Wednesday 20 January 2021

‘நானே என் முதல் ரசிகன்’

சமீபத்தில் வாசிப்பைவிட எழுத்தும் பதிப்பும் அதிகமாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதிலும் பெண் எழுத்தாளர்கள் இணயத்தில் நிறைய எழுதுகிறார்கள். காதல், நட்பு, காமெடி, பாசம், குடும்பம் இப்படி உள்ளத்து உணர்வுகளைமையமாகவைத்து எழுதி வருகின்றனர். இதற்கெல்லாம் பெரிய முன்மாதிரி எழுத்தாளர் திருமதி. ரமணி சந்திரன் அவர்கள்தான்.

வீட்டு வேலை, படிப்பு, பணிச்சுமை இதற்கிடையில் பொழுதுபோக்காக ரமணி சந்திரன் நாவல்களைப் படித்து, அவர் எழுத்தில் கவரப்பட்டு, நாமும் இப்படி எழுதினால் என்ன? என நினைத்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்கள் எத்தனையோ பேர். இப்போது கிண்டிலில் பெண்கள் ராஜியம்தான் நடக்குது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறும் விஷயம் என்னவெனில், அப்படிப்பட்ட குடும்ப கதைகளுக்குள் நிச்சயம் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனை அடங்கியிருக்கும். பெயரைப் பார்த்துவிட்டு இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்று கடந்துவிடக்கூடாது.

எல்லா காலத்திலும் சமூகப் பிரச்சனைகளை ஒரு நாவலாக சித்தரிப்பது இருக்கிறதுதானே? எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், எழுத்தாளர் சிவசங்கரி போன்றவர்களைக் கூட எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட கதை என்று  கடந்துவிடமுடியாத கதைதான் எழுத்தாளர் ஸ்ரீகலாவின் தாயுமாணவன். குறுநாவல் என்றாலும் அனைவரும் வாசிக்கக்கூடிய வாசிக்க வேண்டிய கதை.

தாயுமானவன் என்ற பெயரைப் படித்ததும் முதலில் நமக்கு என்ன தோன்றும்? ஒரு தந்தை தன் குழந்தைமேல் தாயைப்போல் பரிவு காட்டுகிறார். அல்லது கணவன் மனைவியின் மீது செலுத்தும் அன்பு தாய்க்கு நிகரானது. இப்படித்தானே தோன்றும். ஆனால் இது எதுவுமே இல்லை!

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை கணவன், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் சொல்வதில் தொடங்கி, மசக்கை அனுபவித்து, குழந்தையின் வளர்ச்சியை அனுஅனுவாய் ரசித்து, அதன் அசைவுகளை உயிருக்குள் சேமித்து, இரவும் பகலும் குழந்தைக்காக தன்னை கவணத்துடன் பார்த்துக்கொண்டு, பயம், கவலை, வேண்டுதல் போன்ற மனச்சுமைகளோடு பிரசவ வலியையும் தாங்கி குழந்தையை பெறுகிறாள்.

தன் இரத்தத்தை விருந்தாக்கி, முத்தத்தை மருந்தாக்கி, உடலுறுப்புகள் வளர்கிறதா, உணர்வுகள் புரிகிறதா, உரக்கம் வருகிறதா, உடல்நலம் சீராய் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து குழந்தையின் பாதுகாப்பு கவசமாகிறாள்.

முதல்நாள் பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கி, அன்றாட வாழ்வில் நடப்பவைகளைக் கேட்டு பூரிப்பதில் தோழியாகிறாள். பாடமும் பண்பும் பயிற்றுவித்து பிள்ளையை பெரியோர் போற்றும் புகழோனாக்குவதில் நல்ல ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறாள். இப்படியே குழந்தை வளர்ப்பு தெளிந்த நீரோடையாகவே இருந்துவிட்டால் சரி. ஆனால் விதி ஓடையில் கல்லெறிந்து கலைத்துவிட்டால்? இறுதிவரை போராட்டம்தான்.

அதுதான் நடந்தது இந்த கதையில் வரும் தாய் ரங்கநாயகிக்கும் மகன் சியாமள கிருஷ்ணனுக்கும். சியாமளகிருஷ்ணன் தன் 10 வயதுவரை கிருஷ்ணனாகதான் இருந்தான். அக்கா, அண்ணன், தம்பியுடன் சந்தோஷமாகவே வாழ்க்கையைக் கடத்தினான். அவனின் 11ஆவது வயதில் பெண்களுக்கு வரவேண்டிய மாதவிடாய் சுழர்ச்சி வரவே, தாய் தந்தையர் பயந்துபோய் மருத்துவரிடம் சென்றனர். அவரோ (intersex) இருபாலுடல் அமைப்பினன் என்று தீராத துன்பச் செய்தியை தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு கூறினார்.

அதாவது இருபால் உடலமைப்பு என்றால் வெளிப்படையாக ஆணாக இருந்தாலும், உள்ளுறுப்புகளில் அதிகப்படியாக பெண்ணிற்கு  இருக்க வேண்டிய கர்பப்பை இருக்கும். அதனால் மாதவிடாய் போன்ற பெண்கள் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அன்றுமுதல் அவன் தந்தைக்கு வேண்டாதவனாகிவிட்டான். உடன்பிறப்புகள் ஒதுக்கும் பொருளானான். காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு எனும்போது கடவுளனுப்பிய பிரதிநிதியான தாய்க்கு மட்டும் அது பொருந்தாதா? ரங்கநாயகி தன் மகன் சியாமளகிருஷ்ணனை முழுமையான கிருஷ்ணனாக மாற்றவே தன் வாழ்நாளை செலவிட்டார்.

அவனைப் படிக்கவைத்தார். அவன் ஆயுள் முழுமைக்குமான தன்னம்பிக்கையைக் கொடுத்தார். காதல் கிட்டாத நிராசையில் அவன் கலங்கியபோது மகப்பேறு மருத்துவம் படிக்கச் சொன்னார். அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனாலும், அவனால் பிரசவம் பார்க்கப்படும் அனைத்து குழந்தைகளும் அவன் குழந்தைகள் என நினைக்கச் சொன்னார். சியாமளகிருஷ்ணனும் இதையெல்லாம் மனதில் கொண்டு பிரபலமான மகப்பேறு மருத்துவரானான்.

தாயின் அறிவுரைப்படி சாதித்துவிட்டான். இநி தாயுமானவனாக வேண்டாமா? குழந்தைக்காக சிகிச்சைப்பெற வந்த பெண்ணிற்கு கர்பப்பையில் பிரச்சனை இருப்பதால் அதை நீக்கும் நிலை வரவே, அவர்களிடம் தன்னைப்பற்றிச் சொல்லி தன்னிடம் அதிகப்படியான உறுப்பாக இருந்த கர்பப்பையை தானமாக கொடுத்தான். பின்னர் மேற்படி சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்த பெண்ணிற்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தான். தன் கர்பப்பை மூலம் உதித்த குழந்தைக்கு தானே மானசீக தாயானான். தாயுமானவனானான்.

விதி அனைவருக்கும் பூப்பாதையை விரித்துவைத்திருப்பதில்லை. பலருக்கும் முள்பாதையைத்தான் விரித்துவைத்திருக்கும். அந்த முள்பாதையைப் பூப்பாதையாக மாற்றுவது மனிதனின் பொறுப்பு. திறமையும், திடமான நம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருந்தாலே போதும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடலாம்.

பெண் என்பவள் தோற்றுக்கொண்டே ஜெயிப்பவள். எத்தனைத் தோல்விகளைச் சந்தித்தபோதும் மீண்டும் ஜெயிக்க என்னவழி என்று தேடித்தேடி அதை கையாள்பவள். இயல்பிலேயே பெண்ணின் குனம் இதுவாக இருக்க, அவளே தாயாக இருந்தால்? சிறந்த தாயானவள் தன் மகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனை சரியான பாதையில் வழிநடத்திச்சென்று இலக்கை அடையச் செய்வாள்.

இந்தக் கதையில் வரும் ரங்கநாயகியும் அப்படித்தான். ஊரும் உறவும் தன் மகனை ஒதுக்கிவிட்டபோதும், அவன் என்மகன். ஜெயிக்கப்பிறந்தவன். எதையும் எதிர்கொள்ளத் தெரிந்தவன் என்று தானும் போராடி அவனையும் உலகத்தோடு போராடவைத்து இலக்கை அடையச் செய்தாள். இந்த உலகில் எத்தனையோ ரங்கநாயகிகள் வாழ்ந்து, மறைந்து, மீண்டும் பிறந்து, இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தன்னிடம் இருந்த குறையான கர்பப்பையை தானமாக கொடுத்து, தன் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கி மற்றவருக்கும் வாழ்வின்மேல் ஒரு பிடித்தத்தைக் கொடுத்து தாயுமானவனான சியாமளகிருஷ்ணனைப் போல ஏன் மற்றவரால் இருக்கமுடியாது? தானம் என்ற ஒரு சிறு செயல் எத்தகைய விந்தைகளை நிகழ்த்தியிருக்கிறது.

ஆறு மாதம் முன்பு விகடனில் தொலைக்காட்சி தொகுப்பாளர் சக்ரவர்த்தியின் கட்டுரை வெளிவந்தது. அதில் அவர் இருபால் உடலினன் என்றும், பலவித போராட்டங்களைச் சந்தித்து ஊடகத்துறையில் 20 வருஷங்களுக்குமேல் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முழு காரணமும் அவர் அம்மாதான் என்று பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.

 

11 comments:

  1. Abinaya
    அரூமை.
    வித்யா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்

      Delete
  2. விதி அனைவருக்கும் பூப்பாதையை விரித்து வைத்திருப்பதில்லை..

    மிக மிக உண்மை..


    அருமையான பகிர்வு பாராட்டுக்க்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. மிகச்சிறந்த அறிமுகம், பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. நல்ல புத்தக அறிமுகம்.
    சீக்கிரம் நூலை படிக்கிறேன்.
    கிண்டிலில் பெண்கள் ராஜியத்தோடு அபியின் ராஜியம் எப்ப ஆரம்பிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந் சார் 26ஆம் தேதி எதிர்பார்க்கலாம்

      Delete
  5. பெண்ணின் பெருந்தக்க யாவுள...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  6. நல்லதொரு அறிமுகம். படிக்கத் தூண்டும் விமர்சனம். கிண்டிலில் கிடைத்தால் படிக்க வேண்டும்.

    ReplyDelete