Friday 16 October 2020

உண்மையின் உரத்த குரல்

சத்தியம்! இது சத்தியம்! எல்லாம்வல்ல இறைவனின் ஆணை! சொல்லப்போவது யாவையும் உண்மை -.

உண்மையை ஏற்பதும் எதிர்கொள்வதும் எல்லோருக்குமே ஒரு பெரிய சவால்தான். அந்த சவாலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், துக்கமும் சந்தோஷமும் சரிவிகிதத்தில் கிடைக்கும். வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டுமோ, அதே அளவு தைரியம் சாவதற்கும் வேண்டும். அதேபோலத்தான் பொய் சொல்வதற்கும் எந்தளவு துணிச்சல் வேண்டுமோ, அதைவிட பலமடங்கு துணிச்சல் உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் வேண்டும்.

உண்மையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வர். பலர் உண்மையை எதிர்கொள்ள தைரியமில்லாமல் ஓடி ஒளிவர், சிலர் தனக்கு மிகவும் நெருங்கியவரிடம் மட்டும் உண்மையை ஒப்புக்கொள்வர், இன்னும் சிலர் தன்னை நேசிக்கும் ஒருவரிடம் மட்டுமாவது நூறு சதவிகிதம் உண்மையைப் பகிர்ந்துவிட்டு நிர்மலமான மனதுடன் நிம்மதியாக வாழ்வர். ஆனால் இந்தப் புத்தகத்தை எழுதிய மனிதர் சற்று வித்தியாசமாக, தான் நேசிப்பவர்களிடமும், தன்னை நேசிப்பவர்களிடமும், தன் நடிப்பை ரசிக்கும் ரசிகர்களிடமும், தன் தொடரை வாசிக்கும் வாசகர்களிடமும் உண்மைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

சுமார் 13, 14 வருடங்களுக்குமுன் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எழுதியதே இந்தப் புத்தகம். சொல்லாததும் உண்மை. நெகிழவைத்து, நெஞ்சை கலங்கவைத்து, அதிரவைத்து, அடுத்தது என்னவருமோ என்று எதிர்பார்க்கவைக்கும் உண்மைகள் அடங்கிய புத்தகம்.

கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை என்று, அடையார் சிக்னலில் கார் நின்ற கணங்களில் சந்தித்த இறுதி ஊர்வல நிகழ்வையும், அப்போது தோன்றிய நினைவுகளையும் விளக்குவதில் தொடங்கும் இந்நூல், திடுக்கிடவைக்கும் உண்மைகளோடு, தடுக்கிவிழ இருப்போரையும் சற்றே தன்னம்பிக்கையோடு நடமாடத் தூண்டும்படியாக அமைந்திருக்கிறது.

சிறுவயது பருவம், இளமையில் வறுமை, ஈடில்லா உழைப்பு, உறுதிகொண்ட நெஞ்சம், ஊக்கப்படுத்திய சுற்றம், எண்ணிலடங்கா சாதனைகள், ஏறி சென்ற ஏணிப்படிகள். இப்படி சராசரி வரலாற்றுத் தொகுப்பாக இல்லாமல், தான் செய்த தவறுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன்மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், கசப்பும் இனிப்பும் கலந்தபடி கடந்துவந்த நிகழ்வுகள், நெஞ்சில் நிலைத்துவிட்ட நினைவுகள், விந்தையான மனிதர்கள், வாழ்வின்மேல் கொண்ட ஆசை என்று அனுபவங்களின் தொகுப்பாக எழுதியிருக்கும் புதுமையான புத்தகம் இது.

இந்த புத்தகத்தை எழுதியதன் நோக்கம், வியப்பை சம்பாதிக்கவோ, வெளிப்படைத்தன்மையை விளம்பரப்படுத்தவோ, வெற்றிப்பெற்ற வினாடிகளை வீரமுழக்கம் செய்யவோ, பரிதாபங்களை பார்சலில் பெற்றுக்கொள்ளவோ, செல்வாக்கை செழிக்கவைக்கவோ அல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

தன் வாழ்வின் இன்ப துன்பங்களைக் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, தனக்கு தான்தான் சித்ரகுப்தன் என்று அவரே இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை என்றுதான் எனக்குத் தோன்றியது. தான்பட்ட கஷ்டங்களிலிருந்து மற்றவருக்குப் பாடம் சொல்வது ஒருவகை. தெரிந்தோ தெரியாமலோ தான் பிறரைக் கஷ்டப்படுத்தியதிலிருந்து மற்றவருக்கு பக்குவம் சொல்வது இன்னொருவகை. இதில் இந்தப் புத்தகம் இரண்டாவது வகை.

பிரகாஷ்ராஜ் யார்? இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நல்ல மகன், காதல் கணவர், பாசமான தந்தை, குணமான மனிதர். இவையனைத்தையும் தாண்டி அவர் ஒரு பயணி, Traveller. அவரின் மின்னஞ்சல் முகவரியும் அப்படித்தான் இருப்பதாகத் தெரிய வந்தது. பணத்தை சம்பாதிப்பதும் செலவழிப்பதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்ந்து ரசிப்பது. அப்படித்தான் வாழ்ந்தார், வாழ்கிறார், இனியும் வாழப்போகிறார். தாயின் கருவிலிருந்து ஒருமுறை மட்டுமே பிறந்தாலும், தனக்குத்தானே பலமுறை பிறவியெடுத்துக்கொள்கிறார். தன்னை எப்போதும் குழந்தையாக நினைத்துக்கொண்டு கவலை எனும் குப்பைக்கூளங்களை நெருப்பிலிட்டு குதூகலத்தை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்கிறார்.

இந்த புத்தகத்தில் பெரும்பாலான மனித உணர்வுகளை அழகாக கையாண்டிருக்கிறார். அதில் முதல் உணர்வு. பயம்! பயங்கரவாதத்தால் ஏற்படும் பயம்! பாதுகாப்பின்மையால் ஏற்படும் பயம்! செக்கிங் என்ற பெயரில் செய்யும் இம்சைகளால் வரும் பயம். குண்டுவெடிப்பைப்பற்றி அவருக்கும், அவர் மகளுக்கும் நடக்கும் உரையாடல் நெஞ்சில் பல ஈட்டிகளை ஒன்றாகப் பாய்ச்சுகிறது.

குண்டுவெடிப்பவங்களைப் பார்த்தா சாமிக்கு பயமாப்பா? ஏன் அவங்க கண்ணைக்குத்தலை? நான் விடுற காத்தாடி பார்டர் தாண்டி பறந்தா என்ன பண்ணுவாங்கப்பா? மும்பை ட்ரையின்ல பாம்வெடிச்சாங்களே அங்கேயும் பார்டர் இருக்காப்பா? இந்தக் கேள்விகளுக்கு யாரால பதில் சொல்லமுடியும்? அப்படி முடிஞ்சிருந்தா பிரச்சனைகள் எப்பவோ பார்டர் தாண்டி பறந்திருக்கும். 

அடுத்தது காதல்!

காதலை ஒரு காலத்தில் காவியம் என்றனர். இன்று காலவிரயம் என்கின்றனர். பெற்றோருக்கு காதலைப்பற்றி தெரியவில்லை என்று பிள்ளைகள் ஆதங்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கு மட்டும் என்ன தெரிகிறது? எதற்காக உயிரே உயிரே என்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. எதற்காக உடனடி பிரேக் அப் செய்கிறார்கள் என்றும் புரியவில்லை. ஊரையே எதிர்த்து கல்யாணம் செய்து, கல்யாணத்திற்கு பிறகு காதலை கோட்டைவிடுகிறார்கள். அல்லது ஒருமுறைதான் ஒரு காதல்தான் என்று தற்கொலை செய்து பெற்ற பாவத்திற்கும், பழகிய பாவத்திற்கும் மற்றவர்களை தண்டிக்கிறார்கள்.

எதுதான் காதல்? எப்படி இருக்க வேண்டும் காதல்? எப்படிப்பட்டதாக காதல் இருக்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை நம் நடிகர் பிரகாஷ்ராஜ் உணர்வுப்பூர்வமான கதைகள், கவிதைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள்மூலம் விளக்கியிருக்கிறார்.அவர் காதலிகளை காதலிக்கவில்லை. காதலை காதலிக்கிறார். அதனால்தான் காதலிகள் மாறினாலும் காதலின் தீவிரம் அப்படியே இருக்கிறது. அவருக்கு காதல் உடலிலும் உள்ளத்திலும் நிகழும் அழகான மாற்றம். அது அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இவர் எப்படிப்பட்ட காதலர்? டாக்டர் க்ருதியா எழுதிய இந்த கஜல் பாட்டைப்போலவாம்.

காதல் என்பது காவியம்தான். அதில் நான்

எழுத்தாய் சிறைபட விரும்பவில்லை.


காதல் என்பது நூலகம்தான். அதில் நான்

பல பேர் கைப்பட விரும்பவில்லை.


காதல் என்பது சந்நிதிதான். அதில் நான்

சிலையாய் இருப்பதில் விருப்பமில்லை.


காதல் என்பது சொர்க்கம்தான். அதில்

போனவர் யாரும் திரும்பவில்லை. அதனால்

காதலை எப்படித்தான் நம்புவதோ?’ இந்த கேரக்டர்தான் பிரகாஷ்ராஜ். 

தாய்மை! 

கணவன் இல்லாமல் நர்ஸ் வேலை செய்து 3 பிள்ளைகளையும் வளர்த்து, கஷ்டமே தெரியாமல் பார்த்துக்கொண்டது மட்டுமல்லாமல் சுயமாக சிந்தித்து வாழவும் கற்றுத்தந்த அவர் தாயைப்பற்றிய நெகிழ்வான நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். 77 வயதான தன்னை ஒரு தேவதைப்போல பார்த்துக்கொள்வதாக அவர் தாய் மகிழ்ச்சியாக பேட்டியளித்திருக்கிறார்.

தன் மகன் சித்தார்த்தன் இறந்தபோது, தாய்மையின் பலமெல்லாம் ஒன்று திரட்டி அவர் மனைவி அவர் கன்னத்தில் அறைந்ததை அவமானமாக எண்ணாமல், அவர்களுக்குத் தரமுடிந்த ஆறுதல் என்று தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். பத்துமாதம் சுமந்தவருக்கே இழப்பு அதிகம் என்றெண்ணி வேலைகளை ஒதுக்கிவிட்டு அவர் மனைவிக்கு அமைதியான ஆறுதலளித்தார்.

பிள்ளையின் இழப்பை இன்னொரு பிள்ளை கொஞ்சமேனும் மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தவருடமே ஒருவருக்கொருவர் ஒரு குட்டி தேவதையை பரிசளித்துக்கொண்டனர். தாய்மையை அவர் பூஜிப்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? 

நட்பு!

அறையில் தன் காதலியோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது. ஜன்னலில் எட்டிப்பார்த்தபோது வெளியே அவர் நண்பன் முகம்நிறைய சோகத்தைத் தாங்கியபடி நின்றிருந்தார். அந்தக் காதலியோ நண்பனின் தோழி. கதவை திறக்க வேண்டாம் என்று காதலி சொல்ல, நான் பிறகு பார்க்கிறேன். கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் என்று நண்பனை அனுப்பிவிட்டார். பிறகு பார்க்கவே முடியாமல் போனது. ஒருமணிநேரத்தில் ஃபோன் தான் வந்தது. நண்பன் தற்கொலை செய்துகொண்டார் என்று. நண்பனுக்கு கடைசி ஆறுதலைத் தரமுடியாத குற்ற உணர்ச்சி இன்னும் அவர் இதயத்தை வாள்கொண்டு அறுக்கிறது. அப்போதிலிருந்து யார் கஷ்டம் என்று வந்தாலும் 5 நிமிடம் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலாக பேசிவிட்டே செல்கிறார்.

இன்றைய அவசர உலகில் நாம் செய்யும் மாபெரும் தவறு இதுதான். நேரமில்லை, வேலை இருக்கு, பிறகு பார்க்கலாம்.இந்த 3 வார்த்தைகளையும் எப்போதும் உபயோகித்து நட்பையும் உறவையும் தள்ளிவைக்கிறோம். ஆனால் நாம் அருகில் செல்ல நினைக்கும்போது காலம் கடக்காமல் இருக்குமா? நிச்சயம் இல்லை. காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரத்தையும் அன்பையும் நம்மைத் தேடி வருவோருக்கு தயங்காமல் பகிர்ந்தளிப்போம். 

பக்தி!

பெரும்பாலான நாத்திகர்கள் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையை எதுவும் சொல்வதில்லை. அந்த நம்பிக்கையால்  அடுத்தவருக்கு பாதிப்பு வரும்போதுதான் எதிர்க்கிறார்கள். பிரகாஷ்ராஜ் அவர்களும் அப்படித்தான். அம்மாவின் வாழ்வில் ஒரே ஒரு பிடிமானமான பிரார்த்தனையை அவர் மதிக்கிறார். மனைவியின் பூஜை முறைகளை எதிர்க்கவில்லை. மகளை பள்ளியில் சேர்க்கும்போது மதத்தை போடமாட்டேன் என்று கோர்ட்டில் வாதாடிதான் பள்ளியில் சேர்த்திருக்கிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டபோதும் அவரைக் காப்பாற்றியவரைத்தான் நினைத்தாரே தவிர கடவுளை அல்ல. அதே பிரகாஷ்ராஜ் அவர்கள் விதவைகள் விசேஷங்களுக்கு போகக்கூடாது போன்ற மற்றவரை பாதிக்கும் மூட நம்பிக்கைகளை ஆதரிக்கவில்லை.

ஒரு நம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டுமென்றால், அதற்கு ஈடாக இன்னொரு நம்பிக்கையைத் தரவேண்டும். இல்லையென்றால் அந்த நம்பிக்கையில் கைவைக்கக்கூடாது என்பதைக் கன்னட எழுத்தாளர் ஆனந்தன் எழுதிய ‘நான் கொன்ற பெண்’ கதையின் வழியே அழகாகச் சொல்லியிருக்கிறார்.

திமிர்! வெற்றி!

தோல்வியில் வரும் திமிர்தான் வெற்றிக்கு வழி செய்யும். வெற்றியில் வரும் திமிர் நம்மை அசிங்கமாக்கிவிடும். எனக்கு இருக்கும் பயம் வெற்றிதான் என்னும்போது உண்மையை ஏற்காமல் இருக்கமுடியுமா? ஆபாசபடங்களில், அருவா சண்டைக் காட்சிகளில் பெறும் வெற்றியைவிட அழகிய தீயே, மொழி, பொய் போன்ற படங்களின் வெற்றியே நிஜமான வெற்றி என்ற அழகான உண்மையை அற்புதமாக எழுத்தாக்கியிருக்கிறார்.

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். தான் இல்லாமல் எதுவும் நடக்காது என்றிருந்தவரை தான் நலமாக அழகாக இருந்தால் தன்னைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறமும் அழகாக இருக்கும் என்று மாற்றிய அவர் கல்லூரி நாடக ஒத்திகை அனுபவம் சுவாரசியமானது.

காமம் கோபம்! 

காமத்தைப்பற்றிய மனநல மருத்துவர், கவிஞர்கள் ஆகியோரின் கூற்றுகள் உண்மையாக இருப்பின், இவரின் கூற்றும் சரியே. நான் கோபக்காரந்தான். எனக்கு ஏன் கோபம் வரும்? எப்போது கோபம் வரும் என்று எனக்குத் தெரியாது. இதைப் புரிந்து என்னை அப்படியே ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னோடு தொடர்ந்து நட்பு பாராட்டமுடியும் என்ற வார்த்தைகள் எனக்கே என்னை ஞாபகப்படுத்தியது. நான் என் நண்பர்களிடம் வைக்கும் முதலும் கடைசியுமான நிபந்தனை இதுதான். அவர்களும் இதைப் புரிந்து இன்றுவரை நட்பாக இருக்கிறார்கள்.

கணவன் மனைவி வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். எப்படி இருந்தால் வாழ்க்கையில் காதலின் தித்திப்பு குறையாமல் இருக்கும் என்பதையும் தான் படித்த, தான் அனுபவித்த அனுபவங்கள் மூலம் வார்த்தை ஓவியம் வரைந்திருக்கிறார். சொன்ன கையளவு உண்மைக்கே அவர் தண்டிக்கப்படுவதாகவும், இழப்புகளைச் சந்திப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரின் இந்த வெளிப்படையான தைரியத்திற்காகவே உண்மைகளை ஏற்கலாம். 

எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும்போது மேலே குறிப்பிட்ட பாடலும், நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள், உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள் என்ற பாடலும்தான் நினைவு வந்தது.

செய்த உணவு சுவையாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்று தேவையான பொருட்களால் அலங்கரிப்பதுபோல, சொன்ன விஷயங்கள் மேலும் சுவையாக இருக்க இலக்கியத்தை இணைத்துச் சொல்லியிருப்பது இனிமையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நடிப்பு ஆர்வத்தோடு படிக்கும் ஆர்வமும் சரிவிகிதத்தில் இருப்பதும் புரிகிறது.

எல்லோரும் பிரகாஷ்ராஜ் ஆகமுடியாது என்றாலும், இந்த புத்தகத்தைப் படிக்கும்போதாவது, பொய் என்ற போலி முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, நமக்கு நாமே நம் வாழ்வின் அழகான பக்கங்களைப் புரட்டிப்பார்த்துக்கொள்வோம். செய்த தவறுகளும் புரியும். செய்ய வேண்டிய நன்மைகளும் தெரியும்.

             

10 comments:

  1. பதிவை வாசித்து வரும்போதே புத்தகம் கண்டிப்பாக வாசித்துவிடனும்னு தோனிச்சு.

    ReplyDelete
  2. நல்லதொரு வாசிப்பனுபவம் அபி. சற்றே இடைவெளிக்குப்பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு! வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். நிச்சயம் பதிவுகளை தொடர்கிறேன்.

      Delete
  3. தொடராக வந்தபோது வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடரை வாசித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி சார்.

      Delete
  4. புத்தகம் நிறைய நல்ல விடயங்களை தருகிறது என்பதை தங்களது விமர்சனம் உணர்த்துகிறது.

    ஆனால் இவைகளில் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜின் நடைமுறை வாழ்க்கை முரண் பட்டு இருப்பதை சற்று யோசித்துப் பார்க்கிறேன்.

    அப்பாடலையே நானும் நினைவு கூர்கிறேன்...

    //நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்//

    ReplyDelete
    Replies
    1. ஒரே பாடல் நினைவுக்கு வந்ததில் மகிழ்ச்சி சார். அப்படி பெரிதாய் எந்த மாற்றமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லையே. zeethamil weakened stars நேர்கானலில் வெளிப்படையாக இருமனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். அவர் தாயை இயல்பாக அவ என்றுதான் பேசினார். இந்த புத்தகத்திலும் விவாகரத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இதை யார்தான் செய்யவில்லை. அவர் அரசியல் பேச்சுகள் எனக்கு பிடிக்கவில்லை.

      Delete
  5. வெகு நாட்களுக்கு பின் உன் தறமான நூல் அரிமுகம் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார்.

      Delete