Sunday 14 June 2020

இக்கால பெரியார் (பேராசிரியர் சுபவீரபாண்டியன்)

சாதியே சத்தமின்றி சென்றுவிடு, சொற்களால் உன்னை விரட்டியடிக்க ஓர் சமத்துவ மனிதர் இருக்கிறார்.
 மூட நம்பிக்கையே வாய்மூடிக்கொண்டு ஓடிவிடு, முழக்கமிட்டு முழக்கமிட்டே உன்னை ஒழித்துவிட ஓர் புரட்சியாளர் இருக்கிறார்.
 சாதகமே கவனமாய் இருந்துகொள், சனங்களை உன்னிடமிருந்து காப்பாற்ற ஓர் பகுத்தறிவாளர் இருக்கிறார்.
 இந்துமதமே இனியாவது விழித்துக்கொள், உன்னுள் வேரூன்றியிருக்கும் களையாவும் அகற்ற இத்தலைமுறையின் பெரியார் இருக்கிறார்.
 அந்நாளின் வீரபாண்டியன் ஆங்கில ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார். இந்நாளின் வீரபாண்டியன் சாதிய ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுகிறார்.
 புலாலோ மரக்கறியோ பேதம் பாராமல் உண்ணச்சொல்லி ஏழை எளியோர்க்கும் ஈயத்தூண்டும் மாமனிதரவர்.
 உரைத்தலைப்பின் சாவி கொண்டே உள்ளத்தின் பூட்டை திறக்கும் வித்தை கற்றவர்.
 சாதியம் ஒழிய வேண்டுமெனில் காதலையும் ஓர் ஆயுதமாய் கொள் எனும் தந்தையவர்.
 கல்விக்கண் திறந்த காமராஜர், கண்டங்கள் தாண்டிப் பிறந்த நெல்சன்மண்டேலா காஞ்சிதனில் அவதரித்த அண்ணா பற்றி நம்மை தம் கல்லூரிக்கு வரவழைக்காமலே கற்பித்த பேராசிரியர் அவர்.
 போரும் குருதியும் காணும் மக்களுக்கு போரும் அமைதியும் புகட்டியவர்.
 மறைந்த பெரியாரின் கொள்கைதனை மறக்கமுடியாவண்ணம் மீண்டும் மெருகூட்டி தருபவர்.
 ஒரு நிமிட செய்தியால் பலவருடமாய் நாம் மறந்த கருத்தைத் தினம்தோறும் தேன்கலந்த மருந்தாய் பருகச்செய்பவர்.
 எழுத்தென்னும் ஒளிக்கொண்டு குடிமக்களின் கூம்பிய சிந்தனை மலரை மலரச்செய்யும் எழுத்தாளரவர்.
 சிரிக்கவைக்கும்படி பேசினாலும் சிரித்துக்கொண்டே பேசினாலும் சிந்திக்க தூண்டும் கருத்தினை சிறப்புடன் பேசும் பேச்சாளரவர்.
 உலக விடுதலை போராளிகளின் உன்னத நினைவினை உள்ளம் உருகும்படி உரையாற்றிய தமிழரவர்.
 பண்பாட்டை மறந்து முறன்பாட்டை நாடுவோர்க்கு சுதந்திரத்தின் உண்மையை சுட்டிக்காட்டியவர்.
 அறிவியல் ஆன்மீகத்தால் அவனியின் நிலையை ஆதாரப்பூர்வமாய் சொன்னவரே, நுகர்வனவற்றை நுகர்வோம். துறப்பனவற்றை துறப்போம்.
 வானியல் சோதிட உண்மைதனை உடைத்து உறக்க பேசியவரே, மனிதநேய புனிதத்தையும் மனித சடங்கின் தீட்டையும் யாம் மறவோம்.
சுயமரியாதை விரும்பியே, தொடுவானம் தூரமில்லை என்றறிந்தோம்.
 ஒற்றைச்சிறகில் பறக்க நினைக்கும் சமூகத்தை புரிந்தோம்.
 படிப்பே நாடி துடிப்பு என்றுணர்ந்தோம்.
மனிதருள் கருப்பு வெள்ளை நிறம் பிரியோம்.
 பொதுநலனே தன்நலனாய் கொள்ளும் தலைவரே,
 நின் பொதுச்சேவையின் தேவை நீளட்டும்.
நின் கைகள் பல நூறு புத்தகங்கள் எழுதட்டும்.
 நின் திருவாய்மொழியால் பல ஆயிரம் பேச்சுக்கள் ஒலிக்கட்டும்.
இக்கால பெரியாரே, நீவீர் வாழிய வாழியவே.

பின் குறிப்பு:
இந்த வாழ்த்துக்கவிதை சுபவீரபாண்டியன் ஐயா அவர்களின் இதுதான் ராமராஜியம் என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்றபோது எழுதி மேடையில் படித்துக்காட்டியது.


16 comments:

  1. சுபவீ அவர்களின் பேச்சு எப்போதும் தெளிவாக இருக்கும், அவரது நினைவாற்றல் என் வியப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார். ஆம். அவர் ஒரு கண்ணதாசன் கவிதையும் இன்னொரு செயுள் அதன் பெயர் நினைவில்லை. நான் அதை அவ்வளவு ரசித்தேன். திரும்பத்திரும்ப கேட்டேன்.

      Delete
  2. Abi, தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு அவதாரமெடுக்கறீங்க.நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா நன்றி நவீன். எல்லாம் உங்களைப்போன்ற வாசகர்களின் ஆசீர்வாதம்.

      Delete
  3. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. அரசியலுக்கு அப்பால் அணைவரையும் தம் பேச்சால் கவர்ந்தவர் சுபவி அவர்கள். வாழ்த்துக்கள். கவிதையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார்.

      Delete
  5. வாழ்த்துக் கவிதை அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  6. வாழ்த்துக் கவிதை நன்று.

    ReplyDelete
  7. அருமை ரசித்தேன்
    - கில்லர்ஜி

    ReplyDelete
  8. வாழ்த்துக்கவிதை சிறப்பு. சுபவியின் சில கதைகல் படித்திருக்கிறேன், மனதைத் தொடுவதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஃபெர்நாண்டோ. தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  9. பெரியாரை நன்றாக உள்வாங்கி உள்ளீர்கள். ஒப்பீடாக மட்டும் இருந்திருந்தால் சிறப்பு...

    ReplyDelete