Saturday 13 August 2022

உலகத்தொடு ஒட்ட ஒழுகல்

வணக்கம் நண்பர்களே. இந்த விமர்சனக் கட்டுரை எனது நெருங்கிய நண்பரான திரு. தர்மபாலன் எழுதியது. கண்ணன்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் அவர், பேச்சு, பாட்டு, பகுத்தறிவு சிந்தனை, மொழித்திறன் பொது அறிவுக் கூர்மை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குபவர். அவர் எழுத்துலகிலும் தடம் பதிக்க முடிவு செய்து எழுதியிருக்கும் முதல் பதிவு இது. படித்துவிட்டு தங்களின் மேலான கருட்துக்களைச் சொல்லுங்கள்.


உலகத்தொடு ஒட்ட ஒழுகல்.

அனைத்தையும் துறந்துவிட்ட பட்டினத்தடிகள், ஒருமுறை வயலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தண்ணீர் எடுக்கப் போன இரண்டு பெண்களில் ஒருத்தி அவரைப் பார்த்து, இவர் எவ்வளவு பெரிய துறவி தெரியுமா என்று கேட்டாள். அதற்கு இரண்டாமாவள் இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய துறவி இல்லை, அப்படி உண்மையான துறவியாக இருந்திருந்தால் வயலில் படுத்து வரப்பில் தலை வைத்து உறங்கமாட்டார் என்று சொன்னாள். அந்தப் பெண்கள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டு போனதைக் கவனித்த பட்டினத்தடிகள் உடனடியாக வரப்பிலிருந்து தலையை எடுத்து வயலில் வைத்துக் கொண்டார். தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பிவரும்பொழுது இதைக் கவனித்த இரண்டாம் அவள், நீ சொன்னதைக் கேட்டு தனது தவறைத் திருத்திக் கொண்ட இவர் உண்மையான துறவிதானே என்று கேட்டாள். அதற்கு முதல் பெண் இப்போதும் நான் இவரை ஒரு துறவி என்று ஒப்புக் கொள்ளமாட்டேன், ஏனென்றால், இவர் மற்றவர்கள் பேசிக் கொண்டு போவதையெல்லாம் ஒட்டு கேட்கிறார் என்று சொன்னாள். அப்படியானால், துறவு என்பதன் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பது பற்றி ஆராயும் விமர்சனக் கட்டுரைதான் இது.



பொதுவாக, துறவு என்பது உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதைக் குறிக்கும். திருக்குறள்கூட அவ்வாறுதான் சொல்கிறது. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்பதுதான் அந்த குறள். ஆனால் இந்தக் கருத்தை வேறுவிதமாக அணுகுகிறார் தமிழ் சிறுகதை உலகின் மகத்தான ஆளுமையான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். அவர் எழுதிய துறவு என்ற சிறுகதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.



சிதம்பரத்திலுள்ள ஒரு தெருவில் இரண்டு பக்கத்துவீட்டுப் பெண்கள். அந்த இரண்டு வீடுகளையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் அவ்வீட்டு வாசலில் அமர்ந்தபடிப் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. பங்கஜம் மற்றும் மரகதம் என்ற அவ்விரு பெண்கள் நிகழ்த்திய உரையாடலின் சாரம் என்பது பங்கஜத்தின் கணவர் சதாசிவம் பிள்ளை மற்றும் அவளது மூத்த மகன் சோமுவைப் பற்றியது. குறிப்பாக சோமுவைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறாள் பங்கஜம். அதற்குக் காரணம் அவனது மிதமிஞ்சிய பக்தி. எட்டாம் வகுப்புத் தேர்வில் அவனுக்கு ஏர்ப்பட்ட தோல்விக்குப் பிறகு, அவனது தந்தையின் கண்டிப்பான உத்தரவு அவன் எப்போதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது. விளையாட்டு உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கும் அவனுக்குக் கிடையாது. அவனது மற்ற இரண்டு தம்பிகளும் தங்கை ராஜியுடன் விளையாடிக் கொண்டிருக்க சோமுவிற்கு மட்டும் எப்போதும் படிப்புதான். மகனின் நிலை கண்டு இரக்கமுற்ற தாய் பங்கஜம், ஒரு நாள் சோமுவை அழைத்து கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபட்டு வருமாறும் அப்பாவிடம் தான் சொல்லிக் கொள்வதாகவும் கூறுகிறாள். சதாசிவம் பிள்ளைக்கும் இந்த யோசனை பிடித்துப் போகவே, தினமும் தானே அவனைக் கோயிலுக்குத் தன்னுடன் அழைத்து செல்கிறார். அந்தத் தருணத்தில் அங்கு நடைபெற்ற சாமி அருளாணந்தரின் ஆர்ப்பாட்டமான சொற்பொழிவால் பெரிதும் கவரப்படுகிரான் சோமு. அங்கு அந்த சொற்பொழிவு ஒரு மாதம் நடைபெற்றது. விளைவு, 15 வயது மட்டுமே நிரம்பிய சோமுவிற்கு ஏற்பட்ட அதீத பக்தி. இதனை எழுத்தாளரின் வார்த்தைகளில் பார்க்கலாம்.



15 வயது என்பது ஒரு மனிதனுக்குப் பித்துப் பிடிக்கிற வயது. அது, கலைப் பித்தாகவோ, அரசியல் பித்தாகவோ, சமயப் பித்தாகவோ, ஏன் பெண் பித்தாகவோகூட இருக்கலாம். நம் சோமுவிற்குப் பிடித்திருப்பது வேதாந்தப் பித்து. சாமி அருளாணந்தரின் சொற்பொழிவைக் கேட்கத் தொடங்கிய பிறகு அவனது பக்தி என்பது சாதாரணமாக தோன்றி, ஜீவகாருண்யத்தில்  வளர்ந்து, இறுதியில் இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் துறந்துவிடுவதில் போய் முடிகிறது. சோமுவைப் பொருத்தவரை, இவ்வுலகிலுள்ள எல்லாம் பொய். வாழ்வாவது மாயம், மண்ணாவது திண்ணம். படித்த படிப்பு, பார்த்த வேலை, சேர்த்த செல்வம் உட்பட இவ்வுலகிலுள்ள எதுவுமே நிரந்தரமில்லை. மனிதனால் வெல்ல முடியாதது மரணம் மட்டுமே. அப்படியானால், பிறந்த இம்மண்ணில், பல்வேறு பாவங்களைப் புரிந்து மீளா நரகத்தில் வீழாதிருக்க, இமயமலையில், பனிப்படலத்திற்கு நடுவில் தவமிருக்கும் லோக குருவின் பாதங்களைச் சரணடைவதுதான் ஒரேவழி என்று முடிவு செய்து, தனது உடைமைகள் எல்லாவற்றையும் உதறிவிட்டு, இமயமலைக்குப் பயணமாகிறான் சோமு.



அதிகாலை எழுந்து, சிதம்பரத்திலுள்ள கோயிலுக்குச் சென்று, தான் இத்தனை காலம் சேமித்துவைத்த ஒரு ரூபாயை, அங்கிருந்த ஒரு டஜன் பண்டாரங்களுக்குத் தானம் செய்த பிறகு, குளத்தங்கரைக்குச் சென்று தலையை மொட்டையடித்த பின்பு தனது நெடும்பயணத்தைத் தொடங்குகிறான் சோமு. கதை முழுவதையும் விளக்குவது என்பது இக்கட்டுரையின் நோக்கமில்லையென்றாலும், சோமு தன்னுடைய பயணத்தின்போது சந்தித்த சில காட்சிகளைப் பற்றிக் கூறுவது இந்தத் திரனாய்விற்கு அவசியமாகிரது. குறிப்பாக, சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் அவன் எதிர்கொண்ட பரங்கிப்பேட்டை சந்தை. திருவிழாபோல் காட்சியளித்த மக்கள் கூட்டம், வேடிக்கை பேசி வம்புவளர்க்கும் மனிதர்கள், கூவிக்கூவி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அவ்வாறு விற்கப் பட்ட சோமுவிற்க்குப் பிடித்த தின்பண்டங்களான நாவல் பழம், வேர்க்கடலை, பட்டாணி போண்றவையென, வாழ்வின் ஒட்டுமொத்த உயிர்ப்பையும் அங்கு சந்திக்கிறான்.



அவனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் பிடிக்கும். ஜனசந்தடி மிகுந்த அந்த சந்தையில் ஒரு மரத்தடியில் நாவல் பழம் விற்கிறாள் ஒரு பெண். அந்தப் பெண்ணிடம் வம்பு பேசி நாவல் பழம் வாங்கித் திண்ணுமொரு வயதான கிழவர், சோமுவிடமும் சில பழங்களை எடுத்துக் கொடுக்க, அவன் அதை முற்றிலும் நிராகரிக்கிறான். ஆனால் விடவில்லை கிழவர், அவனை ஆதரவுடன் அழைத்துப் பழங்களைக் கொடுக்க வேறுவழியின்றி அவற்றை வாங்கி உண்கிறான். அதற்குமேலும் அங்கு நிற்க முடியாமல் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறான்.



நேரம் செல்லச் செல்ல சோமுவிற்குப் பசியெடுக்கிறது. எல்லாவற்றையும் துறந்துவிட்ட சோமுவால் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. ஏதேனும் வாங்கிச் சாப்பிடலாமென்றால் கையில் காசு இல்லை. அவ்வளவுதான், வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையையும் தாண்டிவிடலாமென்ற அந்தச் சிறுவனின் எண்ணம் சடுதியில் நொறுங்கித் தவிடுபொடியாகிரது. இனிமேல் ஒரு அடிகூடத் தன்னால் எடுத்து வைக்க முடியாது என்று உணர்ந்த சோமு, ஒரு ஆலமரத்தடியில் அமர்கிறான். அப்போது நன்கு இருட்டிவிட்டது. தன்னைச் சுற்றித் தானே போட்டுக்கொண்ட வாழ்வியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களையும், தத்துவ முடிச்சுகளையும் தானே அவிழ்த்த பின்பு நிஜ உலகத்திற்கு வருகிறான். இருட்டு மேலும் கவிழ்ந்துகொள்ள, அவனை பயம் தொற்றிக்கொள்கிறது. அப்போது அவன் கண்ட ஒரு காட்சி, அவனை அங்கிருந்து மிரண்டோடச் செய்கிறது.



பாம்பு ஒன்று, அங்கிருந்த கடலைக் கொல்லையிலிருந்து மேலேரி, சாலையைக் கடந்து, போகிற போக்கில் ஒரு தவலளையைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டு வேறு திசையில் செல்கிறது. அதே பாம்பு தன்னைத் துரத்துவதாக எண்ணிக்கொண்ட அந்தச் சிறுவன், எழுந்த வேகத்தில் மொட்டைத் தலை மரத்தில் இடிக்க, விரைந்தோடத் தொடங்குகிறான். எவ்வளவு தூரம், அல்லது எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ தெரியாது. இறுதியில் சுயநினைவிழந்து, மயங்கிச் செம்மண் புழுதியில் விழுகிறான்.



நீண்ட நேரத்திற்குப் பிறகு, மாட்டுவண்டிச் சத்தம் கேட்டுக் கண் விழிக்கிறான். நடுப் பாதையில் மயக்கமுற்றுக் கிடக்கும் அந்தச் சிறுவனை வண்டிக்காரர்கள் தங்களது வண்டியில் ஏற்றிக்கொள்கிரார்கள். வண்டியிலிருந்த கிழவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார். நீ சந்தையில் பார்த்த பையனல்லவா என்று சொன்னா கிழவரைப் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டிருந்த இன்னோரு இளைஞன், இவனை உனக்கு முன்னமே தெரியுமா என்று கேட்கிறான். அதற்கு அந்தக் கிழவர், தெரியாமலென்ன, இவனும் உன்னைப்போல ஒரு பேரந்தான் எனப் பதில் சொல்கிறார். அவனைப் பற்றிய எல்லா விபரங்களையும் பரிவுடன் விசாரிக்கிறார். உலகிலுள்ள எல்லாவற்றையும் உதரிவிட நினைக்கும் சோமுவும், எல்லோரையும் தனது சொந்தமாகக் கருதும் கிழவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அப்போது நம் சோமுவிற்கு, எந்நேரமும் தன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் அம்மா, கண்டிப்பிலும் கொஞ்சம் கனிவு காட்டும் தந்தை, தன்னுடன் பாசத்துடன் விளையாடும் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கை ராஜி, இழந்த தலைமுடி, உண்ணும் சுவையான உணவு, தூங்கும் பஞ்சு மெத்தை மற்றும் தலையணை, தன்னிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பிடித்த தின்பண்டங்கள், எல்லா நிணைவுகளும் ஒருசேர ஏற்படவே, தேம்பியழுதபடிக் கிழவரைப் பார்த்துத் தன்னை வீட்டில் கொண்டுவிடுமாறு வேண்டுகிறான். இந்த அளவில் நாம் கதை சொல்வதை நிறுத்திவிட்டு, அதன் மையக்கருத்தை சற்று ஆராயலாம்.



நம்மில் பலர், துறவு என்பது, அனைத்தையும் துறந்துவிடுவது, என்று கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. நாம் சார்ந்திருக்கும் அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் மனிதர்கள், சமூகம், இயற்கை, போன்ற எல்லாவற்றையும் நேசிப்பதுதான் உண்மையான துறவு. ஒருமுறை, பெரியார் சொன்னார், எனக்கு நாட்டுப் பற்றும் கிடையாது, மொழிப் பற்றும் கிடையாது, எனக்கு இருப்பதெல்லாம் மானுடப்பற்று ஒன்று மட்டுமே. அந்தவகையில் பார்த்தால், பல வருடங்கள் தான் சார்ந்திருந்த இந்தத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடிய பெரியாரும் ஒரு துறவிதான். இதனைத்தான், யாதும் ஊரே, யாவரும் கேளீர், என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.



வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், என்று பாரதியாரும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், என்று வள்ளலாரும், சொல்வதன் உண்மைப் பொருள் இதுதான். உலகம் கடந்த மனித நேயம், அதனையும் கடந்த உயிர் நேயம், இவ்விரண்டும் ஒரு மனிதனுக்கு இருக்குமானால், அவரும்கூட உண்மையான துறவிதான் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இக்கதையின் நிறைவுப் பகுதியில், தன்னை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டுவந்து இறக்கிவிட்ட அந்த வண்டிக்கார இளைஞனை நன்றியுணர்வோடு பார்க்கும் சிறுவன் சோமு, நாம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும் என்று, பதிலுக்கு நட்பும் பரிவும் காட்டும் அந்த வண்டிக்கார இளைஞன், வீட்டிற்குச் சென்ற பிறகு, சோமுவிடம் முன்பைவிட அதித பாசம் காட்டும் அவனது பெற்றோர் மற்றும் தம்பி தங்கை போன்றவை, வாழ்வின் மகோந்நதத்தை சோமுவிற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.



எனவே ஒவ்வொரு மனிதனும், தான் சார்ந்திருக்கும் இயற்கையையும், தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களையும் நேசிப்பதுதான் உன்மையான துறவு என்பது இக்கதை நமக்குக் கூறும் செய்தியாகும்.

4 comments:

  1. துறவு என்றாலே ஆன்மீகம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மிகவும் அருமையாக எளிதில் அனைவருக்கும் புரியும் வகையில் துறவை பற்றி விளக்கி இருக்கிறீர்கள். இந்த கட்டுரை மிக மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாந்தாராம்

      Delete
  2. முதல் முயற்சியாக நீங்கள் தொடங்கி இருக்கக்கூடிய இந்த கட்டுரை எழுதும் பணி மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மஹேந்திரன்

      Delete