Sunday 29 November 2020

’என் அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில்’

சிலிர்க்கவைக்கும் குளிரழகு,

வியர்வை துளிர்க்கவைக்கும் வெயிலழகு!


மலர்களின் மணமழகு,

மெய் தீண்டும் காற்றழகு!


வளர்ந்து நிற்கும் மரமழகு,

அந்த மரங்கள் தரும் நிழலழகு!


பறவைகளின் ஒலியழகு,

பாய்ந்துவரும் அலையழகு!


படிப்பென்றால் வரிகள் அழகு,

நடிப்பென்றால் வசனம் அழகு!


பேச்சென்றால் குரலழகு,

பாடும் பாட்டென்றால் ராகம் அழகு!


அநீதியற்ற நாடழகு,

அழுகுரலில்லா வீடழகு!


அள்ளிக்கொடுக்கும் உள்ளங்கை அழகு,

ஆபத்தில் உதவும் தோழமை அழகு!


இரவை நிறைக்கும் கனவுகள் அழகு,

இதயம் ததும்பும் நினைவுகள் அழகு!


உயிர் தந்த பெற்றோர் அழகு,

உடல் சுமக்கும் பூமித்தாய் அழகு!


உள்ளத்தை நேசிக்கும் உறவழகு,

உலகை வெல்லச்செய்யும் அறிவழகு!


மென்மை நிறைந்த பெண்மை அழகு,

அதை மேன்மைபடுத்தும் ஆண்மை அழகு!


நனைத்துச்செல்லும் மழையழகு,

நகைத்துப் பேசும் மழலை அழகு!


வறுமையில்லா இளமை அழகு,

அந்த வறுமையை விரட்டும் திறமை அழகு!


வார்த்தை மணியால் கோர்க்கப்படும் கவிதை அழகு,

அதை எழுத வித்திடும் கற்பனை அழகு!


மானிடர்க்கெல்லாம் மனம் அழகு,

அந்த மனமே என் அகவிழி காணும் பேரழகு!


அழகென்பது யாதெனில்,

கண்ணால் கண்டு ரசித்துவிட்டு கடந்து செல்வதல்ல.


உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

ஆம்! அழகென்பது உணர்வுகளால் உள்வாங்கி உயிர் வங்கியில் சேமிப்பது!

                                                                                             

5 comments: