணிய உணர்வுகளை
புரிந்துகொள்ள வேண்டும். எப்படிப்பட்ட நிலையையும் அமைதியாய் எதிர்கொள்ள
வேண்டும். ஆர்பாட்டம் செய்து அவர்களை அவமானப்படுத்தக்கூடாது.”
தன்னை முழுமையாய் புரிந்துவைத்திருக்கும் தன் மனைவியைப் பெருமையாய் பார்த்தான் நந்தகுமார். இவள் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டான்.
”அம்மா, அப்பா, நீங்க ரெண்டுபேரும் ரொம்ப லக்கி. நீங்க எனக்கு பெற்றோரா
கிடைச்சதுல நானும் லக்கி.” என்றாள் ஷாலினி.
மூவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டனர் ஒருவரை ஒருவர் கேலி செய்தபடி.
ஷாலினி தன் தந்தை சொன்னவற்றையெல்லாம் மனதில் ஏற்றி அந்த கட்டுரையை
எழுதினாள். முதல் பரிசும் பெற்றாள்.
இப்படி எல்லோரின் வாழ்விலும் ஒரு நெருஞ்சிமுள் நிச்சயம் இருக்கும்
இருந்தாலும் சிரித்து மகிழுங்கள். அன்பென்னும் களிம்புகொண்டு காயத்திற்கு
மருந்து போடுங்கள். மற்றவருக்கும் அந்த முள்ளை கொடுத்துவிடாதீர்கள். என்று
ஷாலினி கட்டுரையை முடித்ததை படித்துவிட்டு நந்தகுமாரும் நந்தினியும் மனம்
நெகிழ்ந்து சிரித்தனர்.
முற்றும்.