Monday 15 August 2022

காலதேவனின் தீர்ப்பு.


நதிக்குத் துணை இரு கரைகள் மட்டும்தான். ஒரு நல்ல சிந்தனையாளனுக்குத் துணை, அவனைப் போல் சிந்திக்கும் சக மனிதந்தான். என்ற வரிகளுக்கேற்ப ஒரே அலை வரிசையில் சிந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து, பேசி, பழகி காதல் கொண்டால் எப்படி இருக்கும்? காமம் கடந்த காவியக் காதலாக இருக்கும். காதலர்களின் உடல்கள் அழிந்தாலும், அவர்களின் உள்ளமும், அதில் பொங்கிவந்த காதல் வெள்ளமும், என்றும் வாழும். அழகான அரிதான காதலென்றால் அது இதுதான்.



பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல, அன்பு, பண்பு, அழகு, அறிவு , ஒழுக்கம், சமூக அக்கறை, என்று அனைத்தையும் வார்த்தெடுத்த தங்கச் சிலைகளாக மனிதர்கள் பிறப்பது எல்லாக் காலத்திலும் மிக மிக அரிதான ஒன்று. அப்படி அரிதாகப் பிறந்த இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளையும், உயர்ந்த காதலையும், குருஞ்சி மலர் என்னும் நாவலில் தமிழ் தூரிகை கொண்டு ஓவியம் வடித்திருக்கிரார் என் உள்ளத்தைத் தன் எழுத்துக்களால் உரையவைத்து, உருகவைத்த எழுத்தாளர் திரு நா. பார்த்தசாரதி அவர்கள்.



அரவிந்தன்: அரவிந்தன் என்பதர்க்கு அறிவார்ந்த விந்தை மனிதன் என்று பொருள். கம்பீரமான அழகும், கவர்ந்திழுக்கும் புன்னகையும், கருணை உள்ளமும், வற்றாத அருவி போன்ற அறிவும் கொண்டவனாக இருப்பினும், அகந்தையோ, ஆணவமோ சிறிதும் இல்லாமல், அன்பு, அறம், அகிம்சை இவை மூன்றும் தானும் பின்பற்றி, மற்றவர்களுக்கும் போதிக்கும் விந்தை மனிதன். சாப்பிடுவதில்கூட, சமூகத்திற்குப் போகத்தான் தனக்கு என்று நினைக்கும் தன்னலமற்ற இளைஞன்.



பூரணி: பூரணி என்பதற்கு பூரணத்துவம் என்று பொருள். தங்கப் பதுமை போன்ற அழகும், தேனருவி போன்ற தமிழும் கொண்ட தன்மானம் நிறைந்த பெண்ணாய்த் திகழ்பவள் பூரணி. பண்புக்கும் பெண்மைக்கும் இலக்கணமாய், உடன் பிறந்த தம்பி தங்கைக்கு இளம் தாயாய், அவர்களுக்கு அமுதளிப்பதில் அன்னபூரணியாய் வாழ்ந்து, சமூக நலனுக்கும், தமிழ் பணிக்கும், தன்னைப் பூரணமாய் அர்ப்பணித்தவள் பூரணி.



பண்பின் சிகரங்களான இவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், கடந்துவந்த இன்ப துன்பங்களும், கடக்க முடியாத மெல்லிய உணர்வுகளின் கோர்வையே இந்த குறிஞ்சி மலர் கதை.



தமிழையே தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த பேராசிரியரும் பூரணியின் தந்தையுமான அழகிய சிற்றம்பலத்தின் இறப்பிற்கு பிறகு கவலைகளை மட்டுமே தன் ஆதரவாக கொண்டு, குடும்ப பொறுப்பை தலையிலும், பசி மயக்கத்தை உடலிலும், பாச மயக்கத்தை உள்ளத்திலும் கொண்டிருந்த நேரத்தில்தான் மீனாட்சி அச்சகத்தில் பணிபுரியும் சமூக நலம்விரும்பியான அரவிந்தனை சந்திக்கிறாள் பூரணி. தந்தையின் புத்தகங்களை வெளியிடும் நிமித்தமாக தன்னை காணவரும் அரவிந்தனை திருடி தன் உள்ளத்துக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள் அவள். தமிழர் பண்பு பட்டினியால் தெருவில் மயங்கிக்கிடந்தபோது  தன் கவியுள்ளம் பொங்க பாடும் அரவிந்தன், அவளை நேரில் கண்டு பழகும் வாய்ப்பு கிடைத்தபோது பக்தியும் காதலும் கலந்த உள்ளத்தை அவளுக்காய் அற்பணிக்கிறான்.



அதன்பிறகு இருவரின் இதயத்திலும் காதலோடு உயர்ந்த கருத்துக்களும் மணத்தது. இரசாயன மாற்றம் நிகழும் பேச்சுக்களை பேசி மகிழும் சராசரி காதலர்களாக இல்லாமல் சமூக சிந்தனைகளைத் தூண்டும் சீறிய கருத்துக்களைப் பேசினர். புற அழகையும் உள்ளத்து உணர்வுகளை எழுதுவதில் கூட எழுத்தாளர் தமிழோடு சுவையாக விளையாடி இருப்பது என்னைக் கவர்ந்தது. எண்ணங்களால் பாலம் அமைத்து இருவரும் கைக்கோர்த்து நடந்தனர். மணமாலையை மனதுக்குச் சூட்டி உவகைக் கொண்டனர்.

காதலன் காதலியை கௌரவித்து உயரத்தூக்கிப் பார்த்து ரசிப்பதே உண்மைக் காதல். கருத்துப் புதையலை தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருக்கும் காதலியை உலகறிய செய்ய பாடுபடும் அரவிந்தன், உலகை நேசிக்கும் அரவிந்தனின் உடல் நலனையும் உள்ளத்து நலனையும் பேணிக்காக்க தவிக்கும் தாயாய் பூரணி. இதைவிட இலக்கிய காதலுக்கு அடையாளம் வேறென்ன வேண்டும்?



அழகிய கொடிகளாக இருப்பினும் அது நன்றாக படர கொழுகொம்பு துணையாக வேண்டும். அதுபோல அரவிந்தனும் பூரணியும் வாழ்வில் உயர்ந்தோங்க துணை புரிந்த கொழுகொம்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா. "களவுக்குப் போகும் பணத்தை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா, பூட்டுக்கு மேலே பூட்டைப்போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா” என்று நினைக்கும் வள்ளண்மை கொண்ட மங்கலேஸ்வரி அம்மா பூரணிக்கும் அவள் தம்பி தங்கைக்கும் இன்னொரு தாயானார். முதலாளியாக சம்பளத்தை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடாமல் அரவிந்தனுக்கு தேவையானதைச் செய்து தோள்கொடுக்கும் தோழனாய், தாங்கிப்பிடித்து நல்வழிப்படுத்தும் தகப்பனானார் மீனாட்சி சுந்தரம்.



நெருங்கிய தோழிகளாக இருப்பினும் இம்மியளவும் என் கவலைகளை யாரிடமும் வெளியிடமாட்டேன் என்று தன்மானம் காக்கும் பூரணியின் தேவைகளை தானாக புரிந்துகொண்டு நாங்கள் எங்கள் தோழிக்கு செய்வோம் இது எங்கள் கடமை. இதை மறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை என்று உரிமைகீதம் பாடும் கமலாவும் காமாட்சியும் பூரணி சாய்ந்துகொள்ளும் தோள்களானார்கள். அமைதிக்கு இலக்கணம் அரவிந்தன் என்றால், புரட்சிகரமான கருத்துக்களுக்கு இலக்கணம் முருகானந்தம். முரட்டுத் தோற்றமாக இருந்தாலும் மென்மையான மனம் கொண்ட முருகானந்தம், எதிர்மறை கருத்துக்களை நாங்கள் கொண்டிருந்தாலும் எங்கள் நட்பை எவரும் பிரிக்க இயலாது என்று சொல்லி நட்பிற்கு இலக்கணமானான்.



அன்னையாய் வாழும் அக்காவிற்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் அவள் கஷ்டங்களை புரிந்து பாசத்தை மட்டுமே பரிசளிக்கும் தம்பி தங்கை பூரணியின் குழந்தைகளானார்கள். பூரணியின் சொற்பொழிவையும் அவள் அன்பான அறிவுரைகளையும் கேட்டு நடக்கும் மங்கலேஸ்வரியின் மகள்களான வசந்தாவும் செல்லமும் பூரணியின் உடன்பிறவா சகோதரிகளானார்கள். நல்லவர் நல்லவரோடு சேரும்போது நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு நல்லதொரு சான்று மேலே குறிப்பிட்டுள்ள கதா பாத்திரங்கள்.



அழகான பறவைகள் மீட்டும் அனுராகங்களுக்கிடையில் அபஸ்வரம் தோன்றுவதைப் போல இக்கதையிலும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். கடைசிவரை கோபம் கொள்ளக்கூடாது, குறுநகைக்கொண்டே வாகைசூட வேண்டும். அகிம்சையே அரவிந்தனின் கொள்கையென வாழ்ந்த அரவிந்தனின் உள்ளத்தையே உலுக்கிப்போடுகிறது இவர்களின் செயல். சில மனிதர்கள் தன் வேலையை தானும் ஒழுங்காக செய்யமாட்டார்கள், அதே வேலையை அடுத்தவர்கள் முறையாக செய்ய நினைத்தாலும் விடமாட்டார்கள். இந்தக் கதையில் வரும் புதுமண்டபத்து அச்சகக்காரரை போல. பர்மாவிலிருந்து சூதும் சூட்சுமத்தையும் சம்பாதித்துக் கொண்டுவருகிறார் பர்மாக்காரர். இவர்களின் வரவால் அழகாய் அமைதியாய் தெளிந்த நீரோடையாய் சென்றுகொண்டிருந்த அரவிந்தன் பூரணி வாழ்க்கையே ஆட்டம் காண்கிறது. நேர்மைக்காக இவர்களிடமிருந்து அரவிந்தன் பெறும் கொடுமையான பரிசுகள் ஏராளம்.



உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கும் அரவிந்தன் பூரணியை மணம் முடித்துக்கொள்வதுதான் மகத்தான லட்சியம் என்று வற்புறுத்துகிறார்கள் அவர்களின் நலம்விரும்பிகள். எண்ணத்தால் வாழும் வாழ்க்கை மட்டும் சில காலத்திற்கு போதும் என்கிறான் அரவிந்தன். என்னவன் எண்ணம் எதுவோ அதுவே என் எண்ணம் என்கிறாள் பூரணி. மனிதவெள்ளத்தின் நடுவே ஒளிதீபம் ஏந்திச் செல்லும் கனவு காணும் பூரணி ஒருபுறமும், மனிதகுலத்தில் பிறந்த சராசரி பெண்ணாக தன் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் பூரணி ஒரு புறமுமாக அரவிந்தனின் இதயத்தில் ஆட்சி செய்து அவனை இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவிட்டார்கள். இதில் யாருடைய கனவு நிரைவேறிற்று? இரண்டு பூரணிகளுள் அரவிந்தன் அடைந்த பூரணி யார்? உயரே செல்லும் போட்டியில் வெற்றிப்பெற்றது யார்? இதையெல்லாம் நான் சொன்னால் சுவை குன்றிவிடும். நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது சுதந்திரமில்லை. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படி கட்டுப்பாடோடு வாழ்ந்தாலும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டும் என்பதே சுதந்திரம். இதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புரிந்துகொண்டால் தரணியே பண்பட்டு விளங்கும்.



ஆண்டவன் என்பது அவரவர் நம்பிக்கை. ஆனால் காலம் என்பது அனைவருக்கும் பொதுவான உண்மை. பூமி சுழலும்போது மாறுவது காலங்கள் மட்டுமல்ல அனைவரது கோலங்களும்தான். சில காலம் இன்பத்தில் மிதந்தவர் பல காலம் துன்பத்திற்கு ஆளாகலாம். பல காலம் துன்பத்தில் உழன்றவர் சில காலமாவது இன்பமாய் வாழலாம். இது காலதேவனின் கணிக்க முடியா தீர்ப்பு. நடமாடும் மனிதர்களான நாம் அனைவருமே ஓடும் காலச்சிறையில் ஆயுள் கைதிகள். சுதந்திரமாய் சுற்றிவரும் பூமியில் நாம் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதிகள். இந்த அழுத்தமான உண்மையை உணர்வோர் மட்டுமே இன்பமோ துன்பமோ எது வந்தாலும் சமநிலை இதயத்தோடு இறுதிவரை இவ்வுலகில் உய்ய முடியும்.



தமிழென்னும் உளிகொண்டு காலத்தின் மதிப்பையும், காதலின் மகத்துவத்தையும், பண்பாட்டின் புனிதத்தையும், மனிதநேயத்தின் மாண்பையும் எல்லோரது இதயத்திலும் அழியா சிற்பமாய் செதுக்கிய எழுத்தாளர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


                             

1 comment:

  1. சிறப்பு அபி. நானும் இந்நூலை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

    ReplyDelete