Tuesday 26 January 2021

மீண்டுமோர் சுதந்திர காற்று

    

போராட்ட விளக்கினில் குருதி எண்ணை ஊற்றி, தியாகத் திரித்தூண்டி ஏற்றிவைத்த தீபவொளி சுதந்திரம்.


எத்தனை உயிர் பறவைகள் வானில் பறந்திருக்கும். எத்தனை உறுப்புகள் குருதியில் குளித்திருக்கும்.


எத்தனை சிறைவாசம் எத்தனை அன்னியாதவாசம், அதன்பின்னே கிடைத்ததிந்த சுதந்திர சுவாசம்.


தெரிந்த தியாகிகள் சிலர். தெரியாத தியாகிகள் பலர்.


தெரிந்த தியாகத்திற்கு எழுத்துக்கள் சாட்சி. தெரியாத தியாகத்திற்கு எது சாட்சி?


மென்மையும் மேன்மையும் பொருந்திய பெண்களில் புயலாய் புறப்பட்டு புதுமை செய்தவர்தான் எத்தனை.


ருசியறிந்து உண்ண உணவிருந்தும் பசிக்குக்கூட உண்ண மனமிருந்ததில்லை.


அரண்மனை அந்தப்புறங்கள் ஆயிரமிருந்தும் ஆழ்ந்த நித்திரை கொண்டதில்லை.


பட்டுப்பீதாம்பரங்கள் பலயிருந்தும் போட்டுக்கொள்ள பொழுதிருந்ததில்லை.


எழுதி தீர்க்க ஏராளமிருந்தும் எழுத்து சுதந்திரம் இருந்ததில்லை.


எடுத்துக்கூற கருத்துக்கள் இருந்தும் பேச்சு சுதந்திரம் பெற்றதில்லை.


அடிமைத்தனம், அடிமைத்தனம் ஆங்காங்கே அடிமைத்தனம். ஆங்கிலேயரின் அடிமைத்தனம்.


அரும்பாடுபட்டு இரவுப்பொழுதில் தூங்கும் வேளையில் வாங்கினோம் சுதந்திரத்தை வெள்ளையரிடம். அதை பகலில் விழித்துக்கொண்டிருக்கும்போதே பரிகொடுத்தோம் இந்தியக்கொள்ளையரிடம்.


இன்றும் இந்தியா குருதியில் குளிக்கத்தான் செய்கிறது.


இன்றும் இந்திய வளங்கள் சுரண்டத்தான்படுகிறது.


இன்றும் இந்தியப்பெண்கள் பாதுகாப்பின்றித்தான் நடமாடுகிறார்கள்.


இன்றும் இந்திய நாகரீகம் சீர்குலைந்துதான் போகிறது.


இன்றும் எழுத்துக்கும் பேச்சுக்கும் எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் அதற்கு காரணம் வெள்ளையர்கள் அல்ல நம் இந்தியர்கள்.


அன்று இந்தியனுக்கு எதிரி வெள்ளையன். இன்று இந்தியனுக்கு எதிரி இந்தியன்.


அன்றைய சுதந்திரத்தை அவர்கள் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.


இலஞர்களே இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.

முயல்வோம் மீண்டுமோர் உண்மையான முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க.


இனி இந்தியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவது இந்தியர் கையில்.


 

Wednesday 20 January 2021

‘நானே என் முதல் ரசிகன்’

சமீபத்தில் வாசிப்பைவிட எழுத்தும் பதிப்பும் அதிகமாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் பெண் எழுத்தாளர்கள் இணயத்தில் நிறைய எழுதுகிறார்கள். காதல், நட்பு, காமெடி, பாசம், குடும்பம் இப்படி உள்ளத்து உணர்வுகளைமையமாகவைத்து எழுதி வருகின்றனர். இதற்கெல்லாம் பெரிய முன்மாதிரி எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்கள்தான்.

வீட்டு வேலை, படிப்பு, பணிச்சுமை இதற்கிடையில் பொழுதுபோக்காக ரமணி சந்திரன் நாவல்களைப் படித்து, அவர் எழுத்தில் கவரப்பட்டு, நாமும் இப்படி எழுதினால் என்ன? என நினைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்கள் எத்தனையோ பேர். இப்போது கிண்டிலில் பெண்கள் ராஜியம்தான் நடக்குது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறும் விஷயம் என்னவெனில், அப்படிப்பட்ட குடும்ப கதைகளுக்குள் நிச்சயம் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனை அடங்கியிருக்கும். பெயரைப் பார்த்துவிட்டு இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்று கடந்துவிடக்கூடாது.

எல்லா காலத்திலும் சமூகப் பிரச்சனைகளை ஒரு நாவலாக சித்தரிப்பது இருக்கிறதுதானே? எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எழுத்தாளர் சிவசங்கரி போன்றவர்களைக் கூட எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட கதை என்று  கடந்துவிடமுடியாத கதைதான் எழுத்தாளர் ஸ்ரீகலாவின் தாயுமாணவன். குறுநாவல் என்றாலும் அனைவரும் வாசிக்கக்கூடிய வாசிக்க வேண்டிய கதை.

தாயுமானவன் என்ற பெயரைப் படித்ததும் முதலில் நமக்கு என்ன தோன்றும்? ஒரு தந்தை தன் குழந்தைமேல் தாயைப்போல் பரிவு காட்டுகிறார். அல்லது கணவன் மனைவியின் மீது செலுத்தும் அன்பு தாய்க்கு நிகரானது. இப்படித்தானே தோன்றும். ஆனால் இது எதுவுமே இல்லை!

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை கணவன், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் சொல்வதில் தொடங்கி, மசக்கை அனுபவித்து, குழந்தையின் வளர்ச்சியை அனுஅனுவாய் ரசித்து, அதன் அசைவுகளை உயிருக்குள் சேமித்து, இரவும் பகலும் குழந்தைக்காக தன்னை கவணத்துடன் பார்த்துக்கொண்டு, பயம், கவலை, வேண்டுதல் போன்ற மனச்சுமைகளோடு பிரசவ வலியையும் தாங்கி குழந்தையை பெறுகிறாள்.

தன் இரத்தத்தை விருந்தாக்கி, முத்தத்தை மருந்தாக்கி, உடலுறுப்புகள் வளர்கிறதா, உணர்வுகள் புரிகிறதா, உரக்கம் வருகிறதா, உடல்நலம் சீராய் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து குழந்தையின் பாதுகாப்பு கவசமாகிறாள்.

முதல்நாள் பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அன்றாட வாழ்வில் நடப்பவைகளைக் கேட்டு பூரிப்பதில் தோழியாகிறாள். பாடமும் பண்பும் பயிற்றுவித்து பிள்ளையை பெரியோர் போற்றும் புகழோனாக்குவதில் நல்ல ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறாள். இப்படியே குழந்தை வளர்ப்பு தெளிந்த நீரோடையாகவே இருந்துவிட்டால் சரி. ஆனால் விதி ஓடையில் கல்லெறிந்து கலைத்துவிட்டால்? இறுதிவரை போராட்டம்தான்.

அதுதான் நடந்தது இந்த கதையில் வரும் தாய் ரங்கநாயகிக்கும் மகன் சியாமள கிருஷ்ணனுக்கும். சியாமளகிருஷ்ணன் தன் 10 வயதுவரை கிருஷ்ணனாகதான் இருந்தான். அக்கா, அண்ணன், தம்பியுடன் சந்தோஷமாகவே வாழ்க்கையைக் கடத்தினான். அவனின் 11ஆவது வயதில் பெண்களுக்கு வரவேண்டிய மாதவிடாய் சுழர்ச்சி வரவே, தாய் தந்தையர் பயந்துபோய் மருத்துவரிடம் சென்றனர். அவரோ (intersex) இருபாலுடல் அமைப்பினன் என்று தீராத துன்பச் செய்தியை தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினார்.

அதாவது இருபால் உடலமைப்பு என்றால் வெளிப்படையாக ஆணாக இருந்தாலும், உள்ளுறுப்புகளில் அதிகப்படியாக பெண்ணிற்கு  இருக்க வேண்டிய கர்பப்பை இருக்கும். அதனால் மாதவிடாய் போன்ற பெண்கள் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்றுமுதல் அவன் தந்தைக்கு வேண்டாதவனாகிவிட்டான். உடன்பிறப்புகள் ஒதுக்கும் பொருளானான். காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு எனும்போது கடவுளனுப்பிய பிரதிநிதியான தாய்க்கு மட்டும் அது பொருந்தாதா? ரங்கநாயகி தன் மகன் சியாமளகிருஷ்ணனை முழுமையான கிருஷ்ணனாக மாற்றவே தன் வாழ்நாளை செலவிட்டார்.

அவனைப் படிக்கவைத்தார். அவன் ஆயுள் முழுமைக்குமான தன்னம்பிக்கையைக் கொடுத்தார். காதல் கிட்டாத நிராசையில் அவன் கலங்கியபோது மகப்பேறு மருத்துவம் படிக்கச் சொன்னார். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனாலும், அவனால் பிரசவம் பார்க்கப்படும் அனைத்து குழந்தைகளும் அவன் குழந்தைகள் என நினைக்கச் சொன்னார். சியாமளகிருஷ்ணனும் இதையெல்லாம் மனதில் கொண்டு பிரபலமான மகப்பேறு மருத்துவரானான்.

தாயின் அறிவுரைப்படி சாதித்துவிட்டான். இநி தாயுமானவனாக வேண்டாமா? குழந்தைக்காக சிகிச்சைப்பெற வந்த பெண்ணிற்கு கர்பப்பையில் பிரச்சனை இருப்பதால் அதை நீக்கும் நிலை வரவே, அவர்களிடம் தன்னைப்பற்றிச் சொல்லி தன்னிடம் அதிகப்படியான உறுப்பாக இருந்த கர்பப்பையை தானமாக கொடுத்தான். பின்னர் மேற்படி சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தான். தன் கர்பப்பை மூலம் உதித்த குழந்தைக்கு தானே மானசீக தாயானான். தாயுமானவனானான்.

விதி அனைவருக்கும் பூப்பாதையை விரித்துவைத்திருப்பதில்லை. பலருக்கும் முள்பாதையைத்தான் விரித்துவைத்திருக்கும். அந்த முள்பாதையைப் பூப்பாதையாக மாற்றுவது மனிதனின் பொறுப்பு. திறமையும், திடமான நம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடலாம்.

பெண் என்பவள் தோற்றுக்கொண்டே ஜெயிப்பவள். எத்தனைத் தோல்விகளைச் சந்தித்தபோதும் மீண்டும் ஜெயிக்க என்னவழி என்று தேடித்தேடி அதை கையாள்பவள். இயல்பிலேயே பெண்ணின் குனம் இதுவாக இருக்க, அவளே தாயாக இருந்தால்? சிறந்த தாயானவள் தன் மகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனை சரியான பாதையில் வழிநடத்திச்சென்று இலக்கை அடையச் செய்வாள்.

இந்தக் கதையில் வரும் ரங்கநாயகியும் அப்படித்தான். ஊரும் உறவும் தன் மகனை ஒதுக்கிவிட்டபோதும், அவன் என்மகன். ஜெயிக்கப்பிறந்தவன். எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவன் என்று தானும் போராடி அவனையும் உலகத்தோடு போராடவைத்து இலக்கை அடையச் செய்தாள். இந்த உலகில் எத்தனையோ ரங்கநாயகிகள் வாழ்ந்து, மறைந்து, மீண்டும் பிறந்து, இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தன்னிடம் இருந்த குறையான கர்பப்பையை தானமாக கொடுத்து, தன் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கி மற்றவருக்கும் வாழ்வின்மேல் ஒரு பிடித்தத்தைக் கொடுத்து தாயுமானவனான சியாமளகிருஷ்ணனைப் போல ஏன் மற்றவரால் இருக்கமுடியாது? தானம் என்ற ஒரு சிறு செயல் எத்தகைய விந்தைகளை நிகழ்த்தியிருக்கிறது.

ஆறு மாதம் முன்பு விகடனில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சக்ரவர்த்தியின் கட்டுரை வெளிவந்தது. அதில் அவர் இருபால் உடலினன் என்றும், பலவித போராட்டங்களைச் சந்தித்து ஊடகத்துறையில் 20 வருஷங்களுக்குமேல் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முழு காரணமும் அவர் அம்மாதான் என்று பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.

 

Wednesday 13 January 2021

'நான் காணும் உலகம்'

சுருங்கிவிட்ட உலகம் சுயநலத்தின் கூடம்!

கொடூரப்புள்ளிகளால் இடப்பட்ட கோலம்!

நாட்டிலோ தந்திர ஆட்சி!

வீட்டிலோ எந்திர ஆட்சி!

பாசத்தைப் பங்குவைக்க ஆளில்லை!

பணத்தைப் பந்திவிரிக்க பாய்ந்து வருவோர் ஏராளம்!



இலையுதிர காணேன்!

ஈசலைப்போல் கொலையுதிரக் கண்டேன்!

அள்ளிக்கொடுக்கக் காணேன்!

வேறோர் பொருள் மட்டும் கொள்ளையடிக்கக் கண்டேன்!


பெண்ணுள்ளம் மதிக்கும் மனிதன் காணேன்!

பேதையவள் உடல் தின்னும் மிருகம் கண்டேன்!

அள்ளிப்பருகக் குடிநீர் காணேன்!

ஆறாய் பாயும் குறுதி கண்டேன்!


சாலைவிதிகள் மதிக்கக் கானேன்!

சாரை சாரையாய் விபத்துகள் கண்டேன்!

பாப்பாக்கள் ஆடும் ஆட்டங்கள் காணேன்!

அவை பாதுகாப்பு வளையத்தில் சிறைப்படக் கண்டேன்!


பிஞ்சை ரசிக்கும் நெஞ்சங்கள் காணேன்!

அதையும் புசித்து ரசிக்கும் ராட்சதம் கண்டேன்!

பசியும் பஞ்சமும் மறையக் காணேன்!

லஞ்சமும் வஞ்சமும் நிறையக் கண்டேன்!


வியாதிகளில்லா வீடுகள் காணேன்!

விதம்விதமாய் நோய்கள் கண்டேன்!

சுயநலம் பேணாத் தலமைக் காணேன்!

சூழ்ச்சிகள் நிறைந்த ஆட்சியைக் கண்டேன்!


அறிவை வளர்க்கும் கல்வியைக் காணேன்!

அரசியல் பேசும் கல்வியைக் கண்டேன்!

எழில் கொஞ்சும் இயற்கைக் காணேன்!

ஏய்ச்சிப்பிழைக்கும் செயற்கைக் கண்டேன்!


மூர்க்கங்கள் யாவும் முகவிழியால் காணேன்!

மூடியவிழிக்கு நன்றிகள் சொல்வேன்!


இயற்கையே! எனையாளும் விதியே! இறையே!

உம் மூவர் மீதில் ஆணை!


எப்போது அரக்கம் ஒழியக் காண்பேனோ!

எப்போது இரக்கம் பிரக்கக் காண்பேனோ!

எப்போது இதயம் மதிக்கக் காண்பேனோ!

எப்போது இல்லாமை விலகக் காண்பேனோ!


எப்போது எல்லாரும் எல்லாம் பெறக் காண்பேனோ!

எப்போது சமத்துவம் சமநீதி காண்பேனோ!

எப்போது அன்பும் அமைதியும் மலரக் காண்பேனோ!

எப்போது பண்பும் பொதுநலமும் மிளிரக் காண்பேனோ!


எப்போது மாண்புற வாழக் காண்பேனோ!

எப்போது மனிதம் சிறக்கக் காண்பேனோ!


அப்போதே என் விழிகள் திறக்கக் கேட்பேன்!

சாட்சிகளே, பதில் சொல்லுங்கள்!

இந்தத் தரணி சிறக்குமா?

என் விழிகள் என்றேனும் திறக்குமா?


பின் குறிப்பு:

வீட்டிற்கு தேவையில்லாத பொருட்களை கொளுத்திவிட்டு புதியவைகளை புகுத்துவதற்கு பதில் நாட்டிற்கு தேவையில்லாத கொடூரங்களை கொளுத்திவிட்டு  அன்பும் அமைதியும் புகுத்துவோம்.

அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!


 

Monday 4 January 2021

கலையாத கனவு.

அந்த அரசுப் பள்ளியிலுள்ள கடிகாரம் சரியாய் 9 முறை அடித்து ஓய்ந்த வேளை தாய் துர்காவின் கையைப்பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் ஏழு வயது சிறுமி அனுபமா.அவள் ஜீவா துர்காவின் ஒரே செல்லப் பெண்.


ஏழ்மையிலும் இனிமை காணும் குடும்பம். அத்தைமகன் மாமன் மகளென்பதால் மாமியார் மறுமகள் சண்டைக் காட்சிகளெல்லாம் இல்லை.அனு பிறந்தபோது மட்டும் சற்று துவண்ட குடும்பம் அதன்பின் தேறிக்கொண்டது.


அனைவரிடமும் அனுவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துர்கா கிளம்ப, தன் இருக்கையில் அமர்ந்தாள் அனு.அவள் பக்கத்து இருக்கையில் அவள் வயதை ஒத்த ஒரு பெண். அவள் அனுவிடம் மெல்ல பேசத் தொடங்க, இருவரும் சற்று நெருங்கினர்.


பள்ளியில் அனுவிற்குக் கிடைத்த முதலும் கடைசியுமான தோழியவள். இடைவேளை நேரத்தில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, அனு மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.ஏன் நானும் மற்றவரைப் போல் இல்லை என ஏங்கினாள்.


“நானும் விளையாட வரட்டுமா மீனா?” என்று ஆசைப் பொங்கக் கேட்ட அனுவை தான் இப்போது வருவதாகச் சொல்லி சென்றுவிட்டாள் அனுவின் ஒரே தோழி மீனா. சற்று நேரத்தில் ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, தான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை அனுவிற்கு.


அப்படியும் “நான் என்ன மிஸ் செய்யனும்?” என்று கேட்கத்தான் செய்தாள். ஆனால் அவரோ இதென்னடா நமக்கு வந்த தொல்லை என்று நினைத்தபடி “நீ அப்புறம் பிள்ளைங்ககிட்ட கேட்டு எழுதிக்கோம்மா” என்றுவிட்டார்.


யாருக்குமே தன்னைப் பிடிக்காதபோது யாரிடம் கேட்பது என்று வருந்தினாள் அனு. தன் அவசரத் தேவைக்குக் கூட யாரையும் கேட்க முடியாத தன் நிலையை நினைக்கும்போது அவளுக்கு கண்ணீர் பொங்கியது.


வீட்டிற்கு வந்து அனு தன் தாய் துர்காவிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவளைப் போகப் போக சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்திவிட்டு தனிமையில் தன் மகளை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.


மறுநாள் பள்ளியில் அனுவின் எழுதுகோள் பெட்டியை ஒரு பையன் மெல்லத் திருடிக்கொண்டான். அனு அதை உணர்ந்தாலும் கேட்க பயமாக இருந்தது. தோழி மீனாவிடம் சொன்னாள்.


அவள் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் மீனா அந்த பக்கம் நகர்ந்ததும் அவன் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டான்.இந்தமுறை அனுவே தைரியமாக அவனைக் கேட்க, அவன் அது அவனுடையது என்று சொல்லி ஏமாற்றினான்.அனுவின் மனதில் ஓர் பாதுகாப்பின்மை தோன்றியது.


இதை துர்காவிடம் அவள் சொல்ல, புது எழுதுகோள் பெட்டி வாங்கிக் கொடுத்தாள்.மகளை சமாதானப்படுத்தினாலும், வாய்விட்டே அழுதாள் துர்கா.மாமியார் தனம் அவளைத் தேற்றினார்.


“காக்கா அவ கண்ணைக் குத்திடுமோன்னு மூடி மூடி வைச்சேனே! கடவுள் குத்திடுவார்னு நினைக்கலயே அத்தை! நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணோம்னு நமக்கு இந்த சோதனை அத்தை!” எனக் கதறித் தீர்த்தாள். ”அழாதம்மா மரத்த வெச்சவன் நிச்சயம் தண்ணி ஊத்துவான்” என்று தன் வாக்கு விரைவில் பலிக்கப்போவது தெரியாமல் இயல்பாய் சொன்ன அந்த நொடியில் வானத்து தேவதைகள் ததாஸ்து சொல்லிச் சென்றனர்.


மகளைப் பற்றிய கவலையுடன் அன்றைய உரக்கத்தில் ஆழ்ந்திருந்த துர்காவிற்கு கனவு வந்தது. வெண்ணிற ஆடையணிந்த ஒரு மனிதர் வந்தார். கையில் துர்கா இதுவரைப் பார்த்திராத பொருட்களை வைத்திருந்தார்.


“மகளே! நான் சொல்லும் இடத்திற்கு உன் மகளை அழைத்துச் செல். அவளுக்கான படிப்பும் பாதுகாப்பும் காத்திருக்கிறது.” என்றுவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் சொன்ன வார்த்தைகள் அப்படியே மனதில் தங்கிவிட்டது.


கனவை நம்பி உடனே செயற்பட மனது இடம் தராததால் அதை அப்படியே தனக்குள் புதைத்துக்கொண்டாள். நாளாக நாளாக அனுவின் கஷ்டங்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.


அவளால் அந்த பள்ளியில் பொருந்த முடியாத நிலை வரவே துர்கா பள்ளிக்கே சென்று புகார் செய்தாள். ஆனால் அந்த ஆசிரியரோ ”இதோ பாரும்மா உங்க பெண்ணைப் பார்த்துக்க எங்களுக்கு தெரியலை. அது மட்டுமே எங்க வேலையுமில்லை. நீங்க வேற பள்ளியில் சேர்த்துக்கோங்க” என்று திடமாக சொல்லிவிட்டார்.


வேறு வழியின்றி அனுவை அழைத்துக்கொண்டு துர்கா வெளியே வர, அவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு பெண்மணியின் குரல். “அம்மா எனக்கு தெரிஞ்ச ஒரு பள்ளி இருக்கு. அங்கே உங்க பொண்ணு மாதிரி குழந்தைங்க படிக்கிறாங்க. விலாசம் தரேன் கூட்டிட்டு போய் பாருங்க.” என்று தன் கையில் வைத்திருந்த விலாசத்தை நீட்டினார்.


நன்றி சொல்லி அதை வாங்கிய துர்கா படித்துப் பார்க்காமலே பத்திரப்படுத்தினாள். வீட்டிற்கு வந்தவள் எந்திரத்தனமாகவே நாளை ஓட்டினாள். அன்று இரவு மீண்டும் அதே கனவு. அட்சரம் பிசகாமல் அதே வார்த்தைகள்.


அதைக் கேட்ட துர்காவிற்கு ஏதோ தோன்ற, உடனே எழுந்துபோய் தன் கைப்பையில் வைத்திருந்த விலாசத்தைப் பார்த்தாள். பார்த்தவள் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. காலையில் கணவனிடம் அந்த பெண்மணியைப் பற்றி மட்டும் சொல்லி அந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.


பார்வையற்றோருக்கான சிறப்புப்  பள்ளி கட்டிடம் அவர்களை வரவேற்றது. உள்ளே சென்ற அவள் தலைமை ஆசிரியரிடம் தங்களைப் பற்றிச் சொல்ல, அவர் அனுவிற்கு சில சோதனைகளை வைத்து புத்திசாலி பெண் என்று சிலாகித்து பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.


சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தைப் பற்றி இயல்பாய் கேட்டாள் துர்கா. “அவர்தான் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரையில்” என்று அவரைப் பற்றி சொல்ல, அவள் மனம் இனிய அதிர்வை உள் வாங்கியது.


தலைமை அன்னைக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அன்று இரவு துர்கா உரங்க செல்லும் முன் தன் அலைப் பேசியில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு உரங்கினாள்.


 நள்ளிரவில் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது துர்காவின் குரல். “உம் விழியின் ஒளியை இழந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உம்மையும் ஒளிமையமாக்கி, மற்றவர் வாழ்க்கையையும் ஒளிமையமாக்கிய உமக்கு கோடி நன்றி.”


பின் குறிப்பு: இன்று பிறந்தநாள் காணும் பிரெயில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரெயில் அவர்களுக்கு இந்தக் கதையைக் காணிக்கையாக்குகிறேன். உடல் மரித்தும் உயர்ந்து நிற்கும் நின் பேரும் புகழும் இன்றுபோல் என்றும் ஒளி மங்காதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.