Thursday 11 June 2020

மூன்று மேடைகளின் முன்னூறு குமுறல்கள்.

பல வருடங்களுக்குப் பின் இலக்கியா,  விலாசினி,  கலையரசி ஆகிய மூவரும் முகநூல்வழியே சந்தித்து பேசிப்பழகி, தங்களின் கடந்த காலத்தை பற்றியும் இப்போதைய நிலைப்பற்றியும் பேச முடிவு செய்து அண்ணா பூங்காவில் கூட்டம் கூட ஒருநாளை தேர்வு செய்தனர்.
அந்த நாளன்று மாலை 5 மணியளவில் இலக்கியா அண்ணா பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள். குளத்தின் பக்கத்தில் அமர்ந்து அந்த இயற்கை சூழலை ரசிக்கத் தொடங்கினாள். அண்ணா பூங்காவில் குளத்தில் நீர் சற்றே வற்றியிருந்தது.
ஏதோ நானாவது மீதம் இருக்கிறேன் என்று எடுத்துக்காட்ட இருக்கும் மரம் செடி கொடிகளிலிருந்து வந்த காற்றும் பறவைகளின் கீதங்களும் இலக்கியாவின் இதயத்தை களைப்பாற செய்து கொண்டிருந்தது. இந்த விலாசினிக்கும் கலையரசிக்கும் நேரம் என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்று மனதில் திட்டிக்கொண்டிருந்தாள்.
 சிறிது நேரத்தில் விலாசினியும் கலையரசியும் ஒன்றாக கைக்கோர்த்தபடி வந்து சேர்ந்தனர்.
 ”இனி எந்த காலத்திலும் உங்களை பிரிக்கவே முடியாது போலிருக்கிறதே?” என்றாள் இலக்கியா.
 ”கேலி செய்யாதே இலக்கியா, இது மனிதர்கள் எங்களுக்கு தந்த வரமான  சாபம்.”  என்றாள் விலாசினி.
”சரி.   சரி.  அமருங்கள்.  ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.”  என்று இலக்கியா அவர்களுக்காக தான் கொண்டு வந்ததை எடுத்துவைத்தாள். ”தயாராக வந்திருக்கிறாயே?” என்றாள் கலையரசி.
”உன்னைப்போல காரியத்திற்காக தானம் செய்பவர்களை அங்கீகரிப்பவளா  நான்? விருந்தோம்பல் பற்றியும் பகிர்ந்து உண்ணுதல் பற்றியும் என் முன்னோர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.”
”அவளே மனம் நொந்து போய் இருக்கிறாள் ஏனடி அவளை வம்பிழுக்கிறாய்?” என்றாள் விலாசினி. ”நாம் இங்கு கூடியிருப்பதே நம்முடைய வம்புகளை பேசத்தானே?” என்றாள் இலக்கியா.
 ”அதுசரி உன் வாழ்க்கை எப்படி போகிறது? ஆளே மாறிவிட்டாயே?”  ”என்ன செய்வது விலாசினி? முன்பெல்லாம் நிறைய இலக்கியவாதிகள் என்னை காண வருவார்கள். நேரம் பார்க்காமல் நாள் கணக்கில் கூட அவர்கள் சொற்களால் என்னை அலங்கரிப்பார்கள். அந்த கூட்டங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் வருவார்கள்.
  இப்பொழுது பெரியவர்களை மட்டும்தான் பெரும்பாலும் காண முடிகிறது. அந்தக்காலத்து இலக்கியத்தை ரசித்து ருசித்து படித்தவர்கள்தான் இந்தக்கால இளைஞர்களுக்கு இலக்கியத்தை ஊட்டிவிடுகிறார்கள்.”
  ”உன்னை நான் நிறைய சமூகவலைத்தளத்தில் பார்க்கிறேனே? மறுவாசிப்பு,  ஆய்வுப்பணிகள், இலக்கிய விவாதங்கள்,கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், போட்டிகள், புத்தக வெளியீடு, ஒலி மற்றும் ஒளி குறுந்தகடுகள் வெளியீடு, இலக்கிய சொற்பொழிவுகள்,   இலக்கிய பேரணி இப்படியெல்லாம் நடப்பதாக தெரிகிறதே?” என்றாள் கலையரசி.
”உண்மைதான் நான் இப்பொழுதும் அங்கீகரிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எளிய நடையில் இலக்கியத்தை இளைஞர்களுக்கு அளிக்கும் முயற்சியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இளைஞர்களும் அவர்களுக்கு ஏற்ற நடையில் இலக்கியத்தை எழுதி புதுமுகங்களாக என்னைக் காண வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு பணிகளும் நடக்கிறது. இருந்தாலும் உன் ஆட்களாலும் விலாசினியின் ஆட்களாலும் எனக்கு நிறைய பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. உன் ஆட்கள் இலக்கிய நிகழ்வுகளை கூட விலைக்கு வாங்கி வியாபாரமாக்கிவிடுகிறார்கள். விலாசினி ஆட்களால் தரமான இலக்கியங்கள் தரமுடிவதில்லை. நாவல்களையும் நாடகங்களையும் திரைப்படமாக்குவது குறைந்துவிட்டது. அதனால் நல்ல படைப்புகள் எல்லோருக்கும் போய் சேருவதில்லை.”
 ”மாணவர்களை பாட புத்தகம் படிக்கவைக்கவே ஆசிரியர்கள் பெரும்பாடுபடுகிறார்கள் பின் எப்படி அவர்களால் இலக்கியத்தை பயிலச்செய்ய முடியும்?” விலாசினி கலையரசியை கேலியாய் பார்த்தபடி கூறினாள். ”நூலகங்களில் கூட புத்தகங்களை பெரும்பாலும் கொடுப்பதில்லை போலும்.  எங்கே புத்தகம் படித்து கிழிந்துவிடப்போகிறது என்று உள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள்.” என்றாள் கலையரசி.
 ”ஆமாம் ஒருசில புத்தகங்களைத்தான் கொடுத்தனுப்புகிறார்கள். அதுவும் படிப்பவர்கள் படித்துமுடித்த அல்லது படிக்கமுடியாத புத்தகங்கள். புத்தகங்கள் கிழிந்து பின் புதுசாக வரவரத்தானே புத்தக கடைக்காரர்களும் பிழைப்பார்கள். எத்தனை புத்தகக்கடைகள் வைக்கப்பட்டு நடத்தமுடியாமல் எடுக்கப்படுகிறது தெரியுமா?” இலக்கியா வருத்தத்துடன் சொல்ல விலாசினியும் கலையரசியும் அதை ஆமோதித்தனர்.
”அது சரி விலாசினி, உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?” ”தெரிந்துகொண்டே கேட்கிறாயே இது நியாயமா இலக்கியா?” ”தெரியும் தெரியும் இருந்தாலும் உன் வாயால் சொன்னால் இன்னும் இனிமையாக இருக்கும்.” என்று விஷமமாய் புன்னகைத்தாள்.
   ”அன்றைய சினிமா கலைஞர்கள் அவர்கள் நடித்ததையோ அல்லது அவர்களுக்கு முன்னாள் கலைஞர்கள்,  சமகால கலைஞர்கள் நடித்து பேசிய நீண்ட செந்தமிழ் வசனங்களை பேசும்போது எனக்கும் அவர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் இப்போது வரும் வசனங்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரிவதில்லை.
 யாரோ ஒரு சிலர்தான் நல்ல வசனங்களை எழுதுகிறார்கள். இப்போது வாழும் கலைஞர்கள் அவர்களின் கடந்த காலத்தையும் அவர்களோடு வாழ்ந்தவர்களை பற்றியும் பேசும்போது பழைய ஞாபகங்களை மலரச்செய்கிறார்கள். கண்ணீர் வருகிறது.
 கலையில்  திறன்மிகுந்தவர்கள் மட்டுமல்ல நல்ல குணவான்களும் வாழ்ந்தார்கள். நல்லவேளை அந்தக்கால குணவான்களுள் ஒரு சிலரையாவது இன்னும் சுமக்கும் பாக்கியம் இருக்கிறது.  அப்போதைய திரைப்படங்களில் காதல் கொஞ்சம் கம்மி, கருத்து கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்போதைய படங்களில் காதல் கொஞ்சம் தூக்கல், கருத்து கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.“
விலாசினி பேசுவதை கேட்டுக்கொண்டே இலக்கியா ஒரு புரியாத புதிய பாடலை முணுமுணுத்தாள். ”பாடாதே இலக்கியா, தயவு செய்து புதுப்பாடலை பாடாதே. புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. காதில் இரும்புக் கம்பியை காய்ச்சு சுடுவதை போல உள்ளது.
 அந்தக்கால பழைய பாடல்களை கேட்டுப்பார் எத்தனை இனிமையாக உள்ளது. காதில் தேன் வந்து பாய்கிறது. காதல், தத்துவம், காதலன் காதலியின் அழகு, தாய்மை, தாலாட்டு,  தங்கை பாசம், பண்டிகைப் பாடல்கள், குத்துப்பாடல்கள் எதுவாக இருப்பினும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.
  ராகம், தாளம், குரல், வரிகள் இதில் எதையாவது குறை சொல்லமுடியுமா? முக்கியமாக இந்த பாடல்களின் அர்த்தம் குழந்தைகளுக்குப் புரியாது. பள்ளி மாணவர்களால் பாடவும் முடியாது. ஆனால் இப்போதைய பாடல்களை ஒரு  வயது குழந்தை பாடுகிறது. பெண்ணை பற்றிய வருணணைகள் இலக்கியத்தில் உள்ளது போலவே அந்தக்கால பாடல்களில் இருக்கும். மறைமுகமாக இயற்கையோடு ஒப்பிட்டுத்தான் வர்ணிப்பார்கள்.“
 ”குத்துவிளக்கு, குத்துவிளக்கு சத்தியமா நா குடும்ப குத்துவிளக்கு. அச்சம் விலக்கு, வெக்கம் விலக்கு ஆசை தீர அப்பளமா என்ன நொறுக்கு.” கலையரசி பாடினாள்.
 “இந்த பாடல் ஒளிர்ந்த திரையில்தான், எந்த கலைஞனும் அவளை சிலைவடிப்பான்,  எந்த புலவனும் அவளை பாட்டில் வைப்பான், அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும். அவள் நினைவாலே என் காலம் செல்லும். இந்த அழகிய பாடலும் ஒளிர்ந்தது.
 என்னை எரிச்சலூட்டும் பாடல் எது தெரியுமா? ராணி நா மகா ராணி நீதான் என் அடிம வாயா என்ன பல்லக்குல தூக்கிப்போ, ராணி நா மகா ராணி என் தேவை புதும வாயா உன் தேகத்த நீ காட்டிப்போ, காதல் இருக்கும் வரையில கண்ணோடு காமம் இருக்கும் உலகில, தேகம் இருக்கும் வரையில தீராத தாகம் இருக்கும் மனதுல.“
“சீ என்னடி விலாசினி இது பாட்டு இவ்வளவு அசிங்கமா?” என்றாள் இலக்கியா முகம்சுளித்தபடி.
  “இந்த படம் வந்த புதிதில் நான் எவ்வளவு துன்பப்பட்டிருப்பேன் திரும்ப திரும்ப கேட்டு கேட்டு. இதே போன்ற காதலி  காதலனை காதலிக்க அழைக்கும் பாடல்தான் இதை கேள்.
 அழகே வா, அருகே வா, அலையே வா, தலைவா வா, அழகே வா  வா வா, அருகே வா. ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய், , என்ன தேடுகின்றாய், எங்கே ஓடுகின்றாய்,  உந்தன் தேவைகளை மூடுகின்றாய்.
  இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும், அந்த ஓடத்தில் உலகம் கூடிவரும், நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தா நாம் பிறப்பதில்லை.“
விலாசினி கண்ணதாசன் வரிகளை ராகத்துடன் பாட மூவரின் கண்களிலும் காதல் மயக்கம் தெரிந்தது. மூவரும் தங்களை மறந்து மோனநிலையில் அமர்ந்திருந்தனர்.
   தன்னை மீட்டுக்கொண்ட விலாசினி பேசுவதை தொடர்ந்தாள். “பெண்ணை பெண்ணாக மதிக்க வேண்டிய மனிதர்கள் வாடி வாடி நாட்டுக்கட்ட, திம்சுக்கட்ட இப்படி உயிருடன் இருக்கும்போதே கட்டையாக்கிவிட்டார்கள். அன்பே வா, நிலவு ஒரு பெண்ணாகி, பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, முழுமதி அவளது முகமாகும் இப்படி கேட்க எவ்வளவு சுகமாகவும் சுவையாகவும் இருக்கிறது.”
“நீ சொல்வது உண்மைதான் விலாசினி. நா. பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர் நாவலில் பொன்காட்டும் நிறம்காட்டி பூக்காட்டும் விழிகாட்டி, பண்காட்டும் மொழிகாட்டி பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி, முகில்காட்டும் குழல்காட்டி, நன்பாட்டு பொருள்நயம்போல் நகைக்கின்றாய் நகைக்கின்றாய், பண்பாட்டு பெருமையெலாம் பயன்காட்டி நகைக்கின்றாய் என்றார். அதுமட்டுமல்ல மணிபல்லவம் என்ற நாவலில் ஒரு பெண் பந்து விளையாடும் அழகை அவர் வர்ணித்திருக்கிறார்.” என்றாள் இலக்கியா.
  “அது என்ன?” என்றாள் கலையரசி ஆர்வத்துடன்.”சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர,  இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக் கொந்தலகப் பந்துமிசை முல்லைமலர், தந்தமன மண்டியெழ முந்திவருப் பந்துபயில் நங்கை இவள் கொண்ட எழில் நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ.”
 “அட! அருமையாக இருக்கிறதே” என்றாள் விலாசினி.” “ஆமாம் விலாசினி படத்தின் பெயர்களை பாரு? அது அதைவிட மோசம்.” என்றாள் கலையரசி.
 “ஆமாம் அப்போதெல்லாம் படத்தின் பெயரை கருத்து சார்ந்த பெயர், கதாநாயகன் கதாநாயகியின் பெயர், ஊர் பெயர், கவிதைநடையில் பெயர் என்று வைப்பார்கள். இப்பொழுது வைக்கும் பெயர்களுக்கும் படத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.“ ”போதும் விலாசினி, சீக்கிரம் போகலாம் வீட்டிற்கு இல்லையென்றால் நாடகம் முடிந்துவிடும்.” என்றாள் கலையரசி.
 “வாயை மூடு. முன்பெல்லாம் நாடக கொட்டகைகளில் பார்க்கப்பட்ட நாடகங்களெல்லாம் வரலாற்று நாடகங்கள். இன்றும் இதயத்தில் நிற்கிறது. உன் ஆட்கள் தொலைக்காட்சியில் எப்போது நாடகங்கள் போட ஆரம்பித்தார்களோ நாடகத்தின் மதிப்பே போய்விட்டது. வீட்டில் பெண்கள் நாடகம் பார்த்துப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள் ஏதோ அவர்கள் வீட்டிலேயே இழப்பு வந்துவிட்டதைப்போல.
 ஆண்களும் கண்ணீர் வடிக்கிறார்கள் நாடகத்தை பார்த்து அல்ல. நாடகம் பார்ப்பதால் நம்மை பார்க்காமல் இருக்கிறார்களே என்று. குழந்தைகள் பசியால் அழுதாலும் விளம்பரம் வந்தால்தான் சமாதானம் செய்கிறார்கள். எந்தப்பெண் எப்போது எப்படி வில்லியாய் மாறுவாளோ தெரியாது. அது என்ன எல்லா நாடகங்களிலும் பெண்களே வில்லி. பெண்களே தெய்வம்?
 சில வீடுகளில் ஆண், பெண்,  குழந்தைகள் என்று குடும்பத்தோடு நாடகம் பார்க்கிறார்கள். பெண்களை கவர உன் ஆட்களுக்கு வேறு நல்ல வழியே கிடைக்கவில்லையா? என் அழகே கெட்டுவிட்டது.”
விலாசினி சற்றே கோபமாய் குரலை உயர்த்திப்பேச கலையரசியின் முகம் சுருங்கிவிட்டது.
 "அவள் சொல்வது உண்மைதான் கலையரசி,   இது போதாதென்று யதார்த்த நிகழ்ச்சிகள்  என்று புதிய புதிய நிகழ்ச்சிகளை கண்டுபிடித்து பொழுதுபோக்கின் போர்வையில் வியாபாரம் செய்கிறார்கள். பெரியவர் முதல் குழந்தைகள் வரை அந்த நிகழ்ச்சிகள் முடக்கிவிடுகிறது.
 ஒரு தொலைக்காட்சியில் நல்ல  விவாதம் போகிறது, இன்னொரு தொலைக்காட்சியில் யதார்த்த நிகழ்ச்சிகள்  ஒளிபரப்பபடுகிறது என்றால் விவாதத்தை பார்ப்பவர் சிலராகவும், யதார்த்த நிகழ்ச்சிகளைப்  பார்ப்பவர்கள் பலராகவும் இருக்கிறார்கள்.“ என்றாள் இலக்கியா.
“எத்தனையோ பேருக்கு விலாசம் அளித்திருக்கிறேன். சில நேரங்களில் என்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் நிறைய பேர் விலாசம் இழந்தும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெரியவர்கள் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் வார்த்தைகளால் விலாசிக்கொண்டிருக்கிறார்கள். வரவர இன்றைய சினிமாவில் பெண்கள் ஆதிவாசியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆபாச உடைகள், ஆபாச வார்த்தைகள் ஆபாச காட்சிகள், தரம்கெட்ட வருணணைகள் கொண்டு சினிமாவை முழுவதும் வியாபாரமாக்கிவிட்டார்கள்.
 நிறைய படங்கள் வழக்கை சந்தித்தபின்தான் வெளிவருகிறது. முன்பெல்லாம் 100 நாட்கள்மேல் சினிமா அரங்கில் நிறைய கூட்டம் வந்து அந்த படங்களுக்கு விழா கொண்டாட என்னைக் காண வருவார்கள். அவர்களின் பாதங்களை  மலர்களால் அர்ச்சிப்பேன். ஆனால் இப்பொழுது 50 நாட்கள் கூட சினிமா அரங்கில் கூட்டமில்லை.  எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கலையரசியின் ஆட்கள்தான்.“
“அதிகம் பேசாதே விலாசினி. உன் ஆட்கள் அவர்கள் கலைத்துறையில் இல்லாமல் அரசியலுக்கு வருகிறார்கள். விமர்சிக்கிறார்கள். நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்போல் கட்சிகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”
“அரசியலுக்கு வருவது தப்பில்லை கலையரசி.  ஆனால் நல்லதை செய்ய வேண்டும். அந்தக்கால அரசியல் தலைவர்களும் சினிமாவில் இருந்தவர்கள்தான் ஆனால் நல்லவர்களாக இருந்தார்கள். சொந்த வாழ்க்கையில் ஆயிரம் இடையூறுகள் இருந்தாலும் பொதுவாழ்க்கையில் பதவிக்காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் நல்லதைச் செய்தவர்களும் இருந்தார்கள்.” என்றாள் இலக்கியா.
 ”பின்னே?  நானும் பல நல்ல தலைவர்களால் மிதிப்பட்டவள்தான். அவர்கள் பேசும்போதும் அவர்களின் குணத்தைப் பற்றி மற்றவர் பேசும்போதும் உயிர்பெற்று அவர்களின் பாதங்களில் விழுந்து  வணங்கி மாலை அணிவிக்க துடிப்பேன். ஆனால் இப்பொழுது பேசுபவர்களை, என்னை இரண்டாய் பிளந்து அவர்களை என்னுள் விழுங்கிவிட துடிக்கிறேன்.”
“கலையரசி, அப்போது நீ ஒத்துக்கொள்கிறாய் அல்லவா, அரசியல் சாக்கடையென்று?”  விலாசினி கேலி பேசினாள்.
 “அரசியலை சாக்கடை என்கிறார்கள் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் வசைப்பாடிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் மிதிபடும் பாவத்திற்கு என்னை கற்கள் வீசியும், சோடாபாட்டில் எரிந்தும், தக்காளி, முட்டை எரிந்தும் துன்புறுத்துகிறார்கள். அவர்களை எப்படி சொன்னால்தான் என்ன.” "எங்கும் எதிலும் அரசியல். சர்வம் அரசியல் மயமாகிவிட்டது. அதுவும் தீய வழியில்." என்றாள் விலாசினி.
 "எத்தனை பேருக்கு நான் பதவிஅளிப்புவிழா செய்துவைத்திருப்பேன், எத்தனை பேரின் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடியிருப்பேன், எத்தனை பேர் கூட்டங்கள் நடத்தி பிரச்சாரம் செய்திருப்பார்கள், அவர்களெல்லாம் இப்படியா இருந்தார்கள்?" என்று குமுறினாள் கலையரசி.
 "பணம் பதவி என்ற மூன்றெழுத்தில், நன்மை நன்றி என்ற மூன்றெழுத்துக்களை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆட்சியை பிடிக்கவும், பிடித்த பதவியை யாரும் பறிக்காமல் இருக்கவும், செய்யாத நன்மைகளையெல்லாம் செய்துவிட்டதாக விளம்பரப்படுத்தி மனிதர்களிடையே கடவுளாகிவிடுகிறார்கள். எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல் நன்மைகளைச் செய்ய மறுக்கிறார்கள்." என்றாள் இலக்கியா.
 "நரேன்குமார்,  பெருங்குவியடிகள் இவர்களை போன்றவர்கள் ஆட்சியில் நன்றி நன்மை எல்லாம் நளிந்துத்தான் போகும்." என்றாள் கலையரசி.
  சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. கலையரசியும் விலாசினியும் ஒருவரை ஒருவர் பார்த்து அழுதுகொண்டிருந்தனர். "அழாதீர்கள்! நம் குமுறல்களையும் புலம்பல்களையும் கேட்பாரில்லை. இதோ நம்மைப்போலவே ஊமையாகிவிட்ட இந்த இயற்கை மட்டுமே உணரும்." என்றாள் இலக்கியா. அதை ஆமோதிக்கும்பொருட்டு காற்றில் மரங்கள் அசைந்து பறவைகள் கீச்சிட்டன.
 ஒலிபெருக்கிகள், ஒலிவாங்கி,  மனித குரல்கள் ஒன்று சேர்ந்து நம்மை துடிக்கவைக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் பிடிக்காமல் நாம் எப்படி அதிர்கிறோம். ஆனால் அறிவியல் மூளைகள் அதை ஒலி அலைகள்,  ஒலி அதிர்வுகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு என்றுதான் தெரியப்போகிறதோ அது ஒலி அதிர்வுகள் மட்டுமன்றி நம் உணர்வுகளின் அலைகள் என்று.“ சொல்லியபடியே கலையரசி புறப்பட தயாரானாள்.
 “வாருங்கள்.  இருட்டிவிட்டது போகலாம்.  மனிதர்களுக்குத்தான் நம் ஒற்றுமை புரியவில்லை. நாமாவது ஒன்றாக கைகோர்த்து செல்வோம்.” என்ற இலக்கியாவின் சொல்படி கைக்கோர்த்துக்கொண்டே மூவரும் பூங்காவைவிட்டு வெளியேற தொடங்கினர்.
 அவர்கள் செல்லும் திசையை வெறித்து பார்த்தபடி கண்கலங்கியது மரங்கள். தன்னை தாங்கும் மண்ணிற்காக கடவுளிடம் பரிந்து பேசின. வானம் மழையாய் மாறி தன் காதலியான மண்ணைக் கட்டித்தழுவி முத்தமிட்டு  ஆறுதலளித்தது.
முற்றும்.

16 comments:

  1. இன்றைய இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி நிலைகளை படம் பிடித்துச் சொன்ன பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இன்றைய சூழ்நிலையை பிரதிபலிக்கும் ஆழ்ந்த விவாதங்கள் நிறைந்த கதை. வாழ்த்துக்கள். பிக் பாஸ் பற்றியும் பேசி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்த வாசிப்பிற்கு நன்றி அரவிந் சார். வேறொரு கதைக்களம் அமையும்போது அந்த நிகழ்ச்சிப்பற்றி நிச்சயம் எழுதுகிறேன்.

      Delete
  3. சூழலுக்கேற்ற சூப்பரான பதிவு. அனைவரும் உணரவேண்டிய கருத்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஃபெர்நாண்டோ. கண்டிப்பா எழுதுகிறேன்.

      Delete
  4. அபி அற்புதம்
    Apt song selection my best wishes
    Vidya

    ReplyDelete
    Replies
    1. thank you madam. kannadhasan songs are my favourite from my childhood. my father introduced these songs.

      Delete
  5. எல்லோருக்கும் பொதுவா ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்றப்பதிவுன்னு வாழ்த்தினதுக்கு என் நன்றிகள். ரொம்பநாளா என் இதயத்துல கொதிச்ச கொதிப்பு இது. புதுப்பாடலையும் புதுப்படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும். இதை மக்கள்கிட்ட சேர்க்கனும், உணரவைக்கனும் தோணியது. அதான் இந்தக்கதை. பெரிய கதை. நிதானமா படிச்சதுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நன்றாக இருக்கிறது கதை. அபி எனும் கதாசிரியரின் இன்றைய நிலையைப் பற்றிய எண்ண ஓட்டங்களை, குமுறல்களை அழகாகச் சொல்லிவிட்டீங்க. ஒரு வெளிப்பாடு அவசியம் தானே! தொடருங்கள் அபி. வாழ்த்துகள்!

    எங்கள் தளத்தில் எழுதும் நண்பர் துளசியும் இனி வாசித்து கருத்திடுவார். உங்கள் தளத்தை அவருக்கும் அனுப்பியுள்ளேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம். நானும் உங்களின் தளத்தை தொடர்ந்து படித்து கருத்தை பதிவு செய்கிறேன்.

      Delete

  7. இப்படியும் பேசுவார்களா தோழிகள் , ரசனை மிகுந்த தோழியர்.

    புதிய பாடல்களுள் ஆங்காங்கே அத்திப்பூத்தாற்போல் சில நல்ல கருத்துள்ள பாடல்களும் கேட்க முடிகிகிறது, குறிப்பாக பெண் கவிஞர் தாமரையின் பாடல்களை சொல்லலாம் அவை நெஞ்சுக்குள் வீசிடும் மா மழையாக சாரல் தூவும், கேட்கும்போது சுகம் மேவும்.

    பாடல் ஆசிரியர்கள் பலசரக்கு வியாபாரிகள், வேண்டுபவற்றை வழங்குவார்கள். - ஒவ்வொரு பூக்களுமே…. இலக்கண பிழை இருந்தாலும் கருத்துக்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். உண்மைதான். எனக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களும் இன்னும் சில பாடல்களும் பிடிக்கும். ஆனால் அந்த நல்ல பாடல்களை புதையல் தேடுவதைப்போல் தேட வேண்டியிருக்கு. இன்றைய படங்களில்6 பாடல்களுள் ஒரு பாடல் நன்றாக இருந்தால் அது அதிசயம்.

      Delete
  8. மிக மிக அருமையான பதிவு. இந்த பதிவின் வழியாக தங்கள் விசிறிகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்றை சேர்த்துக் கொண்டீர்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஷா. உங்களின் கருத்திலிருந்தே நீங்கள் இந்தப் பதிவை ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  9. SHYAMALA SMART15 July, 2020 16:29

    அருமையான கதை
    தொலைக்காட்சி தொடர்கள் குறித்த எனது நெஞ்ச குமுறல்களை நானே கூறுவதுபோன்று அனையப்பெற்றிருந்தது இக்கதை

    ReplyDelete