Sunday 26 July 2020

’கடவுளின் பிரதிநிதி’ தொடர்ச்சி.

இதன் முந்தைய பகுதியைப் படிக்க்

3

அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் பார்த்து. “உங்களுக்கு உங்க அம்மாகிட்ட பேசனுமா?” “பேசனும்தான் ஆனா அம்மாதான் இல்லையே?” என்று ஆவலும் ஏக்கமும் நிறைந்தக் குரலில் கேட்டது ஒரு மழலை. ”இல்லை இருக்காங்க. அவள் பெயர் நிலவினி. அவதான் உங்களைப் பார்த்துக்கச்சொல்லி என்னை  இங்க அனுப்புனாங்க. அப்பாவை நினைச்சு அழக்கூடாது. அம்மா இருக்கேன். அப்பாவும் தெய்வமா இருந்து வழிநடத்துவார்னு சொன்னாங்க. சீக்கிரம் உங்களைப் பார்க்க வரேன்னு சொன்னாங்க.”

பிஞ்சு இதயங்கள் என்றும் பச்சைமண். அதில் எதை விதைத்தாலும் ஆழப்பதிந்துவிடும். அதிலும் பாசத்திற்காக ஏங்கும் இவர்களுக்கு பாசம் காட்ட இன்னும் ஒரு இதயம் இருக்கிறது என்று தெரிந்தால் மகிழ்ந்து போவார்கள் என்பதைப் புரிந்துகொண்டவள், “முகிலப்பா எப்படியோ அப்படித்தான் நிலவினி உங்களோட அம்மா. வெளியூரில் வேலையில் இருப்பதால் உங்களைப் பார்க்க வரவில்லை. பேசமுடியவில்லை. முகிலப்பா பார்த்துப்பார்னு நிம்மதியா இருந்தாங்க.” என்றாள்.

தங்களை வேலை காரணமாக பார்க்க வராத அம்மாவை அவர்களால் நம்பவோ ஏற்கவோ இயலவில்லை. அவர்கள் தமிழழகியை நம்பாத பார்வை பார்க்க, அதைப் புரிந்துகொண்டவள் ”நீங்க அவளை ஒருமுறை அம்மான்னு கூப்பிடுங்க. அவ உங்க அம்மா இல்லன்னா உங்ககிட்ட பேசமாட்டா. உங்க அம்மாவா இருந்தா எப்படி பேசுறான்னு நீங்களே பாருங்க.”

முகிலனைப்பற்றியும் இந்த இல்லத்தைப்பற்றியும் நிலவினிக்குத் தெரிந்திருந்ததால் நம்பிக்கையுடன் அவளை அழைத்து ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.

   ஃபோனை எடுத்த நிலவினி தமிழ் என்று சொல்லும் முன் அம்மா! என்று 15 குரல்களும் ஒரே நேரத்தில் கேட்டது. முதலில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றிருக்க, மீண்டும் அதே குரல்கள் இன்னும் சத்தமாய். அம்மா! அவள் அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள். மூன்றாம் முறையாக அம்மா! என்றதும் அவள் உடலும் மனமும் இனிய ஸ்வரங்களால் மீட்டப்பட்டதைப்போல் உணர்ந்தாள். வயிற்றை மென்மையாய் அழுத்திக்கொண்டாள். தாய்மையின் உணர்வுப் பிரவாகத்தில் அவள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது.

“அக்கா இவங்க எங்ககிட்ட பேசமாட்டுறாங்க. இவங்க எங்க அம்மா இல்.” “ஐயோ வேண்டாம்! அந்த வார்த்தையைச் சொல்லிடாதீங்க! என்னை அம்மான்னு கூப்பிட்ட வாயால அப்படி சொல்லாதீங்க. அம்மாதான்! நான் உங்க அம்மாதான்! நான் உங்க அம்மாவேதான்! உங்ககிட்ட பேசாம பார்க்காம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க!” என்று கதறினாள். அவள் கதறலில் அவர்கள் எதைக்கண்டனரோ அவள் தாய்மையிடம் தங்களை ஒப்படைத்து நின்றனர்.

”அழாதீங்கம்மா! ஏன் எங்களைப் பார்க்க வரல? ஏன் எங்ககிட்ட பேசல?” என்று அம்மாவைச் செல்லமாய் திட்டியதுஓர் குட்டி ஆண் சிங்கம். “வேலை அதிகமா இருந்ததுப்பா அதான் வரல. அதோட முகில் அப்பா உங்களைக் கண்ணுக்குள்ள வெச்சுப் பார்த்துக்கிறார். என் குழந்தைங்க நிம்மதியா இருக்காங்கன்னு தோனுச்சு. அதான் வரல.” “அப்பா சாமிகிட்ட போயிட்டாங்கம்மா. நீங்க இங்க வாங்க அம்மா. ப்லீஸ். பயமா இருக்கும்மா வாங்க” என்று கெஞ்சியது ஓர் பெண் கிளி.

“கண்டிப்பா வரேன்மா. நீங்க எல்லாரும் நல்லா சாப்பிடனும். படிக்கனும். தூங்கனும். யாரையும் தொல்லை செய்யக்கூடாது. சரியா? ”சரி அம்மா” என்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனித்தனியே பேசினாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழழகியை உணவு எடுத்துவரச் சொல்லி ஊட்டச்சொன்னாள். அம்மாவின் அன்பில் நனைந்துகொண்டே ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்டனர்.

“நிலா, இவங்கநிம்மதியா தூங்கி ஒரு வாரமாகுது. உங்கிட்ட பேசிய சந்தோஷத்துல அமைதியா தூங்கட்டும் ஒரு பாட்டுப்பாடுடி.” என்றாள் தமிழழகி.  “கண்டிப்பா பாடுறேன்டி.” அவள் மெல்லப்பாடினாள்.

‘கண்ணே கண்மணி எந்தன் பொன்மணி கண்ணுறங்கு
அன்னை மடியில் அலுப்புத் தீர கண்ணுறங்கு
கண்கள் முழுதும் கனவுகள் சுமந்தே கண்ணுறங்கு
அம்மா அதனை பலிக்க வைப்பேன் கண்ணுறங்கு
கட்டிக் கரும்பே கண்ணீர் நிறுத்திக் கண்ணுறங்கு
கவலைவிடுத்து இதழை மலர்த்திக் கண்ணுறங்கு
மரகத கல்லே மாணிக்கத் தேரே கண்ணுறங்கு
மார்பின் மெத்தையில் சுகமாய் நீயும் கண்ணுறங்கு. அபி

 அவள் பாடிக்கொண்டிருக்க குழந்தைகள் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் தூக்கம் கலையாதபடி தமிழழகி வெளியே வந்தாள். ஷெண்பகத்திடம் நடந்ததைச் சொல்லிவிட்டு நிலவினியின் வீட்டிற்குச் சென்றாள்.

4.

    “வா தமிழ்.” தமிழழகி அறைக்குள் வந்து நிலவினியைப் பார்த்தாள். அவள் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி தெரிந்தது. நீண்டகால தேடல் கிடைத்துவிட்ட நிம்மதி தெரிந்தது. அவள் அருகில் அமர்ந்த தமிழழகி. “நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்லமாட்டேன் நிலா தெரிஞ்சிதான் செய்தேன்.

எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்தபோது உன் ஃபோன் வந்தது. அனிச்சப்பூ மாதிரி இருக்க உன் மனம், மென்மையான குணம், கணிவான பேச்சு இது எல்லாம் அந்தக் குழந்தைகளை ஆறுதல்படுத்தும்னு நினைச்சேன். அந்தக் குழந்தைங்களுக்கு அப்பா இருந்தார், அத்தை ஷெண்பகம்மா இருக்காங்க, அக்கா நா இருக்கேன். அவங்க மனசுல நிறப்பப்படாத இடம் அம்மா. இதுவரை அவங்களுக்குக் கிடைக்காத அந்த உறவைக் கொடுக்கத் தோனுச்சி. அதுக்கு நீதான் சரியானவளா இருப்பேன்னு நினைச்சேன். கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்ற உனக்குள்ள இவ்வளவு தாய்மை உணர்வு இருக்கும்னு எனக்கு இன்னைக்குதாண்டி புரிஞ்சது.”

“மறுக்கப்படுற ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாடி நிச்சயம் ஏதாவது பயமோ, ஏக்கமோ துயரமோ இருக்கும்டி. படிப்பு, விளையாட்டு வேலைன்னு 30 வருஷத்தை ஓட்டியாச்சு. வேலைக் கிடைக்கிறவர காதலைப் பத்தி யோசிக்கல. கல்யாணம்னு வரும்போது, மத்தவங்க வாழ்க்கை அனுபவங்களைக் கேட்கும்போதுதான் நானும் காதலிச்சிருக்கலாமோன்னு தோனுது. இத்தனை வருஷம் வராத காதல் இனிமேலா வரப்போகுது? பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி சபையில நிக்க வெச்சு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு அடுத்தப் பெண்ணைத் தேடிப்போற கல்யாணச் சடங்கை நினைச்சா எரிச்சலா இருக்கு. அதனாலதான் கல்யாண ஆசை இல்லன்னு சொல்றேன்.”

வெளிய அப்படிச் சொன்னாலும் உள்மனசுல கல்யாணம் என்ற அந்த வார்த்தைய கேட்கும்போதே வெட்கம், சந்தோஷம், வருத்தம் ஏக்கம் எல்லாம் வரும். யாராவது கல்யாண செய்தி சொன்னா, பத்திரிக்கை கொடுத்தா நாமும் இப்படி எல்லோருக்கும் கொடுப்போமான்னு தோனும்.

மண்டபத்துக்குப் போய் மேளச்சத்தம் கேட்டாலே மூச்சு முட்டுற மாதிரி இருக்கும். கச்சேரி கேட்டா கண்ணு கலங்கும்.  ஆனா இந்த ஏக்கங்களுக்காக மனசுக்கு பிடிக்காத ஒருத்தர மணமுடிக்க முடியுமா?” “ஆசை இல்லன்னு சொல்றதுக்கு பின்னாடி இவ்வளவு துயரமா!” தமிழின் கண்கள் கலங்கியது.

“கல்யாண ஆசைய மறைக்க முடிஞ்ச என்னால தாய்மைய மறைக்க முடியலடி. என் அக்கா குழந்தைங்க அவங்க அம்மாவைக் கூப்பிடும்போது என்னை அப்படிக் கூப்பிட யாரும் இல்லையேன்னு ஏக்கமா இருக்கும். சித்தின்னு கூப்பிடுற குழந்தைங்ககிட்ட அம்மான்னு கூப்பிட சொல்லமுடியுமா? குருவிக்கூடு மாதிரி இருக்கக் குடும்பங்களைப் பார்க்கும்போது எனக்கும் கவிதையா ஒரு குடும்பம் வேணும்னு தோனும்.

 யாராவது கர்பமா இருக்கேன்னு சொன்னா அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்காதான்னு தோனும். என் கைகள் என்னையும் அறியாம என் வயிற்றைத் தடவிப்பார்க்கும். காலமெல்லாம் தாய்மை வரம் கிடைக்காமலே போயிடுமோன்னு தோனும். எதிர்காலத்தை நினைச்சி, அப்போ என்னோட இருக்கப்போற தனிமைய நினைச்சு பயமா இருக்கும்.

அப்புறம்." “ஐயோ! போதும்டி இதுக்குமேல சொல்லாத என்னால தாங்கமுடியலடி. ஏன்? ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற?” “வருத்தத்தைதான் நீ போக்கிட்டியேடி. ஒரு குழந்தைக்கு தாயாக முடியாம ஏங்கிய என்னை 15 குழந்தைகளுக்கு தாயாக்கிட்டியே.” “அப்படின்னா? இனி என்ன செய்யப்போற? நீ என் வாசல் முன்னாடி ஏத்திவெச்சிருக்க தாய்மை என்ற அகல் விளக்கு காத்துல அணையாம காலமெல்லாம் பாதுகாக்கப்போறேன். இனி என் வாழ்நாளெல்லாம் நாந்தான் அவங்களுக்குத் தாய்.”

தமிழால் நிலவினி சொல்வதை மறுக்கவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. அவள் இந்த வழக்கைக் கடவுளிடமும் காலத்திடமும் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றாள். மறுநாள் முதல் நிலவினிக்குப் புது வாழ்க்கைத் தொடங்கியது. வாழ்வில் பற்றில்லாமல் இருந்தவள் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். தன்னை அழகுபடுத்தி ரசித்தாள். நானும் அம்மாவாகிட்டேன் என்று மனதுக்குள் ஸ்ரீராமஜெயம் எழுதினாள்.

அவள் குழந்தைகளுக்கு தினமும் போன் செய்து பேசினாள். நேரில் வரச்சொல்லி அழும் அவர்களை வேலை இருப்பதாகக் காரணம் சொல்லிச் சமாளித்தாள். உண்மையில் அவர்களை நேரில் பார்க்க தயக்கமாக இருந்தது. எங்கே அந்தக் குழந்தைகள் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவார்களோ என்று பயந்தாள். அந்தக் காரணத்தை நினைத்துத் துடித்தாள். குழந்தைகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று அறிவு சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது.

தினமும் சலிக்காமல் அன்பு முத்தங்களை வாரி வழங்குவாள். அந்த முத்தத்திற்காகவே அந்தக் குழந்தைகள் காலையில்  கண்விழிப்பர். அந்த அன்பு மயக்கத்திலே அவர்கள் கண் துயில்வர். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் ஷெண்பகத்திடம் பேசும் முதல் மற்றும் இறுதி வாசகம். ”எங்க அம்மாவுக்கு போன் பண்ணித்தாங்க அத்தை” என்பதுதான். ஷெண்பகமும் நிலவினியின் தாய்மையில் நெக்குருகிப்போவார்.

நிலவினியின் வீட்டிற்கு இது தெரிய வந்தபோது அவள் தாய்மையின் உறுதிக்கு முன்னால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேநேரம் அவர்களாலும் அந்தக் குழந்தைகளின் அன்பைத் தவிர்க்கமுடியவில்லை.

தொடரும்.

10 comments:

  1. நல்லாருக்கு அபி கதை. ரொம்பவே மென்மையா சாஃப்டா எழுதறீங்க. நேர்மறையான வசனங்கள். வாழ்த்துகள் தொடர்கிறோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      Delete
  2. அபி
    அருமை. சிறந்த பெண் எழுத்தாளர் என்று பெயர் உங்களுக்கு மிக விரைவில் கிடைக்க போகும் பட்டம். வாழ்த்துக்கள்
    வித்யா

    ReplyDelete
  3. நெகிழ்ச்சி.   அன்பில் நனைந்தேன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். அன்பில் நனைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  4. உருக்கமாகவும் உர்ச்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது அபி.
    தொடர்கிறோம்.

    ReplyDelete
  5. அபி, அழகு நடை . தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அபி, அழகு நடை. ஹா ஹா அருமை சார். தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்.

      Delete