Monday 4 January 2021

கலையாத கனவு.

அந்த அரசுப் பள்ளியிலுள்ள கடிகாரம் சரியாய் 9 முறை அடித்து ஓய்ந்த வேளை தாய் துர்காவின் கையைப்பிடித்தபடி உள்ளே நுழைந்தாள் ஏழு வயது சிறுமி அனுபமா.அவள் ஜீவா துர்காவின் ஒரே செல்லப் பெண்.


ஏழ்மையிலும் இனிமை காணும் குடும்பம். அத்தைமகன் மாமன் மகளென்பதால் மாமியார் மறுமகள் சண்டைக் காட்சிகளெல்லாம் இல்லை.அனு பிறந்தபோது மட்டும் சற்று துவண்ட குடும்பம் அதன்பின் தேறிக்கொண்டது.


அனைவரிடமும் அனுவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துர்கா கிளம்ப, தன் இருக்கையில் அமர்ந்தாள் அனு.அவள் பக்கத்து இருக்கையில் அவள் வயதை ஒத்த ஒரு பெண். அவள் அனுவிடம் மெல்ல பேசத் தொடங்க, இருவரும் சற்று நெருங்கினர்.


பள்ளியில் அனுவிற்குக் கிடைத்த முதலும் கடைசியுமான தோழியவள். இடைவேளை நேரத்தில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்க, அனு மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்.ஏன் நானும் மற்றவரைப் போல் இல்லை என ஏங்கினாள்.


“நானும் விளையாட வரட்டுமா மீனா?” என்று ஆசைப் பொங்கக் கேட்ட அனுவை தான் இப்போது வருவதாகச் சொல்லி சென்றுவிட்டாள் அனுவின் ஒரே தோழி மீனா. சற்று நேரத்தில் ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, தான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை அனுவிற்கு.


அப்படியும் “நான் என்ன மிஸ் செய்யனும்?” என்று கேட்கத்தான் செய்தாள். ஆனால் அவரோ இதென்னடா நமக்கு வந்த தொல்லை என்று நினைத்தபடி “நீ அப்புறம் பிள்ளைங்ககிட்ட கேட்டு எழுதிக்கோம்மா” என்றுவிட்டார்.


யாருக்குமே தன்னைப் பிடிக்காதபோது யாரிடம் கேட்பது என்று வருந்தினாள் அனு. தன் அவசரத் தேவைக்குக் கூட யாரையும் கேட்க முடியாத தன் நிலையை நினைக்கும்போது அவளுக்கு கண்ணீர் பொங்கியது.


வீட்டிற்கு வந்து அனு தன் தாய் துர்காவிடம் அனைத்தையும் சொல்ல, அவள் அவளைப் போகப் போக சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்திவிட்டு தனிமையில் தன் மகளை நினைத்து கண்ணீர் சிந்தினாள்.


மறுநாள் பள்ளியில் அனுவின் எழுதுகோள் பெட்டியை ஒரு பையன் மெல்லத் திருடிக்கொண்டான். அனு அதை உணர்ந்தாலும் கேட்க பயமாக இருந்தது. தோழி மீனாவிடம் சொன்னாள்.


அவள் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொடுத்தாள். ஆனால் மீனா அந்த பக்கம் நகர்ந்ததும் அவன் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டான்.இந்தமுறை அனுவே தைரியமாக அவனைக் கேட்க, அவன் அது அவனுடையது என்று சொல்லி ஏமாற்றினான்.அனுவின் மனதில் ஓர் பாதுகாப்பின்மை தோன்றியது.


இதை துர்காவிடம் அவள் சொல்ல, புது எழுதுகோள் பெட்டி வாங்கிக் கொடுத்தாள்.மகளை சமாதானப்படுத்தினாலும், வாய்விட்டே அழுதாள் துர்கா.மாமியார் தனம் அவளைத் தேற்றினார்.


“காக்கா அவ கண்ணைக் குத்திடுமோன்னு மூடி மூடி வைச்சேனே! கடவுள் குத்திடுவார்னு நினைக்கலயே அத்தை! நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணோம்னு நமக்கு இந்த சோதனை அத்தை!” எனக் கதறித் தீர்த்தாள். ”அழாதம்மா மரத்த வெச்சவன் நிச்சயம் தண்ணி ஊத்துவான்” என்று தன் வாக்கு விரைவில் பலிக்கப்போவது தெரியாமல் இயல்பாய் சொன்ன அந்த நொடியில் வானத்து தேவதைகள் ததாஸ்து சொல்லிச் சென்றனர்.


மகளைப் பற்றிய கவலையுடன் அன்றைய உரக்கத்தில் ஆழ்ந்திருந்த துர்காவிற்கு கனவு வந்தது. வெண்ணிற ஆடையணிந்த ஒரு மனிதர் வந்தார். கையில் துர்கா இதுவரைப் பார்த்திராத பொருட்களை வைத்திருந்தார்.


“மகளே! நான் சொல்லும் இடத்திற்கு உன் மகளை அழைத்துச் செல். அவளுக்கான படிப்பும் பாதுகாப்பும் காத்திருக்கிறது.” என்றுவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் சொன்ன வார்த்தைகள் அப்படியே மனதில் தங்கிவிட்டது.


கனவை நம்பி உடனே செயற்பட மனது இடம் தராததால் அதை அப்படியே தனக்குள் புதைத்துக்கொண்டாள். நாளாக நாளாக அனுவின் கஷ்டங்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.


அவளால் அந்த பள்ளியில் பொருந்த முடியாத நிலை வரவே துர்கா பள்ளிக்கே சென்று புகார் செய்தாள். ஆனால் அந்த ஆசிரியரோ ”இதோ பாரும்மா உங்க பெண்ணைப் பார்த்துக்க எங்களுக்கு தெரியலை. அது மட்டுமே எங்க வேலையுமில்லை. நீங்க வேற பள்ளியில் சேர்த்துக்கோங்க” என்று திடமாக சொல்லிவிட்டார்.


வேறு வழியின்றி அனுவை அழைத்துக்கொண்டு துர்கா வெளியே வர, அவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு பெண்மணியின் குரல். “அம்மா எனக்கு தெரிஞ்ச ஒரு பள்ளி இருக்கு. அங்கே உங்க பொண்ணு மாதிரி குழந்தைங்க படிக்கிறாங்க. விலாசம் தரேன் கூட்டிட்டு போய் பாருங்க.” என்று தன் கையில் வைத்திருந்த விலாசத்தை நீட்டினார்.


நன்றி சொல்லி அதை வாங்கிய துர்கா படித்துப் பார்க்காமலே பத்திரப்படுத்தினாள். வீட்டிற்கு வந்தவள் எந்திரத்தனமாகவே நாளை ஓட்டினாள். அன்று இரவு மீண்டும் அதே கனவு. அட்சரம் பிசகாமல் அதே வார்த்தைகள்.


அதைக் கேட்ட துர்காவிற்கு ஏதோ தோன்ற, உடனே எழுந்துபோய் தன் கைப்பையில் வைத்திருந்த விலாசத்தைப் பார்த்தாள். பார்த்தவள் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தோன்றியது. காலையில் கணவனிடம் அந்த பெண்மணியைப் பற்றி மட்டும் சொல்லி அந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.


பார்வையற்றோருக்கான சிறப்புப்  பள்ளி கட்டிடம் அவர்களை வரவேற்றது. உள்ளே சென்ற அவள் தலைமை ஆசிரியரிடம் தங்களைப் பற்றிச் சொல்ல, அவர் அனுவிற்கு சில சோதனைகளை வைத்து புத்திசாலி பெண் என்று சிலாகித்து பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.


சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தைப் பற்றி இயல்பாய் கேட்டாள் துர்கா. “அவர்தான் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரையில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரையில்” என்று அவரைப் பற்றி சொல்ல, அவள் மனம் இனிய அதிர்வை உள் வாங்கியது.


தலைமை அன்னைக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அன்று இரவு துர்கா உரங்க செல்லும் முன் தன் அலைப் பேசியில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு உரங்கினாள்.


 நள்ளிரவில் அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது துர்காவின் குரல். “உம் விழியின் ஒளியை இழந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் உம்மையும் ஒளிமையமாக்கி, மற்றவர் வாழ்க்கையையும் ஒளிமையமாக்கிய உமக்கு கோடி நன்றி.”


பின் குறிப்பு: இன்று பிறந்தநாள் காணும் பிரெயில் எழுத்துமுறையைக் கண்டுபிடித்த லூயிபிரெயில் அவர்களுக்கு இந்தக் கதையைக் காணிக்கையாக்குகிறேன். உடல் மரித்தும் உயர்ந்து நிற்கும் நின் பேரும் புகழும் இன்றுபோல் என்றும் ஒளி மங்காதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

7 comments: