Tuesday 26 January 2021

மீண்டுமோர் சுதந்திர காற்று

    

போராட்ட விளக்கினில் குருதி எண்ணை ஊற்றி, தியாகத் திரித்தூண்டி ஏற்றிவைத்த தீபவொளி சுதந்திரம்.


எத்தனை உயிர் பறவைகள் வானில் பறந்திருக்கும். எத்தனை உறுப்புகள் குருதியில் குளித்திருக்கும்.


எத்தனை சிறைவாசம் எத்தனை அன்னியாதவாசம், அதன்பின்னே கிடைத்ததிந்த சுதந்திர சுவாசம்.


தெரிந்த தியாகிகள் சிலர். தெரியாத தியாகிகள் பலர்.


தெரிந்த தியாகத்திற்கு எழுத்துக்கள் சாட்சி. தெரியாத தியாகத்திற்கு எது சாட்சி?


மென்மையும் மேன்மையும் பொருந்திய பெண்களில் புயலாய் புறப்பட்டு புதுமை செய்தவர்தான் எத்தனை.


ருசியறிந்து உண்ண உணவிருந்தும் பசிக்குக்கூட உண்ண மனமிருந்ததில்லை.


அரண்மனை அந்தப்புறங்கள் ஆயிரமிருந்தும் ஆழ்ந்த நித்திரை கொண்டதில்லை.


பட்டுப்பீதாம்பரங்கள் பலயிருந்தும் போட்டுக்கொள்ள பொழுதிருந்ததில்லை.


எழுதி தீர்க்க ஏராளமிருந்தும் எழுத்து சுதந்திரம் இருந்ததில்லை.


எடுத்துக்கூற கருத்துக்கள் இருந்தும் பேச்சு சுதந்திரம் பெற்றதில்லை.


அடிமைத்தனம், அடிமைத்தனம் ஆங்காங்கே அடிமைத்தனம். ஆங்கிலேயரின் அடிமைத்தனம்.


அரும்பாடுபட்டு இரவுப்பொழுதில் தூங்கும் வேளையில் வாங்கினோம் சுதந்திரத்தை வெள்ளையரிடம். அதை பகலில் விழித்துக்கொண்டிருக்கும்போதே பரிகொடுத்தோம் இந்தியக்கொள்ளையரிடம்.


இன்றும் இந்தியா குருதியில் குளிக்கத்தான் செய்கிறது.


இன்றும் இந்திய வளங்கள் சுரண்டத்தான்படுகிறது.


இன்றும் இந்தியப்பெண்கள் பாதுகாப்பின்றித்தான் நடமாடுகிறார்கள்.


இன்றும் இந்திய நாகரீகம் சீர்குலைந்துதான் போகிறது.


இன்றும் எழுத்துக்கும் பேச்சுக்கும் எல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.


ஆனால் அதற்கு காரணம் வெள்ளையர்கள் அல்ல நம் இந்தியர்கள்.


அன்று இந்தியனுக்கு எதிரி வெள்ளையன். இன்று இந்தியனுக்கு எதிரி இந்தியன்.


அன்றைய சுதந்திரத்தை அவர்கள் வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.


இலஞர்களே இன்றைய சுதந்திரத்திற்கு யார் பாடுபடப்போகிறீர்கள்.

முயல்வோம் மீண்டுமோர் உண்மையான முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க.


இனி இந்தியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவது இந்தியர் கையில்.


 

6 comments:

  1. குடியரசு தின நாளில் நல்லதொரு கட்டுரை. பாராட்டுகள் அபிநயா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். same to you.

      Delete
  3. அருமையான கவிதை அபி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந் சார்.

      Delete